Tuesday, August 8, 2023

ஸ்வீட் காரம் காஃபி



மூன்று தலைமுறைப் பெண்களைப் பற்றின வாழ்க்கைப் பயணத் தொடர்.

பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்கென்று கிடைக்கும் நேரம் என்பது அரிது. அதுவும் திருமணத்திற்குப் பின் செக்கு மாடு போல குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகள் உலகத்தில் சிக்கி தனக்கென்றிருக்கும் உணர்வுகளைக் கூட அது மறக்கடித்து விடுகிறது. அதனால் தான் புதியதொரு உலகத்தைக் காண்கையில் ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள்.

இப்பொழுதெல்லாம் பல பெண்களும் நன்கு உஷாராகி விட்டார்கள். தங்களுடைய நண்பர்கள், அவர்களுடனான பொழுதுபோக்குகள் என்று மாறி விட்டிருக்கிறது. என்ன? பல ஆண்களால் தான் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களின் உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சுய முடிவு ஓரளவுக்கு எடுக்க முடிகிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் சிறிது சிறிதாக வெளியே வர முயற்சிக்கிறார்கள்.

கணவனை இழந்த பாட்டியாய் நடிகை லட்சுமி கதாபாத்திரம் மிகவும் அருமை. பொதுவாகவே பாட்டிகளுக்குத் தான் தைரியம் அதிகமாக இருக்கும். வயதின் முதிர்ச்சியோ வாழ்க்கை அனுபவமோ மிகவும் துணிந்தவர்களாக பல பாட்டிகள் இருப்பார்கள். அப்படித்தான் இந்த சுந்தரி பாட்டி. அவருடைய இளமைக்காலத்திலேயே மனதிற்கு விரும்பியவனைத் திருமணம் செய்திருந்தாலும் ஏதோ ஒரு மன நெருடல். இழந்த தன்னுடைய நெருங்கிய நட்பைத் தேடுகிறது அவருடைய மனம். அதற்கான விடையைத் தேடி அவர் தொடங்கும் பயணத்தில் மருமகள் காவேரி பேத்தி நிவேதிதாவுடன் நடக்கும் கலந்துரையாடல்கள். முதல் காட்சியே அருமை. கணவர் இறந்த நாள். மகன் ஏதோ அம்மா கவலையாக இருப்பார் என்று அவன்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பான். அப்போது லட்சுமி மனதிற்குள்ளே பேசுவதாக வரும் வசனங்கள் அருமை.

கணவனுக்குப் பிறகும் மனைவி என்பவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். அதே போல, வயதாகி விட்டால் அவ்வளவு தான் என்பது போலத் தான் நாம் நம் பெற்றோரை நடத்துகிறோம். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்து விடுவது எவ்வளவு கொடுமை? நாளை நமக்கும் அதே நிலைமை தான் என்று உணர்ந்தாலே போதும் அவர்களை நன்கு புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவோம்.

கல்லூரி நாட்களில் சிறகை விரித்து வாழ்ந்தவள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என்று தன் உலகத்தைச் சுருக்கிக் கொண்டு அவர்களுக்காகவே உயிர் வாழ்பவளாகி விடுகிறாள். பொதுவாகவே குடும்பங்களில் அம்மாவின் இருப்பை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அச்சாக இருந்து குடும்ப சக்கரத்தைச் சுழற்றுபவள் அவளே என்று புரியும் பொழுது காலம் கடந்திருக்கும். நல்ல வேளை! இந்தத் தொடரில் அப்படி இல்லை. அதே போல, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் பலரும் தங்களுடைய கனவுகளை, அபிலாஷைகளைத் தொலைத்து வேறொரு உலகத்தில் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதையும் சிலர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். பலர் சந்தர்ப்பம் கிடைத்ததும் மீண்டு வாழ்கிறார்கள்.

மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்று நடத்தும் பல ஆண்களின் பிரதிபலிப்பாக இந்தப்படத்தில் குடும்பத்தலைவனாக வருபவரின் கதாபாத்திரம். அப்பனுக்குத் தப்பாமல் மகன். அம்மாவை அதிகம் கண்டுகொள்ள மாட்டான்.

தனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மகள். ஆனால் உலகம் ஒத்துக்கொள்ளாத விளையாட்டுத்துறை. அதுவும் அதே துறையில் இருக்கும் காதலனே முட்டுக்கட்டை போடுகிறான். தன் அண்ணனைப் போலவே உலக நடப்பு அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவள். எப்படி தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து பாட்டி, அம்மா உதவியுடன் வெளிவருகிறாள்?

இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழும் சந்தர்ப்பங்கள் அமைந்து தங்களின் பலம், பலவீனத்தைப் புரிந்து கொள்கிறார்கள். நடைமுறையில் சாத்தியமில்லாத தேவையில்லாத ஜவ்வான காட்சிகள் சில இருந்தாலும் பயணத்தில் நாம் காணும் மனிதர்களின் அறிமுகம் தரும் இனிமையான அனுபவத்தையும் பேசுகிறது இத்தொடர்.  இமாச்சல் பிரதேசம், டெல்லி ஒளிப்படக் காட்சிகள் எல்லாம் அருமை. 

மகள், மனைவி, மருமகள்,அம்மா, பாட்டி என்று ஒரு பெண்ணின் வாழ்வில் பல நிலைகள் இருந்தாலும் தனக்கென வாழும் தருணங்களில் தான் அவள் உயிர்ப்போடு இருக்கிறாள். அதுவே அவளின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது.

நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வதும் சிக்கலாக்கிக்கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது தேவை என்று உணர்ந்தாலே போதும். வாழ்வு சொர்க்கம்.

தமிழில் எப்பொழுதாவது தான் ஓரளவிற்கு நல்ல பொழுதுபோக்குத் தொடர் வரும். அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...