அப்படியே வைத்துக் கொண்டாலும் குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் பெற்றோர்கள் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் மனநெருக்கடியில் குழந்தைகள் கூட தவிக்கும் காலகட்டங்கள் அதிகரித்து விட்டது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. குழந்தை மற்றும் குடும்ப நல நிபுணர்கள் அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.
"குழந்தைகள் பள்ளிகளில் அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்று தங்களை நண்பர்களுடன் பொருத்திக் கொள்வதில் சிரமங்களை மேற்கொள்கிறார்கள். தங்களுடைய தோற்றம், பண வசதி, இனம், மொழி, கலாச்சாரத்தால் மற்றவர்களால் வேறுவிதமாக நடத்தப்படும் பொழுது மனதளவில் நிறையவே பாதிக்கப்படுகிறார்கள்.
புதிய வீடு, பள்ளி, ஊர், நாடு மாறும் பொழுது எதிர்பார்ப்புகள் இருந்தாலும் ஏமாற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் ஏற்படுகிறது. பழகிய நண்பர்களை இழந்து தவிக்கிறார்கள். அதுவும், மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்பவர்களின் குழந்தைகள் மிக அதிக அளவிலேயே பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதனாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.
போதாக்குறைக்கு சமூக வலைதளங்கள் பெரியவர்களிடையே அத்தனை மன உளைச்சலை ஏற்படுத்தும் பொழுது குழந்தைகளைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? 'ரீல்ஸ் ரீல்ஸ்' என்று தொடர்ந்து பார்த்துக் கொண்டு தன்னைத்தவிர,மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் வசதிகளுடனும் இருப்பதாகத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
காலை முதல் இரவு வரை "படி, படி" என்று படுத்தும் பெற்றோர்கள் இருக்கும் வீடுகளிலோ பல குழந்தைகளும் முறையான ஓய்வின்றி நிரந்தர மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
பெற்றோர்களின் வேலைப்பளுவினால் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் மாற்றங்களைப் பல குழந்தைகளால் உடனே ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பல பெற்றோர்களும் தாங்கள் குழந்தைகளுக்கு வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்வதில்லை. அந்த ஏமாற்றங்களையும் குழந்தைகள் எதிர்கொள்வதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. பெற்றோர்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள்.
சிறு வயதில் குழந்தைகள் வாழ்வில் நடக்கும் சிறு அசம்பாவிதங்கள், இழப்புகள் கூட மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி பெரியவர்களான பின்னும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. இதனால் எப்பொழுதும் ஒருவித மனஅழுத்தத்திலேயே இருக்கிறார்கள்" என்று குழந்தைகள், குடும்ப மன நல சிகிச்சையாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.
எவ்வாறு குழந்தைகளின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு உதவுவது?
"முதலில் குழந்தைகளிடம் கவலைகள், மன வருத்தங்களை மறைக்கக் கூடாது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பிக்கையான மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதால் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். குழந்தைகள் மனதில் உள்ளவற்றை வெளியே பகிர்ந்து கொள்ளும் சூழலை குடும்பங்கள் ஏற்படுத்த வேண்டும். இங்கு தான் பெற்றோர்கள் தவறுகிறார்கள். "உனக்கு ஒன்றும் தெரியாது" என்று ஒரே வாக்கியத்தில் குழந்தைகளைப் புறம் தள்ளி விடுகிறோம். தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் குழந்தைகளிடம் ஆதரவாக அனுசரணையாகப் பேசி அவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். இவர்களிடம் பேசினால் நமக்குத் தீர்வு கிடைக்கும் என்று குழந்தைகள் நம்ப வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அது தவறும் பொழுது தான் தடம் மாறுகிறார்கள் குழந்தைகள்.
எத்தனை பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு என்று ஒன்று இருக்கும். கடப்பது சிரமம் என்றாலும் இன்று பூதாகரமாக இருப்பது நாளை ஒன்றுமில்லாதது போலாகி விடும் என்று கூறி நேர்மறை எண்ணங்களுடன் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்.
பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது எப்படி என்று அவர்கள் வழிக்கே சென்று அறிவுறுத்த வேண்டும். அதற்கு அவர்களுடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி கற்றுக் கொடுப்பது நல்லது." சிகிச்சையானார்கள் இவ்வாறாக சில வழிகளைக் கூறுகிறார்கள்.
ஆக, முதலில் பெற்றோர்களாகிய நாம் தான் முதலில் குழந்தைகளைப் புரிந்து கொண்டு வளர்ப்பது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளை அவர்கள் நிலையிலிருந்து பார்க்க ஆரம்பித்தால் மனச்சோர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றி எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாக மாற்ற முடியும்.
குழந்தைகளை வளர்ப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல, ஒரு தலைமுறையை வடிவமைக்கும் புனித பணியும் என்பதால் வாழ்ந்து காட்டுவோம் என்று அவர்களுக்கு ஊக்கமளித்து நாமும் நலமுடன் வாழ்வோம்.
No comments:
Post a Comment