சொல்வனம் இதழ் 343ல் வெளிவந்த முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள் கட்டுரை அவருடைய 100 நாட்கள் ஆட்சியின் நிறைகுறைகளை அலசுகிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கடந்து செல்லவும் முடியவில்லை. குறைகளைத் தீர்க்கும் நாள் வருமோ என்று தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.
பதவியேற்ற முதல் 100 நாட்களைக் கொண்டு அதிபரின் ஆட்சியையும் ஆளுமையையும் அளவிடுவது அமெரிக்காவிற்குப் புதிதல்ல. 1933ம் ஆண்டு ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அதிபரான காலத்தில் தான் முதன் முதலில் இந்த வழக்கம் நடைமுறையானது. அப்பொழுது “தி கிரேட் டிப்ரெஷன்”ல் அமெரிக்கா தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். பொருளாதார மந்தநிலையை எதிர்த்துப் போராட துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் அதிபர் இருந்தார். அவரும் உடனடியாக தனது முதல் 100 நாட்களில் 15 முக்கிய சட்டங்களை இயற்றினார்.
அன்றிலிருந்து, பதவியேற்ற முதல் 100 நாட்கள் என்பது ஒவ்வொரு அதிபரும் எத்தனை விரைவாக தீர்க்கமாகச் சட்டங்களை இயற்றி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள் என்ற மதிப்பீட்டுக்கான அளவுகோலானது. ஆரம்பகால நடவடிக்கைகள் என்பது அதிபர் ஆட்சியின் முன்னுரிமைகள், தலைமைத்துவ பாணி, அரசியல் போக்கை அமெரிக்கர்களுக்கு மட்டுமில்லாமல் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்துவதால் தற்பொழுது பேசுபொருளாகி விட்டது.
அதுவும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இரு அவைகளிலும் பெரும்பான்மையும் கிடைத்து முந்தைய அரசை வீழ்த்திவிட்ட வெற்றிக்களிப்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் காலம் கிடைத்தால் சும்மா விடுவாரா அதிபர் ட்ரம்ப்? கடந்த ஏப்ரல் 29, 2025 அன்று அவர் அதிபராகப் பொறுப்பேற்று 100 நாட்களாகி விட்டது. அவரது ஆதரவாளர்கள் இந்தக் காலகட்டத்தை மாற்றங்கள் நிறைந்த முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் நாட்களாகவும் எதிர்கட்சிகள் அவருடைய நகர்வுகளுக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் வெளிவந்த நிர்வாக உத்தரவுகள், முன்மொழியப்பட்ட வரி மாற்றங்கள், கட்டணங்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் பலவும் சந்தைகள், வணிகங்கள், முதலீட்டாளர்களைப் பாதித்தன என்பதைப் பொருளாதார குறியீடுகளின் மூலம் உலகமே உணர்ந்து வருவதைக் காண்கிறோம். கல்வி, சுகாதாரம், குடியேற்றம், சிவில் உரிமைகள் மீதான கொள்கைகள் மக்களின் வாழ்க்கையில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தி வருவதும் கண்கூடு.
‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினம் ஒரு அஸ்திரத்தை ஏவி முதல் 100 நாட்களில் “கண்ல மரண பயத்தை காமிச்சிட்டான் பரமா” என்று ‘வால்ஸ்ட்ரீட்’டை மிரட்டி வருவதால் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகளவிலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதுவும், அங்கிள்சாமின் ராணுவ நிலைப்பாடு, வர்த்தக கூட்டணிகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றின நிர்வாக உத்தரவுகள் கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விவாதங்களும் அதிகரித்து வருகிறது.
முதல் 100 நாட்களில் 99 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் முந்தைய சாதனையை 143 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு முறியடித்துள்ளார் ட்ரம்ப். இந்த உத்தரவுகள் பெரும்பாலும் குடியேற்றம், வர்த்தகம், அரசாங்க மறுசீரமைப்புகளுக்காக இயற்றப்பட்டது. இதன் மூலம் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா, நிறைவேற்றுவாரா, நிறைவேற்ற முடியுமா என்பது தான் தற்போதைய கேள்வி. அவருடைய தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும் தற்போதைய நிலவரங்களையும் பார்க்கலாம்.
1. விலைவாசி குறைவு
தான் பதவியேற்றவுடன் “உடனடியாக” மளிகைப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் நடைமுறையில், விலைகள் குறையவில்லை. பணவீக்கத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, குடியேற்ற அமலாக்கம், ஜனவரி 6 போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குதல் போன்ற பிற முன்னுரிமைகளில் நிர்வாகம் கவனம் செலுத்துவதாக ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு, விலைகளைக் குறைப்பதில் உள்ள சிரமத்தை ஒப்புக்கொண்டு, டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “விலைகள் உயர்ந்தவுடன் அவற்றைக் குறைப்பது கடினம்” என்று கூறி தனது டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ம் “விலை குறைப்புகளுக்கு நேரம் எடுக்கும். அதற்கான மூலதன முதலீட்டை அதிகரிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளார்.
வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் கட்டணத் திட்ட கொள்கைகள் அமெரிக்கர்கள் பொருட்களை அதிக விலைக்கு வாங்க வழிவகுக்கும் என ஃபெடரல் ரிசர்வ் எச்சரித்தது. வரி குறைப்பு மாற்றங்களால் அரசின் வருவாய் குறையும். இதற்கு முன்பு 2016ல் இதேபோன்ற உறுதிமொழியை அளித்து நடைமுறைப்படுத்த, தேசிய கடன் தான் அதிகரித்தது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
2. சட்டவிரோத குடியேற்றம்
ட்ரம்ப் வெற்றி பெற முக்கிய காரணியாக இருந்ததில் அவரின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைகளும் ஒன்று. ஜனவரி 2025ல் பதவியேற்றதிலிருந்து, அவரது நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க, சட்டங்களை மேலும் கடுமையாக்கி பல தீவிரமான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கான வாக்குறுதியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் பல சட்ட சவால்களையும் பொது சர்ச்சையையும் எதிர்கொண்டுள்ளார் ட்ரம்ப்.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 2023ல் 249,740 ஆக இருந்தது பின் டிசம்பர் 2024ல் 47,324 வெகுவாக குறைந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் பிப்ரவரியில் 8,346 ஆகவும் மார்ச் மாதத்தில் 7,181 ஆகவும் மட்டுமே குறைந்துள்ளது. இதன் தொடர்பில் வெளிவந்த சட்டங்கள்:
குற்றம் சாட்டப்பட்ட, தண்டிக்கப்பட்ட ஆவணமற்ற குடியேறிகளைக் காவலில் வைக்க உத்தரவிடுகிறது ஜனவரி 29, 2025 அன்று கையெழுத்திடப்பட்ட ‘லேக்கன் ரிலே சட்டம்’. குடியேற்ற அமலாக்கத்துறை தனது கடமையைச் செய்யவில்லையென்றால் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மீது வழக்குத் தொடரவும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது இச்சட்டம்.
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக வன்முறை குற்றவியல் வரலாற்றைக் கொண்டவர்களை நகர்ப்புறங்களில் இருந்து விரைவாக கைது செய்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது 2025ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் சேஃப்கார்ட்’. மார்ச் 2025 நிலவரப்படி, இந்த நடவடிக்கையின் கீழ் 23,000 கைதுகள் நடந்ததாகவும் 18,000 பேர் நாடுகடத்தப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம்(ICE) தெரிவித்துள்ளது.
தீவிர குற்றவாளிகளாகக் கருதப்படும் 30,000 புலம்பெயர்ந்தோரைத் தடுத்து வைக்க ‘குவாண்டனாமோ புலம்பெயர்ந்தோர் செயல்பாட்டு மைய’த்தை விரிவுபடுத்தும் ஒரு குறிப்பாணையை ஜனவரி 29, 2025 அன்று வெளியிட்டார் அதிபர் ட்ரம்ப். இந்த முயற்சி சட்ட நிச்சயமற்ற தன்மைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டது.
கியூபா, ஹைட்டி, நிகரகுவா, வெனிசுலா நாட்டினருக்கும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட மனிதாபிமான பரோல் திட்டங்களை ஏப்ரல் 24, 2025 முதல் நிறுத்துவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது. புகலிடம், நாட்டில் தங்குவதற்கான வேறு சட்டபூர்வ வழிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அனைத்து செயலில் உள்ள பரோல் அனுமதிகளும் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும். ஒரு கூட்டாட்சி நீதிபதி இந்த நடவடிக்கையைத் தடுத்த பிறகு, ட்ரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசின் பரந்த சட்டவிரோத குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக விரைவான நாடுகடத்தலுக்காக வாதிட்டது.
இதற்கிடையில், ICE நாடு முழுவதும் ஏராளமான மக்களைக் கைது செய்து வருகிறது. தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறும் பலரும் உரிய நடைமுறை இல்லாமல் நாடு கடத்தப்பட்டுள்ளனர். எவ்வித குற்றவியல் பதிவு இல்லாத போதிலும் 14 வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மனைவி, மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ‘கில்மர் அப்ரிகோ கார்சியா’ மீது குற்றம் சாட்டி விசாரணையும் செய்யாமல் சால்வடோர் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரின் வழக்கும் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் ஒன்றாகும். இப்படி பல நிர்வாக குளறுபடிகள் சட்டவிரோத குடியேற்றம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது.
பிறப்புரிமை குடியுரிமை
ஆவணமற்ற குடியேறிகளின் குழந்தைகள், அமெரிக்காவில் தற்காலிகமாக இருப்பவர்களின் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிர்வாக ஆணையையும் பிறப்பித்துள்ளார். பல கூட்டாட்சி நீதிபதிகள் அதன் அமலாக்கத்தைத் தடுக்க தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
இவற்றையெல்லாம் செய்வேன் என்று முழங்கித் தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் தான் அரசின் செயல்களைக் கட்டுப்படுத்துவதாக நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் கூட கண்டித்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப்!
3. எரிசக்தி கட்டணக்குறைவு
பதவியேற்ற 12 முதல் 18 மாதங்களில் வாக்காளர்களின் எரிசக்தி செலவுகளைப் பாதியாகவோ அல்லது முக்கால் பங்காகவோ குறைப்பதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் முன்மொழிந்த தூய்மையான எரிசக்தி வரிச் சலுகைகளை ரத்து செய்யும் திட்டங்கள் வீடுகளுக்கான எரிசக்தி கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை சுட்டுகிறது. முன்னுக்குப் பின் முரண் என்பது இதுதானோ?
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், உபகரணங்களுக்கான புதிய கட்டணங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இது புதுப்பிக்கத்தக்க மற்றும் பாரம்பரிய எரிசக்தி துறைகளை பாதிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான மானியங்கள் நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டிருப்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும்.
நுகர்வோருக்கு எரிசக்தி செலவுகளைச் சேமிக்க உதவிய ‘எனர்ஜி ஸ்டார்’ போன்ற திட்டங்களை அகற்றுவதற்கான அரசின் முயற்சிகள் அதிக வீட்டுச் செலவுகளுக்கு வழிவகுக்கும்.
நிர்வாகத்தின் எரிசக்தி கொள்கைகள் அரசுக்கும், சட்டமியற்றுபவர்கள், தொழில்துறை பங்குதாரர்களுக்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளன. சில குடியரசுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சுத்தமான எரிசக்தி மற்றும் குறைந்த வருமான குடும்பங்களை ஆதரிக்கும் திட்டங்களுக்கு முன்மொழியப்பட்ட நிதி குறைப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இவை தங்களது தொகுதிகள், பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளை அமெரிக்காவால் கட்டப்பட்ட கப்பல்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற புதிய கொள்கையினால் சாத்தியமான செலவு அதிகரிக்கும் என்பதால் எரிசக்தி நிறுவனங்கள் விலக்கு கோருகின்றன. இதன் விளைவாக, எரிசக்தி கட்டணங்களைக் குறைப்பதாகச் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
4. சுங்க வரி விதிப்பு
அமெரிக்கத் தொழில்களைப் பாதுகாப்பதையும் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட சுங்க வரிகளை அமல்படுத்துவதாகப் பிரச்சாரங்களின் பொழுது வாக்களித்திருந்தார் ட்ரம்ப். “சர்வதேச வர்த்தகத்தில் மற்ற நாடுகள் அமெரிக்காவை ஏமாற்றுகின்றன. நலிந்திருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகளை விதிப்பேன். ஐ லவ் டாரிஃப்ஸ்” என்று தொடர்ந்து பேசி வந்தார். “டாரிஃப் மேன்” என்று தனக்குத் தானே பட்டத்தை வேறு சூட்டிக்கொண்டார். பதவியேற்றதிலிருந்து அவரது நிர்வாகம் பல குறிப்பிடத்தக்க வரி நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது. பேசியதோடு இல்லாமல் வரிகளை விதிப்பதும் பின் அதை மாற்றுவதும் மேலும் அதிக வரி, மாற்றங்கள் என்று தானும் குழம்பி மற்ற நாடுகளையும் குழப்பி அவர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். அதன் எதிர்மறை தாக்கம் சிக்கலான பொருளாதாரத்திற்கு வழிவகுத்து விட்டது .
அமெரிக்காவில் ஃபெண்டானிலை அனுமதித்ததற்கான தண்டனையாக கனடா, மெக்சிகோ, சீனா மீதான வரிகளை அதிகரித்தார். ஏப்ரல் 2 அன்று வெளிநாட்டு இறக்குமதிகள் மீது இன்னும் பரவலான வரிகளை விதித்து “விடுதலை தினம்” என்று அறிவித்தார். பின், அந்தத் திட்டத்தின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கினார். சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார். ஆனால் சீனா மீதான வரிகளை மட்டும் 145 சதவீதம் வரை வைத்திருந்தார். அமெரிக்கச் சந்தையை நம்பித்தான் உலக நாடுகள் பலவும் இருக்கின்றன. அதனால் தன்னுடைய வரிகளை, நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வார்கள் அல்லது ஒப்பந்த பேச்சிற்கு வருவார்கள் என்று தீவிரமாக நம்புகிறார். அவருடைய தீவிர ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். ஆனால், நடைமுறையில் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்வது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கிக் கொண்டு வருகிறது.
பங்குச்சந்தையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. “வர்த்தகக் கொள்கைகளை மாற்றும் பொழுது இதைப் போன்ற “சிறு”சறுக்கல்கள் வருவது இயல்பு தான். இதிலிருந்து மீண்டு அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். இங்கிருந்து வெளியே சென்ற வேலைகளும் வேறு பல புது நிறுவனங்களும் அமெரிக்காவிற்கே திரும்பி வரும். வேலையில்லா திண்டாட்டம் குறையும்” என்று பேட்டிகளில் கூறி வருகிறார். அதுவரையில் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா? மில்லியன் டாலர் கேள்வி.
உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதே இந்த வரி விதிப்புகளின் நோக்கமாக இருந்தாலும், அவை நீண்டகால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் வாதிடுகின்றனர். மற்றவர்கள் தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு அவை அவசியம் என்று நம்புகின்றனர். மே 2025 நிலவரப்படி, வர்த்தக பதட்டங்களைத் தணிக்கவும் உள்நாட்டுப் பொருளாதார கவலைகளை நிவர்த்தி செய்யவும் சீன இறக்குமதி மீதான வரிகளை 50% முதல் 54% வரை குறைக்க நிர்வாகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
5. போர் நிறுத்தம்
வெற்றி பெற்றவுடன் தான் பதவிக்கு வருவதற்கு முன்பே இஸ்ரேல்-பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன் போர்களை நிறுத்தி விடுவேன் என்று கூறியிருந்தார் ட்ரம்ப். நிறுத்துவது போல நிறுத்தி மீண்டும் தொடர்கிறது போர்கள். ஆனால் அமெரிக்கா தானாக எந்தப் போரிலும் பங்கெடுக்காது என்று சொல்லியிருப்பதால் கொஞ்சம் நிம்மதி. பாலஸ்தீனத்தின் கடலோரப்பகுதியான காசாவை ஆக்கிரமித்து அப்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா உதவி செய்யும் என்று சொல்வதும் அங்கிருக்கும் மக்களை அண்டை நாடுகளுக்குச் செல்லுமாறு கூறுவதும் எதுவரையில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.
ரஷ்யா-உக்ரைன் மோதலில் மத்தியஸ்தம் செய்ய ட்ரம்ப் தீவிரமாக முயன்றார். மே 8, 2025 அன்று, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் 30 நாள் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். மீறப்பட்டால் கூடுதல் தடைகள் ஏற்படும் என்று உக்ரைனை எச்சரித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் ஆதரவைத் தொடர்ந்து பெற, உக்ரைனின் கனிம வளங்களுக்கு அமெரிக்காவிற்கு முன்னுரிமை வழங்கும் கனிம ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டிருக்கிறது.
தற்பொழுது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிடாது என்று கூறியிருப்பது வெளிநாட்டு மோதல்களில் அமெரிக்காவின் குறைவான ஈடுபாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் ஏமனில் ஹௌதிகளுடனும் சிரியாவில் அல்குவைதாவுடனும் வான் தாக்குதலை நடத்தி தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது. புதிய அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்த” பிரச்சாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் சாத்தியமான ராணுவ நடவடிக்கை குறித்தும் எச்சரித்துள்ளது தேர்தல் வாக்குறுதியைக் கேள்விக்குறியாக்குகிறது.
முன்மொழியப்பட்ட உக்ரைன், ஏமன் போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் அவரது பிரச்சார வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகின்றன என்றாலும் இந்தப் பிராந்தியங்களில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதில் இருக்கும் சவால்களை எப்படி கையாளப் போகிறார் என்பது இனி தான் தெரியவரும்.
6. வரி குறைப்பு
அதிக வரிவிதிக்கும் மாநிலங்களில் வரி செலுத்துவோருக்குப் பயனளிக்கும் வகையில், மாநில, உள்ளூர் வரி (SALT) விலக்குகளுக்கான வரம்பை $10,000லிருந்து $30,000 ஆக உயர்த்தவும் பணி நேரம் நீங்கலாக கூடுதல் நேரம் வேலைபார்ப்பதற்கான சம்பளம், சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் பெறும் டிப்ஸ், சோஷியல் செக்கியூரிட்டி வருமானங்களின் மீதான வரிகளை நீக்குவதாகவும் உறுதியளித்திருந்தார். மேலும் தனது முதல் பதவிக்காலத்தில் கொண்டு வந்த வரி குறைப்புகள் தற்பொழுது காலாவதியாகும் நிலையில் இருப்பதை நிரந்தரமாக்குவதாகவும் கூறினார்.இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாகவுள்ள TCJA சட்டத்தின் நிரந்தர நீட்டிப்புக்கு நிர்வாகம் வாதிட்டு வருகிறது. அப்படி நீட்டித்தால் பத்தாண்டுகளில் கூட்டாட்சி வரி வருவாய் தோராயமாக $4.5 டிரில்லியன் குறையக்கூடும். திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் சுமார் 16% மட்டுமே ஈடுசெய்யப்படும் என்று பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன.
மே 2025 நிலவரப்படி, இந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் உட்கட்சிப்பிளவுகள், நிதி வழிமுறைகள் குறித்த விவாதங்களால் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. இதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். இதுவரையில் ஒன்றும் நடக்கவில்லை. தன்னுடைய பாணியில் இது “அழகான மசோதா. மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினருடன் இணைந்து சட்டத்தை இயற்ற முயற்சிக்கிறார். இதன் தொடர்பில் கட்சிக்குள் ஒருமித்த ஆதரவைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.
தன்னுடைய அதிகாரத்தின் மூலம் மக்களுக்குப் பல வரி குறைப்புகளைச் செய்வதாகத் தேர்தல் நேரத்தில் வாக்களித்திருந்தாலும் அதற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவை என்பதை தற்போது புரிந்து கொண்டு இரு அவைகளிலும் அதற்கான ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். இது அவருடைய தலைமைப்பண்பை நிர்ணயிக்கும் களமாக இருக்கும்.
7. கல்வி நிலையங்களில் அரசாங்க ஊடுருவல்
தற்போதைய அரசின் கல்விக் கொள்கைகள், கல்வித்துறையில் மத்திய அரசின் பங்கை கணிசமாக மாற்றுவதாக உள்ளன. கல்வி மீதான அதிகாரத்தை மாநிலங்களுக்கும் உள்ளூர் அரசுகளுக்கும் மாற்றிவிடும் நோக்கில் மார்ச் 2025ல் ஃபெடரல் அரசின் கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப். துறையின் மூடலுக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்பட்டாலும், அதன் செல்வாக்கைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம். இதில் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வுச் சலுகைகளை வழங்குவது, அதன் பணியாளர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிடுவது அடங்கும்.
2026 நிதி அறிக்கையில் கல்விக்கான கணிசமான நிதியை 15% வரை குறைத்துள்ளது. இதனால் குறைந்த வருமானம், முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களை ஆதரிக்கும் TRIO மற்றும் கூட்டாட்சி வேலை-படிப்பு போன்ற திட்டங்கள் நீக்கப்படும்.18 K-12 மானியத் திட்டங்களை ஒற்றைத் தொகுதி மானியமாக ஒருங்கிணைத்து மாநிலங்களுக்கு அதிகாரங்களைக் கூடுதலாக வழங்கி கூட்டாட்சி அரசின் மேற்பார்வையைக் குறைப்பது தான் நோக்கம். இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பொது பள்ளிகளும் தான்.
மேலும், பள்ளிகளில் பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் (DEI) தொடர்பான திட்டங்களை நீக்கவும் இணங்காத கல்வி நிறுவனங்களிலிருந்து கூட்டாட்சி நிதியைத் திரும்பப் பெறவும் சில நடவடிக்கைகளைச் செயல்படுத்தி அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பெறப்படும் நிதியில் ஆன்லைன் தளமான “அமெரிக்கன் அகாடமி” வாயிலாக கல்வி கற்கும் வாய்ப்பினை முன்மொழிகிறது. இவை பல்கலைகளில் தற்பொழுது நடக்கும் முற்போக்குத் தாக்கங்களைக் குறைக்க ட்ரம்ப் அரசு முயல்வதைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், கல்வி சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்து தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களை நீக்குவது குறித்து ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வி நிறுவன வளாகங்களில் நடக்கும் யூத எதிர்ப்பு போராட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டி வருகிறது அரசு நிர்வாகம். அதனால், பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கிய திட்டங்களை நீக்குவது, அமெரிக்க மதிப்புகளுக்கு எதிராக நடக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற ஒப்புக்கொள்ளாவிடில் கல்வி நிலையங்கள் பெற்று வரும் பில்லியன் கணக்கான மக்களின் வரிப்பணத்தை நிறுத்திவிடுவதாகப் பிரச்சாரத்தில் கூறியபடியே ஆட்சிக்கு வந்ததும் அச்சுறுத்தி வருகிறார். பல முக்கிய கல்வி நிறுவனங்கள் ட்ரம்ப்பின் கோரிக்கைகளுக்கு இணங்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மட்டும் இவற்றை எதிர்த்து உறுதியாக நின்றது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹார்வர்டின் வரி விலக்கு நிலையைத் திரும்பப் பெறவும் கால் பங்கிற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையைத் தடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார் அதிபர். மேலும் $2பில்லியனுக்கும் அதிகமான மானியங்களையும் ஒப்பந்தங்களையும் முடக்கியுள்ளார்.
ஹார்வர்ட் மட்டுமில்லாது ட்ரம்ப் நிர்வாகம் மற்ற பல்கலைக்கழகங்களையும் நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பல வெளிநாட்டு மாணவர்களின் சட்டப்பூர்வ நிலையை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்குப் பயந்து இந்திய மாணவர்கள் பலரும் ஊருக்குச் செல்ல அஞ்சும் நிலையில் தான் இருக்கிறது தற்போதைய நிலைமை.
ட்ரம்ப்பின் கல்விக் கொள்கைகள் ஃபெடரல் அரசின் கட்டுப்பாட்டை மாநிலங்களுக்கு வழங்கி கூட்டாட்சி செலவினங்களைக் குறைத்தலையும் கல்வி உள்ளடக்கத்தை பழமைவாத மதிப்புகளுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் உள்ளூர் அதிகாரத்தை மீட்டெடுப்பதாகவும், முக்கிய கல்விப் பாடங்களில் கவனம் செலுத்துவதாகவும் ஆதரவாளர்கள் வாதிடுகையில், கல்வி சமத்துவம், கல்வி சுதந்திரம், பின்தங்கிய மாணவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்கள் குறித்து விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் கொள்கைகளின் நீண்டகால விளைவுகள் சட்டமன்ற நடவடிக்கைகள், கல்வி நிறுவனங்கள், சமூகங்களின் பதில்களைப் பொறுத்திருக்கிறது.
8. திருநங்கைகள் மீதான தடை
விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்கு எதிராகவும், பாலினம் என்பது இயல்பாகவே ஆண், பெண் மட்டுமல்ல என்ற கருத்துக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார்.
அதன்படி, பெண்கள் அணிகளிலிருந்து திருநங்கைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். ராணுவத்தில் பணிபுரியும் திருநங்கைகளை நீக்குவதற்கான தனது முயற்சியைத் தடுத்த கீழ் நீதிமன்றங்களுக்கு எதிராக தீர்ப்பளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளன.
9. கலவரக்காரர்களின் மன்னிப்பு
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்கத் தலைநகரில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறி, அவர்களுடைய “கொடூரமான தாக்குதலை” கண்டித்து, “வன்முறை, சட்டவிரோதம், கலவரத்தால் தான் கோபமடைந்ததாக” அறிவித்தார். விரைவிலேயே அவர்களை “தேசபக்தர்கள்”, நீதி அமைப்பின் “பணயக்கைதிகள்” என்று கொண்டாடினார். அதிபரானதுடன் அவர்களை மன்னிக்க உத்தரவிடுவேன் என்று உறுதியளித்தார். அதையே செய்தார். இதனால் அன்று காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியவர்கள் உட்பட சுமார் 1,500 பேர் மன்னிப்பு பெற்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் காக்க, கலவரக்காரர்களால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நீதியாவது, நியாயமாவது!
10. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி மீறல்
எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி உற்பத்தியை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்த முயற்சியின் ஒரு பகுதியாக, அந்த இலக்கை நோக்கி நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். பைடன் சகாப்த “மின்சார வாகன ஆணை” யை ரத்து செய்ததாகக் கூறினார். ஆனால் ரத்து செய்ய அங்கே ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை. 2030ம் ஆண்டுக்குள் விற்கப்படும் புதிய கார்களில் பாதி மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற பைடனின் கட்டுப்பாடற்ற இலக்கிலிருந்து விலகிவிட்டார். அவ்வளவு தான்.
கலிஃபோர்னியாவில் 2035க்குள் படிப்படியாக எரிவாயு மூலம் இயங்கும் கார்களின் விற்பனையை நிறுத்த அனுமதிக்கும் கூட்டாட்சி விலக்கை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பை காங்கிரஸிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஆம், டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கச் சுற்றுச்சூழல் கொள்கையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது..
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA), 30க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை: மின் உற்பத்தி நிலையங்கள், வாகனங்களுக்கான உமிழ்வு தரநிலைகளைத் தளர்த்துதல், நிலக்கரி, எண்ணெய், எரிவாயு உற்பத்தி மீதான விதிமுறைகளைக் குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வை பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக வகைப்படுத்தும் கண்டுபிடிப்புகளை மறு மதிப்பீடு செய்தல் அடங்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து பாதகமான சுகாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட கூட்டாட்சி பொது நிலங்களை தனியார்மயமாக்குவதற்கும் நிர்வாகம் பல கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. சுரங்கம், மரம் வெட்டுதல், ட்ரில்லிங் நடவடிக்கைகளை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களைப் பலவீனப்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து நிலங்களை அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டிற்கு விற்பனை செய்தல் அல்லது மாற்றுதல் போன்ற முயற்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்துவதாக வாதிடும் பாதுகாவலர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டன.
2026 கூட்டாட்சி நிதி அறிக்கையில், EPA ன் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 55% குறைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கார்பன் பிடிப்பு திட்டங்களுக்கான $15 பில்லியனுக்கும் அதிகமான நிதியை நீக்கியிருப்பது, 2021 இரு கட்சி உள்கட்டமைப்பு சட்டத்திலிருந்து மின்சார வாகன உள்கட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட $6 பில்லியனை நிறுத்தியிருப்பது, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைப் பாதிக்கும் வேளாண்மைத் துறைக்கு வெட்டுக்கள் என்று சுற்றுச்சூழல் நிதியில் குறிப்பிடத்தக்க குறைப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.இதன்மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
மேலும், பாரிஸ் ஒப்பந்தம், பிற சர்வதேச காலநிலை உறுதிமொழிகளில் இருந்து அமெரிக்கா உடனடியாக விலக வேண்டும் என்று கட்டளையிடும் நிர்வாக ஆணையையும் பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய இரண்டாவது முறையாகும்.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக தளம் (NOAA) காலநிலை தொடர்பான பேரிடர்களின் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், அதன் பில்லியன் டாலர் வானிலை மற்றும் காலநிலை பேரிடர் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்திருப்பது அரசின் காலநிலை மாற்றம் குறித்த கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.
ட்ரம்ப்பின் சுற்றுச்சூழல் கொள்கைகள், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் முந்தைய கூட்டாட்சி முயற்சிகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியையும் எரிசக்தி சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதாக ஆதரவாளர்கள் வாதிடுகையில், அவை சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் பொதுச் சுகாதார அபாயங்களை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
11. அரசாங்க செயல்திறன் துறை நிறுவுதல்
2024ம் ஆண்டு மஸ்க், ட்ரம்ப் இடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஜனவரி 20, 2025 அன்று நிர்வாக உத்தரவின் மூலம் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) உருவாக்கப்பட்டது. அரசாங்க செயல்திறன், உற்பத்தித்திறனை அதிகரிக்க கூட்டாட்சி தொழில்நுட்பத்தை நவீனமயமாக்குதல், செயல்பாடுகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு DOGE ஐ வழிநடத்த மஸ்க் நியமிக்கப்பட்டார். மஸ்க்கின் தலைமையின் கீழ் DOGE பல முயற்சிகளை மேற்கொண்டது.
தோராயமாக 400 கூட்டாட்சி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. “99 நிறுவனங்களே போதுமானதை விட அதிகம்” என்று பரிந்துரைத்தார் மஸ்க். திறமையின்மையினரை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு கூட்டாட்சி பணியாளர்களை 75% வரை குறைக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. செயல்திறன் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு $2 டிரில்லியன் சேமிப்பை கணித்திருந்தார் மஸ்க். ஏப்ரல் 2025ல், சேமிக்கப்பட்ட தொகை தோராயமாக $150பில்லியனாக மட்டுமே இருந்தது. அதைத்தவிர, DOGEல் மஸ்க்கின் பதவிக்காலம் பல சர்ச்சைகளை எழுப்பியது. அதன் விரைவான நடவடிக்கைகள், வெகுஜன பணிநீக்கங்கள், நிறுவன நீக்கங்கள், நிர்வாக அதிகாரத்தின் சட்ட எல்லைகளையும் கூட்டாட்சி அதிகாரத்துவத்தின் அரசியல்மயமாக்கல் குறித்த கேள்விகளையும் எழுப்பின.
குறிப்பாக, அவரது வணிக முயற்சிகளுக்குப் பயனளிக்கும் விதமாக அரசின் தரவுகளை கையாண்டது அரசாங்க அதிகாரியாகவும் தனியார் தொழில்முனைவோராகவும் மஸ்க்கின் இரட்டை வேடம் மோதல்களுக்கு வழிவகுத்தது. $5மில்லியன் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுத் தரும் திட்டமான “ட்ரம்ப் கார்டு விசா” DOGEஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. முறையான அறிவிப்பு இல்லாத இந்த முயற்சி தெளிவற்ற சட்ட அதிகாரம், பணக்கார நபர்களுக்குச் சாதகமாக இருக்கும் திறன் ஆகியவற்றிற்காக விமர்சனங்களை எதிர்கொண்டது.
DOGE-ல் எலான் மஸ்க்கின் தலைமை குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தொடங்கிய போதிலும் விளைவுகள் கலவையாக இருந்தன. நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்குகள் ஓரளவு மட்டுமே அடையப்பட்டன. சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்பட்டு ஏராளமான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் போன்ற நபர்கள் வெளிநாட்டு உதவிக்கான நிதி குறைப்பை விமர்சித்துள்ளனர். கண்மூடித்தனமாக பணிநீக்கங்கள் செய்ததன் மூலம் முன்னாள் படைவீரர்களின் சுகாதாரப் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறையைக் குறிவைத்து நடந்த கூடுதல் நிதி குறைப்புகளைச் செயல்படுத்த DOGE மேற்கொண்ட முயற்சிகள் எதிர்ப்புகளையும் சட்ட சவால்களையும் சந்தித்துள்ளன. தொடர் எதிர்ப்புகளால் ஏப்ரல் 2025 இறுதியில் எலன் மஸ்க் DOGEலிருந்து விலகத் தொடங்கினார். இத்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. அதன் பல முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்து அதன் நீண்டகால தாக்கம் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
நிர்வாக கொள்கை குற்றச்சாட்டுகளால் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஒப்புதல் மதிப்பீடுகள் வெகுவாக குறைந்துவிட்டன என்று கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. CNN/SSRS கருத்துக் கணிப்பு ஒப்புதல் மதிப்பீட்டை 41% ஆகக் கண்டறிந்து அவரின் அரசியல் நிலைப்பாடு சரிந்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளது. ஏழு தசாப்தங்களில் இந்தக் கட்டத்தில் எந்தவொரு ஜனாதிபதியும் இத்தனை குறைவான மதிப்பீடைப் பெற்றிருக்கவில்லை.
மக்களைப் பொறுத்தவரை அதிக வரிகளை அமல்படுத்தி பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களுக்கு வழிவகுத்தது, தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்து எல்லை சவால்களைக் குறைத்திருந்தாலும், சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் முயற்சிகள் கவலைகளை எழுப்பியுள்ளன. ஒப்பீட்டளவில் கள்ள குடியேற்றத்தை அவர் கையாளும் பாணியை பெரும்பான்மையானவர்கள் இப்போதும் ஏற்கவில்லை. கல்வி, ஊடகம், கூட்டாட்சி அதிகாரத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் குறிவைத்து தனது முதல் 100 நாட்களில் 140க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தது அதிபரின் அதிகாரத்தை மீறுவதாக அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
பரவலான விமர்சனங்களும் வரலாற்று ரீதியாக குறைந்த ஒப்புதல் மதிப்பீடுகளும் இருந்தபோதிலும் ட்ரம்ப் தனது பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதையும் பாராட்டி, அவரது வாக்காளர்களிடமிருந்து தொடர்ந்து அசைக்க முடியாத ஆதரவைப் பெறுகிறார் என்பதே உண்மை. அவரது முக்கிய ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தாலும், இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது ஆரம்பகால செயல்திறன், குறிப்பாக பொருளாதாரம், குடியேற்றக் கொள்கைகள் குறித்து குறிப்பிடத்தக்க அதிருப்தியே காணப்படுகிறது. அவரது தலைமைத்துவ அணுகுமுறை, ஆழமான கட்சி வேறுபாடு, வளர்ந்து வரும் கவலைகள் அவரது நிர்வாகத்திற்கு முன்னால் உள்ள சாத்தியமான சவால்களைப் பரிந்துரைக்கின்றன.
பல தரப்பினரும் அவரது முதல் 100 நாட்களுக்கு “F” மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த முடிவுகளால் ஜனநாயக கட்சியினர் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் இன்னும் ட்ரம்ப்பை எதிர்த்து களமிறங்கும் தகுந்த வேட்பாளர்கள் இல்லாத நிலை அங்கு தொடர்வது தான் வேதனை.
யார் மீதும் பழிகளைப் போடாமல், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இடைத்தேர்தலுக்குள் நிலைமை மாறும் வாய்ப்பிருக்கிறதா? ட்ரம்ப் தேறிவிடுவாரா?
No comments:
Post a Comment