Saturday, August 24, 2024

சமயபுரம்


2018ல் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு மதிய நேர பூஜை ஆரம்பிப்பதற்குள் சென்று விட வேண்டும் என்று 11.45 மணி போல் சேர்ந்திருப்போம். வண்டியை முன்னாடியே நிறுத்தி விடச் சொல்ல, உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, தார்ச்சாலையோ உருகி ஓடிவிடும் வெப்பத்தில் கணகணத்துக் கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு நடந்து கோவிலுக்குள் நுழைந்தோம். இல்லை இல்லை ஓடினோம். நடையைச் சாத்திவிடுவார்களோ என்ற பயம். இத்தனை தூரம் வந்து அம்மனைப் பார்க்காமல் போய்விட்டால்? அதான் முடிந்தவர்கள் ஓடினோம். நல்லவேளையாக மாரியம்மன் சர்வ அலங்காரபூஷிதையாக மலர்கள், எலுமிச்சம்பழ மாலைகளுடன் கண்களையும் மனதையும. நிறைத்தாள். அப்பாடா! திவ்ய தரிசனம். தீபஒளியில் இன்னும் அழகாக காட்சி தந்தாள். கூட்டம் நெருக்கியடிக்க, வெளியே தப்பித்து வந்தோம்.

கோவில் வாசலில் இருந்து நீண்ட மண்டபத்தைக் கடந்து சந்நிதிக்குள் நுழையும் வரை ஒரே கடைகள். இந்தக்கடைகளை அப்புறப்படுத்தினால் என்ன? கேள்வியுடன் கடந்து வந்தேன்.

இந்த வருடம் திருவானைக்காவல், ஶ்ரீரங்கம் கோவில்கள் முடித்த பின் சமயபுரம் கோவலுக்குச் செல்ல வேண்டும் என்றேன். ஈஷ்வர் இதுவரை அங்கு சென்றதில்லை என்றவுடன் கண்டிப்பாக சென்றே தீருவது என்று முடிவெடுத்து அங்கே சென்றோம். சமீபத்தில் தான் குடமுழுக்கு நடந்திருக்கும் போல. அடர்வண்ணங்களில் கோபுரம் திக்குமுக்காட வைக்கிறது

வண்டியை எங்கேயோ நிறுத்தி விட்டார்கள். பிப்ரவரி மாத இறுதியிலே வெயில் சாத்திக் கொண்டிருந்தது. டிரைவர் வேறு “இப்படி போனவுடன கோவில் வந்துடும்” என்று எளிதாகச் சொல்லி விட்டார். வரிசையாக பூக்கடைகள், எலுமிச்சபழ மாலைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே கோவிலுக்கு வந்து விட்டோம்.
“இந்த வழியா உள்ளே போக முடியாது. அப்படியே உள்ள போனீங்கன்னா அந்த வழியா கோவிலுக்குள்ளாற போற வழி இருக்கு” என்று அங்குள்ளவர்கள் சொல்ல நாங்களும் நடக்க ஆரம்பித்தோம். மக்கள் கூட்டம். தை மாதம் வேறு. கேட்கவா வேண்டும்? விரதமிருந்து பலரும் நடந்து வருவதை வழியில் தான் பார்த்தோமே! மஞ்சள், சிகப்பு சேலைகளில் பெண்களும் தாடி வளர்த்து மஞ்சள் வேட்டியுடன் ஆண்களுமாய் எல்லா பக்கமும் நடந்து கொண்டிருந்தார்கள். முறையான அறிவிப்புப்பலகைகள் இல்லாமல் எப்படிப் போவது என்று தடுமாறி வழியில் கேட்டுக்கொண்டு அவர்கள் காட்டிய திசையில் சென்றால் மூங்கில்கள் கட்டி தகர கூரை போட்ட அடைப்பு வழியாக ஒரு கூட்டம் வரிசையில் நின்று கொண்டிருந்தது.

ஆஆஆஆஆ! இவ்வளவு நீள வரிசையா? அதுவும் “ஸ்பெஷல்” தரிசனத்திற்கு! ஏ அம்மே! வந்தாச்சு. திரும்பிப்போகவா முடியும்? ஐக்கியமானோம். மொட்டையடித்துக் கொண்டு சந்தனம் பூசிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நின்றிருந்தார்கள். ஓம்சக்தி வழிபாடு மன்றத்திலிருந்து வந்தவர்கள் “ஓம்சக்தி பாரசக்தி” என்று கும்பலாக சொல்லிக் கொண்டிருந்ததால் வெட்டிப்பேச்சு சத்தம் இல்லை. அவர்களுடன் வரிசையில் நின்றிருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.


 
“உன்னால முடியமா? வேர்த்துக் கொட்டுது” கேட்ட ஈஷ்வரிடம், “பாவம்ல. ஏப்ரல் வந்தா இந்த வெயில் இன்னும் உக்கிரமாயிடும். என் சிறுவயதில் மாமா திறுவெறும்பூரில் இருந்ததால் திருச்சி வெயில் மிகவும் பிரபலம்” என்று சிறதுநேரம் எங்களுடைய திருச்சி கோடைக்கால அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். நடுநடுவே சர்பத், ஐஸ்வண்டிகள் வர, சுற்றியிருந்தவர்கள் வாங்கிச் சாப்பிட்டார்கள். எனக்குச் சாப்பிட ஆசை தான். எதற்கு வம்பு என்று ஜொள்ளொழுக வேடிக்கை மட்டும் பார்த்தேன்.

வரிசை மட்டும் நகருவேனா என்றிருந்தது. பத்து நிமிடங்கள் அரை மணி நேரமானது. ஒரு மணி நேரம் நெருங்க, மெதுவாக ஊர்ந்து சென்ற வரிசை, அதுபாட்டுக்குச் சென்று கொண்டே இருந்தது. ஒருவழியாக கோவிலின் உள்ளே சென்று விட்டோம். முகத்திலறையும் வண்ணங்களுடன் சுவர்ச்சித்திரங்கள்! மனக்கண்ணில் வரைந்து பார்த்தேன்.

என்னை பாவமாக ஈஷ்வர் பார்க்க, நான் அவரைப் பாவமாக பார்க்க… கூட்டம் அம்மன் சந்நிதியை நெருங்க, “ஆத்தா மகமாயி பராசக்தி” என்று பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி கண்களை மூடி வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

மணியோசைகளுக்கிடையே தீப ஒளியில் அவளின் தரிசனம் கிடைத்தது. அம்மன்களே அழகிகள் தான். ஆனால் சமயபுரத்தாள் வீற்றிருக்கும் கோலமும் அலங்காரங்களும் அடடா! கண்களும் மனமும் குளிர இனியதரிசனம்.

“வாவ்!” முதன்முதலில் அம்மனை தரிசித்த ஈஷ்வர்! இப்படியொரு பிரம்மாண்ட அம்மனை இப்பத்தான் பார்க்கிறேன் என்றார்.

கோவில் நிறைய மாறிவிட்டிருக்கிறது. “ஸ்பெஷல்” தரிசன கொள்ளையடிக்க மக்களை வரிசையில் நிறுத்தி வளைத்து வளைத்து… இம்சை! எத்தனை வயதானவர்கள், குழந்தைகள்! அவளின் தரிசனத்திற்காக அத்தனையையும் மறந்து வருபவர்களிடம் கொள்ளையடிப்பவர்களை அவள் தான் “கவனிக்க” வேண்டும்.

வெளியே வரும்வழியில் மண்டபம் முழுக்க கடைகள். அங்கும் கூட்டம். மேலே நிமிர்ந்து பார்த்தால் அழகான அம்மன் சித்திரங்கள். ஹை! மீனாட்சி! வேடிக்கை பார்த்துக்கொண்டே வாசலுக்கு வந்துவிட்டோம். அப்பொழுதுதான் செருப்பை வரிசையில் நுழைந்த இடத்தில் விட்டது நினைவுக்கு வர, மீண்டும் வெயிலில் நடை.
  
கோவிலை விட்டு வெளியே வந்தால் ஒரே சாப்பாட்டுக்கடைகள். வஞ்சனையில்லாமல் சாப்பிடும் கூட்டம் ஈக்கள் மொய்க்க கரும்புச்சாறு, இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
 
ஈஷ்வர் களைத்து விட்டிருந்தார். இளநீர் குடித்து விட்டு வண்டியை நோக்கி நடந்தோம்.

“இப்பவே போதும்னு இருக்கு.”

“நோப். அடுத்து நான் பார்க்கணும் பார்க்கணும்னு பல வருடங்களாக காத்திருக்கும் இடத்திற்குப் போறோம்.”

“உனக்கு டயர்டாவே இல்லையா?”

“ம்ஹூம். ஊர சுத்திப்பார்க்கறதுன்னா தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே
கிளம்பிவிட்டோம்


No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...