Tuesday, September 17, 2024

கலப்படம்


கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற்கும் துணிந்து விட்டார்கள்.  அப்படிப்பட்ட பாவச்
செயல்களில் ஒன்று தான் செயற்கை முறையில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பது, மசாலா பொருட்களில் கண்டதையும்  'கலப்படம்' செய்து விற்பது. இதனால் அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. தனக்கு லாபம் வேண்டும் என்ற பேராசையில் தான் இன்றைய உலகம் இயங்குகிறது. நாமும் அதில் மாட்டிக் கொண்டுள்ளோம்.

என்று மசாலாப் பொருட்களில் கலப்படம் என்று அறிந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை முடிந்த வரையில் வீட்டிலேயே மிளகாய், மிளகு, மசாலாப்பொருட்களைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். மொரோக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த மஞ்சள் தூள் அத்தனை வாசமாக 'கொரகொர'வென்று பார்த்தாலே தரமாக இருந்தது. நம்மூர் மஞ்சள்தூள் பச்சரிசி மாவில் மஞ்சள் நிறமியைச் சேர்த்தது போல அத்தனை நைசாக இருக்கும். வீட்டிலேயே அரைத்த மிளகாய்த்தூள் என்றுமே கடை மிளகாய்த்தூள் நிறத்திற்கு வந்ததே கிடையாது. அத்தனை சிவப்பாக இருக்கிறது கடைகளில். மிளகுத்தூளும் அப்படியே. மசாலாப் பொருட்கள் தேவைப்படும் பொழுது உடனுக்குடன் வேண்டிய அளவிற்குச் செய்து கொள்வது நல்லது.

வாயில் நுழையாதப்  பெயர்களில் புதுப்புது நோய்கள் வரும் காலத்தில் நாம் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

ஸ்வராஜ்யாவில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புரியும். வியாபாரிகள் தெரிந்து கலப்படம் செய்கிறார்கள் என்றால் தாவரங்களில் சில பூஞ்சைகளால் ஆபத்து. அதை நம்மால் இனம் காண முடியாது. முறையாக கண்காணித்து வந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடக்கும் நிலையில் நுகர்வோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். 

Sunday, September 15, 2024

கணவன் அமைவதெல்லாம்...


"படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் Vs வீட்டில் இருக்கும் பெண்கள்" - இன்றைய நீயாநானாவின் விவாதம். முதலில் இந்த விவாதம் சரிதானா? இது அவரவர் விருப்பம் சார்ந்தது. படிப்பதற்கு அறிவை வளர்த்துக் கொள்ளவே என்று ஒருசாராரும் இல்லை படித்ததைக் கொண்டு அத்துறையில் சிறப்புற பணியாற்றவே என்று விவாதம் வைத்துக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் நியாயம் இருந்திருக்கும். அப்படியென்றால் பலரின் வாதம் விமரிசனத்திற்குள்ளாகியிருக்கும் என்பது வேறு விஷயம்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் அனைவரும் தங்களின் மனத்திருப்திக்காக, அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார்கள். அது சரி. குடும்ப நலனுக்காக, குழந்தைகள் வளர்ப்பிற்காக என்று கூறும் பொழுது தான்வேலைக்குச் செல்லும் பெண்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை போன்றதொரு பிம்பம் ஏற்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்குக் கூடுதல் பணிச்சுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் பலருக்கும் உண்டு. அதுவும் நேரம், காலம் தெரியாமல் வேலை பார்க்க வேண்டிய சூழலில் குடும்பத்தையும் பணியையும் நிர்வகிக்க வேண்டுமென்றால் அலாதியான திறமை வேண்டும். இல்லையென்றால் அமைதியான குடும்பத்தில் பூகம்பம் தான் வெடிக்கும்.

இந்த விவாதத்தில் பேசிய பெண்கள் பலரும் குழந்தைகள் வளர்ப்பிற்காக, உறவுகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக, கணவனின் முன்னேற்றத்தில் உதவியாக என்று அடுக்கினார்கள். பலரும் வேலைக்குச்சென்று திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பிறந்த பின்னால் வேலையை விட்டிருக்கிறார்கள். நாம் அருகிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது தான். இவர்கள் எல்லோருக்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. பேசிய பெண்கள் நல்ல பொருளாதார வசதிகளுடன் இருப்பதைப் போலத்தான் தெரிந்தது. அது அவர்களின் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அவர்கள் விருப்பம் வீட்டில் இருப்பது என்பதில் அவர்கள் கணவருக்கும் உடன்பாடு இருப்பதால் எந்தப் பிரச்சினையுமில்லை. இவர்கள் எல்லோரும் 'விடிந்தாலே கனவு நனவாகுமே' சன்ரைஸ் காபியுடன் கணவனை எழுப்புபவர்கள். அவர்களும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸப் குழுமங்களில் அரட்டை அடித்துக் கொண்டே ஆனந்தமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

ஆனால் உண்மையில் இப்பெண்களில் பலரும் கறிக்கடை, சந்தை, பலசரக்கு கடைகளுக்குச் செல்ல ஏகமாக அவர்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் "இங்க நான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அலையறேன்" என்ற வசனங்கள் எல்லாம் கேட்கும். எல்லார் வீடுகளில் இல்லையென்றாலும் "நான் வீட்டில எவ்வளவு வேலைகளைச் செய்றேன் தெரியுமா" என்ற புலம்பலும் தொடரும். "வேலைக்குப் போற திமிரு", "கையில பணம் இருக்குன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கறா" என்று எதிர் தரப்பினரைப் பார்த்துப் புழுங்கி அவனைத் துவைத்து வேலைக்குச் செல்லும் பெண்களை விடவும் செலவுகள் அதிகமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். மறுக்க முடியாது.

படித்து முடித்த ஒரு பெண் வேலைக்குச் செல்ல பல காரணிகள்: குடும்பப் பொருளாதாரம், தான் கற்ற கல்வியைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு, தன் கல்வி அறிவை மேம்படுத்த, ஒரு பெண்ணால் குடும்பத்தையும் பணியையும் சிறப்புற நிர்வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை... என்று சொல்லிக் கொண்டே சொல்லலாம். இல்லையென்றால் பெண்கள் பலதுறைகளிலும் சாதிக்க முடியுமா? நிலவிற்கு விண்கலம் அனுப்பிச் சாதனை செய்த பெண்களுக்குப் பின்னால் நிச்சயமாக அவர்களுடைய கணவர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும் என்ற மிகப்பெரிய பலம் இருக்கிறது.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் பலரும் முன் திட்டமிடுதலுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். என்ன? பணிக்குச் செல்வதால் 8-10 மணிநேரங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுப்பில்லாதவர்கள், குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர்கள் என்றாகி விடுமா?

ஒரு பெண் வேலைக்குச் செல்வதால் அவளுடைய குழந்தைகளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வளரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. அந்தக் குழந்தைகள் யாரையும் எதிர்பார்க்காமல் வளர கற்றுக் கொள்கிறது. வீட்டில் அம்மா இருந்து வளரும் குழந்தைகள் மனநிலையும் அதை ஒத்து தான் இருக்கும். "வீட்ல சும்மா தான இருக்கிற" என்று கணவரும் இருப்பார். அதுவே 24 மணிநேர வேலை என்று புரிந்து கொள்ளாமல்.

இன்றைய கால கட்டத்தில் கணவன்-மனைவி இருவர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் பல துறைகளிலும் சாதிக்க பெண்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளும் தான் தூண்டுகோலாக இருக்கிறது. குடும்பத்தைப் பெண் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்ற சூழல் மாறி வருகிறது. கணவன்-மனைவி இருவருமே குடும்பப்பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டால் மன அழுத்தங்களுக்கு வாய்ப்பே இல்லை. இல்லையென்றாகும் பொழுது தான் வாய்ச்சண்டையில் தொடங்கி மனம் வெறுத்து விவாகரத்து வரை நீள்கிறது.

படித்த பெண்கள் வாழ்வில் மட்டுமா விவாகரத்துகள் நடக்கிறது?

குடும்பம் என்ற அமைப்பில் எல்லாமே சாத்தியம். வீட்டில் இருப்பதால் பொறுப்பானவர்கள் என்றோ வேலைக்குச் செல்வதால் சாதிப்பவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. தன் குழந்தைகள், குடும்பத்திற்கு, தனக்கு எது நல்லதோ அதைச் செய்ய வேண்டும்.

இன்று பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி என்ற இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்க முடிந்ததென்றால் பணத்தேவைக்குத் தந்தையும் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட தாயும் தான் காரணம். அன்று பெரும்பாலான அம்மாக்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை வளர்த்தார்கள். உண்மை தான். இப்பொழுது கல்வி அனைவருக்கும் கிடைக்க, படித்து முடித்த பின் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது யாரையும் சார்ந்திராமல் இருக்கவும் முடியுமென்றால் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை.

ஆனால் இரண்டு பக்கத்திலும் ஒரு ஆணின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை. குடும்பம் என்பது இருவரின் பொறுப்புகள் சார்ந்த விஷயம். ஒருவரே ஒரு பொறுப்பைச் சுமக்கும் பொழுது வெறுமையோ வெறுப்போ வரும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்பொழுது இன்னொருவர் தங்களுடைய பங்கை மாற்றிக்கொள்ளும் வசதிகள் இருக்க வேண்டும். இந்த விவாதத்தில் கூறியபடி, குழந்தைகள் வளர்ந்து கல்வி முடித்து வீட்டை விட்டுச் சென்ற பின் யாரும் தன்னைச் சார்ந்திருக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் பொழுது அதுவரை குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண் தன் மதிப்பை இழந்தவள் போல் உணருவாள் என்றால் அப்பொழுது வேலைக்குச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் குடும்பம், பணியிடத்துச் சுமைகளைக் கையாண்டாலும் வீட்டில் கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டே இருக்கும் கணவர்கள் வாய்த்தவர்கள் தான் பாவம். இன்னும் ஒரு தலைமுறை வரை இது தொடரும்.

இப்பொழுது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆண்கள் பலரும் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தான் விரும்புகிறார்கள். பெண்கள் தான் யோசிக்கிறார்கள். சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் ஆண்கள். 

ஆக, கணவன் அமைவதெல்லாம்...













Monday, September 9, 2024

நீயா நானா

நேற்றைய 'நீயா நானா'வில் அப்பா- மகன் உறவைப் பற்றின விவாதம் நடந்தது. இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று. 

அதில் ஒரு மகனார் தன்னுடைய சிறுவயதில் தனக்கு விருப்பமான ஆடையை தந்தை வாங்கித் தரவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் இப்பொழுது தான் ஒரு தந்தையாக இருக்கும் பொழுது அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினார். 

இது அனைவருக்கும் பொருந்தும். குழந்தைப் பருவத்தில் புரியாத , புரிந்திராத பல விஷயங்களும் நாம் பெற்றோர்களாக உருவெடுக்கையில் புலப்படும். நம் பெற்றோர்களின் அருமையும் புரியும். 

இன்னொருவர் தன்னுடைய பெற்றோரின் காதலைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.  

"அம்மா காலையில் காபி போட்டு எடுத்துட்டு வந்து அப்பாவுடன் குறைந்தது 45 நிமிடங்களாவது பேசிக்கொண்டிருப்பார். இளைஞனான எனக்கு அன்று அவர்களின் காதல் மீது பொறாமை கூட இருந்தது" என்றார். 

இன்று காலையில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் வேலைக்குச் செல்லவும் ஓடும் நிலையில் காதலாவது கத்திரிக்காயாவது என்றாகி விட்டிருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் ஃபோனை நோண்டி சமூக வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறோம். என்னத்த சொல்ல? 

"ஒருமுறை எனக்குச் சிறிது பணம் தேவைப்பட்டது. அப்பாவிடம் கேட்டேன். மறுத்து விட்டார். அப்பொழுது அவர் மீது கோபம் இருந்தது. இப்ப்பொழுது இல்லை."

"ஏன் சார்? பையன் ஒரு அவசரத்துக்குப் பணம் கேட்டா கொடுத்திருக்கலாமே" என்று கோபிநாத் கேட்க,

"என் காலத்திற்குப் பிறகு மனைவிக்காக சேர்த்து வைத்த பணம்.சமீபத்தில் அவள் இறந்து விட்டாள். அதற்குப் பிறகு மகனிடம் அந்தப்பணத்தை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டேன்" என்றார் அந்த அப்பா. 

இப்படித்தான் மனைவிக்காக பல கணவர்கள் சொத்துக்களை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், "பாவம் பெத்த மனம் பித்து பிள்ளைகள் மனம் கல்லு" என்பது போல அப்பா போனவுடன் அம்மாவிடம் நயவஞ்சகமாகப் பேசி பணத்தை லபக்கி அவளைப் புலம்ப வைக்கிறவர்களும் உண்டு. 

இன்னொருவர் தன் தந்தை கால் மீது போட்டு அமருவதில்லை என்றார். "வயதில் குறைந்தவர்கள் கூட அவர் முன் கால் மீது கால் போட்டு உட்காருகிறார்கள். நானும் அப்படித்தான் உட்காருவேன். இவர் மட்டும் அப்படி உட்காருவதில்லை." அவருடைய அப்பாவும் அது அடுத்தவரை அவமதிப்பதாகத் தோன்றியதால் அந்தப் பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டார். 

ஒரே ஒரு தந்தை மட்டும் கல்வி, கல்யாணம் வரையில் செலவு செய்தும் தன் அன்னைக்கு அந்த மகனார் இது வரை ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன தான் குறைவாக சம்பளம் வாங்கினாலும் ஆசையாக மகன் எதை வாங்கிக் கொடுத்தாலும் பெருமை பட்டுக்கொள்வாள் அம்மா. அங்கே இங்கே சில பேராசை பிடித்த அம்மாக்கள் குறைசொல்வதும் நடக்கிறது. அந்த அப்பா பேசியதிலிருந்து அது சிறு மனக்குறைவாகவே இருப்பது போல தெரிந்தது. அத்தனைக்கும் ஒரு பைசா மகனிடம் வாங்காமல் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். தனிக்குடித்தனம் போல. ஆக, மகனார் கையில் எதுவும் இல்லை. 

"இப்பொழுது நல்ல வேலை கிடைத்து இருக்கிறது. இனி அம்மாவிற்குச் செய்வேன்" என்று அவரும் இயலாமையுடன் பேசியதைக் கேட்க அவருக்கு என்ன கஷ்டமோ ?

உண்மையாகவே முடியாத நிலைமையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தனக்காக, தன் மனைவி, குழந்தைகளுக்காகச் செலவுகள் செய்யத் தயங்காதவர்கள், கணக்கு பார்க்காதவர்கள் பெற்றவர்களுக்காகச் செய்யும் பொழுது மட்டும் கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

"இப்ப இது உனக்கெதுக்கு? ரொம்ப அவசியமா? எதெது கேட்குறதுன்னு வரைமுறை இல்லையா?" என்று வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்கவே அத்தனை செலவழிக்க வேண்டிய காலத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தானே தங்களுடைய திருமணச் செலவைச் செய்து கொள்ள வேண்டும்? அது என்ன? வெட்கமே இல்லாமல் பெற்றோர் பணத்தில் திருமணம் செய்து கொள்வது?

இந்த மதி கெட்ட பெற்றோர்களும் நாங்கள் செலவு செய்தோம் என்று சொல்வது எதற்காக? வெட்டி பெருமைக்காகவா? பெற்றோர்கள் அப்படி இருந்தால் இப்படித்தான் பிறந்தவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் எதையும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

பெற்றோர்கள் தங்களுக்கென்று கடைசி வரை உயிர் வாழ சிறிது சேமிப்பை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களை நம்பி வாழ்வது எத்தனை கொடுமை?

அப்பா-மகன் உறவு என்பது புரிந்து கொள்ள முடியாத ஆனால் புரிய வைக்கும் உறவு. அப்பாவிடம் பேசத் தயங்கி அம்மாவைத் தூது விட்டு அவரை ஒரு தூரத்திலேயே வைத்து விடுகிறோம். அவரும் நெருங்கி வருவதில்லை. வயதில் அப்பாவை எதிர்த்தவனுக்கும் அவன் தவறுகளை உணரும் சந்தர்ப்பம் கிடைக்கும். உணர்ந்தவன் அப்பாவின் அருமையைப் போற்றுகிறான். உணராதவன் புலம்பியபடியே திரிகிறான்.

மகன்களை அப்பாக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு மகன்கள் அப்பாக்களைப் புரிந்து கொள்கிறார்களா?

அவ்வளவு தான்.

Thursday, September 5, 2024

ஆசிரியர்கள் தினம்


ஆசிரியர்கள் தினத்தன்று மட்டுமன்றி உணர்வோடு கலந்து விட்டவர்கள் தான் என் வாழ்க்கையில் வந்த எனக்குப் பிடித்த ஆசிரியர்கள். ஐந்தாம் வகுப்பிலிருந்து தான் வகுப்பெடுத்த ஆசிரியைகள் முகங்களும் பெயர்களும் நினைவில் உள்ளது. முதன்முதலில் ஆங்கிலப்பாடம் படித்ததும் அந்த வகுப்பில் தான். எழுத்துக்கூட்டி வாசிக்க கற்றுக் கொண்டதும் வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்ற பாத்திமா டீச்சரின் கண்டிப்பும் வகுப்பு முன்பாக வாசிக்க அவர் என்னை அடிக்கடி அழைத்ததும் அதில் கொஞ்சம் கர்வம் தான். ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவியாகத் தான் எப்பொழுதும் இருந்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் 'கடுகடு' கன்னியாஸ்திரி வகுப்பு ஆசிரியர். அவரைப்பார்த்தாலே அனைவருக்கும் நடுக்கம். நீ எப்படி இருந்தாலும் நான் இப்படித்தான் என்று அவரிடமும் எப்படியோ நல்ல பொண்ணு பெயரை வாங்கியாயிற்று. ஏழாம் வகுப்பில் நிர்மலா டீச்சர். நாகர்கோவில் பக்கம் என்பதால் கொஞ்சிக்கொஞ்சிப் பேசும் தமிழ். குதிகால் உயர செருப்பு போட்டுக் கொண்டு சின்ன கொண்டை, சைடில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்று பார்க்க நன்றாக இருப்பார். இவர்களைத் தவிர 'கலகல'வென்று சிரித்த முகத்துடன் ஓட்டப்பந்தய பயிற்சி கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ் சிஸ்டர். அவருக்குப் பிறகு வந்த 'ஒல்லி பெல்லி' சிலுக்கு சாயல் ஆசிரியை. அவரும் நாகர்கோவில் தான். தினமும் மாணவிகள் ஆசையாக ரோஜாப்பூக்களை வாங்கிச் செல்வோம். எப்படித்தான் அன்பைக் காமிக்கிறது? திக்குமுக்காடிப் போவார்! நடனம் சொல்லிக் கொடுத்த் லூர்து, சுகந்தி, சூசைரத்தினம் ஆசிரியைகள்! ஸ்டெல்லா சிஸ்டர் எப்பொழுதும் ஏதாவது ஒரு பரிசுப்பொருளைக் கொடுப்பார். வெள்ளந்தியாக அப்படி ஒரு கன்னியாஸ்திரி! அந்தந்த வயதிற்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நடுநிலைப்பள்ளியை மறக்க முடியாத அனுபவங்களாக்கின என் பிரிய ஆசிரியைகள்!

மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியை 'மீனாட்சி' வகுப்பு ஆசிரியரும் கூட. வகுப்பில் நெல்லிக்காய், மாங்காய் சாப்பிட்டதற்கு அத்தனை அறிவுரை! இந்தக்காலத்தில் சொல்வதென்றால் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு. ஆனாலும் சேட்டைக்கு குறைச்சல் இல்லை. மேல்நிலைப்பள்ளி வயதில் 'அட! என்னடா பொல்லாத வாழ்க்கை!' என்ற அலட்சியமும் அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் இருந்தாலும் படிப்பில் சோடை போனதில்லை. அங்கும் ஆசிரியைகளின் பிரிய மாணவியாகவே இருந்தேன். எனக்கு எப்பொழுதுமே 'கலகல'வென்று பளிச்சிடும் ஆசிரியர்களைத் தான் பிடிக்கும். பார்த்தாலே தூக்கம் வருகிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் வகுப்பு என்றாலே அலர்ஜி. அவர்கள் பாடங்களில் மட்டும் மதிப்பெண்கள் குறையும். பத்தாம் வகுப்பில் டீச்சர் ட்ரைனிங்ல் இருந்தவர் எடுத்த அறிவியல் பாடம் என்றால் அத்தனை இஷ்டம். அத்தனை அழகாக இருந்தார். அதற்குப் பிறகு வேதியியல் பாடமெடுத்த கமலா டீச்சர். அவர் சூடி வரும் மஞ்சள் கனகாம்பரம், கண்களை உறுத்தாத வண்ணங்களில் உடுத்தி வந்த பருத்திப்புடவைகள் என்று மெல்ல மெல்ல மிகவும் பிடித்த ஆசிரியை ஆனார். அந்தப்பாடத்தில் எப்பொழுதும் முதல் மதிப்பெண். +2 தேர்விலும் பள்ளியில் முதலாவதாக வந்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. 2018ல் அவரைச் சந்தித்த பொழுது பெயரைக்கூட மறக்காமல் இருந்தார். மிகவும் சந்தோஷமாக இருந்ததது. கணித வகுப்பெடுத்த மிஸ்.ஆக்னஸ். எனக்கு நீண்ட அறிவுரை கொடுத்தவர். ஒருவகையில் மருத்துவத்தின் மேல் இருந்த என்னுடைய ஆசையை மடை மாற்றியவர். "அதெல்லாம் வேண்டாம். நீ இன்ஜினியரிங் பண்ணு. அதுதான் உனக்கு செட்டாகும்" என்று அவருடைய கணித வகுப்பை விட்டுக் கொடுக்காதவர். மேல்நிலைப்பள்ளியில் கூட ஆசிரியைகள் உரிமையாக அறிவுரை வழங்கிய காலம் அது. நாங்களும் கேட்டுக் கொண்டோம்.

கல்லூரிக்கு வந்ததும் தான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி தெரிந்தது. அவர்கள் வகுப்பில் பாடம் எடுத்ததோடு கடமை முடிந்தது என்றிருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் என்றுமே என் விருப்பப்பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களை வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் சந்தித்து அளவளாவியதும் மகிழ்ச்சியான தருணம்... ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்களையுமறியாமல் நமக்கு வேண்டிய வாழ்க்கைப்பாடங்களையும் சேர்த்தே கற்பிக்கிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற, நல்வழிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியரே போதும். அவ்வகையில் எனக்குப் பல ஆசிரியர்கள் அமைந்தது வரமே.

என் ஆசிரியர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
































படித்தது கிறிஸ்தவபள்ளி என்பதால் பெரும்பாலும்

Sunday, September 1, 2024

நீயாநானா


ஒரு முறை நியூயார்க் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுதில் தமிழர்களைப் போலத் தெரிந்த குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். ஒருவேளை அவர்களும் நம்மூருக்குத் தான் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அப்பா, அம்மா, மகள் போல ஒரு பெண், அவளுடைய கணவர், குழந்தைகள் என்று அங்குமிங்கும் பரபரப்பாகச் சென்று வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய அருகிலிருந்த இருக்கையில் அம்மா போலத் தெரிந்த பெண்மணி அமர்ந்து கொண்டார். ஏதோ வேற்று மொழியில் பேசிக்கொண்ட மாதிரி இருந்தது! என்னடா லதாவுக்கு வந்த சோதனை? பார்க்க தமிழ் ஆட்களைப் போல இருந்து கொண்டு புரியாத மொழியில் பேசுகிறார்களே என்று மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

ஆண் தான் பேசினார். "பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து பிரேசிலில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யச் சென்ற குடும்பங்கள் பலவும் அங்கிருப்பதாகவும் இவருடைய குடும்பம் தற்போது கலிஃபோர்னியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளது" என்று கூறினார். தமிழ் தெரியாது என்றார். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோற்றம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அப்படி இருந்தார்கள். கனடாவில் நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும் ஆங்கிலம் கலக்காத கொஞ்சு தமிழில் கதைத்து என்னை வெட்கப்பட வைத்தார்கள். நம் மொழியையும் கலாச்சாரத்தையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

எங்களுடைய 'சார்தாம்' பயணத்தின் பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த குஜராத் வம்சாவளிகள், மலேசியாவிலிருந்து வந்திருந்த தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த வம்சாவளிகள் சிலரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல சுவையான தகவல்களைத் தெரிந்து கொண்டோம். தமிழர்கள் பலரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த, தங்களுடைய முகம் தெரியாத உறவினர்கள் வாழும் ஊருக்கு வந்து செல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்ட பொழுது ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆம். அவர்கள் தமிழில் தான் உரையாடினார்கள்.

இந்த வார 'நீயாநானா'வில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த நான்காவது தலைமுறையினருடன் நேர்காணல்/விவாதம் நடந்தது. அதில் பலரும் இலங்கைத்தமிழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசிய தமிழ் அப்படித்தானிருந்தது. கோவையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற குடும்பத்தில் இருந்து வந்திருந்த பெண் மிக அழகாகத் தமிழ் பேசினார். எப்படி தமிழ்நாடே மறந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை, மூன்று தலைமுறைகள் எட்டிப்பார்க்காமல் இருந்த மாநில மொழியை பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கோபிநாத் கண்கள் வியக்க ஆச்சரியப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். பரத நாட்டியம், திருக்குறள், பாரதியார் பாட்டு, கும்மி ஆட்டம் என்று கலக்கினார்கள். பரத நாட்டியம் ஆடிய ஃபிஜி தீவிலிருந்து வந்திருந்த பெண் செருப்பு போட்டுக் கொண்டு ஆடியது தான் வித்தியாசமாகத் தெரிந்தது. பரதம் கற்றுக் கொடுத்தவர் முக்கியமான ஒன்றைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டிருக்கிறார்😖அந்தப்பெண் தான் ஒரு "கார்டியோ வாஸ்குலர் சர்ஜன்" என்றதும் கோபிநாத் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதைத்தான் "don't judge a book by its cover" என்பார்கள்.

பர்மா, மலேஷியா, ஃபிஜி தீவு, உகாண்டா, ஆஸ்திரேலியா, கனடா, மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல மூலைகளில் இருந்து வந்திருந்த இளைஞர் பட்டாளம் கூறியதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பலரும் இன்றும் வீடுகளில் தாய்மொழியில் பேசுவதும் பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் என்று அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி ஆய்வாளர் ஒருவர் அங்கிருக்கும் கோவில்கள் தான் இதற்கு காரணம். அதனால் தான் நான்கு தலைமுறைகள் கடந்தும் பரதநாட்டியம், பாட்டு, தமிழ் அழியாமல் இருக்கிறது என்று கூறினார். சில பெண்கள் அழகாக கோலம், ரங்கோலியும் போட,

கோபிநாத்திற்கு ஒரே அதிர்ச்சி. "எமோஷன குறை. எமோஷன குறை" என்று காதில் ஓதியிருப்பார்கள் போலிருக்கு. காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் அழகிய கலையை மறந்து கொண்டிருக்கும் திராவிடர்களுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்😁 கோலம் போடுவதில் இருக்கும் அறிவியலை மேல்நாட்டுக்காரன் ஆராய்ச்சி செய்கிறான். நாம் தெரிந்த கலையை மறந்து கொண்டிருக்கிறோம். என்னவோ போடா மாதவா😞 

என்னுடைய அனுபவத்தில் கனடா, அமெரிக்காவில் தமிழ் மொழி வகுப்புகள் அந்தந்த ஊர் தமிழ்ச்சங்கங்களால் முன்னெடுத்து குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. கலிஃபோர்னியா மற்றும் வேறு சில மாநிலப் பள்ளிகளில் வேற்று மொழியாகத் தமிழ் மொழியை அங்கீகரித்து க்ரெடிட் பெறவும் முடிகிறது. நியூயார்க்கில் இன்னும் அந்தளவிற்கு யாரும் முயலவில்லை.

இன்றைய 'நீயா நானா' மூலம் புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மூதாதையர்களின் உறவுகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முனைவதும் "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொல்வதில் பெருமை கொண்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

வேற்று மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் வெளிநாடு சென்றாலும் தமிழ் அழியாது என்பதை நிரூபிக்கிறார்கள். நாமோ, மும்மொழிக்கொள்கையால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று துண்டுச்சீட்டுப்பார்த்து "வெயிட் அண்ட் சீ" சொல்லி அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.





கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...