Sunday, March 17, 2024

மஞ்சும்மல் பாய்ஸ்

உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆரம்பத்தில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் படத்தைப் பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர். சபாஷ். ஒரு நல்ல படத்திற்கு குத்தாட்டமும் பெரிய நடிகர் பட்டாளங்களும் தேவையில்லை. அதுவும் மலையாளப் படங்களில் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமும் இல்லை. ஏனென்றால் அவர்களிடம் நல்ல கதை இருக்கிறது.தமிழ் திரைத்துறை உலகமோ கோடிகளில் பெரிய நடிகர்களுக்கு கொட்டிக் கொடுத்து கதையில்லாமல் தலையில்லாத கோழிகள் போல திசை அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் இது நல்ல படம். போகிற போக்கில் இளைஞர்களின் அதீத ஆர்வம், குடியால் ஏற்படும் இன்னல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஊரில் சிறு வேலைகளைச் செய்யும் சாமானிய நண்பர்கள் குழாம் ஓணம் பண்டிகை விடுமுறையின் போது எங்குச் செல்வது என்று தீர்மானித்து கொடைக்கானல் செல்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே 'குணா' படப்பாடலான 'கண்மணி அன்போடு ,...நான் ... நான் எழுதும் கடிதம்...' என்று கேட்டவுடன் மதுரையில் 'வெற்றி' திரையரங்கத்தில் ஒரே ஆராவாரம்! எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படிப்பட்ட ரசிகர் பட்டாளங்களுடன் படத்தைப் பார்த்து! இதே திரையரங்கில் தான் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் படத்தை விட குழந்தைகள், பெரியவர்களின் எதிர்வினைகள் தான் ரசிக்கும் படி இருந்தது. இந்தப்படத்திற்கு அதிகம் இளம்பெண்களும், ஆண்களும் வந்திருந்தார்கள்.

எங்கள் அருகில் தாயுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் என்ன நடக்கிறது என்று சதா அவன் அம்மாவைப் போட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான். அவரும் பொறுமையாகக் காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். மலையாளப் படம். 'சப் டைட்டில்' ஆங்கிலத்தில் வருகிறது. தமிழில் வந்திருந்தால் சிறுவர்களும் ரசித்துப் பார்த்திருப்பார்கள். திரையரங்கில் முக்கால் சதவிகிதம் நிறைந்து விட்டிருந்தது. மக்களின் மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. நல்ல படம் எந்த மொழியில் இருந்தாலும் வெளிமாநிலங்களில் கூட வெற்றி பெறுகிறது.

இப்பொழுது இந்தப் படம் இன்னும் அதிக கவனம் பெறும். திரு.ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய பாணியில் இந்தப் படத்தை விமரிசித்திருக்கிறார். மலையாளிகளை "குடிகார பொறுக்கிகள்" என்று காறி உமிழ்ந்திருக்கிறார். என்னவோ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் குடிப்பக்கம் தலையே வைக்காதவர்கள் போல. தமிழர்களையும் இதே போல வசைபாடுவாரா? பொது இடங்களில் இந்த குடிகாரர்கள் செய்து கொண்டிருக்கும் அநாகரீக செயல்களைக் கண்டிப்பாரா? அழகான மலைப்பிரதேசங்களில் பாட்டில் குப்பைகள். அதுவும் உடைந்த நிலையில். அங்குச் செல்லும் மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில்.

இன்றைய நாளில் கொண்டாட்டம் என்றால் குடி, ஆட்டம், பிரியாணி என்றாகிவிட்டிருக்கிறது. பாவம்! வாழ்க்கை என்றால் இதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது பகுத்தறிவில்லாத சமூகம். இப்பொழுது போதை மருந்துகளும் சேர்ந்து விட்டிருக்கிறது.

'குணா' குகைக்குச் சென்ற பலரும் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்திருப்பார்கள். உணராதவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. அடிபட்டுத் தான் திருந்துவார்கள்.

 

No comments:

Post a Comment

சொந்த ஊர் சோகங்கள்

முன்பெல்லாம் தெரு முக்கில் யார் வீடு இருக்கிறதோ இல்லையோ மனசாட்சியே இல்லாமல் ஓரத்தில் குப்பையைக் கொட்டிவிட்டு நழுவிப் போவார்கள் மதுரை மக்கள்....