Monday, August 26, 2024

கிருஷ்ணாஷ்டமி

இன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். அவரது வருகையை உவகையுடன் கொண்டாடும் பலரது உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். கிருஷ்ணன் என்றாலே அழகும் ஆனந்தமும் தான். கர்ப்பிணிப்பெண்கள் பலரும் கூட கிருஷ்ணனைப் போல ஒரு குழந்தை வேண்டும் என்று தான் நினைத்து வழிபடுவார்கள். அன்புள்ள குழந்தையாய், குறும்புகள் செய்யும் மகனாய், இளம்பெண்களின் மனதைக் கவரும் காதலனாய், பாசமிகு சகோதரனாய், நண்பனாய் எத்தனை எத்தனை ரூபங்களில் அவன் நம்மோடு உறவாடுகிறான். கடவுள் என்பவர் நம்மில் தினமும் வாழ்ந்து வருவதைக் கொண்டாடி மகிழும் உள்ளங்களில் தான் எத்தனை எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

அவருக்குப் பிடிக்கும் என்று பால், சர்க்கரை, அவல், வெண்ணெய், நெய் என்று பட்சணங்கள் செய்து படைத்து உண்டு மகிழும் குடும்பங்கள் இன்று பல.

காலையில் சில காட்சிகளும் முகங்களும் நினைவிற்கு வந்தது.

காசியில் தங்கியிருந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் ‘முன்ஷி காட்’ படித்துறையில் அமைதியாக உட்கார்ந்து துள்ளியோடும் ‘மா கங்கா’வைப் பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். ‘சும்மாயிருத்தல்’ கணங்களை அனுபவித்த நேரம் அது! சிரித்த முகத்துடன் ஒரு தம்பதியர் கையில் சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் படியில் அமர்ந்து கொண்டார்கள். கையிலிருந்த துணியை விலக்கினால் குழந்தை என்று நான் நினைத்தது அழகாக அலங்கரித்த குட்டி தவழும் கிருஷ்ணன் விக்கிரகம்😮 ஏதோ குழந்தையைப் போல அந்தப் பெண்மணி மடியில் கிடத்திக் கொண்டாள். ஆண் தண்ணீரில் இறங்கி கங்கா மாதாவை வணங்கி மூன்று முக்கு முங்கி எழுந்து வர, இந்தப் பெண்மணி சிறு குழந்தையைக் கொடுப்பது போல் சிரித்துக் கொண்டே லட்டு கோபாலை கணவரிடம் கொடுக்க, அவரும் இரு கைகளால் வாங்கிக் கொண்டு மீண்டும் மூன்று முறை முங்கினார். தன் சொந்தக் குழந்தையைக் குளிப்பாட்டியது போல் சிரித்துக் கொண்டே மனைவியிடம் கொடுக்க, அந்தப் பெண்மணியும் துண்டால் அழகாக துடைத்து வேறு துணியை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக எளிமையான மனிதர்களாகத் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் உலகில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்க்க பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளையும் குழந்தையாக கொண்டாடுவதில் தான் எத்தனை இன்பம்! அவர்களிடம் எனக்குத் தெரிந்த இந்தியில் பேசிக்கொண்டிருந்தேன். கங்கையில் குளிப்பாட்ட வீட்டிலிருந்து தவழும் கிருஷ்ணன் விக்கிரகத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்று நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கம் தான். பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து, வாழும் கணங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் அந்த தம்பதியரை எனக்கு மிகவும் பிடித்தது. நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம்!

அனைவருக்கும் இனிய கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துகள்!

ஹரே ராம! ஹரே கிருஷ்ண!

No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...