Sunday, August 25, 2024

உனக்கும் கீழே உள்ளவர் கோடி...

இந்த வார நீயா நானாவில் வேலைக்குச் சென்று கொண்டே படிக்கும் மாணவ, மாணவியர்கள் Vs அவர்களின் பெற்றோர்கள் என்ற விவாதம் நடந்தது. பங்கெடுத்த மாணவர்கள் பெரும்பாலும் புறநகரைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் என்று கூட சொல்லலாம். பலரும் சிறுவயதில் இருந்தே வேலைக்குச் சென்று பின் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். வயதுக்கு மீறிய உடல் உழைப்பும் மனஉளைச்சலும் பார்க்கவும் கேட்கவும் வருத்தமாக இருந்தாலும் இது உண்மை. நடந்து கொண்டிருக்கிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக குழந்தைகள் மேல் திணிக்கப்படும் வன்முறை இது. இங்குதான் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும்.

இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு இளவயதிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்துவிடுகிறது. போதிய ஊட்டச்சத்து இல்லாதது தான் முதற்காரணம் என்று சொல்ல வேண்டியதில்லை. கணவனுக்கு ஈடாக இல்லாவிட்டாலும் ஏதோ அவர்களால் முடிந்த அளவிற்கு அம்மா, மனைவி என வேலைகள் செய்து குடும்பங்களைச் சமாளித்து வருகிறார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நோவு என்று வரும் பொழுது தான் இந்தக் குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களும் சூழ்நிலையை உணர்ந்து பணியிடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்களின் வயதிற்கு மீறிய வேளைகளில் ஈடுபடுகிறார்கள். முடிவு? சிறுவயதிலேயே அவர்களுக்கும் உடற்பிரச்னைகள்!

அவர்கள் வளர்ந்ததும் என்னவாக ஆசைப்படுகிறார்கள் என்று சொன்னதிலிருந்து அவர்கள் எத்தனை பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாரால்? என்று நன்கு புரிந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும், ஊருக்கும் என இருக்கும் அரசு அதிகாரிகளின் வேலையே இவர்களைப் போன்றவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சேர்கிறதா? இந்த மாணவர்களின் வாழ்க்கையைச் செழுமையாக்க அரசு இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்வது தான். ஆனால் பெரும்பாலானோர் இவர்களிடமிருந்தும் எப்படி பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று தான் இருக்கிறார்கள் போலிருக்கு😔

அதில் ஒரு மாணவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. விரும்பியதில்லை என்று அவனின் அத்தை கூற, "பிறந்ததிலிருந்து கிடைக்காத எதன் மீதும் தான் ஆசைப்பட்டதில்லை" என்று கூறியவன் மீது வருவது அனுதாபமா? வருத்தமா? தெரியவில்லை.

எங்கள் சாயப்பட்டறையில் கிட்டத்தட்ட என் வயது/அக்கா வயதுள்ள மகன்களை அழைத்துக் கொண்டு ஒரு தாய் கீழ்மதுரை ஸ்டேஷனிலிருந்து பள்ளி முடித்து அழைத்து வருவார். அரைமணிநேரம் நடந்து வரவேண்டும். மூவரும் வேலை செய்வார்கள். பாவம் முதல் பையன் தலையில் தான் அதிக வேலைகள் இருக்கும். அம்மா ஒத்தாசை செய்வார். இரண்டாவது பையன் அழுது கொண்டே இருப்பான். தூக்கம் வரும். கூடவே வீட்டுப்பாடங்கள் செய்வார்கள். இரவு வீடு திரும்ப 9.30 மணியாகி விடும். அப்பொழுதெல்லாம் அவர்களின் நிலைமையைக் கண்டு வருந்தியதுண்டு. அம்மாவும் அவர்களுக்காக இரவு உணவு, சமயங்களில் உடைகள், அவசரத்திற்குப் பணம் என்று கொடுத்து உதவுவார். இப்படிப்பட்ட மக்கள் ஏராளம் பேர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். முடிந்தவர்கள் உதவுகிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது இப்படியெல்லாம் கூட கஷ்டப்படுகிற மக்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டதுண்டு. எனக்குப் பிடித்த உணவு இல்லையென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஹோட்டலில் இருந்து உணவைக் கொண்டு வந்து சாப்பிடும் எனக்கு ஒருவேளை சாப்பாடு கூட இல்லாத நிலையில் இருப்பவர்கள் கற்றுக் கொடுத்தது ஏராளம். கல்வியின் அவசியத்தையும் உணர்த்திய காலம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் எல்லோருக்கும் எல்லாமே எளிதில் கிடைப்பதில்லை. அந்த மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் தங்களுக்கென மரியாதையைப் பெற வேண்டும் என்று முனைகிறார்கள். நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் நினைத்தது நடக்கட்டும்.

இப்பொழுதெல்லாம் பலரும் படித்து முடித்து வேலைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கள் சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு முடிந்த வரையில் கல்வி பயில உதவி செய்கிறார்கள். இதன் மூலம் தனக்கு உதவிய சமூகத்திற்கு உதவி உயர்த்தவும் செய்கிறார்கள். பல குடும்பங்கள் இதன் மூலம் உயர்ந்துள்ளதை நேரடியாகவே பார்த்து வருகிறேன். அப்படித்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று குரல்வளையை நசுக்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் திருமாவளவன், நடுவராக வந்த இயக்குனர் மாறி செல்வராஜ் போன்றவர்கள் முறையாக இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி உயர்த்த வேண்டும். செய்வார்களா?

நாங்கள் வருந்திய காலங்களில் தாய் மாமா ஒருவர் எப்பொழுதும் கண்ணதாசனின் இந்தப்பாடல் வரிகளைத் தான் கூறுவார். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..." சத்தியமான வார்த்தைகள்!


No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...