Monday, May 26, 2025

பேச வேண்டிய நேரம் இது



மனநலத்தின் மீது கவனம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 'தேசிய மனநல விழிப்புணர்வு' மாதமாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அமைதியின்மை, புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மனச்சோர்வு, பதட்டம், அதிர்ச்சி, ஏமாற்றம், தனிமை என பல்வேறு காரணிகளால் மில்லியன் கணக்கான மக்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் 5 பெரியவர்களில் ஒருவர் மன நல பாதிப்புக்கு உள்ளாகிறார் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதிலும், வெளியில் சொல்ல அச்சப்பட்டு பலர் இன்னும் அமைதியாக அவதிப்படுகிறார்கள். ஏன்?

"மனநலம் பற்றிப் பேசுவது பிறரின் கிண்டலுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்" என்ற எண்ணமே காரணமாக இருப்பதால் அதனை உடைத்தெறிய 'மனநல விழிப்புணர்வு மாதம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சமீபத்திய நவீன போக்கா? இல்லை. 1949-ஆம் ஆண்டு, 'Mental Health America' எனும் அமைப்பால் தொடங்கப்பட்டது. மனநல கோளாறுகள், மன அழுத்தங்களைப் பற்றிய பொது அறிவு, சிகிச்சையின் மேன்மைகள், உதவிக்கான அணுகல்களை மக்களிடையே பேசி “மனநலம் என்பது உடல்நலத்தின் ஒரு அங்கம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கமாக தற்பொழுது மாறியுள்ளது.
 
உறவுகள், வேலைத்திறன், உடல் ஆரோக்கியம், வாழ்க்கைத் தேர்வுகள் இவை அனைத்தும் மனநலத்துடன் நேரடியாக இணைந்துள்ளதால் விழிப்புணர்வு அவசியமாகிறது.

பெரியவர்கள் மட்டுமன்றி இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். சமூக ஊடக அழுத்தம், எதிர்பார்ப்புகள், அடையாள தேடல்கள் பெரும்பாலோனரைப் பாதிக்கின்றன. தற்கொலை எண்ணங்களும் அதிகரித்துள்ளன.

மன அழுத்தத்துடன் இருப்பவர்கள் உதவி கேட்க அஞ்சுகிறார்கள். இந்த மாதம் அவர்களுக்கான மாதம். "நீங்கள் தனியாக இல்லை. உங்களுக்கான இடம் இந்த உலகில் இருக்கிறது" என்று கூறி ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் அணுகி ஆதரவை வழங்குவதே இதன் நோக்கம். வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள், பள்ளிகள், வேலை இடங்களில் மனநல ஆதரவு பற்றிய தகவல்களைப் பகிர்வதும் “மன உளைச்சலால் துன்புறுவது தவறில்லை. உதவி கேட்பது தான் தைரியமான செயல்” என்று பாதிக்கப்பட்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக செய்திகளைப் பரப்புகிறார்கள்.

துயர் உணர்வுகள், ஓய்வு, உடற்பயிற்சி, தூக்கம் இவை அனைத்தும் மனநல பராமரிப்பில் முக்கியமானவை. தற்பொழுது பிரபலங்கள் பலரும் தாங்கள் மன நல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதை/ கொண்டதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருவதும் நல்ல தொடக்கம். சாமானியர்களுக்கு இருக்கும் அச்சமும் மெல்ல விலகி வருகிறது.

இந்த விழிப்புணர்வின் பலம் மனநலம் என்பது ஒவ்வொருவருக்கும் உரியது. நம் அன்றாட வாழ்வின் அடிப்படை. பற்களைத் துலக்குவது போலவே மனம் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். சமூகத்தின் பங்கும் அதிகமாக இருப்பதால் மன நலச் சட்டத்தை ஆதரிப்பதும் நம் கடமையாகும்.

இந்த விழிப்புணர்வு மாதம் அமெரிக்காவில் துவங்கினாலும், மனநலம் என்பது உலகளாவிய பிரச்சினையாகும். ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலை வீதங்கள், போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்புகள் என்று உலகளவில் இதன் தேவை அதிகரித்துள்ளது. "மனநலம் இல்லை என்றால் சுகாதாரம் இல்லை" என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மனிதம் தழைக்க, மன நலத்தின் அவசியத்தை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதே நம் கடமையாகும். அதற்கு உறுதுணையாக நம்மால் இயன்ற அளவில் அவர்களுக்கு அனுசரணையாக இருந்து வழிநடத்துவோம்.

No comments:

Post a Comment

குழந்தை வளர்ப்புச் சவால்கள்

கூட்டுக்குடும்பங்களில் வளர்ந்த, வளரும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள் இருப்பினும் பள்ளிகள் கற்று...