Tuesday, July 15, 2025

போய் வா நதி அலையே ...


பழம்பெரும் நடிகைகளில் சாவித்திரிக்கு அடுத்தபடியாக  எனக்கு மிகவும் பிடித்தவர் சரோஜா தேவி. பாந்தமான தோற்றத்தில் சாவித்திரி என்றால் துடுக்குத்தனமான தோற்றத்தில் கன்னடத்துப் பைங்கிளி! அவர் பேசும் விதமும், மையிட்ட பெரிய விழிகளும், குமிழ் சிரிப்பும், வசீகரமான முகவெட்டுத்தோற்றமும் பலரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அந்தந்த கதாபாத்திரத்திக்கேற்ற நடிப்பில் முன்னணி நடிகர்களுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகையும் கூட!

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் நான் விரும்பிக்கேட்கும் பாடல்கள் பலவற்றிலும் அவர் முகம் வந்து போகிறது. ஒரு தலைமுறையின் நாயகி இன்று நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டிருந்தாலும் அவர் நடித்த படங்கள், பாடல்காட்சிகள் வாயிலாக என்றென்றும் நினைவில் இருப்பார். நேற்றிலிருந்து அவர் வாயசைத்த பாடல்கள், பி.சுசீலாவின் குரலில் கேட்க அத்தனை இனிமையாக இருக்கிறது. சிவாஜியுடன் இவர் நடித்த சில படங்களை பார்த்திருக்கிறேன்.பாகப்பிரிவினை படத்தில் ஏழை கிராமத்துப் பெண்ணாக உடல் ஊனமுற்ற ஒருவனுக்கு மனைவியாக "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ" என்று முதன்முதலாக மனதில் வந்து அமர்ந்தவர். "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாலும் பழமும் படத்தில் அவரைப் பார்க்க இன்னும் பிடித்துப் போயிற்று. "உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்" என்று ஈஸ்ட்மேன் கலர் திரையில் பளிச்சென்று சிகப்பு நிறச்சீலையில்...வாவ்! 

எம்ஜிஆர்-உடன்  நடித்த அன்பே வா, பறக்கும் பாவை, பெரிய இடத்துப் பெண் படங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. ஜெமினியுடன் "தனிமையிலே தனிமையிலே' என்று இனிமையாக. இவர் நடித்து நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனதில் நீங்கா இடம்பெற்ற நாயகிகளுள் ஒருவர்.

கலைஞர்களுக்கு இறப்பு என்பது இல்லை. 

பலரின் கனவுக்கன்னியாக வலம்வந்த கன்னடத்துப் பைங்கிளியின் ஆத்மா சாந்தி பெறட்டும்.



No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...