Sunday, August 11, 2024

மூப்பு

இந்த வருட ஆரம்ப மாதங்களில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது சுற்றியிருக்கும் வயதான உறவினர்கள், பெரும்பாலும் பெண்கள், தனிமரமாகி நிற்பதை உணர முடிந்தது. மகன்,மகள்களின் ஆதரவு, அருகாமை இருந்தாலும் ஓடியாடி களைத்த கால்கள் வேலை செய்தே பழக்கப்பட்டிருந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையிலிருப்பதாக வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மூப்பின் காரணமாக பலருக்கும் பல விதமான நோய்கள். கணவன் உயிரோடு இருக்கும்வரை கலகலப்புடன் இருந்த பெண்மணிகள் அனைவரும் இன்று தங்களுக்கென்று ஒரு ஆதரவு இல்லாததைப் போல உணருகிறார்கள். அதுவும் அடுத்தவர் துணையின்றி வாழும் நிலைக்குச் சென்றவர்களோ,
“போதும் இந்த வாழ்க்கை! இனி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது”என்று சொல்லும் பொழுது கண்ணீரை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. என்னை வளர்த்தெடுத்தவர்கள். அவர்களின் இளம் வயதில் எங்களைப் பராமரித்த பசுமை நினைவுகள் இன்றைய நிலையை எண்ணி கண்ணீராய் கட்டுக்கடங்காமல் அழ, அப்பொழுதும் அவர்களே சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது.

அதில் ஒருவர் சொன்னது தான் இன்றுவரையில் யோசிக்க வைக்கிறது.
குழந்தைகளுக்காக ஓடி அவர்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட, பின் கணவருக்காக ஓடி, அவர் கரையேறி விட, தனக்கு என்று நோவு வரும்பொழுது பெற்ற பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கிறோமே என்ற நிலை தான் பலரையும் வருத்தப்பட வைக்கிறது.

என்ன தான் தன்னைப் மெற்றவர்கள் என்றாலும் தானும் ஒரு கணவனாக, தகப்பனாக, பெண் என்றால் மனைவியாக, அம்மாவாக இருப்பவர்களுக்கு வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதில் ஏகப்பட்ட சிரமங்கள். சிலர் பல அலுவல்களுக்கு இடையிலும் வயதான அம்மா, அப்பாவை மிக நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

நாம் குழந்தைகளாக இருந்த பொழுது ஊண், உறக்கமின்றி நம்மை கவனித்துக்கொண்டவர்கள் வயதில் முதிர்ந்த குழந்தைகளாக மாறும் பொழுது கவனித்துக் கொள்ளும் பொறுமையையும் பக்குவத்தையும் நேரத்தையும் பெற்றிருப்பவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள்.
ஆனால் கடைசிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு மட்டும் யாருக்கும் வரக்கூடாது.

வாழ்க்கைச் சக்கரத்தில் நமக்கும் அந்த நிலை வரும் என்பதை உணர்பவர்கள் மட்டுமே வயதான பெற்றோர்களுக்கு ஆதரவாகவும் அனுசரனையாகவும் இருக்க முயற்சிக்கிறார்கள்.

எளிமையான இந்த வாழ்க்கை தான் எத்தனை சிக்கலானது?





No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...