Sunday, March 19, 2017

இப்படியும் சில ஜென்மங்கள்!

வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே எந்த குக்கர் எத்தனையாவது விசில் கணக்கையும் கவனித்துக் கொண்டு காது முழுவதும் டிவி நிகழ்ச்சியில் என வழக்கமான ஞாயிற்றுக்கிழமை காலை. இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தங்கள் திருமணத்திற்காகப் பெற்றவர்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைப் பற்றி பேசினார்கள். சரி, வழக்கமான ஒன்று தான். பெண்கள் படித்து வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில்அப்படி என்ன கேட்டு விடப் போகிறார்கள்?

முதலில் பேசிய இளம்பெண் நூறு சவரன் நகை வேண்டும், அப்புறம் கார், அப்பா கட்டிய வீடு ... அவளுடைய அம்மாவோ சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண்ணோ லேட்டஸ்ட் வைர நகை செட். ஹெலிகாப்டர்ல மாப்பிள்ளையும் பொண்ணும் வந்து இறங்கணுமாம்! வாவ்! ஆசை இருக்கலாம். அதுக்காக இப்படியா?

ஏதோ எங்களால முடிஞ்ச அளவில ஒரு இருபது பவுன் நகை, மாப்பிளைக்குச் செயின் அம்மா சொல்லி முடிப்பதற்குள் மகள் இருபது பவுனுக்கு கல்யாணமே வேண்டாம்னு அலறல். எண்பது சவரன் கேட்டால் தான் ஐம்பதாவது போடுவார்கள் சார். அவர்களால் முடியும் என்று ஏதோ மூன்றாம் மனிதரிடம் வசூலிப்பது போல் எப்படித் தான் பேச முடிகிறதோ? வீட்டில் பார்த்து திருமணம் செய்வது பெற்றோர்களிடம் இருந்து பணம் பறிக்கத்தான் ரீதியில் அந்தப் பெண்கள் பேசியது மிகவும் கேவலமாக இருந்தது.

நானும் ஆரம்பத்தில் இந்தப் பெண்கள் பையனை பெற்ற அம்மாக்களிடம் தான் வரதட்சணை கேட்கிறார்கள் போல என்று பார்க்கஆரம்பித்து, பெற்ற அம்மாவிடம் கேட்டவுடன் இப்பேர்பட்ட ஜடங்களும் ஜந்துகளும் வெட்கமின்றி தகுதிக்கு மீறிய  பணம்,வீடு, நகை கொடுக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை என பொதுவெளியிலேயே பேசியதை பார்த்தபொழுது இப்படியும் பெண்கள்  அதுவும் படித்து சுயமாய் முன்னேறி பெற்றவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் காலத்தில் வாழ்கிறார்களே.... வெறுப்பாக இருந்தது.

வெளிப்படையாகப் பேசுகிறேன் என்று இரு பெண்கள் பேசியது கொடுமையிலும் கொடுமை. சாகிற வரைக்கும் பென்ஷன் வரப்போகுது, சம்பாதித்திருக்கிறார்கள் கொடுப்பதற்கென்ன... இவர்கள் இறந்து விட்டால் சொத்துக்களைப் பிரிப்பதில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்க திருமணத்திற்கு முன்பே சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்து விட வேண்டும்...ம்ம்ம்...இவர்களைப் பெற்றவர்கள் பாவம் தான்.

தங்களுக்காகப் பெற்றவர்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளதே என்ற வருத்தத்தை விட, பெண்ணைப் பெற்றவர்கள் ஆரம்பத்திலிருந்து சேர்த்து வைத்திருக்க வேண்டியது அவர்கள் கடமை ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நெருடலாக இருந்தது. காலம் தான் எப்படி மாறி விட்டிருக்கிறது? உறவுகளின் பலம் உணராமல் பணம் இருந்தால் போதும் அதுவும் தனக்கு வேண்டியது கிட்டினால் போதும், கூட பிறந்தவர்களைப் பற்றி கூட சிறிதும் கவலைப்படாத சுயநல மனநிலையை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது!

அம்மாவிடம் அவ்வளவு நகை, பணம், சொத்து கிடையாது என்று தெரிந்திருந்தும் அடாவடியாக லிஸ்ட் போட்டு கேட்கிறார்கள். சென்டிமென்டல் வேல்யூவென்று சொல்லி அம்மாக்களின் சேலைகளையும் விட்டு வைக்கவில்லை!

அப்பா இன்று வரை எங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கை வாழவே இல்லை. இனி எப்போது வாழ்வார் என்றும் தெரியவில்லை. அதே நிலைமை என் வருங்கால கணவருக்கும் வரக்கூடாது அதனால் தான் பணம் வேண்டும் என்று கேட்கிறேன் என்பதில் இருக்கும் அப்பட்டமான சுயநலம், புகுந்த வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்க பிறந்த வீட்டினர் செய்ய வேண்டிய சீர் வரிசை... மாமியாரே பரவாயில்லை போலிருக்கிறது! ... சிந்தித்து தான் பேசுகிறார்களா?

இந்த கேடு கேட்ட ஜென்மங்களிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கப் போகும் அந்த அப்பாவி ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து சில உறவினர் வீடுகளில் இப்படியும் கேவலமான ஜந்துகள் பெற்றவர்களின் நிலைமை தெரிந்தும் அவர்களை வதைப்பதை கண்டு போதிய படிப்பறிவும், உறவுகளின் அன்பை புரிந்து கொள்ளக் கூட முடியாத உணர்ச்சியற்றவர்களாய் இருக்கிறார்களே என வருந்தியதுண்டு. பெண்கள் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டு சொந்தக்காலில்உழைத்து தன்னைச் சுற்றியுள்ளோரையும் உயர்த்த வேண்டும் என்ற துடிப்புடன் முன்னேறும் இந்த கால கட்டத்தில் கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக் கொண்டு ஒடத் துடிக்கும் பெண்களின் மனவோட்டம், நிகழ்ச்சி பார்த்த பலரையும் முகம்சுளிக்க வைத்திருக்கும்.

இப்படியுமா பெண்கள் இருப்பார்கள் ? இருக்கிறார்கள்? இவர்கள் தான் நவீன உலகின் பெண்களா? குடும்பங்களில் உறவை பேணிக்காக்கும் நற்குணங்களைப் பணம், சொத்து, நகை கொண்டு அளவிடும் மனநிலையில் இருப்பவர்கள்  இப்படி பேசுவதற்கு சில பெற்றோர்களின் ஆண்பிள்ளை பாசம் தான் காரணமா? ஆண், பெண் பாரபட்சமின்றி இருவருக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் பெற்றோர்களுக்கு இன்னும் என்ன தயக்கம் ? பிள்ளை தங்களை வைத்துக் காப்பாற்றுவான் தான், அவன் மனைவி சொல்லும் வரை. வயதான காலத்தில்சொத்துக்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு சில பெற்றோர்கள் படும்பாட்டை நேரிலேயே பல இடங்களில் காண்கிறோம்.

சொத்துக்களைச் சேர்த்து சொந்தங்களைப் பிரித்து வைக்கும் வேலையைச் செவ்வனே செய்கிறது இந்தப் பாழாய்ப் போன பணம். பணமா பாசமா என்றால் பணம் தான் என்று பெரும்கூச்சலுடன் பெரும்பாலாரும், பாசம் என்று மெல்லிய குரலில் சிலருமாகிப் போனது காலத்தின் கோலம்!

வடஇந்திய ஸ்டைலில் மெகந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல தமிழ் சமுதாயத்தில் ஊடுருவதையும் சில அம்மாக்கள் விரும்பவில்லை. மாடர்ன் பெண்களுக்கு அதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜஸ்ட் ஃபார் ஃபன். அவர்கள் செலவில் திருமணத்தை செய்தால் இந்த ஆடம்பரங்கள் எல்லாம் இருக்குமா?

மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சிணை கேட்பார்கள் என்றில்லை. பெற்ற பெண்களே கேட்பார்கள் என்ற காலகட்டத்தில் வாழும் பெற்றோர்களுக்கு கொடுமையான காலம் தான். நல்ல கல்வியை கொடுத்து விட்டோம் இனி உன் பாடு என்று சொல்லஆரம்பித்தால் அவர்களுக்கும் பொறுப்பு வரும். எதிர்பார்ப்புகளும் குறையலாம்.

பெற்றோர்களும் தங்கள் சுயசம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்களைப் பிள்ளைகளுக்குச் சரிசமமாக பங்கு பிரித்துக் கொடுத்தும், ஆண் பெண் குழந்தைகளைப் இனம் பிரித்துப் பாராமல் அவர்கள் விருப்ப கல்வியினை வழங்கி தத்தம் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் வகையில் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் அதிக எதிர்பார்ப்பிற்கு பெற்றோர்களும் ஏதோ ஒரு வகையில் காரணிகளாகி விடுகிறார்கள். குடும்ப நிலைமையை குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் வயதில் தெளிவாக சொல்லிப் புரிய வைக்காததும், அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தின் அருமையை உணர வைக்காததும் பல பெற்றோர்கள் செய்யும் தவறு.

கல்வியறிவு இன்னும் இத்தகைய பெண்களின் எண்ணங்களை மாற்றவில்லை. சம உரிமை கேட்கும் பெண்களுக்குத் தங்களால் பெற்றோர்கள் படும் துயரிலிருந்து அவர்களை மீட்கும் எண்ணமும் இல்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண்களிடம் கண்ட வருத்தமான விஷயம். ஆண்கள் வரதட்சணை கேட்பதே பெண்களை அவமதிக்கும் செயல் என்று போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் பெண்களைப் பெற்றவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பெரும்பொறுப்பிலிருப்பதாக இப்பெண்கள் பேசியதில் இருந்த மடமையை எண்ணி வெட்கி தலைகுனிய வைத்தது இந்நிகழ்ச்சி.

Saturday, February 18, 2017

இரண்டாம் உலகம்

பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும்.

கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
Statue of Liberty
வடகிழக்கில் ‘ஜோ’ வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைதி தவழும் பூங்காக்கள், வித விதமாய் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களே நேரில் வந்து விட்டதைப் போல் ஆடையணிந்து நகர்வலம் வரும் மனிதர்கள், உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை, ஒரே நாளில் ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாக்கும் தந்திரங்கள் செய்யும் வால்ஸ்ட்ரீட் , அமெரிக்க மண்ணில் அமைந்த முதல் இந்தியக் கோவில் என வடகிழக்கு மாநிலத்தில் நியூயார்க் என்றால்,

இந்தியர்கள் மட்டும்தான் இங்கு வாழ்கிறார்களோ என்று நினைக்க வைக்கும் ஓக் ட்ரீ சாலையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின் அனைத்துப்பகுதி மக்களுக்காகவே திறந்திருக்கும் நகை, துணி, பலசரக்குக் கடைகள், விதவிதமான உணவகங்கள் , இனிப்புக் கடைகள், பீடா சாப்பிட்டுத் துப்பிய கறையுடன் ரயில் நிலையங்கள் என நியூஜெர்சி மாநிலமும்,

நீலக்கடலின் பின்னணியில் நகரங்களுக்கே உரிய பிரம்மாண்ட அழகுடன் ஜொலிக்கும் கட்டிடங்கள், நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு டோனட், ஐஸ்கிரீம், கேக் கடைகள், நகர்வலத்தில் பழமையையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள், நகரின் நடுவில் பச்சைப் பசேலென பூங்காக்களும் என மாசசூசெட்ஸ் மாநிலமும்,

வறட்சியுடன் மலைகளும், அழகிய பசிபிக் கடலோர நகரங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மரங்களைக் கொண்ட காடுகளும், காய்கறி, பழத்தோட்டங்களும், குழந்தைகள் கண்டு களிக்க டிஸ்னிலேண்டும் , ஹாலிவுட் நடிகநடிகையர்கள் வலம் வரும் இடங்களும், மனதைப் பறிக்கும் பசிபிக் கடற்கரையும், கடலோரப் பாலங்களும், கடல் வாழ் உயிரினங்களும் என தென்மேற்கில் கலிபோர்னியா மாநிலமும்,
California
இலையுதிர்காலத்தில் இயற்கைத் தேவன் தீட்டிய வண்ண ஓவியமாகவும், பனிக்காலத்தில் வெண்பட்டு உடுத்திய தேவதையாகவும் கண்ணைக் கவரும் மலைகள் கொண்ட வெர்மான்ட் மாநிலமும்,

உலகையே ஆட்டிப் படைக்கும் ஜனாதிபதியின் மாளிகை, பல உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு முஷ்டி தூக்கி முடிவெடுக்கும் அமெரிக்கப் பாராளுமன்றம், வரலாற்றைப் பறைச்சாற்றும் நினைவுச் சின்னங்கள், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள், நூலகம் என்று பலவித கட்டிடங்கள் , மழைக்காலத்தில் செர்ரி மரங்களில் அரும்பும் பூக்களின் கொள்ளை அழகுடன் வாஷிங்டன் நகரம் என்றால்,

அட்லான்டிக் கடலோர அழகு கொஞ்சும் மாநிலங்களும், வெள்ளை மணல் கொண்ட பீச்சுகளும், விதவிதமான பனைமரங்களும், பணக்காரர்களின் சொகுசு பங்களாக்களும், பண்ணைத்தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்களும், சதுப்புநிலக் காடுகளும், அதனுள் வாழும் விலங்கினங்களும், பணியிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கியவர்களும், ‘விர்விர்’ என்று சூறாவளியாகப் பறக்கும் கார், பைக் ரேஸ்களும், குழந்தைகளுடன் குதூகலிக்க டிஸ்னி உலகமும் என்று ப்ளோரிடா மாநிலம் தென்கிழக்கில்,

பத்தாயிரம் ஏரிகளைக் கொண்டு பாதி வருடம் குளிரும், பனியுமாக மின்னெசோட்டா மாநிலமும்,
Minnesotta
அமெரிக்காவில் கார் என்றவுடன் நினைவுக்கு வருவதும் கிரேட் லேக்ஸ் என்று கடல் மாதிரி விரிந்த ஏரிகளும் கொண்ட மிச்சிகன் மாநிலமும்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற மிட் ராம்னி பிறந்த ஊரும், மார்மன் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் வாழும் அமைதியான பல இயற்கைப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்ட மலைகளும், ஏரிகளும், இந்நாட்டிலே மிகப் பெரிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலையும் கொண்ட யூட்டா மாநிலமும்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும் பல விதமான கேளிக்கைகள், விருந்துகள் , கொண்டாட்டங்கள், உலகில் பெயர்பெற்ற கட்டிடங்களைச் செயற்கையாக உருவாக்கி வண்ண விளக்குகளின் ஜொலிப்பில் பார்ப்பவரைக் கொள்ளை கொள்ளும்- இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் போடும் விடிவெள்ளி நகரமும், பொறியியலில் சாதனை என்று போற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்த அணைக்கட்டும் என நிவெடா மாநிலமும்,

உலகின் அதிசயங்களுள் ஒன்றான பள்ளத்தாக்குகள் – பல்லாயிரக்கணக்கான வருட இயற்கையின் திருவிளையாடல்களையும், பல விதமான சப்பாத்திக்கள்ளி மரங்களையும் கொண்டு அரிசோனா மாநிலமும்,
Grand Canyon
பச்சைப்பசேலென விளைநிலங்களும், மலைகளும் , ஆறு, ஏறி, குளங்களும், பனிப்பாளங்களுடன் கூடிய மலைகளும், குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்டு வடமேற்கில் மொன்டானா மாநிலமும்,

இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், விலங்கினங்கள் , இயற்கைச் சுடுநீர் ஊற்றுகள், பூமியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லாவா எரிமலைகள் என்று வடமேற்கில் வயோமிங் மாநிலமும்,

என ஒவ்வொரு மாநிலமும் குளிர், கடுங்குளிர், பனிமழை, சூறாவளி, மழை, காட்டுத்தீ, வறட்சி என தட்பவெப்ப நிலையிலிருந்தும், உண்ணும் உணவிலிருந்தும், கேட்கும் இசையிலிருந்தும், பேச்சு வழக்குகளிலிருந்தும், பலவிதமான குடிமக்களுடனும் வேறுபட்டு நின்றாலும் ஒவ்வொருக்குள்ளும் நிறைந்திருக்கும் அமெரிக்கன் என்கிற பெருமித உணர்வே இந்த நாட்டை இன்னும் மேலானதாக, பெருமையுடைய நாடாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.!
Maduraiஆயிரம் இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு அப்புறம்தான் எதுவும் என்பதில் எனக்கு எப்போதும் இரண்டாம் கருத்து இல்லை. அந்த வகையில் தனக்குள்ளே பன்முகத் தன்மையுடைய ஐம்பது மாநிலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் அமெரிக்கா என்னுடைய இரண்டாம் உலகம்.

Wednesday, February 8, 2017

இக்கரைக்கு அக்கரை பச்சை!

http://ithutamil.comல் வெளிவந்த என் முதல் கட்டுரை (ஆகஸ்ட் 2013)
இக்கரைக்கு அக்கரை பச்சை!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. இதனால் ஏற்படும் பதற்றமும், பாதுகாப்பில்லாத உணர்வும் வார்த்தையால் விவரிக்க முடியாத அவஸ்தை. அதிலும் வரும் ஊரில் தெரிந்தவர்கள் என யாரும் இல்லையென்றால் கேட்கவே வேண்டாம். தனியாக வருபவர்கள் தங்குமிடத்தை முடிவு செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். சுயமாய் சமையல் செய்யத் தெரிந்தவர்கள் பிழைத்தார்கள். சமைக்கத் தெரியாதவர் பாடு திண்டாட்டம் தான்.

அமெரிக்கா / கனடா என எங்குப் போனாலும் SSN என்ற அடையாள அட்டையை வாங்கப்போனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என்று சில நேரங்களில் நம்பெயரை நினைத்து நாமே வருத்தப்பட வேண்டிய அனுபவமெல்லாம் கூட கிடைக்கும். நமக்கு தெரிந்ததெல்லாம் குடும்பப்பெயரின் முதலெழுத்து, அப்பா பெயரின் முதலெழுத்து. பிறகு வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி நமக்கு வைத்த பெயர். இங்கு வந்தால் முதல்பெயர், கடைசி பெயர் என்ன என்று கேட்டு குழப்புகிற குழப்பலில் சொந்த பெயரே உருமாறி விடும். என்ன செய்வது இந்த அடையாள அட்டை கிடைத்தவுடன் தான் வேலையில் சேரமுடியும்.

இத்தனையும் சமாளித்து முதல்நாள் பயந்து பயந்து மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல், அலுவலகம் போய் பரஸ்பர அறிமுக சடங்குகள் எல்லாம் முடிந்த உடன் நம்மை ஓரிடத்தில் உட்கார வைத்து கத்தை கத்தையாய் படிவங்களைக் கொடுத்து படித்துப் பார்த்து கையொப்பமிட்டு கொண்டு வாருங்கள் எனச் சொல்லும் போது, அதில்என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் கிறுகிறுத்துப் போய்விடும். நம் சம்பளத்திலிருந்து எவ்வளவு பணத்தை ஓய்வூதியத்திற்கு, மருத்துவக் காப்பீட்டிற்கு, அவசர மருத்துவ விடுப்பு, அது இது எது என்று பாதி புரிந்தும் புரியாமலும் அதை முடித்துக் கொடுக்க வேண்டும். இப்போது வரும் பலரும்இந்த விஷயங்களில் கில்லாடியாக இருக்கிறார்கள்.

வேலை இடங்களில் நம்மை, நம் வேலைத்திறனை அவர்களுக்குப் பிடிக்க வேண்டும், நமக்கும் அந்தச் சூழ்நிலை பிடிக்க வேண்டும். இந்த சமன்பாடு சரியாக அமையாவிட்டால் கிடைத்த வேலையும்போய், விசாவும்போய்விடும். வேறு இடத்தில்வேலை கிடைக்கும்வரை சூழ்நிலைக் கைதியின் நிலைதான். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, வேலையிலும் நம்மை நிரூபித்துக்கொள்ள வேண்டிய அந்த நாட்கள் போராட்டமானவை. இம்மாதிரி தருணங்களில் தான் ஏண்டா வந்தோம் என்கிற நினைப்பு வந்து கொல்லும்.

உள்ளூர் மக்களின் கலாச்சாரம், அவர்களுடைய வாழ்க்கைமுறை, மற்றவர்களிடம் பழகும்விதம், சாப்பிடும்முறை, பேச்சுவழக்கம் என எல்லாமே நமக்கு அந்நியம்தான். அதிலும் அவர்களின் சாப்பாடு பற்றித் தெரிந்து அதைப் பழகிக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அடுத்தது மொழிப்பிரச்சினை. நமக்கு பரிச்சயமான ஆங்கிலம்தான், ஆனாலும் அதைப்புரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும். அதிலும் இங்கே ஊருக்கு ஒரு பேச்சு வழக்கு(slang) எனப் பேசியே உயிரை வாங்குவார்கள்.

கணினித்துறை உச்சத்தில் இருந்த போது, இந்தியாவில் இருந்து அலை அலையாய் வேலைக்காக வந்தவர்கள் எதிர்கொள்ளும் மொழிப் பிரச்சினைகளை சமாளிக்க பயிற்சி வகுப்புகள் நடத்திய காலமெல்லாம் உண்டு. Slang என்றால் என்ன? சக அலுவலர்களோடு எப்படிப் பேசுவது, பழகுவது என்பதில் துவங்கி, எப்படி உடை உடுத்த வேண்டும், அடுத்தவரை உறுத்தாத வண்ணம் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தனர். இத்தனைக்குப் பிறகும் இந்த வெள்ளைக்காரர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள சில காலங்கள் பிடித்தது.

ஆணோ, பெண்ணோ அறிமுகப்படலத்தின் போது அவசியம் ஒரு ‘firm handshake’ கொடுக்கவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு நம்முடைய வேலை மீதும், நம் மீதும் நம்பிக்கை வளரும் என்று சொல்ல, பெண்கள் என்றால் ஓகே, அதே ஆண்கள் என்றால் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம்இருந்தது. போகப்போக அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்ற ரேஞ்சுக்குப் பழகிவிடும்.

இந்தியாவிலிருந்து பார்ப்பவர்களுக்கு, மேலை நாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு என்ன கவலை, காரில் போய் காரில் வருகிறார்கள் என்று மிக எளிதாக சொல்ல முடிகிறது. வேலை செய்யும் நேரம் வேண்டுமானால் இந்தியாவில் உள்ள நெருக்கடியைப் போல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்நேரமும் ஒருவித அச்சுறுத்தல் மனதை நெருடிக்கொண்டே இருக்கும்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மேலை நாட்டுக்காரனுக்கு வேலை இல்லாமல், வேறு நாட்டவருக்கு வேலை இருக்கும் பட்சத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்நிலை தான். பல இடங்களில் அடிதடி, துப்பாக்கி சூடு என்று அவ்வப்போது நடந்து மனதை கலங்க வைக்கும். பொதுவாக, இந்தியர்கள் பெரும்பாலும் கணினி, மருத்துவம், பொறியியல் துறையில் இருப்பதால் நேரிடையாக மேலை நாட்டுக்காரர்களால் எதிர்ப்பை தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் ஆழ்மனதில் என்றுமே அவர்கள் வேலையை இங்கு வந்தும், கால்சென்டர் மூலமாகவும் எடுத்துக் கொண்டோம் என்ற வெறுப்பு பலரிடமும் இருக்கிறது.

அதே போல், வெள்ளை நிறத்தவர்களைத் தவிர வேறு எவரையும் ஏற்றுக் கொள்ளதவர்கள் மத்தியில் வேலை பார்க்கும் துர்பாக்கியம் ஏற்பட்டு அதனால் பல இன்னல்களுக்கு ஆளாபவர்களும் மிக்க மன வருத்தத்துடன்தான் இருக்கிறார்கள். என்ன செய்ய, ஊரில் குடும்பத்தைக் காப்பற்ற வேண்டுமே!

இந்தியர்களுக்கு வீடு கொடுக்கவும் சிலர் தயங்குவார்கள் – எப்போது பார்த்தாலும் மசாலா சேர்த்து சமைப்பது, வீட்டை சரியாக பராமரிக்கத் தெரியாது, நாகரீகம் குறைவு என்றெல்லாம். ஆனால், எதையும் நேரிடையாக சொல்ல மாட்டார்கள்.

குளிர் அதுவும் எலும்பில் ஊடுருவும் அளவு கடுங்குளிர் பிரதேசத்தில் வேலை கிடைத்துச்சென்றால், வெயிலை மட்டும் பார்த்துப் பழகியிருந்த நம் உடம்பையும், மனதையும் அதற்கேற்றவாறு தயார்படுத்திக் கொள்வது தான் அடுத்த பிரச்சினை. குளிருக்கான பிரத்யேக உடைகளை உடுத்திப் பழகுவதில் நிறையவே தடுமாற்றங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் சொல்லி மாளாது.

குடும்பம், குழந்தைகளுடன் இங்கு வருபவர்கள் முதலில் டாக்டரைத் தான் பார்க்க ஆரம்பிப்பார்கள். நம்மூரைப் போல நினைத்த நேரத்தில் டாக்டரைப் பார்க்க முடியாது. குழந்தைக்கு மிகவும் முடியாமல் இருந்தால் அன்றே பார்க்கலாம். இல்லையேல் அவர் என்றைக்கு நேரம் தருகிறாரோ அன்று தான்பார்க்க முடியும். உடனடி நிவாரணம் வேண்டுமென்றால் அவசரகால சிகிச்சைக்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அது ஒரு கொடுமையான அனுபவமாக இருக்கும். நல்ல தரமான மருத்துவக்காப்பீடு இல்லையென்றால் நம்பர்ஸ் காலி.

சொந்த ஊரில் குழந்தைக்கு முடியவில்லை என்றால் நம் அம்மா, அப்பா, மாமனார், மாமியார் என ஆளாளுக்கு போட்டி போட்டு பார்த்த போது தெரியாத அவர்களின் அருமை, இரவு பகலாய் தனியே உட்கார்ந்திருக்கும் போதுதான் தெரியும். அதிலும் என்னைப்போல சுற்றங்கள் சூழ வாழ்ந்து பழகியவர்களுக்கு வீட்டு நினைப்பு வாட்ட, திரும்பிப்போய் விடலாமா என்றெல்லாம் நினைக்க வைக்கும்.
சிறு குழந்தைகளுடன் இங்கு வரும் பெண்கள் வேலைக்குப் போகும் நேரத்தில் தன் குழந்தையை எங்கு, யாரை நம்பி விட்டுச்செல்வது என்பதில் துவங்கி, நல்ல காப்பகத்தைக் கண்டுபிடித்து அங்கே கொண்டு விடும்போது, நம்குழந்தை மொழி புரியாமல் மலங்க மலங்க விழிக்கும் கொடுமையை பார்ப்பதைப்போல வேறு தண்டனை எதுவுமில்லை. ஒரு கட்டத்தில் தாயும் சேயும் இனி இது தான் நம் வாழ்க்கை என்கிற சமரசத்திற்கு வரும்வரை அனுபவிக்கும் மன அழுத்தங்களை வார்த்தையால் சொல்ல முடியாது. என் அனுபவத்தில் மட்டுமல்ல, நான் பார்த்த வரை நம்முடைய பெண்கள் இதையெல்லாம் மன உறுதியோடு லாவகமாக கையாண்டு விடுகிறார்கள்.
ஒரு சிலர் கைக்குழந்தையை இங்கே தனியாக வளர்க்க முடியாமலும், செலவுகளை கட்டுப்படுத்த நினைத்தும் இந்தியாவிலேயே வளர்க்க விட்டு விட்டு வந்து மன உளைச்சலோடு வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் இங்கே வரும் அந்தக் குழந்தைகள் பெற்ற தாய் தந்தையரை ‘மிரள மிரள’ பார்க்கும் கொடுமையெல்லாம் நடக்கிறது. தாத்தா, பாட்டி, மாமாக்கள், பெரியம்மா, பெரியப்பா, சித்தி, என்று ஒரு பெரிய பாசக்கார கூட்டத்தில் வளர்ந்து விட்டு, இங்கு வரும் குழந்தைகள் அவர்களை நினைத்து ஏங்குவதும், அதை நினைத்துப் பெற்றவர்கள் குற்ற உணர்வில் வருந்துவதும் முடிவில்லாத தொடர்கதை.

குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு போகும்போது அடுத்த டென்ஷன். இந்தியாவில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு, பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள்மாதிரி பேசமுடியவிலேயே என்ற ஆதங்கத்தில் இருக்கும். இந்த மாதிரி பிரச்சினை உள்ள ஆங்கிலம் தாய்மொழி அல்லாத குழந்தைகளுக்குத் தனியாக ஆங்கில வகுப்புகள் உண்டு. அதனால், ஆரமபத்தில் தடுமாறும் நம் குழந்தைகள் பிறகு இந்த ஊர் குழந்தைகள் மாதிரி பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நம்ம ஊர் ஆனந்தை, அனான்ட் என்று சொல்லும் பொழுது கேட்க நமக்கும் கொஞ்ச கஷ்டமாகத் தானிருக்கிறது! என்னசெய்ய?

சில வீடுகளில் குழந்தைகள் அப்பா, அம்மாவிற்கு ஒன்றும் தெரியவில்லை என்று அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி பெற்றோரை மனவருத்தத்தில் ஆழ்த்துவதும் உண்டு! பல குழந்தைகள் அப்பா, அம்மா சொல்படி நடந்து நன்கு படிக்கவும் செய்கிறார்கள். ஒரு வயதிற்குப் பிறகு, டேட்டிங்பிரச்சினை., அதை எதிர்கொள்ள முடியாத பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஊரில் நினைத்த உடன் பைக் பின்னாடி உட்கார்ந்தோமா, இல்லையென்றால் ஆட்டோவில் ஏறினோமா, நினைத்த இடத்திற்கு போனோமா என்றிருந்து விட்டு, இங்கு வந்த பின் நம்முடைய போக்குவரத்துகளை நாமே தான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஊரில் இருந்தவரை கை தட்டினால் ஆட்டோ, குரல் கொடுத்தால் பக்கத்து வீட்டு அக்கா என்று கூடிக்குழுமி இருந்துவிட்டு, இங்கே ஒரு அவசரத்திற்குக்கூட யாரையும் அண்டமுடியாத நிலை தரும் தனிமைப்படுத்தபட்ட உணர்வு கொடுமையானது. எனவே கார் ஓட்டுனர் உரிமம் பெறுவது அவசியமாகி விடுகிறது. அதிலும் பெரிய பெரிய வண்டிகளை சாலையில் எதிர்கொள்ள வேண்டிய பதைபதைப்பில் தேர்வில் சொதப்பி பல முறை கார் ஓட்டுனர் உரிமை தேர்வு எழுத வேண்டிவரும்.

இப்படிப் பல கட்டங்களைத் தாண்டி, கடவுளின் ஆசியால் பிரச்சினைகள் இன்றி வேலையில் செட்டிலாகி, வீடும் வாங்கி, இனி இங்கேயே இருந்துவிடலாம் என தீர்மானித்து க்ரீன்கார்டு விண்ணப்பித்து அது கைக்கு வந்து சேரும்வரை அடுத்த கட்டப் போராட்டம் தொடரும். சிலருக்கு இந்தக் காலக் கட்டத்தில் விசா கூட முடிந்துவிடும்.

இத்தனை நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவைகளை எல்லாம் போட்டதை போட்டபடி, நண்பர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு நாட்டை விட்டுப் போகவேண்டிய சூழலும் வரும். அது மகா கொடுமை. க்ரீன்கார்டு வந்துவிட்டால் போதும், குழந்தைகள் கல்லூரி சேர்வது முதல், மனைவி/கணவன் வேலை வரை பல பிரச்னைகளும் முடிந்துவிடும்.

இந்தக் கட்டத்தில் மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, மாமனார், மாமியார் வருகை என்று வீடு களை கட்டும். கோடை விடுமுறை ஆரம்பித்ததும் ஊருக்குப் போகத் துடிக்கும் மக்கள். அதே நேரம் ஊரிலிருந்து பெற்றோரை அழைத்து ஊரைச் சுற்றிக் காண்பிக்கும் மக்கள், குடும்ப விசேஷங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிப்பது என வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் ஓடத்துவங்கும்.

பல வீடுகளில், கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு வீட்டு வேலைகளையும், வெளி வேலைகளையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். சில வீடுகளில், இந்தியாவில் இருப்பது போலவே, மனைவி வேலை செய்ய, கணவன் எந்தக் கடையில் நல்ல தள்ளுபடி என்று கணினியைக் குடைந்து கொண்டிருப்பார்கள். ஒரு சில இடங்களில் இது தலைக்கீழாகவும் நடப்பது உண்டு.

இப்படியே இன்னும்பல பிரச்சினைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!

இவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் போது, ஏன் வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டும்? உள்ளூரிலேயே சுகமாய் இருந்திருக்கலாமே என்று இன்னேரத்துக்கு நீங்கள் எண்ணலாம். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலனவர்கள் தவிர்க்க முடியாத ஏதோ ஒரு நிர்ப்பந்தங்களினால் தான் இங்கே வருகிறோம். அரிதாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஊரில் பலரும் நினைப்பதைப் போல இங்கே வந்த எல்லோருக்கும் பணம் கொட்டுவதில்லை. திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ற ஊதியம்தான் கிடைக்கிறது. அதிலும் நாம் கொஞ்சம் பின் தங்கினாலும் தூக்கி எறியத் தயங்காத வேலைச்சூழல்.

இங்கே உள்ள வாழ்க்கைத் தரத்தினை எதிர்கொள்ளத் தேவையான அளவு ஊதியம் தான் கிடைக்கிறது. அதைக் கொண்டே தன் குடும்பத்தின் தேவைகளையும் சமாளித்து, ஊரில் இருக்கும் தங்கள் உறவுகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ளாத சில உறவுகளும், நட்புவட்டமும், ஏதோ மரத்திலிருந்து பணம் கொட்டுவது போலவும், அதை சுமக்க முடியாமல் நாங்கள் சுமந்து கொண்டிருப்பது போலவும் நினைத்துக் கொள்கின்றனர். அத்தகையவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மால் உதவ முடியாத போது வீண்பழிச்சொல் தான் கிடைக்கிறது. எங்கள் தரப்பு நியாயங்கள் இவர்களிடம் எடுபடுவதே இல்லை. நம்மீதும், நம்வளர்ச்சியின் மீதும் உண்மையாக பாசமும், அக்கறையும் வைத்திருப்பவர்கள் நம்மை புரிந்து கொள்கின்றனர் என்பதுதான் ஆறுதலான ஒன்று.

அந்நிய நாட்டில் வாழ்க்கை என்பது மக்கள் நினைப்பது போல் பல சுகங்களைத் தந்தாலும் அதைப் பெறுவதற்கு பல விஷயங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், எங்கேயும் எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான்!


Sunday, January 29, 2017

குடியரசு தின விழா 2017



ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தின விழாவை ஜனவரி 26ந் தேதிக்குப் பிறகு வரும் வார இறுதியில் ஆல்பனியில் இருக்கும் இந்திய சங்கம் கொண்டாடும். நியூயார்க் தூதரக அதிகாரியையும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் நிகழ்ச்சி விருந்தினர்களாக அழைப்பார்கள். இந்த வருடமும் அவர்கள் வந்து நிகழ்ச்சியை கௌரவித்தார்கள். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்களுடன் விழா ஆரம்பமானது.

அமெரிக்காவில் இத்தனை வருடங்கள் குப்பையை கொட்டிக் கொண்டிருந்தாலும் தேசிய கீதத்தின் கடைசி மூன்று நான்கு வரிகள் மட்டுமே மனசிலாயி. இந்திய தேசிய கீதம் பாடும் போது அனைவரும் பரவசத்துடன் நின்றிருந்தார்கள்.

வழக்கம் போல் பல நடன நிகழ்ச்சிகள். பரதம், fusion டான்ஸ், பாடல் என்றிருந்தாலும் ஐந்தாறு வயது குழந்தைகளின் நடனத்தைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கையை காலை அசைத்தாலே நாட்டிய சிகாமணிகளென கற்பனை செய்து அவர்களை மேடையேற்றி, பார்ப்பவர்களை வதைப்பதை நிறுத்த இச்சங்கங்கள் ஆவன செய்யுமா? அட்லீஸ்ட் ஆடும் பாடலுக்குப் பொருளறிந்து ஆடத் தெரிந்தவர்களை மட்டும் மேடையேற்றுவார்களா? பெற்றோர்களும் தங்கள் ஆசையை அக்குழந்தைகளின் மேல் திணிப்பதை இங்கு வந்தும் தொடருவது தான் கொடுமை.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  மேடையில் பளபளவென போட்டிருக்கும் பேனரை அரங்கில் எங்காவது மாட்டி இரு நாட்டின் தேசியக்கொடிகளை மட்டும் மேடையில் வைத்தால் நிகழ்ச்சியின் போது எடுக்கும் படங்கள் நன்றாக வரும். இல்லையென்றால் பேனர் மேல் விழும் விளக்கின் ஒளியும் சேர்ந்து நடனம் ஆடுபவர்கள்  பேசுபவர்களின் முகங்கள் பல படங்களிலிலும் வெளுத்துப் போய் திகிலாக இருக்கிறது!

கணவரும் மகனும் வந்தே மாதரம் பாடலை கிட்டார் மற்றும் fluteல் வாசித்ததைப் பலரும் பாராட்டினார்கள். இந்த வருட நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நிகழ்ச்சிகளின் நடுநடுவே நடத்திய Republic Day Trivia quiz அருமை. அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அதற்குப் பதில் அளித்த விதம் நிறைவாக இருந்தது.

கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் தான் தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள். இன்றும் அப்படியே. சில குறைகள் இருந்தாலும் இந்தியாவை நம் நாட்டைக் கொண்டாடுகிற விழா என்பதால் நாங்கள் தவறாமல் கலந்து கொள்கிற நிகழ்ச்சி ஒன்று.

நிறைவான நாள்.

ஜெய்ஹிந்த்!








The Impossible (2012)


மூன்று குழந்தைகளுடன் கணவன், மனைவி செல்லும் விடுமுறைப் பயணம் தாய்லாந்தின் அழகான வெள்ளை மணல் கடற்கரையோரத்தில் என ஆரம்பமாகிறது இப்படம். சில நிமிடங்களில் பறவைகளின் அலறலில் கரையோர தென்னை மரங்கள் ஒவ்வொன்றும் நிமிடங்களில் சரிய, கடலில், நீச்சல் குளத்தில் இருந்த மக்கள் சூழ்நிலையை உணர்வதற்குள் சுனாமியால் கபளீகரம் செய்யப்பட்ட காட்சியை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இரு குழந்தைகளுடன் கணவர் ஒரு பக்கமும், மூத்த மகனும் அம்மாவும் மறுபக்கம் பிரிய, உடல் நிறைய காயங்களுடன் தப்பிக்க வழிதேடுகையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு அவனையும் சேர்த்துக் கொண்டு காத்திருக்க, சேதாரமடைந்த அப்பகுதியில் உயிருக்குப் போராடுபவர்களை தேடி காப்பாற்றும் தாய்லாந்து மக்கள் இவர்களையும் காப்பாற்ற, மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நேரத்திலும் தன் மகனை அழைத்து அங்கிருப்பவர்களை உதவ்ச் சொல்வது, குழந்தைகளைத் தொலைத்த பெற்றோர்கள் அலைவது, அவசர சிகிச்சைப்பிரிவுகள் ஏனோ அன்றைய சுனாமி பாதித்த தமிழ்நாட்டையும் மக்களின் அழுகுரல்களும் டிவியில் கண்ட காட்சிகள் நினைவிற்கு வந்தது.

மறுபுறம் இரு குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு மனைவியையும் மகனையும் தேடி அலையும் அப்பா, குழந்தைகள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டடையும் இடம், அப்பாவுடன் சேரும் குழந்தைகள் ...சுனாமியன்று சென்னையில் பரிதவித்த குடும்பங்கள், மனைவி, குழந்தைகளை கல்பாக்கத்தில் தொலைத்த உறவுகளின் நினைவுகளில் மனம் கனத்துப் போனது.

வாழ்க்கை தரும் எதிர்பாரா முடிவுகளையும் இழப்புகளையும் யார் தான் அறிவர்?

2012ல் வெளிவந்த இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்த படமாம். சுனாமி காட்சிகளை எடுத்த விதம் ரியலி இம்பாஸிபிள்!








Tuesday, January 3, 2017

2017...ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

2017 பிறந்த நேரம் ஆருடம் என்ன சொல்கிறது என்று பலரும் தங்கள் ராசி பலன்களை ஆராய்ந்து கொண்டிருக்க , என்னுடைய வருடாந்திர பலன்கள் எப்படி இருக்குமென வழக்கம் போல் நானே கணித்து விட்டேன்.

நியூயார்க் நகர புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு அதிகாலையில் மகளை ஊருக்கு அனுப்ப விமானநிலையம் சென்று சிறிது நேர கனத்த மௌனத்திற்குப் பிறகு சிரித்துக் கொண்டே அவளை வழியனுப்பி விட்டு வர, ஆல்பனியும் விடிய ஆரம்பிக்க, வானில் தகதகவென பொன்னிறத்தில் சூரிய பகவானின் வருகை மனதை உற்சாகப்படுத்த, எனைத் தொடர்ந்த சூர்யாவுடனான பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. தென்றலாய் குளிரும் தழுவ, நிமிடங்களில் வானும் தன் நிறங்களை மாற்றிக் கொள்ள, ஆதித்யனின் திவ்ய தரிசனத்தை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வெளியில் நின்று ரசிக்க முடிந்தது. 

அம்மா, என் ஃபிளைட் அரைமணி நேரம் தாமதமாகப் புறப்படுமாம். அநேகமாக அடுத்த விமானத்தைத் தவற விட்டுவிடுவேன் போல என மகளிடமிருந்து குறுஞ்செய்தி. குழந்தை நேரத்திற்கு ஊர் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலையுடன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கவுண்டரில் பேசி உடனடியாக புறப்படும் வேறு விமானத்தில் கிளம்புகிறேன் என்ற செய்தி சிறிது ஆசுவாசப்படுத்த... விட்ட இடத்திலிருந்து தூங்கலாம் என்று கண்ணை மூடப் போகும் நேரத்தில், ஸ்டுப்பிட் பிளேன். டீ ஐசிங் செய்கிறார்கள். இப்போதைக்கு கிளம்பாது போலிருக்கு!

குறைந்த தூக்கம் தந்த அயர்ச்சி, விமானத்தைத் தவற விட்டால் என்று ஊர் போய்ச் சேருவது என்ற கவலையும் சேர்ந்த அவளுடைய புலம்பலை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டே நியூஜெர்சியிலிருந்து புறப்படும் விமான நேரத்தை மாற்றி விட்டேன் என்று அடுத்த குறுஞ்செய்தியில்!  விடுமுறை மற்றும் பனிக்காலங்களில் பயணிப்பதில் இப்படியான சிரமங்கள் தவிர்க்க முடியாதவை தான். நல்ல வேளை மாற்று விமான இருக்கையும் எந்த விவகாரமுமில்லாமல் கிடைத்து விட்டது. நல்லபடியாகத் தான் உனக்கு புது வருடம் ஆரம்பித்திருக்கிறதென சமாதானப்படுத்தினேன்.

வருடத்தின் முதல் நாளாக இருந்தால் எனக்கென்ன மனக்கவலை என்று வழக்கம் போல மதிய நேரத்தில் அதுவும் அப்பா எழுப்பியதால் எழுந்து வந்தான் சுப்பிரமணி. லேக் ஜார்ஜ் போயிட்டு வரலாம். சீக்கிரம் ரெடியாகுங்க.

வருடத் துவக்கத்தில் நடக்கும் மிகப் பிரபலமான polar plunge என்று உறைந்து போயிருக்கும் ஏரியின் கரையோரத்தில் ஒரு முங்கு முங்க காத்திருக்கும் ஒரு கூட்டம்! நானும் குதிப்பேன் என்று அடம் பிடித்தவனை வேண்டாம் என்று சொல்லியதாலோ என்னவோ வேண்டாவெறுப்பாக மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு வந்தவனுக்கு இந்த வருட அறிவுரைப்படலமும் ஆரம்பமாயிற்று!

ஐ-போனில் சூரியோதயம் 

கிளம்பும் நேரத்தில் தான் வண்டியில் பெட்ரோல் இல்லையென தெரிந்தது. சரியென்று முதலில் வந்த கேஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கிரெடிட் கார்ட் போட்டால் திரையிலோ ஊமை நாடகம்! என்னடா இது? வேறு பல கார்டுகளுக்கும் இதே நிலைமை. வாய் அர்ச்சனை பாட ஆரம்பிக்க, வேறு சில பம்ப்களிலும் இதே மங்குண்ணி ஆட்டம். சை!

இப்ப கோவப்பட்டு என்ன ஆகப்போகுது? கடையில போய் சொல்லிட்டு வா.

'விடுவிடு'வென உள்ளே நுழைந்தால் நம்மூர்க்காரர் ஒருவர் கவுண்டரில்!
என்ன ஆச்சு? ஒரு பம்ப்பிலும் கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை என கேட்டவுடன், ஒரு சாரி கூடச் சொல்லாமல், ஆமா, சிஸ்டம் கோளாறு என்று கூலாகச் சொல்ல, மொதல்ல அத எழுதி வெளிய மாட்டுங்க. நான் ஏதோ என் கார்ட் தான் வேலை செய்யலையோன்னு வரிசையா எல்லா பம்ப்லேயும் நின்னு நேரத்தை விரையம் பண்ணினேன் என்று கடுகடுத்துவிட்டு வெளியே வந்தேன். நல்லா ஆரம்பிக்குது புது வருஷம் எனக்கு!

திருவிழா கூட்டமாக இருந்த லேக் ஜார்ஜ் வந்தவுடன் எங்களை இறக்கி விட்டு கார் நிறுத்த இடத்தை தேடி கணவரும் கிளம்ப, ஏன்டா இப்பிடி மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு வர்ற? வா சீக்கிரம். நான் ஓடிக் கொண்டிருந்தேன். அங்கு இரண்டாயிரம் பேர் வரை வந்திருந்தார்களென  அறிவித்தார்கள். குளிரும் வழக்கத்தை விட குறைவே. ஏரியும் உறைந்திருக்கவில்லை. ஆனால் ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜில் நீரில் ஓடிச்சென்று நீந்தி விட்டு வெறுங்காலுடன் பனி மீது நடந்து கொண்டிருந்தார்கள். எப்படித்தான் முடிகிறதோ! ஆச்சரியத்துடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விலகி ஏரியைச் சுற்றி நடக்க ஆரம்பித்தோம். ஏரிக்குள் செல்லும் படகுப்பயணத்திற்கு நீண்ட வரிசையில் ஒரு கூட்டம் காத்திருந்தது.

வெளிறிய வானம், இலைகளைத் துறந்த மரங்களுடன் பொலிவிழந்த மலைகள், குளிர் காற்று  என பனிக்காலத்தை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது லேக் ஜார்ஜ்.

பிப்ரவரியில் இங்கு நடக்கும் வின்டர் கார்னிவல் மிகவும் பிரபலம். ஏரியின் மேல் கார், பைக் ரேஸ்கள் நடக்க, காரில் சென்ற திகிலான அனுபவமும், உறைந்த பனி ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நடந்த ஜில்ல்ல்லான அனுபவமும் உண்டு!

நாங்கள்  வீடு வந்து சேர்ந்ததும் ஊர் சென்று சேர்ந்து விட்டதாக மகளிடமிருந்து தகவலும் வர, 

இனி எல்லாம் சுகமே!



படங்கள்


















































Thursday, December 1, 2016

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை...

கோடையில் ஒரு மாலை நேரம். சமையலறையில் நான் எதையோ உருட்டிக் கொண்டிருக்க, சங்கீத ஸ்வரங்கள் காதில் இன்னிசையாய் பாய, வேலையை விட்டுவிட்டு கதவைத் திறந்து பார்த்தால் மரத்தின் உச்சியில் மிகச்சிறிய பறவை ஒன்று அழகான குரலில் விசிலடித்துப் பாடி நிறுத்த, மறுகணம் வேறு மரத்தின் உச்சியில் இருந்து பதிலாக அவளின் இனிய குரலில் ஒரு தேவகானம்! தொடர்ந்து மாறி மாறி பாடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பறந்து பறந்து மரங்களை மாற்றினாலும் பாடுவதை மட்டும் நிறுத்தவில்லை அவர்கள் இருவரும்.

ஆனந்த ராகம் என்பது அது தானோ? அவ்வளவு இனிமை அவர்களின் குரலில்! கோல்ட் ஃபின்ச் பறவைகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மஞ்சள் உடம்பும் கருப்பு மற்றும் சாம்பல் நிற சிறகுகள் கொண்ட அழகான வண்ணப் பறவைகள்!

அடர் மஞ்சள் நிறத்தில் தலையில் கருப்பு குல்லாய் போட்டுக் கொண்டிருக்கும் ஆண் பறவை உருவத்தில் பெண் பறவையை விட சிறிது பெரியதாக இருக்கும். வண்ணம் குறைந்த பெண் பறவை மிகச் சிறியதாக இருக்கும்.

குழல் இனிது, யாழ் இனிது என்பர், கோல்ட் ஃபின்ச் குரலைக் கேளாதவர் என்றால் மிகையில்லை. பறவைகளை  கண்டால் எண்ணங்கள் சிறகு விரிக்கிறது.

அப்பறவைகளைப் பற்றி அறிந்து கொண்டவுடன் அவர்களுக்கான feeder-ம், விதைகளும் வாங்கி காத்திருந்ததில் ஒரு வாரம் கழித்தே எங்கள் பகுதிக்கு வந்தது. இன்று ஐந்தாறு பறவைகள் வந்து செல்கிறது. வசீகரிக்கும் குரலுக்காகவும், வண்ணத்திற்காகவும் மிகவும் ரசிக்கப்படும் இப்பறவைகளின் இன்னிசை கானத்தில் நனைய ஆவலுடன் காத்திருக்கிறேன்!

ஓய்வெடுக்கச் சென்றவர்கள் என்று திரும்புவார்களோ?

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ....


Sunday, November 20, 2016

விழுப்பம் தரும் கொழுப்பு

சொல்வனம்
 | இதழ் 160 | 30-10-2016


கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் சமூகத்தின் இணைய பங்களிப்பு என்பது வியத்தகு எல்லைகளைத் தொட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. தமிழர்களைப் போல சமூகவலைத்தளங்களில் உயிர்ப்புடன் இயங்கும் பிற இனக்குழுக்களையும் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.சாட் ரூம், மெசஞ்சர்கள், வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லைகள் விரிய விரிய தமிழின் ஊடான கருத்தாடல்கள் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், உடல்நலம், சமூகம், அரசியல், கலை,விமர்சனம், விவாதங்கள் என பல்வேறு தளங்களில் புதிதுபுதிதான கட்டுடைப்புகளையும், கதவுகளையும் திறந்து கொண்டே இருக்கிறது. தமிழையொத்த வயதுடைய வேறெந்த மொழியிலும் இதுபோன்ற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கடந்த 2013ம் வருடத்தில் வெறும் ஐம்பது அறுபது உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஃபேஸ்புக் உணவுக் குழுமம் ஒன்றில் நண்பரால் இணைக்கப்பட்டேன். சமையல் குறிப்புகளை பகிரும் இன்னொரு குழுமம் போல என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். இன்றைக்கு அந்த குழுமத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக அந்தக் குழுவின் தன்னார்வலர்கள் இணையவெளியைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வெகுசன ஊடகங்களோ ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் செயல்பாடுகளையும் அதன் விளைவுகளையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதே வேகத்தில் இந்தக் குழுமத்தின் செயல்பாடுகள் தொடருமானால் அடுத்த சிலவருடங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்க்கையை, உடல்நலத்தை, உணவுக்கலாச்சாரத்தை புரட்டிப்போட்ட குழுமமாக அந்த குழுமம் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது.

கோவையில் பிறந்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரியும் “நியாண்டர்” செல்வன் என்பவரால் ஆதி மனிதனின் உணவு பழக்கங்களை முன்னிறுத்தித் துவங்கப்பட்ட இந்த குழுமத்தின் பெயர் “ஆரோக்கியம்&நல்வாழ்வு”. எல்லோருக்கும் புரிகிற மாதிரிச் சொன்னால் “பேலியோ டயட்” க்ரூப்.
கற்காலத்தில் மனிதர்கள் மலைகளிலும், குகைகளிலுமே வாழ்ந்தனர். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி, காய்கள்,கிழங்குகள்,விதைகள்,கொட்டைகள் போன்றவையே அவர்களின் உணவாக இருந்தது. அதாவது நிறைய கொழுப்பும், புரோட்டீனும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை.நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்ட பின்னரே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். பின்னர் சமவெளியில் வாழத்துவங்கிய காலகட்டத்தில்தான் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பிய புல் உணவுகளான நெல் மற்றும் தானியங்கள் மனிதர்களின் உணவில் இடம்பெற ஆரம்பித்தது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் என்கிற சித்தாந்தம் அமைகிறது.

Robert C. Atkins என்கிற இதயநோய் மருத்துவர் கடந்த 1972ம் ஆண்டில் தன்னுடைய நோயாளிகளின் உடல் பருமனைக் குறைப்பதற்காக தற்போதைய பேலியோ டயட்டின் முன்னோடியான உணவுமுறையை உருவாக்கினார். அதாவது நிறைய கொழுப்பு, ப்ரோட்டீன் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவு. இது நல்ல பலனைத்தர “அட்கின்ஸ் டயட்” பிரபலமானது. இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது. கூடுதலான புரோட்டீன் சிறுநீரகத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்பது போல பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் அட்கின்ஸ் டயட் பரவலாக தடையாக இருந்தது. எனினும் கடந்த முப்பது ஆண்டுகளாய் நடந்த தொடர்ச்சியான ஆய்வுகளில் அட்கின்ஸ் டயட் பலவகையிலும் மேம்படுத்தப்பட்டு தற்போதைய வடிவத்தில் இருக்கிறது. அதாவது ”நிறைய கொழுப்பு, மிதமான புரோட்டீன், மிகக் குறைவான கார்போஹைட்ரேட் கூடுதலாக உடலுக்குத் தேவையான நுண்ணூட்ட சத்துக்கள்.”

அதெப்படி நிறைய கொழுப்பைச் சாப்பிடுவது. இரத்த அழுத்தம் எகிறி ஹார்ட் அட்டாக் வந்துவிடுமே என்கிற கவலையும், கேள்வியும் எல்லோருக்குள்ளும் வருவது இயல்பானதே.

இந்த கேள்விகளுக்கு பதிலாக, காலம் காலமாய் நம் உடலுக்கு எது நல்லது என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோமோ அதன் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் அறிவியலை புரிந்து கொள்ளச் சொல்கிறார் செல்வன். நமது உணவின் வரலாறு என்பது பசியில் துவங்கியிருந்தாலும் இன்றைக்கு அது ருசி சார்ந்த ஒன்றாக ஆக்கப்பட்டு விட்டது. நாவின் ருசிக்கு அடிமையானதால் உடலுக்குத் தேவையானது என்பதைத் தாண்டி, நாவின் சுவை நரம்புகளை திருப்திப்படுத்துவதாக இன்றைய நமது உணவுகலாச்சாரம் ஆகிவிட்டிருக்கிறது. இந்த பலவீனத்தை மூலதனமாக வைத்து பலன் அடைபவர்கள் இரண்டே பேர்தான், ஒன்று பெப்சி மாதிரியான உணவுப்பொருட்களை தயாரிக்கும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள். மற்றவர்கள் மருத்துவத் துறையினர். நம்முடைய வாழ்நாள் உழைப்பின் பெரும்பகுதியை நாம் இவர்களிடம்தான் இழந்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் கசப்பான உண்மை என்கிறார்.

நமது உடல் இயக்கத்திற்கு இரண்டு வகையான எரிபொருட்களில் இயங்கும் தன்மையுடையது. ஒன்று மாவுச்சத்து எனப்படும் கார்போ ஹைட்ரேட், மற்றது கொழுப்பு. அரிசி, கோதுமை, பருப்பு, சிறுதானியம் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பியவை. இத்தோடு பால் பொருட்கள், எண்ணைகள் மற்றும் அசைவ உணவுகளின் வழியே கொழுப்பையும் எடுத்துக் கொள்கிறோம். நமது அன்றாட உணவில் மாவுச்சத்தின் விகிதம் அதிகமாய் இருப்பதால் அதுவே நம் உடலின் பிரதான எரிபொருளாக இருக்கிறது. உடலின் தேவைக்கேற்ப கார்போ ஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடல் இயங்கியலுக்கு வழங்கப்படுகிறது. உடலின் அன்றாடத் தேவைக்குப் போக மீதமிருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலின் பல்வேறுபகுதிகளில் சேகரித்து வைக்கப் படுகிறது. இதனால் தேவைக்கு அதிகமாய் சாப்பிடுகிறவர்கள் மற்றும் குறைவான உடல் உழைப்பு உடையவர்களின் உடலில் கொழுப்பு சேகரமாவது அதிகமாகிறது.இப்படி சேகரம் ஆகும் கொழுப்பு ஒரு கட்டத்தில் இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும் போதுதான் பல்வேறு பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. இதயத்தின் இரத்த நாளங்களில் இப்படி உருவாகும் அடைப்பையே ஹார்ட் அட்டாக் என்கிறோம்.

நாம் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகள் ஒரு கட்டத்தில் நமது உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனில் ஒரு சமச்சீரற்ற தன்மையை உருவாக்கிவிடுகிறது. இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு கொடுக்கும் பாதிப்புகள் மிக அதிகம். முப்பது வயதைத் தாண்டிய எல்லா பெண்களுமே வெளியில் சொல்லமுடியாத ஏதோவொரு உடல்நல பாதிப்பால் அவதியுறுகின்றனர். அத்தகைய பெண்களுக்கு இந்த பேலியோ டயட் நல்ல பலனையும், தீர்வையும் தருகிறது என்கிறார் செல்வன். தையராய்ட் உள்ளிட்ட கருப்பை தொடர்பான பாதிப்புகள், மாதவிலக்கு சுழற்சியில் உள்ள பாதிப்புகளில் இருந்து குணமான பெண்களின் அனுபவ பகிர்வுகளை பார்க்கும்போது இத்தனை நாளாய் இப்படியொரு எளிய தீர்வினை நாம் தெரிந்து கொள்ளாமல் போனோமே என்கிற எண்ணம் எந்தப் பெண்ணுக்கும் உண்டாகும்.

ஆரம்ப நாட்களில் இது போல தகவல்களை எல்லாம் படிக்கப் படிக்க இதெல்லாம் சாத்தியமா? என்னால் முடியுமா?. தட்டு நிறைய சாம்பாருக்கு கொஞ்சம் சோறு, சோற்றுக்கு கொஞ்சம் ரசம், குழையக்குழைய தயிர் சாதம் இல்லாமல் முடியாது என் சாப்பாடு. வார இறுதியைக் கொண்டாடுகிறேன் என்கிற பெயரில் பிரியாணி, சமோசா, இனிப்புகள் கண்ணில் நிழலாட இவற்றையெல்லாம் எப்படி சாப்பிடாமல் இருப்பது? அதுவும் நான் ரசித்து ருசித்து சாப்பிடும் ரசமலாய், குல்ஃபி, பாசுந்தி, சீஸ் கேக்… காசிக்குப் போகாமலே இவற்றையெல்லாம் ஒதுக்குவது என்னால் முடிகிற காரியமா? நானோ மணியடிச்சா சோறுங்கிற மாதிரி பசிக்கிறதோ இல்லையோ நேரம் பார்த்து சாப்பிடற இனம். கொஞ்சம் தாகமெடுத்தாலும் போரடித்தாலும் கையில் கிடைத்ததை சாப்பிடும் அப்பாவி….இப்படி ஏகப்பட்ட மைனஸ் இருந்தாலும் வயதையும், உடல் நலத்தையும் யோசித்து நல்ல நாளில் பேலியோ டயட்டுக்கு மாறினேன்.

உடல் எடை குறைப்பது ஒன்று மட்டும்தான் அப்போதைய என் தலையாய பிரச்னையாக இருந்தாலும், செல்வன் சொன்ன பேலியோடயட் தீர்வாகுமா, கடைபிடிப்பது எளிதானாதா என்கிற சஞ்சலம் ஆரம்பத்தில் இருந்ததென்னவோ உண்மை. ஆனால் செல்வன் தொடர்ச்சியாக மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை, தொடரும் ஆராய்சிகளை, தன்னுடைய அனுபவத்தைச் திரும்பத்திரும்பச் சொல்லி என் போன்ற ஆரம்பநிலை சஞ்சலக்காரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார். முதற்கட்டமாக வெளியில் சாப்பிடுவதைக் குறையுங்கள். சிப்ஸ், எண்ணையில் பொரித்த உணவுகள், கேக் மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பண்டங்களை ஒதுக்குங்கள். காஃபி, டீ எல்லாம் வேண்டாம். இதன் அடுத்த கட்டமாக பேலியோ டயட்டுக்கு மாறுங்கள் என ஒரு பயணவழியும் சொல்லிக் கொடுத்தார்.

எங்கே இனி வீட்டில் எல்லோருக்கும் பேலியோ தான் என்று சொல்லிவிடுவேனோ என்று பயந்த மொத்த குடும்பமும், இதெல்லாம் உனக்கெதுக்கு? உனக்கென்ன மற்றவர்கள் போல் சுகர், பிபி போல ஏதாவது பிரச்னைகள் தான் இருக்கா? நொறுக்குத்தீனிகளை ஒழித்து ஒழுங்காக சாப்பிட்டாலே உன் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என்று அட்வைஸ்கள், நீங்களெல்லாம் ஆட்டத்தில் இல்லை, நான் மட்டும்தான் பேலியோ என அவர்கள் வயிற்றில் பால்வார்த்தேன்.

தினமும் குறைந்தது நான்கு முட்டைகள், நூறு பாதாம் பருப்பு, நிறைய சீஸ், மீன், இறைச்சி, காய்கறி வகையறாக்கள். தயிர் அதுவும் கெஃபிர் என்றால் மிகவும் நல்லது இல்லையென்றால் பால் ஒரு கப் போதும்…இதுதான் செல்வன் அவர்கள் எனக்கு பரிந்துரைத்த டயட். “என்னது நூறு பாதாமா?” என அதிர்ந்த கணவரை சமாதானப்படுத்தி விட்டு, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இன்சூரன்ஸ் இருக்கு. சோ நோ ப்ராப்ளம் என்று கடுக்முடுக்கென்று பாதாமை சாப்பிட ஆரம்பித்தால்…..கொடூரமாக இருந்தது. பிறகு தான் தெரிந்தது பாதாம் , வால்நட்ஸ்களை நன்கு ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்று. இல்லையென்றால் சிறிது நெய்யில் வறுத்து மிளகு உப்பு போட்டுச் சாப்பிடலாம் என்றார்கள். எனக்கும் அந்த சுவையெல்லாம் பிடித்திருந்தது.

மாதாந்திர செலவுகள் கொஞ்சம் கூடித்தான் போனது. பாதாம் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணிநேரங்கள் வேறெதுவும் சாப்பிடக்கூடாது என்று வேறு பயமுறுத்தியிருந்தார்கள். அதற்குள் பசித்தால் என்ன செய்வது என்கிற கவலை எனக்கு. அதெல்லாம் பசிக்காது. பசிச்சா நிறைய தண்ணீர் குடிங்க என்று குழுமத்தில் அட்வைஸ் செய்தார்கள். ஒரு காலத்தில் அறிவுரைகள் மட்டும்தான். அந்த சமயத்தில் செல்வன் மட்டும்தான் பேசுவார், நாங்களெல்லாம் திருவிளையாடல் நாகேஷ் போல கேள்விகள் மட்டுமே கேட்போம். மனிதன் ஒருபோதும் சலித்துக் கொண்டதே இல்லை. அந்த பொறுமைக்கே எல்லா பெருமையையும் அவருக்கு நாம் செய்யவேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்சோர்வின் காரணமாக தூங்கி விடும் வழக்கம் மெதுவாக மாறி ஹைப்பர் ஆகிவிட்டேனோ என்பது போல் புத்துணர்ச்சியுடன் வலம் வர அது தான் பேலியோவினால் நான் கண்ட முதல் மாற்றம். பிறகு சோற்றுக்கு டாட்டா சொல்ல தேங்காய் எண்ணையில் வறுத்த மீன் அல்லது அவனில் பேக் செய்த சால்மன் மீன், முட்டை என்று மாறி கஷ்டப்பட்டு இனிப்பிற்கு பைபை சொன்னாலும் வருடத்தில் சில இனிப்பான நாட்களில் மட்டும் கொஞ்சம் இனிப்பை தொட்டுக்கொண்டேன்.

மாதம் ஒரு முறை ஒவ்வொரு நாட்டு உணவு விடுதிகளுக்குச் சென்று சாப்பிட்டு வருவது மற்றும் டெஸெர்ட் டே என்று இனிப்புகளை உண்டு மகிழ்ந்த குழுக்களில் இருந்து வெளியேறியதில் நண்பர்களுக்கும் வருத்தம். உடல் எடையும் கணிசமாக குறைய இனி இப்படித்தான் சாப்பிடப்போகிறேன் என்று என்னையே மாற்றிக் கொண்டேன். எனக்கான உணவுத்தேவைகள் எளிதாகவும் கணவருக்கும் பேலியோ ஆசை வந்திருக்கிறது. வருவார். வந்து தானே ஆக வேண்டும்.

தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது வெயிலில் நடக்க வேண்டும். வருடத்தில் நான்கைந்து மாதங்கள் மட்டுமே வெயில் இருக்கும் எங்கள் ஊரில் நடையெல்லாம் பிரச்னை இல்லை. முன்பு வெயிலில் சென்று வந்தாலே கை, கழுத்துப்பகுதிகள் எல்லாம் அலர்ஜியால் தோல் தடித்து சிவந்து அரிப்பு என பல பிரச்னைகள் இருந்தது. பேலியோவிற்குப் பிறகு அதில் நல்ல முன்னேற்றம். படிப்படியாக 10,000 ஸ்டெப்ஸ் அல்லது ஐந்து மைல்கள் நடந்தால் இன்னும் நல்லது என்றார்கள். நடக்க முயற்சிக்கிறேன்.

நம் உடலின் ஆரோக்கியம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே என்கிற எளிய உண்மையை இந்த குழுவில் சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதோடு நம் முன்னோர்கள் காலம் காலமாய் சொல்லி வந்த விரதம் என்கிற போர்வையில் உள்ளுறுப்புகளுக்கு கொடுக்கும் ஓய்வும் முக்கியம் என்பதும் இந்தக் குழுவில் நான் கற்றறிந்த மற்றொரு ஆரோக்கிய ரகசியம். இந்த விரதம் மற்றும் பேலியோ டயட் இரண்டையும் ஒருங்கினைத்தால் அதுதான் “வாரியர் டயட்”.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய பல்வேறு உடல் உபாதைகளைப் பற்றி குழுவில் பகிர்ந்து கொள்வதும், அதற்கு திரு.செல்வன் அவர்கள் மிகப் பொறுமையோடும், அக்கறையோடும் கொடுக்கும் உணவுத் தீர்வுகளும், அதை பின்பற்றிய பிறகு அவர்களின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றஙக்ளைப் பற்றி மகிழ்ச்சியும் பரவசமுமாய் அவர்கள் பகிர்ந்து கொள்வதை விழிகள் விரிய படித்த நாட்களை என்றும் மறக்கமுடியாது. எத்தனை எத்தனையோ முகம் தெரியாதவர்கள், ஒரு புள்ளியில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒருவரால் வழங்கப்பட்ட தீர்வுகள் பலனளிக்கிறது என்பது எத்தனை மகத்தான சேவை.

இந்த இடத்தில் என்னுடைய ஒரு சந்தேகத்தையும் பதிவு செய்தாக வேண்டும். ஒரு எளிய உணவு மாற்றத்தின் மூலமாக உடல் ரீதியான பல பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து அதன் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றால், அதை ஏன் ஆங்கில மருத்துவம் ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்தக்கூடாது. குறிப்பாக உயர் சர்க்கரை பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு நிறைய மாத்திரைகளோடு தரப்படும் உணவுப் பட்டியலில் நிறைகார்போ ஹைட்ரேட் உணவுகளான அரிசிச்சோற்றையும், கோதுமையையும்தான் பரிந்துரைக்கின்றனர். அதாவது தினமும் உணவில் கார்போஹைட்ரேட் வடிவில் சர்க்கரையையும் சாப்பிட்டுக் கொண்டு அதற்கான மாத்திரையையும் சாப்பிடு என்பது தங்களின் வியாபாரத்தை தக்கவைக்கும் தந்திரமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை.

நான் கண்கூடாக பார்த்த வகையில் பேலியோ உணவுமுறையால் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, சொரியாஸிஸ், பெண்களுக்கு இருக்கும் இரும்புச்சத்து, வைட்டமின் டி, பி-12 குறைபாடுகள், மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினை, மிகையான உதிரப்போக்கு, பிகாட், பிகாஸ் ஹார்மோன் , பைப்ராய்ட் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைப்பது ஒரு வரமே. புற்றுநோய் மேலும் பரவாமல் கட்டுப்பாட்டில் வைக்கமுடிவது, துவக்கநிலை சிறுநீரக கோளாறுகள், அல்சைமர் எனப்படும் நியாபக மறதி போன்ற பாதிப்புகளுக்கு முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க பலன்களை பேலியோ டயட் தருகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறையான மருத்துவ பரிசோதனை, அதன் அடிப்படையில் ஒரு டயட் சார்ட்….அவ்வளவுதான். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் உறுதியான மனக்கட்டுப்பாட்டோடு இதை கடை பிடிக்கிறவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன.

இன்று ஆல விருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்தக் குழுமத்தில் இன்று பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களும் அங்கத்தினராக இருக்கின்றனர். அவர்கள் பேலியோ டயட்டின் பலனை தங்களுடைய நோயாளிகளுக்கும் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கின்றனர். டிவி சீரியல் ஒன்றில் கூட பேலியோ சம்பந்தப்பட்ட வசனங்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. டிவி விவாதங்களில், பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டது. பேலியோ ஹோட்டல் கூட வந்திருப்பதாக கேள்வி.

இன்னொரு பக்கத்தில் பேலியோ டயட்டுக்கு எதிராக பேசுகிறவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இவ்வளவு இறைச்சியை மனிதன் உண்டால் பின்விளைவுகள் எப்படி இருக்கும்? பால், வெண்ணெய், சீஸ் மற்றும் இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வளர்ப்பதில் இருக்கும் சுற்றுப்புறச்சூழல் கேடுகளைப் பற்றி பேலியோக்காரர்களின் நிலை என்ன? இது உண்மையிலேயே நல்ல மாற்று உணவு முறை தானா? வருபவர்களுக்கு ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்களை வைத்து டயட் சொல்லும் இவர்கள் என்ன டாக்டர்களுக்குப் படித்தவர்களா? மக்களின் உயிருடன் விளையாடுவது விபரீதத்தில் முடிந்தால் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? என்பது போன்ற எதிர்கேள்விகளும், விமர்சனங்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இத்தனை எதிர்ப்புகளின் ஊடே, செல்வனின் முயற்சியால் இணையம் தாண்டி ஒவ்வொரு நகரமாக பேலியோ அறிமுக கூட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. பேலியோவால் ஈர்க்கப்பட்டு பலனடைந்த பிரபலங்கள் வாயிலாகவும் இந்த உணவுமுறை மக்களிடையே செல்லும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பேலியோ டயட் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. தங்கள் நேரத்தையும், பொருளாதாரத்தையும் பொருட்படுத்தாத தன்னார்வலர்கள் மக்களுக்குத் தங்களால் இயன்ற பேலியோ தொண்டினை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொள்கிறார்கள். திரு,நியாண்டர் செல்வன் எழுதிய பேலியோ புத்தகம் இந்த வருட புத்தகச் சந்தை விற்பனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வனின் முயற்சிகள் வெறும் பேலியோ டயட்டோடு நின்றுவிடவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அடுத்த கட்டமாக “வாரியர் டயட்”, சைவர்களுக்காக “நனி சைவம்”, பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கென “மக்கள் டயட்”, பெண்கள் பொதுவில் சொல்லத் தயங்கும் பிரச்சினைகளுக்கென பிரத்யேக பெண்கள் குழுமம் என பல்வேறு தளங்களில் தன் அறிவையும், அனுபவத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஒத்துழைக்க நிறைய நல்லவர்களும், சில போலிகளும் உடனிருக்கிறார்கள். ஆரம்ப நாட்களில் தினமும் நிறைய விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், கட்டுரை பகிர்வுகள் என தகவல் களஞ்சியமாக இருந்த குழுமம் இப்போது சந்தைக்கடை போலாகிவிட்டது. செல்வனும், அவருடைய சக அட்மின்களும் தங்களால் முடிந்த வரையில் எல்லோருக்கும் தீர்வுகளை வழங்கிட முயற்சிக்கின்றனர். தன்னலம் கருதாத இவர்களினால் நிறைய பேருக்கு இந்த தகவல்கள் போய் சேருகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். இணையம் தாண்டி பொதுவெளியில் கடைசி மனிதனுக்கும் இதன் பலன்கள் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு. அப்படி ஒன்று நடக்க முடிந்தால் நிச்சயமாக ஒரு யுகப்புரட்சியாக அமையும்.


விவாதங்களின் அரசியல் ; இரண்டாம் பட்சமான தகுதியும் தரமும்


சொல்வனம் இதழ்
 | இதழ் 159 |



முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலில் தன் கணவருக்கு பக்கபலமாய் இருந்த அனுபவம், பில் கிளிண்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நேரடி அரசியலில் இறங்கி செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய நிர்வாக அனுபவம் பெற்றவர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கூடுதல் சிறப்புத்தகுதியுடையவர் என்பதால் அவரை சரியான வகையில் எதிர்கொள்ளும் ஒரு வலுவான வேட்பாளரை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லையோ என்கிற ஏமாற்றமும், ஆதங்கமும் தற்போது குடியரசு கட்சியினரிடையே வெளிப்படையாகவே எதிரொலிக்கத் துவங்கிய சூழலில் ஹிலரி-ட்ரம்ப் இடையேயான இரண்டாவது விவாதம் செயிண்ட் லூயிஸில் நடந்தேறியது.

கடந்தகாலத்தில் பெண்கள் தொடர்பாக தான் பேசியவைகளுக்காக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். அதற்காக தன் குடும்பத்தினரிடமும், அமெரிக்க மக்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பெண்களை எப்போதும் மதிக்கிறேன். இப்படியெல்லாம் கம்மிய குரலோடு ட்ரம்ப் தன்னுடைய விவாவதத்தை துவக்கியபோது அதனை அவருடைய சொந்தக்கட்சியினர் உட்பட யாருமே ரசிக்கவில்லை.

கடந்த முறை போலில்லாமல் இந்த முறை பார்வையாளர்களும் வேட்பாளர்களிடம் கேள்விகள் கேட்கக்கூடியவகையில் விவாதத்தை வடிவமைத்திருந்தனர். இதனால் வேட்பாளர்களும் இயல்பாக மேடையின் குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டே கலந்துரையாடினர்.

ஹிலரி கடந்த விவாதத்தின் போது கடைபிடித்த அதே மென்மையான ப்ளாஸ்டிக் புன்னகையை ஏந்தியவராக, தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டார். மறுமுனையில் ட்ரம்ப் தனது வழக்கமான மூர்க்கத்தனமான உடல் மொழியுடன் இருந்தார். சமயங்களில் அவருடைய உடல் அசைவுகள் அச்சுறுத்தும் வகையில் இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதை விட எதிர்குற்றச்சாட்டுகளைச் சொல்லிவிடுவதுதான் தனக்கான சரியான உத்தியாக இருக்குமென இரு தரப்பினரும் நினைத்தனரோ என்னவோ ஆரம்பம் முதலே இருவரும் தனிப்பட்ட தாக்குதலில் உறுதியாக இருந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹிலரிதான். பல இடங்களில் ஹிலரி தடுமாறினாலும் தனது ப்ளாஸ்டிக் புன்னகையைக் கொண்டு சமாளித்தார். சில இடங்களில் காது கேளாதவரைப் போல திரும்பிக்கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதெல்லாம் விவாதத்தின் ஆரம்பகட்டத்தில்தான். நேரப்போக்கில் விவாதத்தை தன்போக்கில் நகர்த்திச் சொல்வதில் ஹிலரி இரண்டாவது முறையும் வெற்றியடைந்தார்.

கடந்த விவாதத்தில் தவறவிட்ட விஷயங்களை எல்லாம் இந்த முறை ட்ரம்ப் சரியாக பயன்படுத்திக் கொண்டார். விவாதத்தின் பல கட்டத்தில் ட்ரம்ப்பின் கை ஓங்கியிருந்தது. “ஒபாமா கேர்” திட்டம் மிகப்பெரிய தோல்வி என்று ட்ரம்ப் வைத்த வாதத்திற்கு ஹிலரியின் சமாளிப்புகள் பெரிதாய் எடுபடாமல் போனது. ஹிலரியின் கடந்த கால செயல்பாடுகள், நிர்வாகத்திறமையின்மை போன்ற விஷயங்களை ட்ரம்ப் தொட்ட போது ஹிலரி மீண்டும் ட்ரம்ப்பின் மீது தனிமனித தாக்குதல்களில் இறங்கினார். இந்த முறை ட்ரம்ப் பதிலுக்கு ஹிலரியின் கணவர் கிளிண்ட்டனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் என பழைய குப்பைகளை கிளற ஹிலரியிடம் பதட்டம் மேலோங்கியதை பார்க்க முடிந்தது.

ஹிலரியின் வால்ஸ்ட்ரீட் பேச்சுக்கள் அடங்கிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என முன்பு பெர்னி சேண்டர்ஸும், தற்போது டிரம்ப்பும் வலியுறுத்தியபோது அவற்றை ஹிலரி வெளியிட மறுத்துவிட்டார். ஆனால் தற்போது அவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவிட்ட நிலையில் தான் பேசியவைகளை விக்கிலீக்ஸ் திரித்து வெளியிட்டிருப்பதாக ஹிலரி சொன்ன சமாதானங்களும், ஆப்ரகாம் லிங்கன் கதையும் விவாத அரங்கில் எடுபடாமல் போனது.

ஏதோ இப்போதுதான் முதல்முறையாக ரஷ்யா, அமெரிக்க தேர்தல்களை சீர்குலைக்க சைபர் தாக்குதல் நடத்த முனைவதைப் போலவும், அத்தகைய ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவிப்பதும் நாட்டு நலனுக்கு உகந்ததில்லை என்கிற ஹிலரியின் திசைதிருப்பல்களும் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெறாமலே போனது.

உள்நாட்டில் நிலவும் பொருளாதார தேக்கநிலை, சர்வதேச உறவுகளில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள், தீவிரவாதம், அகதிகள் பிரச்சினை, வர்த்தக பற்றாக்குறை போன்ற தலைப்புகள் தொடர்ந்து பேசப்பட்டாலும் அவற்றின் ஊடே தன்னை முன்னிறுத்தி மற்றவரை மட்டம்தட்டும் வகையில் இரண்டு வேட்பாளர்களும் பேசியது பலரை முகம் சுளிக்க வைத்தது.

விவாதத்தின் நிறைவில் இரு வேட்பாளர்களிடமும், மற்றவரிடம் பிடித்த அம்சங்களைப் பற்றி கேட்டபோது ஹிலரி எவ்வித தயக்கமும் இல்லாமல் ட்ரம்ப்ன் குழந்தைகளை மதிப்பதாக கூறினார். வேறெந்த விஷயத்துக்காக இல்லாவிட்டாலும் கூட இந்த ஒரு விஷயத்தில் ட்ரம்ப்பையும் தான் மதிப்பதாக ஹிலரி கூறியது ரசிக்கும்படி இருந்தது. பதிலுக்கு ட்ரம்ப், ஹிலரியின் தளராத போராட்ட குணத்தை தான் மிகவும் மதிப்பதாக கூறினார்.

இதோடு ஒப்பிடுகையில் கடந்த வாரம் துனை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதம் தரமானதாக இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில் நடைபெற்ற துனை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதங்கள் பெரிய அளவில் வாக்காளர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தவில்லை என gallup.com சொல்கிறது.

இருந்தாலும் கூட ஜனாதிபதியின் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்படும் கணத்தில் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை துனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளும் மரபின் படி இதுவரை எட்டு துனை ஜனாதிபதிகள், ஜனாதிபதியாகி இருக்கின்றனர். அந்த வகையில் துனை ஜனாதிபதி வேட்பாளர்களின் தகுதி, நிர்வாகத்திறன் போன்றவை கவனமும், முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனநாயக கட்சியின் சார்பாக வெர்ஜீனிய செனட்டரான டிம் கெய்ன் துனை ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் இருக்க, குடியரசுக்கட்சியின் சார்பில் இந்தியானா மாகான ஆளுனரான மைக் பென்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறார். இ்ருவருமே அனுபவம் மிகுந்த அரசியல்வாதிகள்.

சென்ற வாரம் இவர்களுக்கு இடையே நடந்த துணை அதிபர் வேட்பாளர்களின் விவாதத்தில் தனிமனித தாக்குதலின்றி இரு வேட்பாளர்களும் தங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டினை மட்டுமே முன்னிறுத்திப் பேசியது அவ்விவாதத்தின் பலமாக இருந்தது. தெருச்சண்டையைப் போல நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதத்தோடு ஒப்பிடுகையில் பென்ஸ், கெய்ன் விவாதம் முதிர்ச்சியான அரசியலின் வெளிப்பாடாக இருந்தது.

இரு வேட்பாளர்களும் தங்கள் பங்கைச் சரியாகவே செய்திருந்தாலும், குடியரசுக்கட்சியின் டிரம்ப் போல் தன் வசம் இழக்காமல் தேர்ந்த அரசியல்வாதியாக பென்ஸ் மிகவும் பொறுமையாகவும் சாதுரியமாகவும் பேசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் குடியரசுக்கட்சியின் துனை ஜனாதிபதி வேட்பாளர் பென்ஸ், ட்ரம்ம்பை விட சிறந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்திருப்பார் என நினைக்கத் தோன்றியது. குடியரசுக் கட்சியினர் இப்போதே 2020 வருடத்திற்கான தங்களுடைய ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் கிடைத்துவிட்டதாக பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

ட்ரம்ப்பின் ஆபாச அவதூறு ஆடியோ மற்றும் வீடியோக்கள் வெளியான பின்னர் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களை ட்ரம்ப்பிடம் இருந்து தூரமாகவே காட்டிக்கொள்ல முனைகின்றனர். ட்ரம்ப்பை திரும்பப் பெறமுடியுமா என்கிற விவாதம் கூட குடியரசுக்கட்சியினர் மத்தியில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் இதற்கெல்லாம் ட்ரம்ப் அசைந்து கொடுக்கிறவராகத் தெரியவில்லை. தன்னுடைய மூர்க்கத்தனமான அணுகுமுறையை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ட்ரம்ப்பின் சர்வாதிகார தொணி பலருக்கும் பிடிக்கவில்லை. அமெரிக்கா போன்ற ஒரு வல்லாதிக்க சக்தியின் தலைமை பொறுப்புக்கு வருகிறவரிடம் எதிர்பார்க்கப் படும் ஆளுமைத் திறன், பக்குவம் எதுவுமே ட்ரம்ப்பிடம் காணக்கூடியதாக இல்லை. வெளிப்படைத் தனமாக பேசுவதாக அவர் நினைத்துக் கொள்ளும் பல விஷயங்கள் ஆரம்ப நாட்களில் ரசிக்கப்பட்டாலும் தற்போது அவை உளரல்களாக, கேலிகளாய் மாறிக்கொண்டிருபப்தை ட்ரம்ப் உணர்ந்தவராகத் தெரியவில்லை.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் ஹிலரியின் மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மின்னஞ்சல்களில் உள்ள தகவல்கள் ஹிலரியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் அபாயமிருப்பதாக அவருடைய ஆதரவாளர்களே கவலை தெரிவிக்கின்றனர்.

சிரியாவில், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒரு மருத்துவமனையில் இருந்த இருபது பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சொல்லப்பட்ட ஜான்கெர்ரியின் குற்றச்சாட்டு பொய்யானது என்று அவருடைய அலுவலகமே ஒத்துக் கொண்டுள்ள நிலையில், வரும் நாட்களில் ரஷியாவிடம் சிக்கியுள்ள தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகும் பட்சத்தில் அது ஒபாமா அரசு மற்றும் ஹிலரியின் நிர்வாக குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும் என்கிற பதட்டம் ஜனநாயக கட்சியினரிடையே ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய சூழலில் அமெரிக்கா உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி இருக்கின்றது. அதையெல்லாம் சமாளிக்கத் தேவை தெளிவான தொலைநோக்குடைய உறுதியான ஒரு தலைமை. ஆனால் தற்போதை நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கிறது. ஒருவேளை இரண்டு கட்சிகளுமே தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்திட தவறிவிட்டனவோ என்கிற கேள்வி எழாமலில்லை.

இந்த தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அது அவர்களுடைய ஆளுமைத்திறனுக்கோ, கொள்கைகளுக்கோ, நிலைப்பாடுகளுக்கோ கிடைத்த அங்கீகாரமாக சொல்லிக்கொள்ளமுடியாது. முழுக்க எதிரியின் பலவீனத்தால் கிடைத்த வெற்றி என்றுதான் கருத வேண்டும்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் படி தற்போதைக்கு ஹிலரி முன்னிலையில் இருந்தாலும், ட்ரம்ப் அத்தனை எளிதாக தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்பவராகத் தெரியவில்லை. எனவே வரும் நாட்களில் அமெரிக்க தேர்தல் களம் அனல் பறக்கும் ஒன்றாக இருக்கும்.

ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை

சொல்வனம் இதழ்
 | இதழ் 158 | 01-10-2016


அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் என்பது ஏறத்தாழ தமிழ் தொலைக்காட்சி மெகாசீரியல்களைப் போல இரண்டு வருடங்களுக்கும் குறைவில்லாமல் நீளும் சம்பிரதாயச் சடங்கு. ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரித்தான பரபரப்பும் சுவாரசியமும் கொண்டவை. அந்த வகையில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக் கொள்ளும் முதல் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் இரண்டு விவாதங்கள் பாக்கியிருக்கின்றன.

இந்த விவாதங்களின் நோக்கமே, யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க முடியாத நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு தெளிவைத் தரவேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி வேட்பாளர்களின் நிலைப்பாடு, அதனை அவர்கள் அணுகும்முறை, கையாளுவதற்கான திட்டங்கள், அதை வெளிப்படுத்தும் அவர்களின் உடல்மொழி, ஆளுமைத் திறன் என எல்லா கூறுகளும் இந்த விவாதங்களின் மூலமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.

பலவகையிலும் இந்த விவாதம் முந்தைய காலங்களில் நடந்த விவாதங்களை  விட வித்தியாசமானதாகவும், புதுமைகளை கொண்டதாகவும் இருக்குமென  ஊடகங்கள்  தங்களின் கணிப்புகளை கூறி வந்தன. இந்த விவாதத்தில் மூன்று முக்கிய பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை நாட்டின் பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள்.

இத்தகைய பின்னனியுடன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஹிலரி, ட்ரம்ப் இடையிலான முதல் விவாதம் வெற்றிகரமாக(!) நடந்தேறி இருக்கிறது.

ஒரு பக்கம் ஹிலரி க்ளிண்டன். பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதி. வெள்ளை மாளிகையில் முதல் பெண்மணியாக இருந்து பெற்ற அரசியல் அனுபவம், செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக கூடுதலாக கிளிண்டன் போன்ற ஒருவரின் பின்புலம் என எல்லாவகையிலும் ஹிலரி கூடுதல் தகுதியுடையவராகத் தெரிந்தார்.

மறுமுனையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகரமான தொழிலதிபராக அறியப்பட்டவர். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர். அமெரிக்காவும், அமெரிக்கர்களும் எல்லா வகையிலும் சுரண்டப்படுவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.

விவாதத்தின் போது ஒரு வார்த்தை பிசகினாலும் அது பாதகமாய் போய்விடும் என்பதால் இரண்டு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் எப்படி கையாளுவது, விவாதத்தின் போக்கை தீர்மானிப்பது போன்ற எல்லா அம்சங்களையும் பற்றிய முன் தயாரிப்போடு வந்திருந்தது பல இடங்களில் வெளிப்பட்டது.

இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.

எதைப்பற்றிப் பேசினால் ட்ரம்ப் எரிச்சலாவார் என்பதைப் பற்றி ஹிலரி நன்கு தெரிந்து வைத்திருந்தார். விவாதம் துவங்கிய சில நிமிடங்களில் அதை திறமையாக பயன்படுத்தினார். ட்ரம்ப் ஏன் இன்னும் வருமான வரி விவரங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை அதில் உள்ள தகவல்கள் அவர் சொல்லிக் கொள்வது போல் செல்வந்தரில்லை என்பதை காட்டிவிடுமா, அவருடைய நிறுவனங்களின் மேல் இருக்கும் கடன் நிலுவைகள் எத்தகையவை, தொண்டு நிறுவனங்களுக்கு அவர் அளித்திருப்பதாக சொல்லும் நிதி விவரங்கள் முற்றிலும் பொய்யான தகவல்களாக இருக்குமோ என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக அவர் எழுப்பிய கேள்வியில் ட்ரம்ப் நிலைதடுமாறித்தான் போனார். ஹிலரி அழித்ததாகச் சொல்லப்படும் 33000 மின்னஞ்சல்களை வெளியிட்டால் தன்னுடைய வரிவிவரங்களை தணிக்கைக்குப் பிறகு வெளியிடுவதாக ட்ரம்ப் சொன்னதற்கு  பதிலளித்த ஹிலரியோ, தவறு நடந்துவிட்டது. அதற்காக வருத்தப்படுகிறேன் என ஒற்றைவரியில் மின்னஞ்சல் சர்ச்சையை கடந்து போனார். ஹிலரியின் மின்னஞ்சல் சர்ச்சையை ட்ரம்ப் சரியாக முன்னெடுத்துப் பேசாதது அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பினை நழுவவிட்டுவிட்டதாகவே தோன்றியது.

அடுத்த கட்டமாக ஹிலரி கையில் எடுத்த ஆயுதம், ட்ரம்ப்பின் நிர்வாகத்திறன் மற்றும் அவருடைய வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை பற்றியதாக இருந்தது. ட்ரம்ப்பின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு ஹிலரி விரித்த வலையில் ட்ரம்ப் தானாய் வந்து விழுந்தார் என்றுதான் சொல்வேன். தான் வசமாக சிக்க வைக்கப்பட்டதில் எரிச்சலான ட்ரம்ப் தனிமனித தாக்குதலில் இறங்கினார். இந்த இடத்தில் அவருடைய பக்குவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டினார்.

ஹிலரி தன்னுடைய பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் நன்மையளிக்கும் எதையுமே செய்யவில்லை அது அவருடைய திறமையின்மையையும், தோல்வியையும் குறிக்கிறது என்கிற வாதத்தை ட்ரம்ப் இன்னும் சிறப்பாக எடுத்து வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் அவரின் முன்கோபமும், எரிச்சலும் அவருக்கு எதிரியாகிப்  போனது. பல இடங்களில் விவாதத்தை தன் போக்கில் திசைதிருப்பி தனக்கு சாதகமாக்கும் உத்தியிலும் ஹிலரி வெற்றிபெற்றார்.

அமெரிக்க  வர்த்தக ஒப்பந்தங்களில் (NAFTA ) கிளின்டன் அரசு செய்த  தவறுகளைச்  சுட்டிக் காட்டி,  அன்று அதையெல்லாம் ஆதரித்த ஹிலாரி இன்று அதை எதிர்ப்பதைப்  போல் காட்டிக்கொள்வது மலிவான  அரசியலே என  ட்ரம்ப் முன் வைத்த வாதத்திற்கு ஹிலரியால் தடுமாற்றத்துடன் சமாளிப்பான பதில்களையே சொல்ல முடிந்ததை இங்கே  குறிப்பிட்டாக வேண்டும்.

க்ளைமேட் சேஞ் அண்ட் க்ரீன் எனர்ஜி பற்றிய வாதத்தில், டிரம்ப் தன் முந்தைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதை குற்றம் சாட்டிப் பேசினார் ஹிலரி. பதிலுக்கு ட்ரம்ப், ஹில்லரி முப்பது வருடங்களாக அரசியலில் இருந்தும் ஏதோ இன்று தான் இவ்விஷயத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பேசுவதும், அதுவும் தேர்தல் சமயங்களில் மட்டும் பேசுவதன் பிண்ணனி பற்றி எழுப்பிய கேள்வி சில கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது.

சைபர் அட்டாக்கிற்கு காரணமான சோவியத் ரஷ்யாவுடன் டிரம்ப் நட்புறவு கொண்டுள்ளார்  என ஹிலரி ஆரம்பிக்க, அப்படி இல்லையென்றால் பெர்னி சாண்டர்ஸ்-ஐ ஹிலாரியின் கட்சி எப்படி நடத்தியது என்கிற விவரங்கள் உலகுக்கே தெரியாமலே போயிருக்கும் என்றவுடன் அப்பேச்சையும்  ஹிலரி எளிதாக திசை மாற்றிக்கொண்டார்.

அதிபர் ஒபாமாவின் பிறப்புச்சான்றிதழ் பற்றிய பேச்சுகளும், கறுப்பர்களுக்கு வீட்டு வாடகைக்கு விட மறுத்து அதைச் சார்ந்து டிரம்ப் மேல் எழுப்பப்பட்ட சட்டமன்ற வழக்குகளும் அவர் கறுப்பர்களுக்கு ஆதரவானவர் அல்ல என்ற தொனியில் ஹிலாரி பேச, தன் மேல் தவறில்லை என்பது நிரூபணமாகி  தான் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையும் பெற்றாகி விட்டது என்று அவ்விவாதத்தை டிரம்ப் முடித்து வைத்த கையோடு, 90களில் ஹிலரி கருப்பினத்தவரை  “super predators” என்று  சொன்னதை சுட்டிக்காட்டியது கவனம் பெற்றது.

ஹிலரியின் உடல்நலம் பற்றிய பேச்சை ட்ரம்ப் எடுத்தவுடன், பெண்களைப் பற்றி ட்ரம்ப் கூறிய பல தரமற்ற விமர்சனங்களையும், அவதூறு வார்த்தைகளை பதிலடியாகத் தர, ட்ரம்ப்பினால் பதில் சொல்லமுடியாமல் போனது. இந்த இடத்தில் மட்டும் ட்ரம்ப் சுதாரித்திருந்தால் ஹிலரியின் பெண்ணியவாதி பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கலாம். அவரது கணவர் கிளிண்ட்டனின் பெண் விவகாரங்கள், அதில் தொடர்புடைய பெண்களுக்கு ஹிலரி கொடுத்த தொல்லைகள் மிரட்டல்கள் போன்றவைகளை எல்லாம் ட்ரம்ப் எடுத்துப் பேசியிருந்தால் அது ஹிலரிக்கு பெருத்த சேதாரமாகி இருக்கும். இதை எப்படி ட்ரம்ப் மறந்து போனார் என்பதை இன்னமும் ஆச்சர்யத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியாக தொடர்ந்த விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹிலரி தன்னுடைய அனுபவத்தை, உழைப்பை வெற்றிகரமாக பறைசாற்றினார்.அடிப்படை மேடை நாகரீகம், உடல்மொழி, கேள்விகளை எதிர்கொண்ட நிதானம், தனக்கு சாதகமான இடங்களில் அழுத்தமாய் பேசி, தன் பலவீனங்களை சுட்டிக்காட்டியபோது பதட்டமின்றி அந்த பேச்சுகக்ளை திசைதிருப்பி விவாதத்தின் நெடுகே அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த  லாவகம் என பலவகையில் ஹிலரியின் உழைப்பு தெரிந்தது. அந்த வகையில் ட்ரம்ப் எல்லா அம்சங்களிலும் தோற்றுப்போனார்.

தனக்கு சாதகமான அம்சங்கள் பற்றிய புரிதல்களில் ட்ரம்ப் குழம்பிப் போயிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என்பதிலும் அவருக்கு சரியான நிலைப்பாடுகள் இல்லை. அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை முன்வைத்து விவாதித்திருந்தால் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பார் என்றே பலரும் கருத்துச் சொல்லியிருந்தனர்.

ஹில்லரியை பொறுத்த வரையில் உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மேடையில் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியில்லாதவராக காட்ட வேண்டும் என்ற நோக்கம் இந்த முதல் சுற்றில் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஹிலரியின் நம்பகத்தன்மை மீதிருக்கும் சந்தேகத்தின் நிழல் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதை வரும் நாட்களில் ஹிலரி எபப்டி கையாளப்போகிறார் என்பதில்தான் வெற்றி தோல்வி நிர்ணயமாகும். ஏனெனில் இத்தனை மோசமான பின்னடைவுக்குப் பிறகும் சாமான்ய அமெரிக்கர்கள் ட்ரம்ப்பைத்தான் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் சொல்வது ஹிலரிக்கு தோல்விதான். இருவருக்குமான இடைவெளி குறைவாகவே இருக்கிறது. அடுத்த இரண்டு சுற்றுக்களில் அதை நிரப்ப ட்ரம்ப் தன்னாலான அத்தனையும் செய்வார் என்பதால் ஹிலரிக்கு வெற்றி என்பது எளிதில்லை என புரிந்திருக்கும்.

இது ஒரு புறமிருக்க, இந்த இரு கோமாளிகளின் பேச்சுக்களை  யார் கேட்பது என்கிற அலட்சியத்துடன் தொலைக்காட்சியை தவிர்த்தவர்களும் ,  புட்பால் பார்த்தவர்களும் கணிசமானவர்கள் இருந்தனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். விவாதம் நடந்து கொண்டிருந்த போதே சமூகவலைத்தளங்களில் உடனுக்குடன் நக்கலும், நையாண்டியுமான கமெண்ட்டுகள் திங்கள் இரவை விறுவிறுப்போடும் குதூகலமாயும் வைத்திருந்தன.

கடந்த 2008ம் வருடத்தில்  ஒபாமாவுக்கும்  மெக் கைனுக்கும் நடந்த  விவாதத்தில் தன்னுடைய நேர்மையான  வசீகரப் பேச்சால் மக்களின் முழு ஆதரவைப் பெற்றார் ஒபாமா. ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள், புஷ்ஷின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களில் வெறுப்புற்றிருந்த  மக்களுக்கு ஒபாமா ஒரு நாயகனாக தெரிந்தார். கறுப்பர்கள், வெள்ளையர்கள், பிறநாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியும் கண்டார். அதற்குப் பிறகு 2012ல் நடந்த விவாதங்களில் மிட் ராம்னிக்கு ஒபாமாவே பரவாயில்லை என்று தோன்றியதால்

ஒபாமா வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை அபபடியான சூழல் எதுவுமில்லை.

ஒப்பீட்டளவில் கடந்த முறை போட்டியில் இருந்த வேட்பாளர்களை விட , இந்த முறை வேட்பாளர்களின் தகுதியும், தரமும் கேள்விக்குள்ளாகி இருப்பதை தொடர்ந்து கவனிக்கும் எவரும் கூறிவிடமுடியும்.இந்த தேர்தலில் அரசியல் அனுபவம் மிக்க ஹிலரிக்கே தங்கள் ஒட்டு என்று சொல்லவும் முடியாமல்  அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப்-பிற்கும் ஆதரவு தெரிவிப்பதில் இருக்கும் தயக்கம் என தெளிவற்ற குழப்பச்சூழலே இதுவரை நிலவிக்கொண்டிருக்கிறது.

ஒபாமாவின் எட்டாண்டு ஆட்சியில் கணிசமானவர்கள் அதிருப்தி கொண்டிருப்பதும் , ஒருவேளை ஹிலரி பதவிக்கு வந்தால் அது ஒபாமா ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்கிற மக்களின் எண்ணவோட்டம் ஹிலரிக்கு பாதகமாய் அமைய வாய்ப்பிருக்கிறது.  ஏற்கனவே உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருக்கும்  ஆஃப்கானிஸ்தான், சிரிய போர்கள், சிரியா அகதிகள் பிரச்சினை ,இஸ்லாமிய தீவிரவாதிகளின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் ஹிலரியின்  நிலைப்பாடுகளினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அவர் வால் ஸ்ட்ரீட் மக்களுக்காக உழைப்பவர் என்ற பொதுப்படையான குற்றச்சாட்டுகளும் ஹிலரியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இவையெல்லாம்  ட்ரம்ப்புக்கு எத்தனை தூரம் சாதகமாய் அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஹிலரியின் பலவீனங்களை தன்னுடைய பலமாக மாற்றிட  இன்னமும் ட்ரம்ப்புக்கு வாய்ப்பிருப்பதாகவே வல்லுனர்கள் கூறுகின்றனர்.இப்போதைக்கு ஹிலரி முன்னிலையில் இருந்தாலும் கூட வரும் வாரங்களில் ட்ரம்ப் என்னவிதமான உத்திகளை கையாளப்போகிறார், அடுத்தடுத்த விவாதங்களின் போது ட்ரம்ப்பின் செயல்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். அந்த வகையில் வரும் நாட்கள் இரு வேட்பாளர்களுக்கும் சவாலான காலகட்டமாக இருக்கும்.

அடுத்த சுற்று விவாதத்தின் முடிவில் இது பற்றி இன்னும் பேசுவோம்.


வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...