Saturday, July 5, 2025

ஸ்குயிட் கேம்

உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் 'ஸ்குயிட் கேம்'. பார்த்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் குழந்தைகள் விளையாட்டுகளை வைத்து "மரண பயத்த காமிச்சிட்டான் பரமா" என்று சொல்ல வைத்தது.


 பணப்பிரச்சினைகளில் தவிப்பவர்களைக் குறிவைத்து ஆசையைத் தூண்டுகிறது ஒரு கூட்டம். மாட்டிக் கொண்ட ஆட்களைப் பிடித்து ஒரு தீவினுள் அடைத்து உயிரைக் கொல்லும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள். ஒவ்வொரு விளையாட்டின் முடிவில் இறந்தவர்களின் பணத்தைச் சேர்த்துக் கொண்டே செல்கிறார்கள். கண்முன்னே குவிந்து கொண்டே செல்கிறது பணம். இறுதியில் வென்றவருக்கு அனைத்துப் பணமும் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்குகிறது கூட்டம். "பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்". இதைத்தான் விதவிதமான விளையாட்டுகளின் மூலம் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து வெற்றிப்பணத்திற்காக மனித மனம் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் மாறுவான் என்பதை விறுவிறுப்பான தொடராக எடுத்திருந்தார்கள். அதில் வரும் பொம்மை "ரெட் லைட் க்ரீன் லைட்" என்று கண்ணை உருட்டும் போதெல்லாம் நமக்குப் பதறுகிறது.

மனித நேயமுள்ள கதாநாயகன், நண்பனாக இருந்தவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதிரியாக மாறுவான் என்று சில கதாபாத்திரங்கள். ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் அடுத்தவரைக் கொல்கிறது. சில நேரங்களில் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற பணத்தாசை அதிகரிக்க அங்கே மனிதம் தோற்றுப் போவதைத் தான் அழகான ஆனால் வன்முறை நிறைந்த காட்சிகளுடன் எடுத்திருந்தார்கள்.

இரண்டாவது பாகமாக வெளிவந்த தொடரில் வெற்றி பெற்ற கதாநாயகன் உயிர்களைக் கொல்லும் இந்த விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க காரணமானவர்களைக் கொல்ல வெறிகொண்டு அலைவான். முன்பு வெற்றி பெற்ற ஒருவனே இந்தத் தொடரில் விளையாட்டை நடத்தும் மர்ம மனிதனாக வலம் வருவான். இதற்கிடையில் காவல்துறையும் இந்த அரக்கர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். உள்ளிருக்கும் மனிதர்கள் உயிர் விளையாட்டை ஆடுபவர்களோடு சண்டையிட்டுப் போராடுவார்கள். முடிவில் தோற்றுப்போகிறார்கள்.

ஒரு செயல்முறையை மாற்ற அதனோடு வாழ்ந்து போரிட வேண்டும் என்பதை உணருகிறான் கதாநாயகன்.

இந்த வருட இறுதியில் வெளிவருவதாக இருந்த மூன்றாவது பாகம் திடீரென ஜூன் மாதமே வெளிவந்து விட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. சிரமேற்கொண்டு பார்த்து முடித்தேன்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா! வன்முறையோ வன்முறை. கடைசி பாகம் என்பதாலோ?

இதிலும் பணத்திற்காகவும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஒருவரை ஒருவர் மட்டுமன்றி அங்குப் பிறந்த குழந்தையையும் கொல்ல மனிதர்கள் செல்வார்கள் என்பதையும் பெற்ற மகனை விட ஒரு இளம் தாயைக் காப்பாற்ற ஒரு தாய் எந்த தியாகத்தையும் செய்வாள் என்று மனித நேயத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் காட்சிகளுடன் விறுவிறுப்பாகவே செல்கிறது இந்தத் தொடரும்.

இறுதியில் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறான் கதாநாயகன். முகமூடி அணிந்திருந்தாலும் நெஞ்சில் ஈரம் கொண்டவனாக குழந்தையைக் காப்பாற்றும் முன்னாள் வெற்றியாளன் இந்நாள் வில்லன்.

இந்த குரூர விளையாட்டை ரசிக்கும் பணம்படைத்த செல்வந்தர்கள் ஏழ்மையோடு விளையாடுவதையும் அவர்கள் அல்லாடுவதையும் ரசிக்கும் மனப்பாங்கை விவரிக்கிறது தொடர். இறுதியில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தெருவில் ஏழைகளைக் குறிவைக்கும் கூட்டம் இன்னும் இந்த கொடிய விளையாட்டை கொரியா தாண்டி நடத்திக் கொண்டிருக்கிறது என்று முடித்திருக்கிறார்கள். அதாவது, உலகெங்கிலும் செல்வந்தர்களின் ஆதிக்கம் என்பது ஏழ்மையை எவ்வாறெல்லாம் தங்களுடைய விளையாட்டிற்காக/ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும்/கொல்லும் என்பதை சொல்லாமல் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு.

வலிமையுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் வலிமையற்றவர்களின் நிலையைத்தான் பறைசாற்றுகிறது இந்தத் தொடர்கள். கொடிய உலகில் மனித நேயத்தைக் காப்பாற்றுபவர்கள் சிறந்த மனிதர்களாகிறார்கள் இந்தத் தொடரின் நாயகனைப் போல!

"ஸ்குயிட் கேம்" சமூகத்தைப் பறைசாற்றுகிறது.

ஒருவரின் செயலை வைத்து அவரை எடை போடுவதை விட அவரின் நிலையிலிருந்து உணர வேண்டும். நெருக்கடிக்கு உள்ளாகும் பொழுது மனித மனம் எந்த எல்லைக்கும் செல்லும் என்று ஒருவரை ஒருவர் வெறிகொண்டு தாக்கும் பொழுது புரிய வைக்கிறது. கொடிய உலகில் கருணையுடன் நடந்து கொள்வது பலவீனம் அல்ல. பலம் தான் என்ற உண்மையை உணர வைக்கிறது.

ஒவ்வொரு பாகமும் புதிய வீரர்கள், புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினாலும் கொடிய விளையாட்டுகளும் முடிவுகளும் மாறவில்லை. இந்த விளையாட்டுகள் உலகின் உண்மையான போராட்டங்களை பிரதிபலிக்கின்றன. அமைப்புகளை மாற்றாவிட்டால், தலைமுறை மாறினாலும் வலி மட்டும் தொடர்ந்திருக்கும் என்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.

இறுதியில் நல்ல தலைவன் என்பவன் பரிசைப் பற்றிக் கவலைப்படாமல் நீதிக்காகப் போராடுபவனாக, மற்றவர்களைக் காப்பாற்றுபவனாக இருப்பான். நம்மை அழிக்க வடிவு செய்யப்பட்ட உலகில், மனித நேயத்துடன் இருப்பதே சக்திவாய்ந்த எதிர்ப்பு என்ற போதனையைக் கற்றுக் கொடுக்கிறது இறுதித்தொடர்.




No comments:

Post a Comment

ஸ்குயிட் கேம்

உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் ...