Tuesday, June 6, 2023

காசி

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் காசி 

காசி யாத்திரை என்றதும் பாட்டியை வழியனுப்ப குழந்தைகளாக இருந்த நாங்கள் அம்மாவுடன் ரயில்நிலையத்திற்குச் சென்று வணங்கி வழியனுப்பியது நினைவிற்கு வந்தது. பாட்டி வயதை ஒத்த வேறு பல பாட்டிகளும் அந்தப் பெட்டியில் இருந்தனர். பொதுவாக காசிக்குச் செல்பவர்கள் குடும்பக்கடமைகளை முடித்துவிட்டு ‘அக்கடா’ என ஓய்ந்திருக்கும் கடைசிக்காலத்தில் சென்று வருவது மரபு. 2008ல் அம்மாவும் அப்பாவும் சென்று வந்த பிறகு அவர்களின் பயணத்தைப் பற்றிக் கேட்க, அம்மாவோ, ” உனக்கு அங்க போகப் பிடிக்குமா தெரியலை. அங்கங்க படிகள்ல, போற வழியில கொஞ்சம் அசுத்தமா இருக்கு. ஆனாலும் போயிட்டு வா” என்றவுடன் என்னுடைய ஆவல் சற்று குறைந்து விட்டது.

இன்று நேற்றல்ல இந்தக் கனவு. ‘மா கங்கா’வைப் பற்றின எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தவறாமல் பார்த்துப் பார்த்து படித்துறைகளையும் காசி விஸ்வநாதரையும் தரிசிக்க வேண்டும் என்ற பலநாள் தவம். மோடிஜியின் ஆட்சியில் ‘நமாமி கங்கே’ திட்டத்தில் கங்காவைச் சுத்தப்படுத்த அப்பாடா! என்றிருந்தது. அதனால் 2020 மார்ச்சில் அங்கு செல்ல திட்டமிட்டோம். நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்குமாம். கொரோனா கோரத்தாண்டவம் ஆட, “இரண்டு வருடங்களுக்குப் பயணம் கியணம்னு மூச்சு விடாப்பிடாது” என்று மகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் நாம் அவர்களுக்கு குழந்தைகளாகி விடுகிறோம். அதுவும் நல்லதாகி விட்டது. 2021ல் காசி விஸ்வநாதர் கோவிலைக் கங்கைக்கரையுடன் இணைத்துச் சீரமைக்கும் வேலைகள் முடிந்து பிரம்மாண்ட கோவில் வளாகத்தைப் பார்த்தவுடன் எப்படியாவது சென்று விடுவது என்று நினைத்தது அன்று நடந்தே விட்டது! இந்துவாகப் பிறந்து வாழ்பவர்கள் அனைவருக்கும் காசிக்குச் செல்வது என்பது வாழ்நாள் தவமாக இருக்கும். அதனால் இப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது விஸ்வநாதரைத் தரிசித்து வர கிளம்பிச்செல்லும் மக்கள் அதிகரித்து விட்டார்கள்.

எண்ணங்களை அசைபோட்டுக் கொண்டே விமானத்திலிருந்து பார்த்தால் பச்சைப்பசேலென விளைநிலங்கள்! நடுநடுவே பஞ்சு பொதி மேகங்கள் காட்சி தர, டேராடூனிலிருந்து நான்கு மணிநேரத்தில் வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்! பெட்டிகளுடன் வெளியே வர, விடுதியிலிருந்து அழைத்துச் செல்ல வந்திருந்தவர் வண்டி நிற்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, ‘பளிச்’சென்று பிரகாசமாக இருந்தது வாரணாசி. வண்டிகள் நிற்குமிடத்தில் அழகான ‘கங்கைப்படித்துறை’ மினியேச்சர் மாதிரியை வைத்திருந்தார்கள். அங்கிருந்து நாங்கள் தங்கவிருந்த ‘ஹோட்டல் பச்சன் பேலஸ்’ விடுதிக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆனது. வழியில் வருணா நதிப்பாலத்தைக் கடந்து புதிய பழைய சாலைகளில் பயணித்து வந்தோம். சாலை விரிவாக்கம், புதுப்பாலங்களைக் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. சில பிரியாணி, மதுபானக்கடைகளைப் பார்த்தவுடன் தான் ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் சைவ உணவு விடுதிகளை மட்டும் கண்டதும் ஒரு மதுபானக்கடையும் இல்லாததும் நினைவிற்கு வந்தது. காசி அப்படியல்ல. கோவிலுக்குச் செல்லும் முன்னர் ஒரு பெரிய மசூதி தென்பட்டது. அதன் அருகே தான் அசைவ உணவுக்கடைகளும்.

விடுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து இரு சக்கர வண்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. இல்லையென்றால் நடைப்பயணம் தான். அதிகாலையிலும் இரவு 10 மணிக்குப் பிறகு மட்டும் நான்கு சக்கர வண்டிகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். விடுதிச் சிப்பந்திகள் இருவர் எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ‘விறுவிறு’வென்று நடக்க, நாங்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு நடைபோட, வழியெங்கும் ‘பளிச்’சென்ற வண்ணங்களுடன் கட்டடங்கள். துணிகள், பலகாரம், பீடா, லஸ்ஸி, பன்னீர் முதல் சகலவிதமான பொருட்களை விற்கும் சிறுசிறு கடைகள், நடுநடுவே கோவில்கள் என ஏராளமாக இருக்கிறது!சந்தையில் காய்கறி, பழங்கள், பூஜைக்கான பொருட்களை விற்பவர்கள் என்று திரும்பின பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். அந்தத் தெருவே உயிர்ப்புடன் அத்தனை வித்தியாசமாக உற்சாகமாக இருந்தது. நடுவில் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழி என்று ஒரு தெருவாயிலில் ஆதிசங்கரர் உருவச்சிலையுடன் முகப்பு வளைவு. வாசலில் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எட்டிப்பார்த்தால் தெரு முழுவதும் கடைகள்! ஆஹா!

மாடுகளும் நாய்களும் மனிதர்களுடன் உலாவுவதைப் பார்த்துக் கொண்டே நான்கு பேர் சென்றால் தெருவை அடைத்து விடும் சின்னஞ்சிறிய தெருவுக்குள் நுழைந்தோம். காசியின் அழகே இந்தச் சிறிய நீண்டு வளைந்து செல்லும் தெருக்கள் தானே! எதிரே இரு சக்கர வண்டி வந்தால் கூட ஒதுங்கி நின்று வழியை விட வேண்டியிருக்கிறது. தெரு முழுவதும் கடைகள் உணவகங்கள் விடுதிகள்! எங்கள் விடுதியும் வர, உரிமையாளர் திரு.பியூஷ் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

பெட்டிகளை வைத்து விட்டு ஈஷ்வர், நண்பர் வேதமூர்த்தியிடம் நாங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவலைக் கூற, அவரும் உடனே புறப்பட்டு வந்துவிட்டார். அவர் வீட்டிலிருந்து இரு நிமிடங்களுக்குள் விடுதி இருந்தது. அங்கிருந்தவர்கள் அவரை ‘குருஜி’ என்று அழைத்தார்கள். எங்கள் திருமணத்தில் பார்த்தது. இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தார். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கோவிலிலும் கங்கைக்கரையிலும் திருவாசகம் ஓதிக்கொண்டு வாழ்பவர். ஈஷ்வருக்கும் அப்படிப்பட்ட தனித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை! ஆனால் பாவம்! “எதுக்கு மாப்பிள்ளை காசிக்குப் போகிறீர்கள்? என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்ன்னு அப்பவே காசி யாத்திரைக்குப் போயிட்டு இருந்த மனுஷனை வம்படியா பிடிச்சு…” ஹ்ம்ம்ம்… அதெல்லாம் சொல்லி மாளாது😂 “சரி, நானே ஒரு தண்டமும் கமண்டலமும் இப்ப வாங்கிக் கொடுக்கிறேன். காசியிலே இருந்து விடுங்களேன்”ன்னு சொன்னால் “நீயும் வா” என்றவுடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கை வாழ கிடைத்தால் கசக்குமா என்ன?

தேநீருக்குச் சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். “இப்பொழுதுதான் வந்து இறங்கி இருக்கிறீர்கள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு கங்கைக்கரைக்குச் செல்லலாம்” என்று வேதமூர்த்தி அண்ணா கூறவும் நாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டோம். நாலரை மணி போல் கிளம்பி அவர் வீட்டிற்குச் சென்றோம். விடுதியின் எதிரே சிறு கடையில் சோப்பு, சீப்பு முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை கிடைக்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் வெளிநாட்டினரைக் கவரும் விதத்தில் ஏகப்பட்ட உணவுப்பட்டியலுடன் இரு உணவகங்கள். ஒரு தாத்தா பாட்டி பூரி, இட்லி விற்றுக் கொண்டிருந்த கடையின் எதிரே பழங்களை நம் கண்முன்னே சாறு பிழிந்து கொடுக்கிறார்கள். விலையும் அதிகமில்லை. அப்படியே பாம்பு வால் போல் தெரு நீள்கிறது. நான்கைந்து நாய்கள் இங்கும் அங்கும் எனக்கென்ன என்று படுத்துக் கொண்டிருந்தது. ரொட்டி வாங்கிப் போட்டாலும் சாப்பிடவில்லை. அதற்குப் பிடித்தது தான் வாங்கிக் கொடுக்கணுமாம். நல்லா தயிரும், இட்லி தோசையும் சாப்பிடுது. ஆஹான்! கெடுத்து வச்சிருக்கானுங்களே! “அது ஒன்றும் செய்யாது சும்மா போங்க” என்று உள்ளூர்க்காரர்கள் கூறினாலும் உள்ளூர உதறல் தான்! போதாக்குறைக்கு மாடு வேறு குறுக்கால நின்று கொண்டு😨 இவர்களையெல்லாம் கடந்து அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம்.

நல்ல வசதியான வீடு தான்! அவரே சமைத்து உண்கிறார். டீ போட்டுக் கொடுத்தார். தேவையான பொருட்களுடன் நிம்மதியான மினிமலிஸ்ட் வாழ்க்கை! அனைவருக்கும் கிடைக்காத வரம்! அருகே அழகான சிவன் கோவில். தெருவில் நெருக்கமான வீடுகள். வீட்டுச்சுவர்களில் அழகான சிவன், ஹனுமன், விநாயகர், கங்கா மாதா ஓவியங்கள்! மின்சார கம்பிகளில் மந்திகள் தொங்கிக் கொண்டு சேட்டை செய்து கொண்டிருந்தது கொள்ளை அழகு. அதுவும் அந்த குட்டிக்குரங்குகள்😍

கரையில் உட்கார வசதியாக இருக்கும் என்று ஆளுக்கொரு பிளாஸ்டிக் சேர் எடுத்துக் கொண்டு ‘ட’ வடிவில் இரு சிறு தெருக்களைக் கடந்து சென்றவுடன் எதிரே ‘மா கங்கா!’. வருணபகவானின் கொடையால் இருகரைகளையும் தொட்டு வண்டல் மண்ணைச் சுமந்தபடி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தாள்! படிகள் துவங்கும் இடத்தில் ‘பிரிஜ் ராமா பேலஸ்’ என்ற நான்கு நட்சத்திர உயர் ரக விடுதி. கரையில் அமைந்திருப்பதால் அங்கு தங்க விலையும் அதிகம்! அதிக அளவில் வெளிநாட்டினர் அங்கே தங்கியிருந்தனர். பிரசித்திப் பெற்ற ‘கங்கா ஆரத்தி’ நடக்கும் ‘தஷஷ்வமேதா’ படித்துறை அருகே இருந்ததும் மற்றொரு காரணம். 45 செங்குத்தான படிகள் கீழே இறங்கி அங்கிருந்த வட்டமான தூணின் மேல்தளத்தில் அமர்ந்து கொண்டோம். மாலைச்சூரியன் கருமேகங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

மோட்டார் படகுகள் பெரும் இரைச்சலுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்ததில் அமைதியற்ற சூழல்😒 உல்லாசமாக படகுகளில் சவாரி சென்று கொண்டிருந்த பயணிகளில் சிலர் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நின்று கொண்டு படங்களை எடுக்கவும் மறக்கவில்லை😊 எனக்குத்தான் உதறலாக இருந்தது😟 நியூயார்க்கில் ‘லேக் ஜார்ஜ்’ல் 2005ல் இலையுதிர்கால அழகைக் காண 47 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்று நிலைதடுமாறி விழுந்ததில் 20 பேர் இறந்து விட்டனர். பயணிகள் அனைவரும் மூத்த குடிமக்கள். அதற்குப்பிறகு தான் படகில் செல்பவர்களின் உயிரைக் காக்க லைஃப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டது. கேரளாவிலும் தேக்கடியில் அப்படி ஒன்று நடந்து பேருக்கு ஒரு லைஃப் ஜாக்கெட் கொடுக்கிறார்கள். அதை முறையாக அணியாமல் மக்கள் பயணிக்கிறார்கள். பார்க்கும் நமக்குத் தான் பகீரென்று இருக்கிறது! என்னவோ போடா மாதவா!

மெல்ல இருள் கவிழ, சிறிய, பெரிய படகுகள் ‘கங்கா ஆரத்தி’ நடக்கும் இடத்தில் ஒதுங்க ஆரம்பித்து விட்டது. ‘முன்ஷி காட்’டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டமும் மெல்ல கலைய, வெள்ளம் காரணமாக ஆரத்தியை எளிதாக முடித்துக் கொண்டார்கள். அப்படியே அங்கே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தோம் என்றே தெரியவில்லை. பசிக்கிற மாதிரி இருக்கவே, அண்ணா ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூற, சூரியோதயம் காண காலையில் மீண்டும் வரலாம் என்று கிளம்பிவிட்டோம்.

அண்ணாவின் வீட்டிலிருந்து மூன்று தட்டுக்களை எடுத்துக் கொண்டு அந்தச் சிறிய உணவகத்திற்குள் நுழைந்தோம். படிக்கட்டு மேடையிலேயே அடுப்பை வைத்து பெரிய வாணலியில் உருளைக்கிழங்கு போண்டா, சமோசா, கட்லட்டை ஒருவர் பொரித்துக் கொண்டிருக்க, சுடச்சுட வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. உள்ளே ஒருவர் சமோசா தயாரிக்க மாவைத் தேய்த்து மசாலாவை உள்ளே வைத்துக் கொண்டிருந்தார். கடையின் வாசலில் மெல்லிய முறுகலான தோசையும், வெங்காய ஊத்தப்பமும் ஊற்றிக் கொண்டிருந்தவருக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. சமையலுக்கு 2 பேர், ஒத்தாசைக்கு இருவர், பணத்தை வாங்கி கொள்ள, பரிமாற ஒருவர் என்று அந்தச் சிறுகடையில் அப்பொழுது ஐந்து பேர் பம்பரம் போல வேலை செய்து கொண்டிருந்தார்கள்! நாங்கள் கேட்டது தட்டில் வைத்ததும் தான் தெரியும். உடனே காலியாகி விட்டது. அத்தனை சுவை! மூன்று பேர் வயிறார சாப்பிட்டும் 150ரூபாய் தான் ஆனது. நம்ப முடிகிறதா? எங்களாலும் நம்ப முடியவில்லை. காசியில் உண்பதற்கான செலவு மிகவும் குறைவு என்பதை அடுத்தடுத்த நாட்களில் நன்கு தெரிந்து கொண்டோம். நாளைக்காலையில் இங்கே அருமையான ஜிலேபி கிடைக்கும். ஆனால் கடை 9 மணியளவில் தான் திறப்பார்கள் என்றார். அதனாலென்ன? ஜிலேபிக்காக எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று கூறி அங்கிருந்து அண்ணாவிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்புகையில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தினர் (வெளிநாட்டினர்) பாடலைப் பாடிக் கொண்டே சென்றார்கள். Prague நகரில் சாலையில் இதே போல பஜனை செய்து கொண்டு சென்ற குழுவினரைக் கண்டது நினைவிற்கு வந்தது. ஆனந்தமான மனிதர்கள்!

வழியில் இசைக்கருவிகளை விற்கும் கடையைக் கண்டவுடன் ஈஷ்வர் புல்லாங்குழல் ஒன்றை எடுத்து இசைத்துப் பார்க்க, பிடித்துப் போய் வாங்கியும் விட்டார். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. மேளச் சத்தம் கேட்க, தொங்கும் மின்சார வயர்களைத் தூக்கிப் பிடித்தபடி வாலிபர்களும் சிறுவர்களும் ‘துர்கா மாதா கீ ஜே’ என்று குரலெழுப்பி கல்கத்தா காளி உருவச்சிலையைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். எட்டு மணிக்குப் பெரும்பாலான கடைகளை மூடி நகரம் உறக்கத்திற்குத் தயாராகி விடுவது உறங்கா நகரத்தில் வளர்ந்த எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது! திருவிழா கூட்டத்தைக் கண்டால் மதுரைக்காரர்களுக்குத் தொற்றிக் கொள்ளும் உற்சாகத்துடன் நாங்களும் கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். அங்கே வேறு தெருக்களில் இருந்து வந்த காளி மாதா சிலைகளுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்க, சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு கடைக்குச் சென்று பால் அருந்தி விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

விடுதி உரிமையாளர் பியூஷிடம் “கொண்டாட்டமாக இருக்கிறதே?” என்றால், “துர்கா பூஜையை இரவு முழுவதும் கொண்டாடுவோம். உங்களுக்கு விருப்பம் என்றால் என்னோடு வாருங்கள். வீட்டிற்குச் சென்று என் அம்மா, தங்கையுடன் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். நீங்களும் கண்டுகளிக்கலாம். நான் யாரையும் இதுவரை இப்படி கேட்டதில்லை. நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்று தான் கேட்டேன்.” என்று அவர் கேட்டதும் ஒரு கணம் போகலாமா என்று கூட யோசித்தேன். ஈஷ்வர் சோர்வாக இருந்ததால் ‘நன்றி’ கூறி விடைபெற்றோம்.

நாங்கள் இருந்த அறை மட்டுமல்ல அந்த விடுதியில் எந்த அறையிலும் ஜன்னல் இல்லை😵 சுற்றிலும் கட்டடங்கள் இருந்தால் ஜன்னல் வைத்தும் என்ன பயன் என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கு! ஹ்ம்ம்ம். ஏசியும் வேலை செய்த மாதிரி தெரியவில்லை. வரவேற்பாளரிடம் தெரிவித்த பிறகு இருவர் வந்து பார்த்து அப்போதைக்கு எதையோ சரி செய்து விட்டுச் சென்றாலும் நடுராத்திரியில் மீண்டும் அதே பிரச்னை. களைப்பில் எப்படியோ தூங்கிவிட்டோம். காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி சூரியோதத்தைக் காண தெருவுக்குள் நுழைந்தால் முதுகைக் காண்பித்தபடி அசைபோட்டுக் கொண்டிருந்தது மாடு! இரைச்சல் இல்லாத, மனித நடமாட்டம் குறைந்த இடத்தின் அமைதியில் அழகும் குடியிருக்க, விடிந்தும் விடியாத பொழுதுகள் தான் எத்தனை அழகு! பால் பாக்கெட்டுகள் விற்பனைக்குக் காத்திருக்க, தெருவிளக்குகள் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் மட்டுமே நடந்து சென்று கொண்டிருந்தோம். நாய்களுக்கும் இன்னும் விடியவில்லை. ஒரே நாளில் அந்த தெருக்கள் பழக்கமாகி ‘முன்ஷி காட்’ வரும் பொழுது சூரிய பகவான் வானை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல வானில் தூரிகையால் வண்ண வண்ண ஓவியங்களைத் தீட்ட நாங்களும் முடிந்தவரையில் படங்களைக் க்ளிக்கிக் கொண்டோம். வானின் பொன்னிறம் கங்கா நதியில் பிரதிபலித்து வாவ்! ‘தளக்தளக்’ என்று கரையை முட்டி மோதி சுழன்று சுழன்று ஓடும் ஆறு. ஆற்றின் ஓட்டத்தில் கட்டி வைத்திருந்த படகுகள் ஆடிக்கொண்டிருக்க, பறவைகளின் ‘குக்கூ’ பாஷைகள் என்று அந்த இடமே சொர்க்கமாக இருந்தது. வெளிநாட்டினர் பலரும் காமெராவும் கையுமாக காட்சிகளைப் படங்கள் எடுத்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் காலை சூரியோதத்தைக் காண பயணிகளை ஏற்றி வரும் இயந்திரப்படகுகளின் இரைச்சலில் அனைத்தும் தொலைந்து போயின😞 நாங்களும் ஒரு படகில் ஏறி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கங்கைக்கரையில்? எதற்கு மக்கள் அடித்துக் கொண்டு வருகிறார்கள்? எது அவர்களை இப்படி ஈர்க்கிறது என்று பார்க்க கிளம்பி விட்டோம்.

கிழக்கு நோக்கி அமைந்திருந்த படித்துறைகள் அனைத்தும் தங்கத்தால் ஜொலிப்பது போல் இருந்தது! வடக்கே ‘பஞ்சகங்கா காட்’டில் துவங்கி தெற்கே ‘அசி காட்’ வரை படித்துறைகள் நீள்கிறது. 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட படித்துறைகள் மராத்தா மன்னர்களால் 18ம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் முன்ஷி காட்’டில் துவங்கி தெற்கே ‘அசி காட்’ வரைச்சென்று பின் வடக்கே ‘பஞ்சகங்கா காட்’ வரை பயணித்தோம். படித்துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயருடனும் தனித்த அழகுடனும் இருந்தது. வெள்ளத்தால் படிகள் பல மறைந்து சில இடங்களில் கரையோரக் கோவில்களும் ஆற்றில் மூழ்கியிருந்தது! பிறைவடிவ கரையோரத்தில் 84க்கும் மேலான படித்துறைகள் அமைந்திருக்கிறது. மணிகர்ணிகா, ஹரிச்சந்திரா படித்துறைகளைத் தகனம் செய்வதற்கும் மற்ற அனைத்தும் மக்கள் குளிப்பதற்கும் பூஜைகள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். எல்லா படித்துறைகளிலும் அழகான கோவில்கள் இருக்கிறது. படித்துறையில் படிக்கட்டுகள் கூட வித்தியாசமாக காண்போரை வசீகரிக்கிறது! படகோட்டி நாங்கள் படமெடுப்பதைப் பார்த்து ஒவ்வொரு படித்துறை அருகிலும் சிறிது நேரம் நிறுத்தி அவருக்குத் தெரிந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கவும் செய்தார். அண்ணாவும் சில படித்துறைக் கோவில்களைப் பற்றின தகவல்களையும் சொல்லிக்கொண்டு வந்தார். அநேகமாக எல்லா படித்துறைகளிலும் மக்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் ‘தஷஷ்வமேதா’ படித்துறை மிகவும் பிரபலமானது. இங்கு தான் பிரம்மா பத்து குதிரைகளைக் கொண்டு அசுவமேத யாகம் செய்தார் என்று கூறப்படுகிறது. அதனாலேயே ‘தஷ(10) அஷ்வ(குதிரை) மேதா’ என்ற காரணப்பெயர். இந்த படித்துறையில் கங்கா அன்னைக்கு நடக்கும் தீப ஆரத்தி உலகப்பிரசித்திப் பெற்றது. காசிக்கு வரும் பலரும் இந்தப் படித்துறைக்கு அதிகம் வருவதால் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. பல கற்பனைகளுடன் சென்றிருந்த எனக்கு மகா ஆரத்தியைக் காண முடியவில்லையே என்ற வருத்தம். நாங்கள் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு வரை படிகள் முழுவதும் மறைந்து தண்ணீர் மேலேறியதால் ஆற்றில் குளிப்பதைத் தடை செய்திருந்ததாகக் கேள்விப்பட்டோம். நல்ல வேளை! நாங்கள் அங்கிருந்த பொழுது தண்ணீர் கொஞ்சம் வடிந்து குளிக்க அனுமதித்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். ஆனாலும் நாங்கள் நின்றிருந்த படிகளில் இருந்து இன்னும் 25 படிகள் வரை கீழே தண்ணீருக்குள் இருப்பதாக அறிந்து வியந்தோம்!

தென் முனையில் இருக்கும் ‘அசி காட்’டிலும் கங்கா ஆரத்தி நடைபெற்றாலும் கூட்டம் குறைவாக இருக்கிறது. இங்கு தான் ‘ராமசரிதமனஸ்’ எழுதிய துளசிதாஸ் இயற்கை எய்தியதாக கூறப்படுகிறது. நதிகள் அசியும் கங்காவும் சங்கமிக்கும் இந்த இடத்தில் அழகிய சிவன் கோவில் உள்ளது.

சில படித்துறைகள் கவிஞர்களின், அரசர்களின், அரசிகளின் நாட்டுத்தலைவர்களின் நினைவாக அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. அதில் துளசிதாஸ் நினைவாக ‘துள்சி காட்’, வாரணாசியை ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ‘சேட் சிங்’ நினைவாக ‘சேட் சிங் காட்’, ராஜபுத்திரர்களின் ‘மன்மந்திர் காட்’ பார்ப்பதற்கு ராஜஸ்தான் அரண்மணையைப் போன்று இருக்கிறது. உண்மையை மட்டுமே பேசும் மன்னன் ஹரிச்சந்திரன் நினைவாக ‘ஹரிச்சந்திரா காட்’, ராணி ‘அஹில்யாபாய்’ நினைவாக ‘அஹில்யாபாய் காட்’, அன்னை ஆனந்தமயி ஆசிரமம் இருக்கும் ‘ஆனந்தமயி காட்’, அழகிய ஜெயின் கோவில்களுடன் ‘ஜெயின் காட்’, நம் நாட்டின் முதல் ஜனாதிபதி நினைவாக ‘ராஜேந்திரபிரசாத் காட்’, விஜயநகர மன்னரால் கட்டப்பட்ட ‘விஜயநகரம் காட்’ மற்றும் ‘கேதர் காட்’. இங்கே இருக்கும் சிவன் கோவில் விமானம், சிலைகள் நம்மூர் கோவிலைப் போல் இருக்கிறது. ஹனுமன் கோவில் இருக்குமிடத்தில் ‘ஹனுமன் காட்’ பளிச்சென்று ஆரஞ்சு வண்ணத்தில், ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ‘பஞ்சகங்கா காட்’ என்று நீள்கிறது பட்டியல்.

இதில் ‘சிந்தியா காட்’ கோவில்கள் ஆற்றில் மூழ்கி இருக்கிறது. நீர் வற்றியதும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். ‘நேபாளி காட்’ டில் அழகான பசுபதிநாத் கோவில் இருக்கிறது. கங்கா, வருணா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ‘ஆதிகேஷவ காட்’டில் அழகான பெருமாள் கோவில் இருக்கிறது. செல்ல வேண்டும் என்று நினைத்தோம். கோவில்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகுடன் பழமை மாறாமல் இருப்பது தான் சிறப்பு. 18ம் நூற்றாண்டு ‘தர்பங்கா காட்’ பலரையும் கவரும் வண்ணம் இருந்தது. அங்கே தான் ‘பிரிஜ்ராம பேலஸ்’ ஹோட்டல் உள்ளது. அங்கிருந்து ஆற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பயணிகளைக் கவரும் வகையில் கைகளைக் குவித்து கூப்பிய ‘நமோ காட்’ புதிதாக கட்டப்பட்டுள்ளது.

காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன. அருகிலேயே இறப்பை நோக்கிக் காத்திருப்பவர்கள் தங்கியிருக்கிறார்கள்😔 தெருவில் நடந்து செல்லும் பொழுது வேகவேகமாக இறந்தவர்களின் உடலை எடுத்துக் கொண்டு ‘ஹர ஹர மஹாதேவ’ சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். இறப்பு என்றாலே பதட்டத்தைத் தருகிறது. என்று அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோமோ அப்பொழுதுதான் மரணபயத்திலிருந்து முழுவிடுதலையும் கிடைக்கும். இறப்பைக் கொண்டாடுகிறது காசி நகரம். அதனால் தான் வாழ்விலிருந்து விடுதலை பெற அங்கு பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்களோ?


இந்தப் படித்துறைகள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கினாலே உடல் எடை தன்னால் இறங்கி விடும்😄 அத்தனை படிகள். அதனால் நடமாட்டம் நன்கு இருக்கும் பொழுதே சென்று விடுவது நல்லது. செங்குத்தான படிகளில் ஏறுவதும் இறங்குவதும் கொஞ்சம் சிரமம் தான்! வட இந்தியப் பாட்டிகள் ‘கிடுகிடு’ என்று இறங்கி ஆற்றில் நன்றாக குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட்டு ‘கிடுகிடு’வென ஏறி விடுகிறார்கள்! நன்றாக உழைத்து உரமேறிய உடம்பு. நம்மால் பொறாமைத்தான்பட முடிகிறது. ஹ்ம்ம்ம்😔

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் படகில் படித்துறைகளைப் பார்த்துப் படங்களை எடுத்து முடித்து மீண்டும் ‘முன்ஷி காட்’ ட்டிற்குத் திரும்பினோம். எட்டு மணிக்கே வெயில் போட்டுத் தாக்கியது. ஒரு எலுமிச்சை ‘சாய்’ குடித்து முதல் முறையாக கங்கையில் குளிக்க ஆற்றில் இறங்கினால் அதன் வேகம் ஆளை இழுத்துச் சென்று விடும் போல இருந்தது. நல்ல வேளை! தடிக்கயிறுகள், இரும்புச்சங்கிலிகள் கட்டி இருந்தார்கள். அதைப் பிடித்துக் கொண்டு பயந்தபடி இறங்கினால் படிகளாக இருந்தது.கீழே படிகள் தான் இருக்கிறது என்று அண்ணா சொன்னாலும் பயம் யாரை விட்டது. வெள்ள நீர் என்பதால் பழுப்பு நிறத்தில் இருந்தது. கங்கா மாதாவை வணங்கி மூன்று முறை ஆற்றுக்குள் இறங்கி எழுந்து கைகளால் நீரை அள்ளி அன்னைக்கு அபிஷேகம் செய்து வணங்கினோம். மிகவும் திருப்தியாக இருந்தது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தால் துணிகளும் காய்ந்து விடுகிறது. சரி விடுதிக்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு சாப்பிடப் போகலாம் என்று கிளம்பினோம்.

ஒன்பதே கால் மணியளவில் முதல் நாள் இரவு சென்ற உணவகத்திற்குச் சென்றால் நீளவாக்கில் ஜிலேபி எண்ணையில் பொரிந்து கொண்டிருந்தது. நன்கு பொரிந்ததும் ஜீராவில் போட்டு ஒரு முக்கு முக்கி எடுத்தால் சுவையான ஜிலேபி. யம்யம்யம்! சிறிய ஓட்டைப் போட்ட துணியில் மாவைப் போட்டு அந்த மனிதர் அழகாக ஜிலேபியை டிசைன் டிசைனாக போடுகிறார். பார்க்க எளிதாக இருந்தாலும் கடினமான வேலை தான். ஜிலேபி முடிந்ததும் அதே எண்ணையில் பூரி போட ஆரம்பித்து விட்டார். ஆனால் பூரி மாவின் நடுவே கருப்பு உளுந்து மாவை வைத்து உருட்டித் தட்டுகிறார்கள்.எனக்கு வெறும் ஜிலேபி மட்டும் போதும் என்று காலை உணவை முடித்து அருகிலிருந்த கடையில் சூடான தேநீர் சாப்பிட்டோம். ஜிலேபியின் சுவைக்காகவே தினமும் சாப்பிடலாம் போல் இருந்தது😋

சிறிது நேர ஓய்விற்குப் பிறகு “வெயில் அதிகமாக இருக்கிறது. வெளியே எங்கும் வரமாட்டேன்” என்று ஈஷ்வர் சொல்லிவிட்டார்😟அங்கேயே உட்கார்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. கொஞ்சம் வெளியில் சென்று வரலாம் என்று கையில் சிறிது பணத்தை எடுத்துக் கொண்டு தெருக்களைச் சுற்றிப் பார்த்து வருகிறேன் என்று கிளம்பி விட்டேன். இரண்டு ஆட்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும் அளவு குறுகிய தெருக்களில் ஏதோ ஒரு அழகு! எத்தனை முறை நடந்து சென்றாலும் அலுக்கவில்லை. நடுநடுவே கோவில்கள். சிவனே பிரதானம். நாமே அபிஷேகம் செய்யலாம். தடுக்கி விழுந்தால் பலகாரக்கடைகள்!சிறு தொழில் செய்யும் பலரை மொத்தமாக ஒரே தெருவில் பார்க்கலாம். பயணிகளை நம்பியே பல கடைகள். தொழில்கள்! இவர்கள் எல்லோரும் கோவிட் காலத்தில் எப்படி பிழைத்தார்களோ? என்று யோசித்தபடியே வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்த தெருக்களில் இருந்து சந்தைக்கு வந்து சேர்ந்தேன்.


விடுதியிலிருந்து சந்தைக்கு நேரடியாக வரும் வழியில் எனக்குப் பிடித்த இனிப்புக்கடைகள். முதல் நாள் பாலைக் கொதிக்கவைத்து செய்த பன்னீர் அடுத்த நாள் மதியத்திற்குள் விற்றுத் தீர்ந்து விடுகிறது! பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் செல்லும் கூட்டம், சுவாமியைத் தரிசித்து விட்டு வருபவர்கள் என்று மக்கள் நடமாட்டம் அதிகம். வழியில் சுடச்சுட இட்லி, தோசை, வடை விற்றுக் கொண்டிருக்கும் கடைகளைக் குறித்து வைத்துக் கொண்டேன். சிவன் கோவிலில் இருந்து சிவாஷ்டகம் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்க அருமையாக இருந்தது. ஓ! இனிப்புக் கடை பக்கத்தில் பீடா கடை! சபாஷ்! எதிரே அம்மன் கோவில். கடந்தால் இடப்புறத்தில் சந்தை. வலப்புறத்தில் ‘தஷஷ்வமேதா’ படித்துறை. தெருவில் வகைவகையான காய்கறிகள், பழங்கள், தள்ளு வண்டிகளில் இளநீர் என்று கொட்டிக் கிடந்தது. இளநீரைக் குடித்து விட்டு தெருவோரக்கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன். பனாரஸ் பட்டு அங்கு பிரபலமாயிற்றே! “உள்ளே வந்து பாருங்கள்” என்று கூவிக்கூவி அழைக்கிறார்கள். கண்களைக் கவரும் விதவிதமான ரகங்களில் வண்ணங்களில் சேலைகள். சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு. லல லாலா… வாங்க வேண்டும். ஆசை தான். ஆனால் எனக்கு விருப்பமான சேலைகள் கிடைத்தால் வாங்கலாம் என்று கடந்து விட்டேன். லஸ்ஸி கடைகளும் ஏராளம்! குடிக்கத்தான் பயமாக இருந்தது!


காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. காவல்காரர்களும் கண்கொத்திப்பாம்பாக காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். குறுகிய தெரு முழுவதும் சேலை, நகை, பலகாரக்கடைகள். வளையல் கடையைப் பார்த்ததும் நின்று விட்டேன். அழகழகான கண்ணாடி, பிளாஸ்டிக் வளவிகள்! ஆசை யாரை விட்டது? ஒரு செட் வாங்கலாம் என்று போய்…😍 மகளுக்கும் வாங்கிக் கொண்டேன். நேரத்தைப் பார்த்தால்😳 அடடா! நேரம் போனதே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறேன்.

விடுதிக்குத் திரும்பி வாங்கின வளவிகளைக் காண்பித்தேன். ஈஷ்வர் சிரித்துக் கொண்டார். “எவ்வளவு இதெல்லாம்?”. “அதெல்லாம் எதுக்கு இப்ப?”. “ம்ம்ம். மதியம் என்ன சாப்பிடலாம்?”. “எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றவுடன் “சரி. நானும் வேதமூர்த்தியும் சாப்பிட்டு வருகிறோம்” என்று அவர் கிளம்பிப் போக நான் கிண்டிலில் மூழ்கி விட்டேன். “அருமையான பூரி. நெய்யில் பொரித்து தருகிறார்கள். “நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்.” என்று சாப்பிட்டு வந்தவர் கூற, அடடா! மிஸ் பண்ணிட்டேனே என்று இருந்தது. “அப்பப்பா! நல்ல வெயில்! மழை வரும் போல இருக்கு. 3.30மணி போல கோவிலுக்குப் போகலாம். ரெஸ்ட் எடு.” என்று கூறி அவரும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டார்.

சரியாக 3.30மணிக்குத் தயாராக, கருமேகங்கள் கூடி வருவதைப் பார்க்க பயமாக இருந்தது. அண்ணாவும் வந்து சேர, காசி விஸ்வநாதரைத் தரிசிக்க கிளம்பினோம். அர்ச்சனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு முதலில் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றோம். குட்டி அம்பாள். உலகை ரட்சிப்பவள் மஞ்சள், ஆரஞ்சு நிறப் பூமாலைகளுடன் திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தாள். மிக மிகச் சிறிய கோவில். வணங்கி விட்டு அங்கிருந்து நேராக காசி விசாலாட்சி கோவிலுக்குச் சென்றோம்.

நகரத்தார் கட்டிக் கொடுத்த கோவிலாம். நம்மூர் பாணியில் இருந்தது சிறப்பு. சிறிய நுழைவாயில். வாசலில் பூக்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் வெள்ளிக்கவசத்தில் அம்மனும் ஆதி விசாலாட்சியும் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவிலில் அம்மனைச் சுற்றி வலம் வரும் மண்டபம் முழுவதும் சிவலிங்கங்கள்! நவக்கிரங்களும் இருக்கிறது. வட நாட்டில் பூஜைகள் என்பது நம்மூரில் செய்வது போல இல்லை என்று நினைக்கிறேன். வெளியே நல்ல மழை! அங்கே திருவாரூர் பக்கத்தில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. வாஞ்சையோடு பேசினார்கள். நம்மூர் மக்கள் நம்மூர் மக்கள் தான்😍 மழை நிற்கும் வரை கோவிலில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தோம். “ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்க” என்று அழைக்க அவர்களால் மட்டுமே முடியும்💗 சிறிது நேரத்தில் மழையும் நிற்க, தண்ணீர் வழிந்தோடும் ஈர தெருக்களின் வழியே காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தோம்.

வாவ்! பழைய கோவிலைப் பார்த்தவர்கள் இன்று இந்தக்கோவிலைப் பார்த்தால் பிரமித்துப் போகும் அளவிற்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில் கடைகள், குடியிருப்புகள் அடர்ந்த பகுதிகளையும் குறுகிய தெருக்களையும் கடந்து சென்றால் உள்ளே கோவில் இருக்கிறது தெரியும் என்று முன்பு சொல்வார்கள். கோவிலுக்குச் செல்ல ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே அப்பொழுது இருந்திருக்கிறது. தற்போது ஏழு நுழைவாயில்கள் வழியாக கோவிலுக்குச் செல்ல முடிகிறது! தங்கத்தால் வேயப்பட்டுள்ள ‘நகரா’ பாணி கோபுரங்கள் தூரத்தில் இருந்தே கோவிலின் இருப்பை உணர்த்துகிறது. மணிகர்ணிகா படித்துறைக்கு அருகில் லலிதா படித்துறையிலிருந்து கோவிலுக்குச் செல்ல வசதியாக நடைபாதையைக் கட்டியிருக்கிறார்கள்.


மிகப்பெரிய சுத்தமான வளாகம்! மழையில் அந்த இடமே புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது. வளாகத்தின் உள்ளே அருங்காட்சியகம், நூலகம், அரங்குகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், உணவுக்கூடங்கள் என்று 23 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற நுழைவாயிலில் இருந்து உள்ளே வலப்பக்கம் திரும்பியவுடன் பாரதமாதா கோவில். இந்திய வரைபடத்தின் பின்னணியில் மூவண்ணக் கொடியை ஏந்திய அழகிய பாரதமாதா சிலை. பலரும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஹிஹி! நாங்களும் எடுத்துக் கொண்டோம்😀 கோவிலைக் கடந்து சென்றால் ஆதி சங்கராச்சாரியார், காசி கோவிலைக் கட்டிய மகாராணி அஹில்யாபாய் திருவுருவச்சிலைகள்.

செருப்புக்களையும் செல்ஃபோன்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். கோவிலுக்குள் செல்வதற்கு முன் முழுவதுமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். பல அழகான கோணங்களில் கோவிலைப் படமெடுக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது.

நீண்ட வரிசையில் மக்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டும். அதற்கும் நீண்ட வரிசை. காத்திருந்து கோவிலுக்குள் சென்றோம். காவலர்கள் இருந்தும் கொஞ்சம் தள்ளுமுள்ளுவாக இருந்தது. கர்ப்பகிரகத்திற்குள் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி மேடையின் நடுவே தரையில் குட்டி ஜோதிர்லிங்கம். சிவசிவா! பால், பூக்கள், கங்கா தீர்த்தம் என்று மக்கள் கொண்டு வரும் பூஜைப் பொருட்களால் அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் இனம் புரியாத, வார்த்தைகளில் விவரிக்க இயலாத பரவசமாக இருந்தது. நின்று நிதானமாக வணங்கினோம். புரோகிதர் சிவனின் மாலை ஒன்றைத் தர, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு மனஅமைதியுடன் வெளியே வந்தோம். இதற்குத்தான், இந்தப் பரவசத்திற்குத் தான் சிவனைத் தேடி மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள். இப்பொழுது கூட்டம் அதிகரித்திருந்தது! நல்ல வேளை! தப்பித்தோம்!

கருவறையின் மேலே கொடி மற்றும் திரிசூலத்துடன் தங்கத்தால் வேயப்பட்டுள்ள கோவில் கோபுரம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. வளாகத்தில் கால பைரவர், விஷ்ணு, சிவன்,கௌரி, அவிமுக்தேஸ்வரா, விநாயகர், கார்த்திகேயா, சனீஸ்வரர்க்கு சந்நிதிகள் இருக்கிறது. பெரிய நந்தி ஒன்று எதிரே இருக்கும் மசூதியை நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்களில் சிவனை நோக்கித்தான் நந்தி அமர்ந்திருக்கும். அந்த வழக்கு தான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறதே! என்னத்த சொல்ல😌’ஞான வாபி’ என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிணறு கோவிலில் உள்ளது. வரலாறுகளை உள்ளடக்கியது காசி நகரம் மட்டுமல்ல கோவிலும் கூட.

உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான காசியில் பார்க்க வேண்டிய முக்கியமான கோவில்களைப் பார்த்தோம். இன்னும் பார்க்க வேண்டிய கோவில்கள் ஏராளம் இருக்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதினால் கட்டுரை நீண்டு கொண்டே போகும் என்பதால்…😃 அதே போல் பல மடங்களும், ஆசிரமங்களும் படித்துறைகள் அருகிலும் கோவிலைச் சுற்றிலும் தங்கும் வசதிகளுடன் இருக்கிறது. உள்ளூரில் பல சேவைகளும் செய்து வருகிறார்கள். நிறைய சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது.

ஒரு நாள் காலையில் ஈஷ்வர் அசதியாக இருக்கிறது என்று நான் மட்டும் சூரியோதயம் பார்க்க கிளம்பினேன். வழியில் அண்ணாவும் சேர்ந்து கொண்டார். அன்று மழைமூட்டமாக இருந்ததால் கரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படிகளில் நாய்களும் இறங்கி வருகிறது. குரங்குகள், புறாக்கள் என்று தீனிக்காக மனிதர்களைத் தொடரும் கூட்டம் அழகு. சந்தியாவந்தனம் செய்பவர்கள், வீட்டில் இருந்து சிறு சொம்பை எடுத்து வந்து மந்திரங்கள் சொல்லி கங்கா மாதாவிற்கு அபிஷேகம் செய்து வழிபடுபவர்கள், வீட்டிலிருந்து காலை உணவைக் கொண்டு வந்து ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுத் தண்ணீரில் விடும் பெண்கள் என அனைவரும் படித்துறைகளில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வீட்டிற்குச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. ஒருவர் தினமும் காலையில் ருத்ரம் சொல்லி ஹோமம் செய்து கொண்டிருந்தார். பூஜை முடித்து பிரசாதமும் கொடுத்தார். வெயில் காலையிலேயே ஆரம்பித்து விடுகிறது. நானும் கங்கையில் குளித்து துணி காய்ந்த பிறகு விடுதிக்குப் புறப்பட்டேன்.


காசியில் தங்கியிருந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் ‘முன்ஷி காட்’ படித்துறையில் அமைதியாக உட்கார்ந்து துள்ளியோடும் ‘மா கங்கா’வைப் பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். ‘சும்மாயிருத்தல்’ கணங்களை அனுபவித்த நேரம் அது! சிரித்த முகத்துடன் ஒரு தம்பதியர் கையில் சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் படியில் அமர்ந்து கொண்டார்கள். கையிலிருந்த துணியை விலக்கினால் குழந்தை என்று நான் நினைத்தது அழகாக அலங்கரித்த குட்டி தவழும் கிருஷ்ணன் விக்கிரகம்😮 ஏதோ குழந்தையைப் போல அந்தப் பெண்மணி மடியில் கிடத்திக் கொண்டாள். ஆண் தண்ணீரில் இறங்கி கங்கா மாதாவை வணங்கி மூன்று முக்கு முங்கி எழுந்து வர, இந்தப் பெண்மணி சிறு குழந்தையைக் கொடுப்பது போல் சிரித்துக் கொண்டே லட்டு கோபாலை கணவரிடம் கொடுக்க, அவரும் இரு கைகளால் வாங்கிக் கொண்டு மீண்டும் மூன்று முறை முங்கினார். தன் சொந்தக் குழந்தையைக் குளிப்பாட்டியது போல் சிரித்துக் கொண்டே மனைவியிடம் கொடுக்க, அந்தப் பெண்மணியும் துண்டால் அழகாக துடைத்து வேறு துணியை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக எளிமையான மனிதர்களாகத் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் உலகில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்க்க பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளையும் குழந்தையாக கொண்டாடுவதில் தான் எத்தனை இன்பம்! அவர்களிடம் எனக்குத் தெரிந்த இந்தியில் பேசிக்கொண்டிருந்தேன். கங்கையில் குளிப்பாட்ட வீட்டிலிருந்து தவழும் கிருஷ்ணன் விக்கிரகத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்று நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கம் தான். பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து, வாழும் கணங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் அந்த தம்பதியரை எனக்கு மிகவும் பிடித்தது. நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம்!

அங்கு இது போல் பல அழகான காட்சிகள். எழுதிக் கொண்டே இருக்கலாம்😎

பௌர்ணமி நாளன்று பால் நிலா வெளிச்சத்தில் கங்கா ஜொலித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஈஷ்வர் ‘தஷஷ்வமேதா’ படித்துறையில் ஆரத்தி நடக்கிறது என்று சொல்ல, நடுவில் இருந்த இரண்டு கோவில்களைத் தாண்டிச் சென்றால் படகுகளில் மக்கள் ஆரத்தி மேடையை நோக்கி அமர்ந்திருந்தார்கள். படிகளில் நல்ல கூட்டம். நாங்களும் ஐக்கியமானோம். வழக்கமாக ஏழு புரோகிதர்கள் கங்கா ஆரத்தி பூஜை செய்யுமிடத்தில் வெள்ளம் காரணமாக ஐந்து பேர் மட்டும் செய்தார்கள். கோவிலில் பூஜை முடிந்த பிறகு ஒருவர் ஆரத்தி பாடல்களைப் பாட, கங்கா தேவிக்கு மலர்கள் தூவி தூப, தீப பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. இந்தப் பூஜையின் அழகே புரோகிதர்கள் ஒன்றாக பூஜை செய்யும் நேர்த்தியும் தீப ஒளி, மணிச்சத்தம் என்று மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வும் தான். சில நிமிடங்கள் மனம் அமைதி கொள்வதைப் பூரணமாக உணர முடிகிறது. நிலாவும் பூஜையில் பங்கு கொண்டது போல வானில் உலா வந்து கொண்டிருந்தது. பலரும் தங்கள் கைபேசி வழியே ஊரில் உள்ளவர்களுக்கும் ஆரத்தி நிகழ்வைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஹரித்வார், காசியை விட ரிஷிகேஷில் நடந்த ஆரத்தி பூஜை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயற்கையை வணங்கிப் போற்றுதல் என்பது இந்து சமயத்தின் அங்கமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் அவற்றைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அசுத்தப்படுத்தி வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கிறது😞

பௌர்ணமி நாளில் ஆரத்திநிகழ்ச்சியைப் பார்த்த திருப்தியுடன் இரவு உணவுக்குச் சுடச்சுட இட்லி சாப்பிட்டோம். காசியில் உணவு விலை மிகவும் குறைவு. ஒரு இட்லி 10ரூபாய். தோசை 15 ரூபாய். வடை 10 ரூபாய். மல்லிகைப்பூ இட்லி! காசியில் கிடைக்கிறது! அத்தனை இட்லிக்கடைகள்! தோசையும் சூப்பர்! காலையில் எட்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை நல்ல வியாபாரம்! மூன்று சகோதரர்கள் சேர்ந்து ஒரு கடை நடத்துகிறார்கள். வடை, ஆமவடை எல்லாம் வாவ் ரகம்! அந்தச் சின்னக்கடையில் இரண்டே இரண்டு மேஜைகள். 8 நாற்காலிகள். வெளிநாட்டினர் பலரும் உட்கார்ந்து சாம்பாரில் இட்லியைத் தோய்த்து அழகாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாகி விட்டோம். நெய்யில் பொரித்த கச்சோரியும் கிழங்கு மசாலாவும் இன்ன பிற ஐயிட்டங்களும் என்று குறைவில்லாமல் கிடைக்கிறது ம்ம்ம்ம்…😋

பீடாவையும் விட்டு வைக்கவில்லை. அதை அவர்கள் சில பல பொருட்களைச் சேர்த்துச் செய்யும் பாங்கே அழகு தான்! ஒரு கடையில் பீடா வாங்கும் பொழுது சோழவந்தானில் இருந்து வந்திருந்த தமிழ் குடும்பத்தைச் சந்தித்தோம். இரவு நேரங்களில் எருமைப்பாலில் செய்த மலாய்யை பாலில் சேர்த்து மண்சட்டியில் தருகிறார்கள். அந்தக் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிக் குடிக்க கூட்டம் காத்திருக்கிறது. சுவையோ சுவை! விட்டால் இன்னொன்றையும் குடித்திருப்பேன். பன்னீரில் செய்யும் இனிப்புகள் எல்லாம் மிக சுவையாக இருக்கிறது. ஆக, மதுரையில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்😑சாப்பிட்டு முடியவில்லை. நடந்து சென்று கொண்டிருப்போம். எண்ணையில் பொரிக்கிற வாசனை வந்தவுடன் அந்தக் கடையின் முன் நின்று அது என்ன இது என்ன என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விடுவோம். காசிக்குப் போனால் நன்றாக ஆனந்தமாகச் சாப்பிடலாம். அத்தனை வகையான பண்டங்கள்!

இரு நாட்கள் புத்த கயா, கயா சென்று பித்ரு பூஜைகளை செய்து விட்டு வந்தோம். கோவில்கள் எல்லாம் மிக அருமை. நம் ஆத்ம திருப்திக்காக செய்யும் பூஜைகளைச் சாதகமாக்கிக் கொண்டு காசைப் பிடுங்குகிறார்கள். அந்தப் பயணமும் சுவாரசியமாக இருந்தது. நிறைய எழுதலாம். கட்டுரை நீண்டு விடும்.

காசியிலிருந்து சாரநாத் மிக அருகில் இருக்கிறது. அங்கும் சென்று வந்தோம். அயோத்தி ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு செல்லலாம் என்று பக்கெட் லிஸ்டில் போட்டு வைத்திருக்கிறோம். அலகாபாத் திரிவேணி சங்கமம் செல்வதற்குள் ஈஷ்வருக்கு காய்ச்சல் வந்து படுத்து விட்டார். நல்ல வேளை! கோவிட் இல்லை என்றதும் சாந்தமானாலும் இரண்டு நாட்கள் அவரால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை. அங்கிருந்த நாட்களில் மருந்துக்கடைக்காரரும், இட்லி விற்கும் சகோதரர்களும் விடுதிச் சிப்பந்திகளும் நன்கு பரிச்சயமாகி விட்டார்கள்.

காய்ச்சல் இருந்தாலும் வடை சாப்பிடுவேன் என்று ஈஷ்வர்! இட்லி, வடை, ஊத்தப்பம் நன்றாக இருக்கிறது என்று விரும்பிச் சாப்பிட்டார். 100ரூபாயில் இருவருக்கு அருமையான ஆரோக்கியமான சுவையான காலை உணவு கிடைக்கிறது! எப்படி இவர்களால் மட்டும் இத்தனை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது? நம்மூரில் கொள்ளை விலை விற்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது! சாப்பிட்டவுடன் கொஞ்சம் தெம்பானார் ஈஷ்வர். “இன்றும் நன்கு படுத்து உறங்கி ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல வெயில் அடிக்கிறது. வம்பு வேண்டாம்” என்று நான் மட்டும் அண்ணாவுடன் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கும் சாளக்கிராமம் பார்த்து விட்டு வரக் கிளம்பினேன். ஈஷ்வரால் வர முடியவில்லையே என்று வருத்தம். “நிறைய படங்கள் எடுத்துக் கொண்டு வா” என்றார்.


நகரின் நடுவே மிகப்பெரிய வீட்டில் ஒரு தொட்டி நிறைய சாளக்கிராமம். இதற்கென்றே கட்டியிருக்கிறார்கள். “பரம்பரை பரம்பரையாக சேர்த்து வைத்தது. வீட்டில் வைத்துப் பூஜை செய்ய முடியாதவர்கள் கொண்டு வந்து கொடுத்தது என்று 10,000 வரை இருக்கும்” என்று கூறினார். அந்த அறையைப் பராமரிக்க மட்டுமே ஒரு ஆளை வைத்திருக்கிறார்கள். தினமும் அபிஷேகம் செய்து எண்ணையில் துடைத்து வைக்கிறார்கள். பூமாலைகளைக் கொடுத்து எங்களைப் பூஜை செய்யச் சொன்னார். ஈஷ்வர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் பூஜைகள் செய்து வணங்கினோம். சுடச்சுட பூரி, ஒரு கப் தயிர், குலாப்ஜாமூன், ஆச்சார் எல்லாவற்றையும் அழகாக பெரிய தட்டில் சின்னச் சின்ன கோப்பைகளில் உணவகங்களில் பரிமாறுவதுபோல் எடுத்துக் கொண்டு வந்தார் அவர் மனைவி. சிறிது நேரம் பேசிவிட்டு சாளக்கிராமம் பார்க்க, பூஜை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறி கிளம்பினோம். பெரும் வசதி படைத்தவர் தான். ஆனால் அவருக்குப் பெருந்துயரம் ஒன்றும் இருந்தது. பணம், வசதிகள் இருந்தால் கவலைகள் இருக்காது என்று யார் சொன்னார்கள்? எங்களிடம் அவருடைய துயரத்தைப் பகிர்ந்து கொண்ட பொழுது,ஈஷ்வரா! இவருடைய கவலை விரைவில் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

வெயில் பாடாய் படுத்தியது. மழை வரும் போலிருக்கிறது. அத்தனை வெக்கை! விடுதிக்குத் திரும்பியதும் ஈஷ்வரிடம் படங்களைக் காட்டி நாங்கள் பேசியதைக் கூறினேன். அவரும் அவர்களுடைய துயரத்தைக் கேட்டு கவலைப்பட்டார். காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அடுத்த நாள் என் பங்கிற்கு காய்ச்சல். அன்று ஈஷ்வர் வெளியில் சென்று வந்தார்.


ஒருநாள் நகரத்தார் சத்திரத்திற்குச் சென்று வந்தோம். குப்தகாசியில் சந்தித்த செட்டியார் குடும்பங்களில் இருவர் அங்கே நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை அங்கு தங்க ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் தான் ஹோட்டலில் தங்க முன்னேற்பாடுகள் செய்து விட்டதைக் கூறி அங்கு சென்று வருகிறோம் என்று கூறியிருந்தோம். அத்தனை பெரிய சத்திரம்! வெளியில் இருந்து பார்த்தாலே காரைக்குடியில் இருக்கும் வீடுகளின் அமைப்பில் இருப்பது தெரியும். உள்ளே ஜன்னல்கள் இல்லாத இடத்தில இருட்டாக இருக்கிறது. சுத்தமாக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப தனி அறைகளிலோ, ஹாலிலோ அல்லது வெளியில் வராண்டாவிலோ தங்கிக் கொள்ளலாம். பல தங்கும் அறைகள் இருக்கிறது. நிறைய யாத்திரீகர்கள் தங்கி இருந்தார்கள். அங்கே எனக்கு மிகவும் பிடித்தது அமைதியும் அழகும் ஒரு சேர இருந்த ஈஸ்வரன் கோவில் தான். அம்மாவும் அப்பாவும் காசிக்குச் சென்றிருந்தபொழுது அங்குதான் தனியறை எடுத்துத் தங்கி இருந்தார்கள். அங்கேயே சாப்பிடும் வசதியும் இருக்கிறது. ஊரைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறார்கள்.குறைந்த கட்டணத்தில் தங்கவும் சாப்பிடவும் முடிவதால் தமிழர்கள் பலரும் அங்கே தங்குகிறார்கள்.

நகரத்தார் சார்பில் காசி விஸ்வநாதர் கோவிலின் பூஜைக்கான பால் மேள தாளத்துடன் தினமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சென்ற வருடம் தான் இவர்களின் ரூ.240 கோடி மதிப்புள்ள நிலத்தை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களிடம் இருந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக்கொடுத்துள்ளது.

காசியில் வெயில் அடித்தால் எனக்கென்ன உனக்கென்ன என்று சாத்துகிறது. மதுரை வெயில் எல்லாம் வெயிலே அல்ல. இங்கு உஷ்ணம் வேறு மாதிரி இருக்கிறது. எப்படித்தான் கோடையை சமாளிக்கிறார்களோ😨குளிரும் அப்படிதான் இருக்குமோ? மழை பெய்தால் தெருக்களில் தண்ணீர் ஓடி சாணி , நாய் ‘ஆய்’ என்று களேபரமாக உள்ளது😑 மழையும் வெயிலும் இல்லாத பட்சத்தில் இவைகளைக் கடந்து சென்று விட முடிகிறது. இது ஒன்று தான் காசியில் எனக்கு நெருடலாக இருந்தது. மற்றபடி படித்துறைகள் எல்லாம் சுத்தமாக இருந்தது. ஆற்றுத்தண்ணீரின் சுத்தத்தை அரசு அதிகாரி ஒருவர் தினமும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அரசு ஓரளவிற்குத் தான் சுத்தத்தைப் பேணிக் காக்க முடியும். நான் பார்த்தவரையில் தெருக்கள், படிகளைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். குடிமக்கள் நாமும் ஒத்துழைத்தால் தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

கங்காவில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. மகாபாரதப் போருக்குப் பின் திருதிராஷ்ட்ரன், காந்தாரி, குந்திதேவி மூவரும் இங்கு குளித்துப் பின் இறுதிப்பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாண்டவர்களும் தங்கள் பாவங்கள் தீர, சிவனை நோக்கித் தவம் புரிவதற்கு முன் கங்கையில் குளித்தார்கள் என்பது ஐதீகம். இமயத்தில் கௌமுக் பனிமலையில் உற்பத்தியாகி பாகீரதியாக கங்கோத்ரியில் இருந்து 120மைல்கள் தெற்கே பயணித்து ரிஷிகேஷில் சமவெளியில் ஓடி வரும் நதியை உலகைக் காக்கும் அன்னையாக இந்துக்கள் வழிபடுவதால் ‘மா கங்கா’ புண்ணிய நதியாகிறாள். அவள் வரும் வழிதோறும் ‘தேவபூமி’ ஆனது.

கங்கையை நோக்கிய எங்கள் பயணம் ஹரித்துவாரில் தொடங்கியது. நல்லவேளையாக தடங்கல்கள் ஏதுமின்றி ‘சார்தாம்’ பயணம் இனிமையாக நினைத்தபடி முடிந்து விட்டது. மழையும், கூட்டமும் இருக்காது என்று நம்பித்தான் செப்டம்பர் மாத இறுதியில் பயணத்தை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்கள் ராசிக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேல் மழை பொழிந்து காட்டாற்று வெள்ளத்தை யமுனை, கங்கா ஆறுகளில் பார்த்து அரண்டு போனோம். வழியில் மலைச்சரிவு, சாலைகள் பிளந்து இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை😞 செப்டம்பர்-அக்டோபரில் வந்தால் இவற்றையெல்லாம் எதிர்பார்த்து வர வேண்டும். ரிஷிகேஷில் சிறிது நேர மதிய வெயிலே தாங்கிக் கொள்ள முடியாதபடி இருந்தது. சுற்றிலும் மலைகள் இருக்கே! நன்றாக ‘குளுகுளு’வென்று இருக்கும் என்று நினைத்தது அங்கே நடக்கவில்லை. இப்பவே இப்படி மண்டைய பொளக்குதே கோடையில் வந்தால் வெந்து சாம்பலாக வேண்டியது தான். அதுவுமில்லாமல் கோடையில் ‘சார்தாம்’ கோவில்களில் நீண்ட வரிசையும் காத்திருப்புகளும் இருக்கும் என்று கேள்விப்பட்டோம். ஆனாலும் மழையில் நனைந்த இமயமலை, சாலைகள், வண்டல் மண்ணைச் சுமந்து ஓடி வரும் ஆறுகள், ஆயிரம் வருடங்களுக்கும் மேலான புராதனக் கோவில்களைக் கண்டதில் நிறைவான பயணமாக அமைந்து விட்டதில் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. 

‘கங்கையை நோக்கிய’ இந்தப் பயணம் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் பேரனுபவமாக அவன் அருளால் இனிதே அமைந்தததற்கு நன்றி கூறி தொடரை முடித்துக் கொள்கிறேன். 

தொடர் முழுவதையும் பொறுமையாக வாசித்த அன்பர்களுக்கு என் நன்றிகள்!

ஹர ஹர மஹாதேவ!

***

ரிஷிகேஷ்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் ரிஷிகேஷ்

 

இந்தியாவின் ஆன்மீக தலங்களில் ஒன்றான ரிஷிகேஷ், உத்தரகாண்டில் உள்ள ஒரு சிறிய நகரம். இமயமலையின் அடிவாரத்தில் கங்கைக்கரையோரத்தில் அமைந்துள்ள ஊரின் இரு கரைகளிலும் மடங்கள், யோகா, ஆயுர்வேத நிலையங்கள், கோவில்கள் நிறைந்து இருக்கிறது. மனநிம்மதியைத் தேடி பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கு வருகிறார்கள். “உலகின் யோகா தலைநகரம்” என்று அழைக்கப்படும் ரிஷிகேஷில் யோகா, தியானம், ஆன்மீக பயிற்சிகள் பற்றிய படிப்புகள் கற்றுத் தரப்படுவதால் இந்தியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டினர் பலரும் தங்கள் பயிற்சியை ஆழப்படுத்தவும், யோக வாழ்க்கைமுறையில் வாழ, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இங்கு வருவதால் பல வெளிநாட்டினரையும் பார்க்க முடிகிறது.

அவர்களும் இங்குள்ள உணவு, உடைக்கு மாறியிருக்கிறார்கள். பேரம் பேசி பொருட்களை வாங்குவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. சிலர் ஹிந்தியிலும் நன்கு பேசுகிறார்கள்! தமிழ்நாடு சென்று படிக்க ஒரு அமெரிக்க மாணவி என்னிடம் தமிழைக் கற்றுக் கொடுக்கச் சொல்லி வகுப்புகள் எடுத்துக் கொண்டாள். ஈஷ்வரின் அமெரிக்க நண்பர்கள் சிலர் தமிழில் நன்கு பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்! அவர்கள் தமிழ்நாட்டில் பல வருடங்களாகத் தங்கி ஆசிரியர் பணி செய்தவர்கள். அடிக்கடி தமிழ்நாடு சென்று வருபவர்களும் கூட! ஒரு நாட்டிற்குச் செல்வதற்கு முன் அந்த நாட்டைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு தான் செல்கிறார்கள். நம் ஆட்கள் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டினர் தானே என்று ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து தான் போவார்கள்.

நாங்கள் தங்கியிருந்த ‘ஹோட்டல் கங்கா ஃபாரெஸ்ட் வியூ’ விடுதியின் முன்வாசல் வழியே வெளியே வந்தால் “மா கங்கா” ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகத் ததும்பிச் சென்று கொண்டிருந்தாள். ஆற்றை ஒட்டி ‘அஸ்தபாத்’ நடைபாதையில் பறவைகளும், குரங்குகளும், கால்நடைகளும், நாய்களும் மனிதர்களுடன் மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்க, மந்திகளின் சேட்டை கொஞ்சம் அடாவடியாகத் தான் தெரிந்தது! ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் கலந்த நீண்ட அலகுடன் இதுவரையில் நாங்கள் கண்டிராத ‘ஹார்ன்பில்’, அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பறவைகளை மரத்தில் பார்த்த எங்களுக்குப் பரம சந்தோஷம். மறக்காமல் ‘க்ளிக்’கிக் கொண்டோம்😎

ரிஷிகேஷிலும் ‘சௌராஷ்ட்ரா ஆசிரமம்’ ஒன்று நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து பத்து நிமிட நடையில் இருந்தது! அம்மாவும் அப்பாவும் அங்கே தங்கியிருந்ததாக முன்பே சொல்லியிருக்கிறார்கள். ஈஷ்வரின் நண்பர் ஒருவரும் மதுரையிலிருந்து அடிக்கடி இங்கு வந்து ஆசிரமத்தை நிர்வகிக்கிறார். நாங்கள் வருவதை அவருக்குத் தெரிவித்தவுடன் கண்டிப்பாக அங்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாங்களும் மாலை நான்கு மணியளவில் அங்கு சென்றோம். வெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதை குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா, இரண்டு, நான்கு சக்கர வண்டிகள், தள்ளுவண்டியில் காய்கறி, பழங்களை விற்பவர்கள் என சாலைக்காட்சிகளுக்கு குறைவில்லை. இந்த களேபரத்தில் சாலையோரத்தில் குடிசையைப் போட்டுக் கொண்டு இரும்புச்சாமான்களை விற்றுக் கொண்டிருந்தது சில குடும்பங்கள். சிரித்த முகத்துடன் சமைத்துக் கொண்டிருந்த பெண்களும் உணவருந்திக் கொண்டிருந்த ஆண்களும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சிரிப்பொலியும் என்று அழகான சின்னஞ்சிறிய உலகம்! தார்ப்பாய் கூடாரம். மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல். திறந்த வெளியில் தான் வாழ்க்கை. ஆனாலும் கேலியும் கிண்டலுமாகப் பேசி சிரித்துக் கொண்டு ஈக்கள் மொய்க்கும் இடத்தில் வாழ்கிறார்கள்! “மகிழ்ச்சி என்பது அந்தந்த நொடிகளில் வாழ்பவர்களுக்கே சொந்தம்”. சாத்தியப்படுத்திக் கொண்டிருந்த மனிதர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்! ம்ம்ம்…

இவர்களை வேடிக்கைப் பார்த்து யோசித்துக் கொண்டே வந்தால் மூன்று நிலைகள், அழகான சிற்பங்கள் கொண்ட வண்ண கோபுரத்துடன் முருகன் கோவில் ஒன்று! வட இந்தியாவில் ‘கார்த்திகேயன்’ என்று அழைக்கப்படும் முருகனின் பெயரில் சௌராஷ்ட்ரா ஆசிரமம். இங்கு யார் வேண்டுமானாலும் தங்கலாம். உணவும் இலவசம்(முன்கூட்டியே தகவல் கூறினால் பெரிய குழுவாக வருபவர்களுக்குச் சமைத்தும் கொடுக்கிறார்கள்). தற்போது மின்சார கட்டணம் கட்டுவதற்காக மட்டும் குறிப்பிட்ட தொகையைக் கேட்கிறார்கள். ஆசிரம செலவுகளுக்கு மனமுவந்து அளிக்கும் நிதியுதவியையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரில் முருகன் சந்நிதி. முருகன் என்றாலே அழகு தானே? சர்வ அலங்காரங்களுடன் மயில்வாகனன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். காலை, மாலை இருவேளை பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கிருந்த தேவி திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தாள். விநாயகர், சிவன், விஷ்ணு, நவக்கிரகங்கள் என்று சிறிய கோவில். முன்பு அங்கு இருந்த தவசிகள் பாதாள அறையில் பல நாட்களுக்குத் தவம் செய்திருக்கிறார்கள். ஈஷ்வருக்கு மிகவும் பிடித்து விட்டது. விட்டால் அங்கேயே அமர்ந்து விடுவார் போல இருந்தார்😮 அதற்குள் அவருடைய நண்பர் எங்களை வரவேற்று அங்கிருந்த மற்ற நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சுவையான தேநீரையும் வழங்கினார்.

மதுரையிலிருந்து 1940களில் ரிஷிகேஷ் வந்த சௌராஷ்ட்ரா துறவி ராக்கேஷ் ஆனந்தா சிறுகுடிசையில் தங்கி இருந்து படிப்படியாக இந்த ஆசிரமத்தைக் கட்டியிருக்கிறார். பல குருக்களுடன், பிரபலங்களுடன் (ரஜினி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர்) எடுத்த பழைய படங்களை மாட்டியிருந்தார்கள். நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றின விவரங்களை அறிந்து கொண்டோம். மறுநாள் காலையில் நடைபெறவிருக்கும் விஜயதசமி பூஜைக்கு வருமாறு அழைக்க, நாங்களும் சரியென்று சொல்லி விடைபெற்றோம்.

‘சார்தாம்’ பயணத்தில் பெரும்பாலும் வாழைப்பழமும் ஆப்பிளும் தான் அதிகம் கிடைத்தது. கோவிலின் எதிரே இருந்த பழக்கடையில் எனக்குப் பிடித்த பழங்களைப் பார்த்ததும் ஓடிச்சென்று ஐஸ், சர்க்கரை சேர்க்காமல் ஆளுக்கொரு பழச்சாறு குடித்தோம். அத்தனை சுவையாக இருந்தது😋 மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்க, படிகளில் இறங்கி சிறிது நேரம் கங்கைக்கரையோரம் அமர்ந்திருந்தோம். வெயில் கொஞ்சம் குறைந்திருந்தது. காற்றும் வீச, மலைகள் சூழ அமைதியாக ஓடும் நதியின் அழகைப் பார்த்துக் கொண்டு அங்கே அமர்ந்திருப்பதே ஜென் நிலை தான்! எங்கள் விடுதியின் அருகில் கூட ஒரு யோகா மையம் இருந்தது. அங்கே அறை எடுத்துத் தங்கி யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அறைகளும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நீல வானம் மெதுவாக மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு வண்ணங்களை ஓவியமாய்த் தீட்ட, நதியில் பிரதிபலித்துக் கொண்டே காலையில் இருந்து அனலாய் தகித்துக் களைத்த வசீகரன் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டான். மாலை நடை செல்பவர்கள் வியர்க்க விறுவிறுக்க கடமையாக நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரே அஸ்தமிக்கும் சூரியனை வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

விடுதியில் இருந்து அரைமணி நேரத் தொலைவில் ‘திரிவேணி படித்துறை’ இருக்கிறது. முதன்முதலில் ஹரித்வாரில் கண்ட ‘கங்கா ஆரத்தி’யில் மனதைப் பறிகொடுத்திருந்தோம். அங்கே இருந்தது போல் இங்கும் கூட்டம் இருந்தால் என்று நினைத்து முன்னாடியே போய் நல்ல இடத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். வீடுகளையும், விடுதிகளையும், யோகா மையங்களையும், கோவில்களையும் கடந்து கூடவே பவனி வந்த கங்கையுடன் நடந்த களைப்பே தெரியவில்லை. மக்கள் கூட்டம் தெரியும் இடம் தான் படித்துறை என்று தெரிந்தது. காலணிகளை வைத்து விட்டு வில்லையை வாங்கிக் கொண்டோம். கிருஷ்ணன் தேரோட்ட, அர்ஜுனன் அமர்ந்திருக்கும் பெரிய சிலையுடன் கூடிய வளைவு படித்துறையை அலங்கரிக்கிறது. ‘மா கங்கா’ சிலையும் அங்கிருந்தது. கங்கா தீர்த்தம் எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் கேன்கள், பூஜைப்பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

மழை இல்லாததால் சுத்தமாக இருந்த படிகளில் அமர, ஆளுக்கு 250ரூபாய் கட்டணம் கட்டி ரசீதும் வாங்கியாயிற்று. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் அங்கே குழுமியிருந்தனர். மெதுவாக கூட்டம் சேர, ஆறு மணிக்குள் படிகள் முழுவதும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அதைத்தவிர மண்டபத்திலும் நல்ல கூட்டம். வார நாட்களில் இந்த கூட்டம் இருந்தால் வார விடுமுறையில் எவ்வளவு இருக்கும்?!

பூஜைக்கான வேலைகள் ஆரம்பமாயின. விதவிதமான தீபாராதனை விளக்குகள், பூஜைப்பொருட்களுடன் 13 பூஜை மேடைகள். ஆராதனை செய்ய இளைஞர்கள் முதல் அனுபவமிக்க ஆச்சாரியார்கள். வரிசையாக படியில் அமர்ந்திருந்தவர்களை அழைத்து கங்கா அன்னைக்குப் பூஜை செய்ய சொன்னார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆச்சாரியார் மந்திரங்கள் சொல்ல, தேங்காய், பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், புதுத்துணி வைத்து மலர்களால் அன்னையை அர்ச்சித்து தீபங்கள் காட்டி பூஜை செய்தது வார்த்தைகளில் சொல்லிட இயலாத உள்ளார்ந்த உணர்ச்சிகரமான அனுபவம்! மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. பல சிந்தனைகளால் மன நிம்மதியற்ற நிலையில் ஆரம்பித்த இந்த யாத்திரையில் ஒவ்வொரு நிமிடத்தையும் முழுவதுமாக அனுபவித்து மன நிறைவு கொண்டோம். இந்த உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்களும் ஒருமித்த நிலையில் மக்களின் மனங்களும் பக்தியில் என்று அந்த இடமே பரவசமாக இருந்தது. இயற்கையை ஆராதிக்கும் மனமிருந்தால் போதும். எங்கும் எதிலும் இறைவனைக் காணலாம்.

நன்கு இருட்டிய பிறகு 6.45 மணியளவில் மகா தீபாராதனை ஆரம்பமாகியது. பின்னணியில் அருமையான பஜன்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் இருந்த வட இந்தியர்கள் பலரும் சேர்ந்து பாடியதைக் கேட்க ரம்மியமாக இருந்தது. 13 ஆச்சாரியார்களும் நான்கு திசைகளை நோக்கி ஒரு சேர செய்த தூப, தீபாராதனையின் போது கூட்டத்தில் ‘ஜெய் கங்கா மையா’ கோஷம் மயிர்க்கூச்செறியும் அனுபவம். விளக்கை நம் கைகளில் கொடுத்து ஆராதனை காட்டவும் சொல்கிறார்கள். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்வுடனும் நிம்மதியுடனும் கூட்டம் கலைந்து பஜனை செய்யும் இடத்தில் கூட்டம் கூடி விட்டது. மக்களைப் பார்த்தவுடன் அவர்களும் உற்சாகமாகப் பாடல்களைப் பாட, இளைஞர்கள் கூட்டம் ஆடிப்பாடிக் கொண்டாட, அங்கே இருந்தவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா? யாரும் யாரையும் வெறுக்காத மனநிலையில் நான் அங்கு கண்டதெல்லாம் அன்பும் பக்தியும் இன்பமும் மட்டுமே. இந்துக்களாகப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்! நம்மை மிரட்டிக் கட்டுப்படுத்துபவர்கள் இன்றி நமக்குப் பிடித்த கடவுளை வணங்கிக் கொண்டாட முடிகிறது. இனிய அனுபவத்துடன் கூட்டம் கலைய, காலணிகளை வாங்கிக் கொண்டோம். “காசு கொடுங்கள்” என்று யாரும் தலையைச் சொரிந்து கொண்டு கேட்கவில்லை. மதுரையில் கோவில்களில் காலணிகளை வைக்க இலவசம் என்றாலும் சிலர் கேட்கிறார்கள்.

இரவு உணவிற்கு உணவகங்களைத் தேடிச் சென்ற தெருக்களில் துணிக்கடைகள் ஏராளம். தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க எனக்கும் கடைக்குச் சென்று துணிகள் வாங்க ஆசை. சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து உணவகங்களைத் தேடினால் அங்கும் கூட்டம்! தள்ளு வண்டிகளில் ஆலு பூரி, பானி பூரி வகைகள் தான் அதிகம் தென்பட்டது. ஓரிடத்தில் இலைகளை மடித்து கிண்ணங்களாக்கி பானிபூரிகளை வைத்து தயிர், விதவிதமான சாஸ்கள் கலந்து நல்ல வியாபாரம். நாங்கள் இளநீர் குடித்து வாழைப்பழம், சப்போட்டா பழங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கடைத்தெருவுக்குள் வந்தால் துணிக்கடைகளை மூட ஆரம்பித்திருந்தார்கள். அவசரத்திற்கு இரண்டு குர்த்திகளை மட்டும் வாங்கிக் கொண்டேன். 8.30 மணிக்கெல்லாமா கடைகளை மூடுவார்கள்? என்ன ஊருடா இது? என்று ஏமாற்றமாக இருந்தாலும் காசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானமாகி விட்டேன். ஈஷ்வருக்கு அப்பாடா என்றிருந்திருக்கும். ஆனாலும், “நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று நல்லபிள்ளையாக சொல்லி விட்டார்.

ஈ-ரிக்ஷாவில் ஏறி விடுதிக்கு வந்து சாப்பிட்டு விட்டு அன்றைய நாளின் இனிமையான பொழுதுகளை அசை போட்டபடி தூங்கி விட்டோம். காலையில் நான் விழிப்பதற்குள் ஈஷ்வர் எழுந்திருந்தார். “வெளியில் வந்து பாரு” என்றவுடன் கேமரா சகிதமாக ஓடினால் மூடுபனி படர்ந்த கங்கா நதி. மேகங்களுக்குள் புதைந்திருந்த சூரியபகவான் வெளியே தலைநீட்ட யோசித்துக் கொண்டிருந்தார். அழகான கவிதையாக காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்து காலை நேர அதிசயங்களைக் கண்டுகளித்து விட்டு சௌராஷ்ட்ரா ஆசிரமத்தில் நடக்கும் விஜயதசமி பூஜைக்குச் செல்ல தயாரானோம். குழந்தைகள் வருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் பிரசாதமாக வாழைப்பழங்களை வாங்கிச் சென்றோம். பூக்கள், பத்தி, சமையலறையிலிருந்து வெண்பொங்கல் மணம் மதுரையில் இருப்பது போன்று இருந்தது. எங்களைக் கண்டதும் ஈஷ்வரின் நண்பர் ரகுவும் சேலத்தைச் சேர்ந்த துறவியும் வந்து பூஜையில் கலந்து கொண்டார்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் நெய், மிளகு மணக்க வெண்பொங்கல். பின் காபி. மதியமும் அங்கே வந்து சாப்பிடுமாறு கூற, அவர்களிடமிருந்து விடைபெற்று சிவானந்த ஆசிரமத்திற்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம். பூக்கள், காய்கறி, பழங்கள் விற்கும் சந்தைகள், உணவகங்கள், விடுதிகள், ஆசிரமங்கள் என்று அந்தச் சாலை முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது.

15 நிமிட தூரத்தில் இருந்தது சிவானந்த ஆசிரமம். போக்குவரத்து நெரிசல். வண்டிகளின் சத்தம். இங்கு எப்படி ஆசிரமத்தை அமைத்தார்கள் என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தால் 120 படிகள்! அய்யோடா! மூச்சு வாங்க ஏறி விட்டேன். அங்கிருந்த சாதுக்கள் சகஜமாக ஏறி இறங்குகிறார்கள்!ம்ம்ம்! வயதானவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள் தான் பாவம். அம்மா படிகளில் ஏற முடியாததால் கீழேயே உட்கார்ந்து இருந்ததாகவும் அப்பா மட்டும் ஆசிரமத்திற்குச் சென்று வந்ததாகக் கூறியது அப்பொழுது புரிந்தது. வயதானவர்களும் ஏறிச்செல்லும் வகையில் வசதிகளைச் செய்தால் நன்றாக இருக்கும்.

அத்தனைப் படிகளைக் கடந்து வந்தால் பரபரப்பின்றி வேறொரு அமைதியான உலகம் காத்திருக்கிறது அங்கே! நுழைவாயில் தூண்களில் வாழ்க்கையைச் சிறப்புற வாழ கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பொரித்து வைத்திருந்தது சிறப்பு. சிலவற்றையாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உள்ளே சென்றால் அமைதியான அழகான சிவன் கோவில். அப்பொழுது தான் அபிஷேகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுவாமியை வணங்கிவிட்டு வலம் வருகையில் ஸ்ரீஆதிசங்கரர் உருவச்சிலையுடன் குருக்களின் படங்களும் இருந்த மண்டபத்தில் கணீரென்று தமிழில்

“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க “

என்று கண்மூடி பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள் அக்கா தங்கை இருவர். அவர்கள் கணவர்களும் அங்கே இருந்தனர். அடடா! நமக்குத் தெரிஞ்ச நாலு வரிகளாச்சே என்று நானும் வாயசைக்கவும் அந்தப் பெண்களில் ஒருவருடைய கணவர் அவர்களிடம் “இவா நன்னா தமிழ்ல பாடினா” என்று சொல்லவும் நானும் சிரித்துக் கொண்டே தமிழில் பேச ஆச்சரியப்பட்டார்கள். நாம் உடுத்தும் உடையும், போடும் மேக்கப்பும் நம்மை வேற்று ஆட்களாக மாற்றிவிடுகிறதோ? சிரித்துக் கொண்டே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருந்து டெல்லியில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருந்த தங்கை சிவ தீக்ஷை பெற்றிருக்கிறார். ஆன்லைனில் திருவாசகம் பாடல்கள் வகுப்புகள் எடுப்பதாகவும் கூறினார் என்று தெரிந்தவுடன் ஈஷ்வரையும் அறிமுகப்படுத்தி விட்டு வேறு பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்க, அவர்களும்

“தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்றுஒன்றல் ஓட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே …”

என்று திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தையும் பாடி மகிழ்வித்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று விவரங்களைக் கேட்டு அவர்களைப் பற்றியும் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றோம். அதற்குள் கோவிலில் ருத்ரம் சொல்லிக்கொண்டே அபிஷேகம் ஆரம்பிக்க, அங்கிருந்த சிலருடன் நாங்களும் அமர்ந்து பூஜை முடியும் வரை இருந்தோம். ஈஷ்வர் தியானம் செய்து கொண்டிருந்தார். வெளியில் இருந்த இரைச்சல் தொலைந்து போய் அத்தனை அமைதி அங்கே குடிகொண்டிருந்தது. இதனைத் தேடித்தான் இத்தனை மக்களும் இங்கே ஓடி வருகிறார்களா? அங்கே தங்கி இருந்தவர்கள் முகத்திலும் சாந்தோமோ சாந்தம். பல ஆன்மீக வகுப்புகள் நடக்கிறது. ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு செல்ல மனமில்லாமல் ‘ஆந்திரா ஆசிரமம்’ சென்றோம்.

அழகான திருப்பதி பெருமாள் தரிசனம் ரிஷிகேஷிலும் கிடைக்கிறது. கோவிலில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அதிகம் சுற்றிப்பார்க்க முடியவில்லை. அருகே அவர்களின் உணவகம் கூட இருந்தது. அங்கிருந்து அருகிலிருக்கும் ‘இஸ்கான்’ இயக்கத்தைச் சேர்ந்த ‘மதுபான் ஆசிரமம்’ வந்து சேர்ந்தோம். உயர்ந்த அழகான கோவில் கோபுரம். சுத்தமான வளாகம். பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணர் சிலைகள். அங்கிருந்து ஜானகி பாலம், மலைகள் அழகாகத் தெரிந்தது. வெயிலின் உக்கிரம் கூடிக் கொண்டே வர, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் செல்ல ஜானகி பாலத்திற்கு அருகேயே இறக்கி விட்டுச் சென்று விட்டார் ஆட்டோக்காரர். இப்படியே ‘அஸ்தபாத்’ நடைபாதை வழியே கங்கையை ஓட்டிச்சென்றால் ஆசிரமம் வந்து விடும். அந்தப்பாதையில் வண்டிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியதால் நடக்க ஆரம்பித்தோம்.

அங்கே சாலையோர தள்ளு வண்டியில் சுடச்சுட பூரி வியாபாரம் கனஜோராக நடந்து கொண்டிருந்தது. அவ்வளவு தான்! ஈஷ்வருக்குச் சாப்பிட ஆசை வந்து நான்கு பூரி, காரமான உருளைக்கிழங்கு சன்னா மசாலா சாப்பிட்டோம். நல்ல சுவையுடன் இருந்தது. விலையும் அதிகமில்லை. எவர்சில்வர் தட்டுக்களில் தான் பரிமாறுகிறார்கள். நெகிழிக் குப்பைகள் குறைவாக இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய உணவகங்களில் கிடைக்கும் உணவுகளின் சுவையை விட பல சாலையோரக்கடைகளில் கிடைக்கும் உணவுகளின் சுவை நன்றாக இருக்கிறது. என்ன? கேட்டாலும் கேட்காவிட்டாலும் காற்றோடு கொஞ்சம் புழுதியையும் சேர்த்துச் சாப்பிடுவோம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று நம்பாட்டுக்கு லபக்கிக்கிட்டே போக வேண்டியதுதான். குழந்தைகளுடன் வந்திருந்தால் இந்த சுதந்திரம் எல்லாம் கிடைக்காது.

அங்கிருந்து சுவாமி தயானந்த ஆசிரமத்திற்குச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, எனக்கோ தலைச்சுற்ற, ஈஷ்வர் சட்டைத் தொப்பலாக நனைந்து நடுவழியில் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று இருந்தது! ஓரிடத்தில் நிழற்குடையின் கீழ் சிறிது நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது அனுபவித்தால் புரிகிறது! அக்டோபர் மாதமே இப்படி இருக்கிறதே கோடையை நினைத்தாலே பயமாக இருந்தது. மதுரை வெயில் எல்லாம் ஒன்றுமில்லை. வாங்கிய தண்ணீர் பாட்டிலும் காலியாக, தாகம், களைப்புடன் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம்.

எதிரே ‘மா கங்கா’. ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அழகான சிறிய கோவில். உள்ளே மாணவர்களுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் குரு. அவர்கள் அனைவரும் கணீரென சொல்வதைக் கேட்க நன்றாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கோவிலுக்குள் செல்ல உடை விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார்கள். அருகிலேயே சிறிய கட்டடத்தில் பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதிக்குச் சிலை எழுப்பி அங்கே பலரும் தியானித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு உரக்கப் பேசக்கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். வெயிலில் நடந்து வந்த களைப்பெல்லாம் ஓடியே போச்சு! மனம் அமைதியானால் சர்வமும் அமைதியாகி விடுவது மாயையோ! பரந்த வளாகத்தில் அழகான குடியிருப்புக் கட்டடங்கள். சுத்தமாக அமைதியாக இருந்தது.அங்கேயே சில நாட்கள் தங்கி விடமாட்டோமா என்று மனம் ஏங்கத்தான் செய்தது!

ஆசிரமத்திற்கு இரு வழிகள் இருக்கிறது. பிரதான சாலைக்குச் செல்ல வேறு வழியில் தெருக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நடந்தோம் நடந்தோம் வெகு நேரம் நடந்தோம். முதலில் தென்பட்ட ஆட்டோவைப் பிடித்து பசியுடன் சௌராஷ்ட்ரா ஆசிரமத்திற்குச் சென்றோம். நன்றாக சாம்பார், ரசம் சகிதம் சௌராஷ்ட்ரா சாப்பாடு சாப்பிடலாம் என்று ஆசையாகப் போனால் ரவா கேசரி, பூரி, கொண்டைக்கடலை மசாலா என்று ஏமாற்றி விட்டார்கள்😞 ரவா கேசரி சுவையாக இருந்தது. சாப்பிட்டுச் சிறிது நேரம் பேசி காபி குடித்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

அப்படியே ஆற்றில் ஒரு குளியல் போட்டால் என்ன என்று உடைகளை மாற்றிக் கொண்டு படித்துறைக்குச் சென்று ஆற்றில் கால் வைத்தால் ‘சில்ல்ல்ல்ல்ல்’ என்று இருந்தது. கங்கையில் முதன் முதலாக குளிக்கிறேன். பார்க்கத்தான் அமைதியாகத் தெரிகிறது. ஆளை இழுத்துக் கொண்டு சென்று விடும் வேகம். ஆழமும் கூட. ஈஷ்வர் பிடித்துக் கொள்ள மூன்று முறை முங்கி எழுந்தேன். முதன் முதலில் ஆற்றில் குளித்தது கர்நாடகாவில் பாகமண்டலா திரிவேணி சங்கமத்தில். இது புது அனுபவம். அதுவும் கங்கையில்! ஈஷ்வரும் குளித்து முடித்த பிறகு மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி விட்டு விடுதிக்கு வந்து இளைப்பாறினோம். புத்துணர்ச்சியாக இருக்கவே, தேநீருக்குச் சொல்லி விட்டு விடுதியின் முன்னறையில் அமர்ந்திருந்தோம். வெளியில் மந்திகள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்! “ரொம்ப பக்கத்தில போகாதீங்க” என்று மேனேஜர் வேறு பயமுறுத்தி இருந்தார். அது வேறு சாப்பிட ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில் கோவமாக இருந்தது. முடிந்த மட்டும் படங்களை எடுத்தேன்.

டெல்லியிலிருந்து வந்து அங்கு தங்கியிருந்த ஒரு குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்த பொழுது ‘கங்கா ஆரத்தி’ பார்க்க ‘பரமார்த்த நிகேதன்’ ஆசிரமத்திற்குச் செல்லுமாறு கூறினார்கள். சரி என்று மாலையில் அங்குச் செல்ல முடிவெடுத்தோம். அப்பொழுது தான் விடுதிக்குள் நுழைந்த ஒருவர் ஈஷ்வரைப் பார்த்துத் திகைத்த முகத்துடன் உள்ளே வந்தார். பின்பு ஏதோ நினைத்தவராக, “நீங்கள் பாலிவுட் நடிகரா?” என்று கேட்டு ஈஷ்வருக்கா ஒன்றும் புரியவில்லை. என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையேன்னு நினைத்தவராக, “நானா? இல்லையே? இப்பொழுதான் முதன் முதலாக இப்படியொரு கேள்வியை எதிர்கொள்கிறேன்” என்று சிரித்தபடி கூறவும், அந்த நபரும், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது சாயல் உங்களிடம் அப்படியே இருக்கிறது.” என்று படத்தைக் காண்பித்தார். பாவம் ஈஷ்வருக்குத் தான் அந்த நடிகர் யாரென்றே தெரியவில்லை. என்னிடம் கேட்டார். “நான் இவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை” என்றேன். ஆனால் அந்த நபர் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டு கைகுலுக்கி விடைபெற்றார்! இப்படியும் சிலர்!

ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் காலையில் சென்ற வழியே ‘ஜான்கி பாலம்’ வரை வண்டியில் சென்று இறங்கி விட, அங்கிருந்து 15 நிமிட நடை. சைக்கிளில், தள்ளுவண்டிகளில் வைத்து வழியெங்கும் விதவிதமான உணவுக்கடைகள். மக்களும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எண்ணெயில் வறுபட்டுக் கொண்டிருந்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் சமோசாக்களையும் வாங்கிச் சுவைத்துக் கொண்டே நடந்தோம். இந்தமாதிரி சிறு தொழில் வியாபாரிகள் ஊர் முழுவதும் தென்பட்டார்கள். கொரோனா காலத்தில் பயணிகள் யாரும் இன்றி இவர்கள் எல்லாம் எப்படிச் சமாளித்தார்களோ!

பாலத்தில் சரியான கூட்டம். நாங்கள் அங்கு போய்ச் சேர, ஆரத்தி அப்பொழுது தான் முடிந்திருந்தது. வந்தது தான் வந்தோம் அந்த ஆசிரமத்திற்குச் செல்லலாம் என்று உள்ளே போனால் அது வேறு உலகமாக இருக்கிறது! குப்தகாசியில் சந்தித்த ரஷ்யப் பெண்மணி ஒருவர் “இந்த ஆசிரமத்தில் தங்கி இருக்கும் அமெரிக்கப் பெண்மணி தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நல்ல மார்க்கெட்டிங் திறமை இருக்கிறது. ஆனால் அங்கு வரும் இந்தியர்களிடம் அவர்களுக்குத் தெரியாமலே இந்தியாவைப் பற்றின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்😯 எவ்வளவு தூரம் இதில் உண்மை இருக்கிறது என்பது அந்த ஆசிரமத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்குத் தான் தெரியும்😑

அங்கு வெளிநாட்டினர், உள்நாட்டினர், மாணவர்கள், சாதுக்கள் என்று நல்ல கூட்டம். பெரிய பெரிய சிவன், விஷ்ணு, ஹனுமன் சிலைகள். மரங்கள், செடிகள் என்று மக்களைக் கவரும் வண்ணம் ஒளியூட்டப்பட்டு பிரம்மாண்டமாக இருந்தது! மிகப்பெரிய வளாகம். கட்டடங்கள் என்று பிரமிக்க வைத்தது! எங்கிருந்தோ சாப்பாட்டின் வாசனை வரவே, மோப்பம் பிடித்துச் சென்றால் அருகிலேயே கேன்டீன் இருந்தது. அங்கே தோசை, இட்லி எல்லாம் கிடைக்கிறது. துண்டைப் போடு என்று ஓரிடத்தில் இடம்பிடித்து உட்கார்ந்து விட்டோம். சட்னி, சாம்பாருடன் சுடச்சுட மொறுமொறு தோசை. ஆகா! தெய்வம் இருப்பது இங்கே மொமண்ட். எதிரில் அமர்ந்திருந்த சாது சிரித்த முகத்துடன் சிநேகபாவத்துடன் களையாக இருந்தார். அவர் பத்ரிநாத் அருகே ஆசிரமம் வைத்திருப்பதாக கூறினார். எங்களுடைய சொந்த ஊர் மதுரை என்றதும் ராமேஸ்வரம் செல்ல அடிக்கடி மதுரை சென்றிருக்கிறேன். நல்ல ஊர் என்றார். அமெரிக்காவிற்கும் அடிக்கடி வருவாராம்! ம்ம்ம்… அவர் எங்களைத் தமிழர்கள் என்று நினைத்து விட்டார் என்று நினைக்கிறேன். “உன் மனைவி குஜராத்தியா” என்று ஈஷ்வரிடம் கேட்க, “இல்லை நாங்கள் சௌராஷ்ட்ரா. இப்படித்தான் அவளை எல்லோரும் கேட்பார்கள்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல, அதான் அவர் முதலில் என்னிடம் இந்தியில் பேசினாரோ? நான் வேற அச்சா அச்சா. டீக் ஹே என்று பதில் சொல்லி அவரைக் குழப்பிவிட்டேன் போலிருக்கிறது😆 ஹே ராம்!

திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு வெளியில் படித்துறைக்கு வந்தால் தவக்கோலத்தில் பெரிய சிவன் சிலை! கூட்டம் இல்லாததால் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம். 2013 வெள்ளத்தின் பொழுது சிவனின் கழுத்து வரை தண்ணீர் அலையடித்து ஆக்ரோஷமாக செல்லும் காட்சி செய்திகளில் பார்த்தது நினைவிற்கு வந்தது! இன்றும் கம்பீரமாக இருந்தார் நீலகண்டன்! ரிஷிகேஷ் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது கங்கையில் இருக்கும் சிவனின் சிலை தான். இக்கரையில் பார்க்க வேண்டிய ஆசிரமங்களும் கோவில்களும் அத்தனை இருக்கிறது. நேரமின்மை காரணமாக எங்களால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்த பூ விற்கும் சிறுவர்கள் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்க, ஈஷ்வர் வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரம் கரையில் அமர்ந்து விட்டு ‘ராம் ஜூலா’ பாலம் வழியே சாலையை வந்தடைந்தோம். வழியில் கடைகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். உணவகங்கள் மட்டும் திறந்திருந்தது. இன்றும் துணிக்கடைகளுக்குச் செல்ல முடியவில்லை😞 ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு விடுதிக்குள் வந்து மறுநாள் டேராடூன் விமான நிலையத்திற்குக் காலையில் செல்ல வண்டிக்குச் சொல்லி விட்டுத் தூங்கி விட்டோம்.

அதிகாலையில் எழுந்து தயாராகி கங்காவைப் பார்த்து விடைபெற்று வரலாம் என்று கிளம்பினேன். ஈஷ்வரும் தயாராகி வந்து விடுவதாகச் சொல்ல, வெளியில் “புத்தம் புது காலை பொன்னிற வேளை!…”. காலை நடை செல்லும் உள்ளூர் மக்கள் அனைவரும் கையில் தமிழக முதல்வரைப் போல ஒரு மந்திரக்கோலை கையில் வைத்திருந்தார்கள். நாய், குரங்குகளை விரட்ட😂 ‘சிலுசிலு’ காற்று. கொஞ்சம் குளிர். குளித்து விட்டுப் பூஜைகள் செய்பவர்கள், அசமஞ்சமாக உட்கார்ந்திருப்பவர்களைக் கடந்து சென்றால் ஓரு ஆசிரமத்தில் சூடான எலுமிச்சம்பழ தேநீரை இலவசமாக கொடுக்கிறார்கள். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்கள். குடித்து விட்டுக் காத்திருக்கையில் ஈஷ்வரும் சேர்ந்து கொள்ள, காசு கொடுத்து விட்டு காலைப்பூஜை நடந்து கொண்டிருந்த சாய்பாபா கோவிலை வலம் வந்தோம். சமீபமாக சாய்பாபா கோவில்கள் நிறைய முளைத்திருக்கிறதோ! ஆல்பனியில் கூட ஒன்றை ஆரம்பித்து கோலாகலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர மக்கள். நல்ல கூட்டமும் சேருகிறது! ஆற்றில் ஒருவர் கயாக்கில் ஹாயாக சென்று கொண்டிருந்ததை ஈஷ்வர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்😔 அவருக்குப் படகு, கனூ, கயாக்கில் ஆற்றுக்குள் துடுப்புப் போட்டபடி செல்ல மிகவும் பிடிக்கும்.

‘ரிவர் ராஃப்ட்டிங்’ என்னும் காற்றடைத்த மிதவையில் பயணம் செல்வது இங்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. அலைகள், சுழல்கள் இருக்கும் பகுதிகளில் அழைத்துச் செல்வார்கள். அதிலிருந்து மீண்டு வரும் சாகசம். தூர்தர்ஷனில் அந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது. முதன் முதலில் யூட்டா மாநிலத்திலும் பின்பு நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றிலும் பயந்து கொண்டே ராஃப்ட்டிங் செய்ததும் நினைவிற்கு வந்தது. குழந்தைகள் வந்திருந்தால் விரும்பிச் செய்திருப்பார்கள். வேறு வழியின்றி நானும் கூட போயிருப்பேன்.

“ரிஷிகேஷை நாம ரொம்ப மிஸ் பண்ணப் போறோம்.” ஈஷ்வர் சொல்ல, உண்மை தான். ஏதாவது ஒரு ஆசிரமத்தில் தங்கி விட மாட்டோமோ என்று மனம் ஏங்கினாலும் கடமைகள் தான் இன்னும் இருக்கிறதே என்ற நினைவு வர, “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என சமாதானப்படுத்திக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். எல்லாவற்றையும் பேக் செய்து வைத்திருந்தேன். வண்டியும் வர, விடுதி சிப்பந்திகளிடம் விடைபெற்று விமான நிலையத்திற்கு கிளம்பினோம். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என்று காலை நேரப் பரபரப்புடன் இருந்த நகரத்தை விட்டு ‘குளுகுளு’ மலைப்பாதை வழியே பயணம் அருமையாக இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவில்களும் இயற்கைக்காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கட்டிய புராதனக் கோவில்களும் மனதிற்கு ஆறுதலைத் தரும் அருமருந்தாக இருக்கிறது. ‘தேவ பூமி’ என்று இந்த புண்ணிய பூமியைக் கொண்டாடுவது இதனால் தானோ? வட இந்திய இந்துக்கள் பலருக்கும் ‘சார்தாம்’ யாத்திரை என்பது வாழ்நாள் தவமாக இருக்கிறது. அதனால் வயது முதிர்ந்தவர்களும் தவறாமல் ஹரித்வார், ரிஷிகேஷ், சார்தாம் பயணத்தை மேற்கொள்கிறார்கள். 12 நாட்களில் ஏழு விடுதிகளில் தங்கி பல ஊர்கள், ஆறுகள், கோவில்களுக்குச் சென்று பல மனிதர்களைச் சந்தித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழும் ஒரு இனிய அனுபவமாக அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறி, இன்னும் நான்கு மணிநேரத்தில் காசியில் இருப்போம் என்ற நினைவே இனிக்க, ‘பை, பை உத்தரகாண்ட்’ சொல்லி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க உத்தரப்பிரதேசத்தை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...