Tuesday, June 6, 2023

ரிஷிகேஷ்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் ரிஷிகேஷ்

 

இந்தியாவின் ஆன்மீக தலங்களில் ஒன்றான ரிஷிகேஷ், உத்தரகாண்டில் உள்ள ஒரு சிறிய நகரம். இமயமலையின் அடிவாரத்தில் கங்கைக்கரையோரத்தில் அமைந்துள்ள ஊரின் இரு கரைகளிலும் மடங்கள், யோகா, ஆயுர்வேத நிலையங்கள், கோவில்கள் நிறைந்து இருக்கிறது. மனநிம்மதியைத் தேடி பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கு வருகிறார்கள். “உலகின் யோகா தலைநகரம்” என்று அழைக்கப்படும் ரிஷிகேஷில் யோகா, தியானம், ஆன்மீக பயிற்சிகள் பற்றிய படிப்புகள் கற்றுத் தரப்படுவதால் இந்தியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டினர் பலரும் தங்கள் பயிற்சியை ஆழப்படுத்தவும், யோக வாழ்க்கைமுறையில் வாழ, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இங்கு வருவதால் பல வெளிநாட்டினரையும் பார்க்க முடிகிறது.

அவர்களும் இங்குள்ள உணவு, உடைக்கு மாறியிருக்கிறார்கள். பேரம் பேசி பொருட்களை வாங்குவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. சிலர் ஹிந்தியிலும் நன்கு பேசுகிறார்கள்! தமிழ்நாடு சென்று படிக்க ஒரு அமெரிக்க மாணவி என்னிடம் தமிழைக் கற்றுக் கொடுக்கச் சொல்லி வகுப்புகள் எடுத்துக் கொண்டாள். ஈஷ்வரின் அமெரிக்க நண்பர்கள் சிலர் தமிழில் நன்கு பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்! அவர்கள் தமிழ்நாட்டில் பல வருடங்களாகத் தங்கி ஆசிரியர் பணி செய்தவர்கள். அடிக்கடி தமிழ்நாடு சென்று வருபவர்களும் கூட! ஒரு நாட்டிற்குச் செல்வதற்கு முன் அந்த நாட்டைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு தான் செல்கிறார்கள். நம் ஆட்கள் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டினர் தானே என்று ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து தான் போவார்கள்.

நாங்கள் தங்கியிருந்த ‘ஹோட்டல் கங்கா ஃபாரெஸ்ட் வியூ’ விடுதியின் முன்வாசல் வழியே வெளியே வந்தால் “மா கங்கா” ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகத் ததும்பிச் சென்று கொண்டிருந்தாள். ஆற்றை ஒட்டி ‘அஸ்தபாத்’ நடைபாதையில் பறவைகளும், குரங்குகளும், கால்நடைகளும், நாய்களும் மனிதர்களுடன் மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்க, மந்திகளின் சேட்டை கொஞ்சம் அடாவடியாகத் தான் தெரிந்தது! ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் கலந்த நீண்ட அலகுடன் இதுவரையில் நாங்கள் கண்டிராத ‘ஹார்ன்பில்’, அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பறவைகளை மரத்தில் பார்த்த எங்களுக்குப் பரம சந்தோஷம். மறக்காமல் ‘க்ளிக்’கிக் கொண்டோம்😎

ரிஷிகேஷிலும் ‘சௌராஷ்ட்ரா ஆசிரமம்’ ஒன்று நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து பத்து நிமிட நடையில் இருந்தது! அம்மாவும் அப்பாவும் அங்கே தங்கியிருந்ததாக முன்பே சொல்லியிருக்கிறார்கள். ஈஷ்வரின் நண்பர் ஒருவரும் மதுரையிலிருந்து அடிக்கடி இங்கு வந்து ஆசிரமத்தை நிர்வகிக்கிறார். நாங்கள் வருவதை அவருக்குத் தெரிவித்தவுடன் கண்டிப்பாக அங்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாங்களும் மாலை நான்கு மணியளவில் அங்கு சென்றோம். வெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதை குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா, இரண்டு, நான்கு சக்கர வண்டிகள், தள்ளுவண்டியில் காய்கறி, பழங்களை விற்பவர்கள் என சாலைக்காட்சிகளுக்கு குறைவில்லை. இந்த களேபரத்தில் சாலையோரத்தில் குடிசையைப் போட்டுக் கொண்டு இரும்புச்சாமான்களை விற்றுக் கொண்டிருந்தது சில குடும்பங்கள். சிரித்த முகத்துடன் சமைத்துக் கொண்டிருந்த பெண்களும் உணவருந்திக் கொண்டிருந்த ஆண்களும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சிரிப்பொலியும் என்று அழகான சின்னஞ்சிறிய உலகம்! தார்ப்பாய் கூடாரம். மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல். திறந்த வெளியில் தான் வாழ்க்கை. ஆனாலும் கேலியும் கிண்டலுமாகப் பேசி சிரித்துக் கொண்டு ஈக்கள் மொய்க்கும் இடத்தில் வாழ்கிறார்கள்! “மகிழ்ச்சி என்பது அந்தந்த நொடிகளில் வாழ்பவர்களுக்கே சொந்தம்”. சாத்தியப்படுத்திக் கொண்டிருந்த மனிதர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்! ம்ம்ம்…

இவர்களை வேடிக்கைப் பார்த்து யோசித்துக் கொண்டே வந்தால் மூன்று நிலைகள், அழகான சிற்பங்கள் கொண்ட வண்ண கோபுரத்துடன் முருகன் கோவில் ஒன்று! வட இந்தியாவில் ‘கார்த்திகேயன்’ என்று அழைக்கப்படும் முருகனின் பெயரில் சௌராஷ்ட்ரா ஆசிரமம். இங்கு யார் வேண்டுமானாலும் தங்கலாம். உணவும் இலவசம்(முன்கூட்டியே தகவல் கூறினால் பெரிய குழுவாக வருபவர்களுக்குச் சமைத்தும் கொடுக்கிறார்கள்). தற்போது மின்சார கட்டணம் கட்டுவதற்காக மட்டும் குறிப்பிட்ட தொகையைக் கேட்கிறார்கள். ஆசிரம செலவுகளுக்கு மனமுவந்து அளிக்கும் நிதியுதவியையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரில் முருகன் சந்நிதி. முருகன் என்றாலே அழகு தானே? சர்வ அலங்காரங்களுடன் மயில்வாகனன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். காலை, மாலை இருவேளை பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கிருந்த தேவி திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தாள். விநாயகர், சிவன், விஷ்ணு, நவக்கிரகங்கள் என்று சிறிய கோவில். முன்பு அங்கு இருந்த தவசிகள் பாதாள அறையில் பல நாட்களுக்குத் தவம் செய்திருக்கிறார்கள். ஈஷ்வருக்கு மிகவும் பிடித்து விட்டது. விட்டால் அங்கேயே அமர்ந்து விடுவார் போல இருந்தார்😮 அதற்குள் அவருடைய நண்பர் எங்களை வரவேற்று அங்கிருந்த மற்ற நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சுவையான தேநீரையும் வழங்கினார்.

மதுரையிலிருந்து 1940களில் ரிஷிகேஷ் வந்த சௌராஷ்ட்ரா துறவி ராக்கேஷ் ஆனந்தா சிறுகுடிசையில் தங்கி இருந்து படிப்படியாக இந்த ஆசிரமத்தைக் கட்டியிருக்கிறார். பல குருக்களுடன், பிரபலங்களுடன் (ரஜினி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர்) எடுத்த பழைய படங்களை மாட்டியிருந்தார்கள். நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றின விவரங்களை அறிந்து கொண்டோம். மறுநாள் காலையில் நடைபெறவிருக்கும் விஜயதசமி பூஜைக்கு வருமாறு அழைக்க, நாங்களும் சரியென்று சொல்லி விடைபெற்றோம்.

‘சார்தாம்’ பயணத்தில் பெரும்பாலும் வாழைப்பழமும் ஆப்பிளும் தான் அதிகம் கிடைத்தது. கோவிலின் எதிரே இருந்த பழக்கடையில் எனக்குப் பிடித்த பழங்களைப் பார்த்ததும் ஓடிச்சென்று ஐஸ், சர்க்கரை சேர்க்காமல் ஆளுக்கொரு பழச்சாறு குடித்தோம். அத்தனை சுவையாக இருந்தது😋 மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்க, படிகளில் இறங்கி சிறிது நேரம் கங்கைக்கரையோரம் அமர்ந்திருந்தோம். வெயில் கொஞ்சம் குறைந்திருந்தது. காற்றும் வீச, மலைகள் சூழ அமைதியாக ஓடும் நதியின் அழகைப் பார்த்துக் கொண்டு அங்கே அமர்ந்திருப்பதே ஜென் நிலை தான்! எங்கள் விடுதியின் அருகில் கூட ஒரு யோகா மையம் இருந்தது. அங்கே அறை எடுத்துத் தங்கி யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அறைகளும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நீல வானம் மெதுவாக மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு வண்ணங்களை ஓவியமாய்த் தீட்ட, நதியில் பிரதிபலித்துக் கொண்டே காலையில் இருந்து அனலாய் தகித்துக் களைத்த வசீகரன் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டான். மாலை நடை செல்பவர்கள் வியர்க்க விறுவிறுக்க கடமையாக நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரே அஸ்தமிக்கும் சூரியனை வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

விடுதியில் இருந்து அரைமணி நேரத் தொலைவில் ‘திரிவேணி படித்துறை’ இருக்கிறது. முதன்முதலில் ஹரித்வாரில் கண்ட ‘கங்கா ஆரத்தி’யில் மனதைப் பறிகொடுத்திருந்தோம். அங்கே இருந்தது போல் இங்கும் கூட்டம் இருந்தால் என்று நினைத்து முன்னாடியே போய் நல்ல இடத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். வீடுகளையும், விடுதிகளையும், யோகா மையங்களையும், கோவில்களையும் கடந்து கூடவே பவனி வந்த கங்கையுடன் நடந்த களைப்பே தெரியவில்லை. மக்கள் கூட்டம் தெரியும் இடம் தான் படித்துறை என்று தெரிந்தது. காலணிகளை வைத்து விட்டு வில்லையை வாங்கிக் கொண்டோம். கிருஷ்ணன் தேரோட்ட, அர்ஜுனன் அமர்ந்திருக்கும் பெரிய சிலையுடன் கூடிய வளைவு படித்துறையை அலங்கரிக்கிறது. ‘மா கங்கா’ சிலையும் அங்கிருந்தது. கங்கா தீர்த்தம் எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் கேன்கள், பூஜைப்பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

மழை இல்லாததால் சுத்தமாக இருந்த படிகளில் அமர, ஆளுக்கு 250ரூபாய் கட்டணம் கட்டி ரசீதும் வாங்கியாயிற்று. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் அங்கே குழுமியிருந்தனர். மெதுவாக கூட்டம் சேர, ஆறு மணிக்குள் படிகள் முழுவதும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அதைத்தவிர மண்டபத்திலும் நல்ல கூட்டம். வார நாட்களில் இந்த கூட்டம் இருந்தால் வார விடுமுறையில் எவ்வளவு இருக்கும்?!

பூஜைக்கான வேலைகள் ஆரம்பமாயின. விதவிதமான தீபாராதனை விளக்குகள், பூஜைப்பொருட்களுடன் 13 பூஜை மேடைகள். ஆராதனை செய்ய இளைஞர்கள் முதல் அனுபவமிக்க ஆச்சாரியார்கள். வரிசையாக படியில் அமர்ந்திருந்தவர்களை அழைத்து கங்கா அன்னைக்குப் பூஜை செய்ய சொன்னார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆச்சாரியார் மந்திரங்கள் சொல்ல, தேங்காய், பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், புதுத்துணி வைத்து மலர்களால் அன்னையை அர்ச்சித்து தீபங்கள் காட்டி பூஜை செய்தது வார்த்தைகளில் சொல்லிட இயலாத உள்ளார்ந்த உணர்ச்சிகரமான அனுபவம்! மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. பல சிந்தனைகளால் மன நிம்மதியற்ற நிலையில் ஆரம்பித்த இந்த யாத்திரையில் ஒவ்வொரு நிமிடத்தையும் முழுவதுமாக அனுபவித்து மன நிறைவு கொண்டோம். இந்த உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்களும் ஒருமித்த நிலையில் மக்களின் மனங்களும் பக்தியில் என்று அந்த இடமே பரவசமாக இருந்தது. இயற்கையை ஆராதிக்கும் மனமிருந்தால் போதும். எங்கும் எதிலும் இறைவனைக் காணலாம்.

நன்கு இருட்டிய பிறகு 6.45 மணியளவில் மகா தீபாராதனை ஆரம்பமாகியது. பின்னணியில் அருமையான பஜன்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் இருந்த வட இந்தியர்கள் பலரும் சேர்ந்து பாடியதைக் கேட்க ரம்மியமாக இருந்தது. 13 ஆச்சாரியார்களும் நான்கு திசைகளை நோக்கி ஒரு சேர செய்த தூப, தீபாராதனையின் போது கூட்டத்தில் ‘ஜெய் கங்கா மையா’ கோஷம் மயிர்க்கூச்செறியும் அனுபவம். விளக்கை நம் கைகளில் கொடுத்து ஆராதனை காட்டவும் சொல்கிறார்கள். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்வுடனும் நிம்மதியுடனும் கூட்டம் கலைந்து பஜனை செய்யும் இடத்தில் கூட்டம் கூடி விட்டது. மக்களைப் பார்த்தவுடன் அவர்களும் உற்சாகமாகப் பாடல்களைப் பாட, இளைஞர்கள் கூட்டம் ஆடிப்பாடிக் கொண்டாட, அங்கே இருந்தவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா? யாரும் யாரையும் வெறுக்காத மனநிலையில் நான் அங்கு கண்டதெல்லாம் அன்பும் பக்தியும் இன்பமும் மட்டுமே. இந்துக்களாகப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்! நம்மை மிரட்டிக் கட்டுப்படுத்துபவர்கள் இன்றி நமக்குப் பிடித்த கடவுளை வணங்கிக் கொண்டாட முடிகிறது. இனிய அனுபவத்துடன் கூட்டம் கலைய, காலணிகளை வாங்கிக் கொண்டோம். “காசு கொடுங்கள்” என்று யாரும் தலையைச் சொரிந்து கொண்டு கேட்கவில்லை. மதுரையில் கோவில்களில் காலணிகளை வைக்க இலவசம் என்றாலும் சிலர் கேட்கிறார்கள்.

இரவு உணவிற்கு உணவகங்களைத் தேடிச் சென்ற தெருக்களில் துணிக்கடைகள் ஏராளம். தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க எனக்கும் கடைக்குச் சென்று துணிகள் வாங்க ஆசை. சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து உணவகங்களைத் தேடினால் அங்கும் கூட்டம்! தள்ளு வண்டிகளில் ஆலு பூரி, பானி பூரி வகைகள் தான் அதிகம் தென்பட்டது. ஓரிடத்தில் இலைகளை மடித்து கிண்ணங்களாக்கி பானிபூரிகளை வைத்து தயிர், விதவிதமான சாஸ்கள் கலந்து நல்ல வியாபாரம். நாங்கள் இளநீர் குடித்து வாழைப்பழம், சப்போட்டா பழங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கடைத்தெருவுக்குள் வந்தால் துணிக்கடைகளை மூட ஆரம்பித்திருந்தார்கள். அவசரத்திற்கு இரண்டு குர்த்திகளை மட்டும் வாங்கிக் கொண்டேன். 8.30 மணிக்கெல்லாமா கடைகளை மூடுவார்கள்? என்ன ஊருடா இது? என்று ஏமாற்றமாக இருந்தாலும் காசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானமாகி விட்டேன். ஈஷ்வருக்கு அப்பாடா என்றிருந்திருக்கும். ஆனாலும், “நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று நல்லபிள்ளையாக சொல்லி விட்டார்.

ஈ-ரிக்ஷாவில் ஏறி விடுதிக்கு வந்து சாப்பிட்டு விட்டு அன்றைய நாளின் இனிமையான பொழுதுகளை அசை போட்டபடி தூங்கி விட்டோம். காலையில் நான் விழிப்பதற்குள் ஈஷ்வர் எழுந்திருந்தார். “வெளியில் வந்து பாரு” என்றவுடன் கேமரா சகிதமாக ஓடினால் மூடுபனி படர்ந்த கங்கா நதி. மேகங்களுக்குள் புதைந்திருந்த சூரியபகவான் வெளியே தலைநீட்ட யோசித்துக் கொண்டிருந்தார். அழகான கவிதையாக காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்து காலை நேர அதிசயங்களைக் கண்டுகளித்து விட்டு சௌராஷ்ட்ரா ஆசிரமத்தில் நடக்கும் விஜயதசமி பூஜைக்குச் செல்ல தயாரானோம். குழந்தைகள் வருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் பிரசாதமாக வாழைப்பழங்களை வாங்கிச் சென்றோம். பூக்கள், பத்தி, சமையலறையிலிருந்து வெண்பொங்கல் மணம் மதுரையில் இருப்பது போன்று இருந்தது. எங்களைக் கண்டதும் ஈஷ்வரின் நண்பர் ரகுவும் சேலத்தைச் சேர்ந்த துறவியும் வந்து பூஜையில் கலந்து கொண்டார்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் நெய், மிளகு மணக்க வெண்பொங்கல். பின் காபி. மதியமும் அங்கே வந்து சாப்பிடுமாறு கூற, அவர்களிடமிருந்து விடைபெற்று சிவானந்த ஆசிரமத்திற்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம். பூக்கள், காய்கறி, பழங்கள் விற்கும் சந்தைகள், உணவகங்கள், விடுதிகள், ஆசிரமங்கள் என்று அந்தச் சாலை முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது.

15 நிமிட தூரத்தில் இருந்தது சிவானந்த ஆசிரமம். போக்குவரத்து நெரிசல். வண்டிகளின் சத்தம். இங்கு எப்படி ஆசிரமத்தை அமைத்தார்கள் என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தால் 120 படிகள்! அய்யோடா! மூச்சு வாங்க ஏறி விட்டேன். அங்கிருந்த சாதுக்கள் சகஜமாக ஏறி இறங்குகிறார்கள்!ம்ம்ம்! வயதானவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள் தான் பாவம். அம்மா படிகளில் ஏற முடியாததால் கீழேயே உட்கார்ந்து இருந்ததாகவும் அப்பா மட்டும் ஆசிரமத்திற்குச் சென்று வந்ததாகக் கூறியது அப்பொழுது புரிந்தது. வயதானவர்களும் ஏறிச்செல்லும் வகையில் வசதிகளைச் செய்தால் நன்றாக இருக்கும்.

அத்தனைப் படிகளைக் கடந்து வந்தால் பரபரப்பின்றி வேறொரு அமைதியான உலகம் காத்திருக்கிறது அங்கே! நுழைவாயில் தூண்களில் வாழ்க்கையைச் சிறப்புற வாழ கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பொரித்து வைத்திருந்தது சிறப்பு. சிலவற்றையாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உள்ளே சென்றால் அமைதியான அழகான சிவன் கோவில். அப்பொழுது தான் அபிஷேகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுவாமியை வணங்கிவிட்டு வலம் வருகையில் ஸ்ரீஆதிசங்கரர் உருவச்சிலையுடன் குருக்களின் படங்களும் இருந்த மண்டபத்தில் கணீரென்று தமிழில்

“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க “

என்று கண்மூடி பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள் அக்கா தங்கை இருவர். அவர்கள் கணவர்களும் அங்கே இருந்தனர். அடடா! நமக்குத் தெரிஞ்ச நாலு வரிகளாச்சே என்று நானும் வாயசைக்கவும் அந்தப் பெண்களில் ஒருவருடைய கணவர் அவர்களிடம் “இவா நன்னா தமிழ்ல பாடினா” என்று சொல்லவும் நானும் சிரித்துக் கொண்டே தமிழில் பேச ஆச்சரியப்பட்டார்கள். நாம் உடுத்தும் உடையும், போடும் மேக்கப்பும் நம்மை வேற்று ஆட்களாக மாற்றிவிடுகிறதோ? சிரித்துக் கொண்டே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருந்து டெல்லியில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருந்த தங்கை சிவ தீக்ஷை பெற்றிருக்கிறார். ஆன்லைனில் திருவாசகம் பாடல்கள் வகுப்புகள் எடுப்பதாகவும் கூறினார் என்று தெரிந்தவுடன் ஈஷ்வரையும் அறிமுகப்படுத்தி விட்டு வேறு பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்க, அவர்களும்

“தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்றுஒன்றல் ஓட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே …”

என்று திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தையும் பாடி மகிழ்வித்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று விவரங்களைக் கேட்டு அவர்களைப் பற்றியும் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றோம். அதற்குள் கோவிலில் ருத்ரம் சொல்லிக்கொண்டே அபிஷேகம் ஆரம்பிக்க, அங்கிருந்த சிலருடன் நாங்களும் அமர்ந்து பூஜை முடியும் வரை இருந்தோம். ஈஷ்வர் தியானம் செய்து கொண்டிருந்தார். வெளியில் இருந்த இரைச்சல் தொலைந்து போய் அத்தனை அமைதி அங்கே குடிகொண்டிருந்தது. இதனைத் தேடித்தான் இத்தனை மக்களும் இங்கே ஓடி வருகிறார்களா? அங்கே தங்கி இருந்தவர்கள் முகத்திலும் சாந்தோமோ சாந்தம். பல ஆன்மீக வகுப்புகள் நடக்கிறது. ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு செல்ல மனமில்லாமல் ‘ஆந்திரா ஆசிரமம்’ சென்றோம்.

அழகான திருப்பதி பெருமாள் தரிசனம் ரிஷிகேஷிலும் கிடைக்கிறது. கோவிலில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அதிகம் சுற்றிப்பார்க்க முடியவில்லை. அருகே அவர்களின் உணவகம் கூட இருந்தது. அங்கிருந்து அருகிலிருக்கும் ‘இஸ்கான்’ இயக்கத்தைச் சேர்ந்த ‘மதுபான் ஆசிரமம்’ வந்து சேர்ந்தோம். உயர்ந்த அழகான கோவில் கோபுரம். சுத்தமான வளாகம். பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணர் சிலைகள். அங்கிருந்து ஜானகி பாலம், மலைகள் அழகாகத் தெரிந்தது. வெயிலின் உக்கிரம் கூடிக் கொண்டே வர, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் செல்ல ஜானகி பாலத்திற்கு அருகேயே இறக்கி விட்டுச் சென்று விட்டார் ஆட்டோக்காரர். இப்படியே ‘அஸ்தபாத்’ நடைபாதை வழியே கங்கையை ஓட்டிச்சென்றால் ஆசிரமம் வந்து விடும். அந்தப்பாதையில் வண்டிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியதால் நடக்க ஆரம்பித்தோம்.

அங்கே சாலையோர தள்ளு வண்டியில் சுடச்சுட பூரி வியாபாரம் கனஜோராக நடந்து கொண்டிருந்தது. அவ்வளவு தான்! ஈஷ்வருக்குச் சாப்பிட ஆசை வந்து நான்கு பூரி, காரமான உருளைக்கிழங்கு சன்னா மசாலா சாப்பிட்டோம். நல்ல சுவையுடன் இருந்தது. விலையும் அதிகமில்லை. எவர்சில்வர் தட்டுக்களில் தான் பரிமாறுகிறார்கள். நெகிழிக் குப்பைகள் குறைவாக இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய உணவகங்களில் கிடைக்கும் உணவுகளின் சுவையை விட பல சாலையோரக்கடைகளில் கிடைக்கும் உணவுகளின் சுவை நன்றாக இருக்கிறது. என்ன? கேட்டாலும் கேட்காவிட்டாலும் காற்றோடு கொஞ்சம் புழுதியையும் சேர்த்துச் சாப்பிடுவோம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று நம்பாட்டுக்கு லபக்கிக்கிட்டே போக வேண்டியதுதான். குழந்தைகளுடன் வந்திருந்தால் இந்த சுதந்திரம் எல்லாம் கிடைக்காது.

அங்கிருந்து சுவாமி தயானந்த ஆசிரமத்திற்குச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, எனக்கோ தலைச்சுற்ற, ஈஷ்வர் சட்டைத் தொப்பலாக நனைந்து நடுவழியில் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று இருந்தது! ஓரிடத்தில் நிழற்குடையின் கீழ் சிறிது நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது அனுபவித்தால் புரிகிறது! அக்டோபர் மாதமே இப்படி இருக்கிறதே கோடையை நினைத்தாலே பயமாக இருந்தது. மதுரை வெயில் எல்லாம் ஒன்றுமில்லை. வாங்கிய தண்ணீர் பாட்டிலும் காலியாக, தாகம், களைப்புடன் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம்.

எதிரே ‘மா கங்கா’. ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அழகான சிறிய கோவில். உள்ளே மாணவர்களுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் குரு. அவர்கள் அனைவரும் கணீரென சொல்வதைக் கேட்க நன்றாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கோவிலுக்குள் செல்ல உடை விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார்கள். அருகிலேயே சிறிய கட்டடத்தில் பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதிக்குச் சிலை எழுப்பி அங்கே பலரும் தியானித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு உரக்கப் பேசக்கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். வெயிலில் நடந்து வந்த களைப்பெல்லாம் ஓடியே போச்சு! மனம் அமைதியானால் சர்வமும் அமைதியாகி விடுவது மாயையோ! பரந்த வளாகத்தில் அழகான குடியிருப்புக் கட்டடங்கள். சுத்தமாக அமைதியாக இருந்தது.அங்கேயே சில நாட்கள் தங்கி விடமாட்டோமா என்று மனம் ஏங்கத்தான் செய்தது!

ஆசிரமத்திற்கு இரு வழிகள் இருக்கிறது. பிரதான சாலைக்குச் செல்ல வேறு வழியில் தெருக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நடந்தோம் நடந்தோம் வெகு நேரம் நடந்தோம். முதலில் தென்பட்ட ஆட்டோவைப் பிடித்து பசியுடன் சௌராஷ்ட்ரா ஆசிரமத்திற்குச் சென்றோம். நன்றாக சாம்பார், ரசம் சகிதம் சௌராஷ்ட்ரா சாப்பாடு சாப்பிடலாம் என்று ஆசையாகப் போனால் ரவா கேசரி, பூரி, கொண்டைக்கடலை மசாலா என்று ஏமாற்றி விட்டார்கள்😞 ரவா கேசரி சுவையாக இருந்தது. சாப்பிட்டுச் சிறிது நேரம் பேசி காபி குடித்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

அப்படியே ஆற்றில் ஒரு குளியல் போட்டால் என்ன என்று உடைகளை மாற்றிக் கொண்டு படித்துறைக்குச் சென்று ஆற்றில் கால் வைத்தால் ‘சில்ல்ல்ல்ல்ல்’ என்று இருந்தது. கங்கையில் முதன் முதலாக குளிக்கிறேன். பார்க்கத்தான் அமைதியாகத் தெரிகிறது. ஆளை இழுத்துக் கொண்டு சென்று விடும் வேகம். ஆழமும் கூட. ஈஷ்வர் பிடித்துக் கொள்ள மூன்று முறை முங்கி எழுந்தேன். முதன் முதலில் ஆற்றில் குளித்தது கர்நாடகாவில் பாகமண்டலா திரிவேணி சங்கமத்தில். இது புது அனுபவம். அதுவும் கங்கையில்! ஈஷ்வரும் குளித்து முடித்த பிறகு மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி விட்டு விடுதிக்கு வந்து இளைப்பாறினோம். புத்துணர்ச்சியாக இருக்கவே, தேநீருக்குச் சொல்லி விட்டு விடுதியின் முன்னறையில் அமர்ந்திருந்தோம். வெளியில் மந்திகள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்! “ரொம்ப பக்கத்தில போகாதீங்க” என்று மேனேஜர் வேறு பயமுறுத்தி இருந்தார். அது வேறு சாப்பிட ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில் கோவமாக இருந்தது. முடிந்த மட்டும் படங்களை எடுத்தேன்.

டெல்லியிலிருந்து வந்து அங்கு தங்கியிருந்த ஒரு குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்த பொழுது ‘கங்கா ஆரத்தி’ பார்க்க ‘பரமார்த்த நிகேதன்’ ஆசிரமத்திற்குச் செல்லுமாறு கூறினார்கள். சரி என்று மாலையில் அங்குச் செல்ல முடிவெடுத்தோம். அப்பொழுது தான் விடுதிக்குள் நுழைந்த ஒருவர் ஈஷ்வரைப் பார்த்துத் திகைத்த முகத்துடன் உள்ளே வந்தார். பின்பு ஏதோ நினைத்தவராக, “நீங்கள் பாலிவுட் நடிகரா?” என்று கேட்டு ஈஷ்வருக்கா ஒன்றும் புரியவில்லை. என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையேன்னு நினைத்தவராக, “நானா? இல்லையே? இப்பொழுதான் முதன் முதலாக இப்படியொரு கேள்வியை எதிர்கொள்கிறேன்” என்று சிரித்தபடி கூறவும், அந்த நபரும், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது சாயல் உங்களிடம் அப்படியே இருக்கிறது.” என்று படத்தைக் காண்பித்தார். பாவம் ஈஷ்வருக்குத் தான் அந்த நடிகர் யாரென்றே தெரியவில்லை. என்னிடம் கேட்டார். “நான் இவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை” என்றேன். ஆனால் அந்த நபர் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டு கைகுலுக்கி விடைபெற்றார்! இப்படியும் சிலர்!

ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் காலையில் சென்ற வழியே ‘ஜான்கி பாலம்’ வரை வண்டியில் சென்று இறங்கி விட, அங்கிருந்து 15 நிமிட நடை. சைக்கிளில், தள்ளுவண்டிகளில் வைத்து வழியெங்கும் விதவிதமான உணவுக்கடைகள். மக்களும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எண்ணெயில் வறுபட்டுக் கொண்டிருந்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் சமோசாக்களையும் வாங்கிச் சுவைத்துக் கொண்டே நடந்தோம். இந்தமாதிரி சிறு தொழில் வியாபாரிகள் ஊர் முழுவதும் தென்பட்டார்கள். கொரோனா காலத்தில் பயணிகள் யாரும் இன்றி இவர்கள் எல்லாம் எப்படிச் சமாளித்தார்களோ!

பாலத்தில் சரியான கூட்டம். நாங்கள் அங்கு போய்ச் சேர, ஆரத்தி அப்பொழுது தான் முடிந்திருந்தது. வந்தது தான் வந்தோம் அந்த ஆசிரமத்திற்குச் செல்லலாம் என்று உள்ளே போனால் அது வேறு உலகமாக இருக்கிறது! குப்தகாசியில் சந்தித்த ரஷ்யப் பெண்மணி ஒருவர் “இந்த ஆசிரமத்தில் தங்கி இருக்கும் அமெரிக்கப் பெண்மணி தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நல்ல மார்க்கெட்டிங் திறமை இருக்கிறது. ஆனால் அங்கு வரும் இந்தியர்களிடம் அவர்களுக்குத் தெரியாமலே இந்தியாவைப் பற்றின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்😯 எவ்வளவு தூரம் இதில் உண்மை இருக்கிறது என்பது அந்த ஆசிரமத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்குத் தான் தெரியும்😑

அங்கு வெளிநாட்டினர், உள்நாட்டினர், மாணவர்கள், சாதுக்கள் என்று நல்ல கூட்டம். பெரிய பெரிய சிவன், விஷ்ணு, ஹனுமன் சிலைகள். மரங்கள், செடிகள் என்று மக்களைக் கவரும் வண்ணம் ஒளியூட்டப்பட்டு பிரம்மாண்டமாக இருந்தது! மிகப்பெரிய வளாகம். கட்டடங்கள் என்று பிரமிக்க வைத்தது! எங்கிருந்தோ சாப்பாட்டின் வாசனை வரவே, மோப்பம் பிடித்துச் சென்றால் அருகிலேயே கேன்டீன் இருந்தது. அங்கே தோசை, இட்லி எல்லாம் கிடைக்கிறது. துண்டைப் போடு என்று ஓரிடத்தில் இடம்பிடித்து உட்கார்ந்து விட்டோம். சட்னி, சாம்பாருடன் சுடச்சுட மொறுமொறு தோசை. ஆகா! தெய்வம் இருப்பது இங்கே மொமண்ட். எதிரில் அமர்ந்திருந்த சாது சிரித்த முகத்துடன் சிநேகபாவத்துடன் களையாக இருந்தார். அவர் பத்ரிநாத் அருகே ஆசிரமம் வைத்திருப்பதாக கூறினார். எங்களுடைய சொந்த ஊர் மதுரை என்றதும் ராமேஸ்வரம் செல்ல அடிக்கடி மதுரை சென்றிருக்கிறேன். நல்ல ஊர் என்றார். அமெரிக்காவிற்கும் அடிக்கடி வருவாராம்! ம்ம்ம்… அவர் எங்களைத் தமிழர்கள் என்று நினைத்து விட்டார் என்று நினைக்கிறேன். “உன் மனைவி குஜராத்தியா” என்று ஈஷ்வரிடம் கேட்க, “இல்லை நாங்கள் சௌராஷ்ட்ரா. இப்படித்தான் அவளை எல்லோரும் கேட்பார்கள்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல, அதான் அவர் முதலில் என்னிடம் இந்தியில் பேசினாரோ? நான் வேற அச்சா அச்சா. டீக் ஹே என்று பதில் சொல்லி அவரைக் குழப்பிவிட்டேன் போலிருக்கிறது😆 ஹே ராம்!

திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு வெளியில் படித்துறைக்கு வந்தால் தவக்கோலத்தில் பெரிய சிவன் சிலை! கூட்டம் இல்லாததால் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம். 2013 வெள்ளத்தின் பொழுது சிவனின் கழுத்து வரை தண்ணீர் அலையடித்து ஆக்ரோஷமாக செல்லும் காட்சி செய்திகளில் பார்த்தது நினைவிற்கு வந்தது! இன்றும் கம்பீரமாக இருந்தார் நீலகண்டன்! ரிஷிகேஷ் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது கங்கையில் இருக்கும் சிவனின் சிலை தான். இக்கரையில் பார்க்க வேண்டிய ஆசிரமங்களும் கோவில்களும் அத்தனை இருக்கிறது. நேரமின்மை காரணமாக எங்களால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்த பூ விற்கும் சிறுவர்கள் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்க, ஈஷ்வர் வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரம் கரையில் அமர்ந்து விட்டு ‘ராம் ஜூலா’ பாலம் வழியே சாலையை வந்தடைந்தோம். வழியில் கடைகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். உணவகங்கள் மட்டும் திறந்திருந்தது. இன்றும் துணிக்கடைகளுக்குச் செல்ல முடியவில்லை😞 ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு விடுதிக்குள் வந்து மறுநாள் டேராடூன் விமான நிலையத்திற்குக் காலையில் செல்ல வண்டிக்குச் சொல்லி விட்டுத் தூங்கி விட்டோம்.

அதிகாலையில் எழுந்து தயாராகி கங்காவைப் பார்த்து விடைபெற்று வரலாம் என்று கிளம்பினேன். ஈஷ்வரும் தயாராகி வந்து விடுவதாகச் சொல்ல, வெளியில் “புத்தம் புது காலை பொன்னிற வேளை!…”. காலை நடை செல்லும் உள்ளூர் மக்கள் அனைவரும் கையில் தமிழக முதல்வரைப் போல ஒரு மந்திரக்கோலை கையில் வைத்திருந்தார்கள். நாய், குரங்குகளை விரட்ட😂 ‘சிலுசிலு’ காற்று. கொஞ்சம் குளிர். குளித்து விட்டுப் பூஜைகள் செய்பவர்கள், அசமஞ்சமாக உட்கார்ந்திருப்பவர்களைக் கடந்து சென்றால் ஓரு ஆசிரமத்தில் சூடான எலுமிச்சம்பழ தேநீரை இலவசமாக கொடுக்கிறார்கள். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்கள். குடித்து விட்டுக் காத்திருக்கையில் ஈஷ்வரும் சேர்ந்து கொள்ள, காசு கொடுத்து விட்டு காலைப்பூஜை நடந்து கொண்டிருந்த சாய்பாபா கோவிலை வலம் வந்தோம். சமீபமாக சாய்பாபா கோவில்கள் நிறைய முளைத்திருக்கிறதோ! ஆல்பனியில் கூட ஒன்றை ஆரம்பித்து கோலாகலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர மக்கள். நல்ல கூட்டமும் சேருகிறது! ஆற்றில் ஒருவர் கயாக்கில் ஹாயாக சென்று கொண்டிருந்ததை ஈஷ்வர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்😔 அவருக்குப் படகு, கனூ, கயாக்கில் ஆற்றுக்குள் துடுப்புப் போட்டபடி செல்ல மிகவும் பிடிக்கும்.

‘ரிவர் ராஃப்ட்டிங்’ என்னும் காற்றடைத்த மிதவையில் பயணம் செல்வது இங்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. அலைகள், சுழல்கள் இருக்கும் பகுதிகளில் அழைத்துச் செல்வார்கள். அதிலிருந்து மீண்டு வரும் சாகசம். தூர்தர்ஷனில் அந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது. முதன் முதலில் யூட்டா மாநிலத்திலும் பின்பு நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றிலும் பயந்து கொண்டே ராஃப்ட்டிங் செய்ததும் நினைவிற்கு வந்தது. குழந்தைகள் வந்திருந்தால் விரும்பிச் செய்திருப்பார்கள். வேறு வழியின்றி நானும் கூட போயிருப்பேன்.

“ரிஷிகேஷை நாம ரொம்ப மிஸ் பண்ணப் போறோம்.” ஈஷ்வர் சொல்ல, உண்மை தான். ஏதாவது ஒரு ஆசிரமத்தில் தங்கி விட மாட்டோமோ என்று மனம் ஏங்கினாலும் கடமைகள் தான் இன்னும் இருக்கிறதே என்ற நினைவு வர, “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என சமாதானப்படுத்திக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். எல்லாவற்றையும் பேக் செய்து வைத்திருந்தேன். வண்டியும் வர, விடுதி சிப்பந்திகளிடம் விடைபெற்று விமான நிலையத்திற்கு கிளம்பினோம். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என்று காலை நேரப் பரபரப்புடன் இருந்த நகரத்தை விட்டு ‘குளுகுளு’ மலைப்பாதை வழியே பயணம் அருமையாக இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவில்களும் இயற்கைக்காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கட்டிய புராதனக் கோவில்களும் மனதிற்கு ஆறுதலைத் தரும் அருமருந்தாக இருக்கிறது. ‘தேவ பூமி’ என்று இந்த புண்ணிய பூமியைக் கொண்டாடுவது இதனால் தானோ? வட இந்திய இந்துக்கள் பலருக்கும் ‘சார்தாம்’ யாத்திரை என்பது வாழ்நாள் தவமாக இருக்கிறது. அதனால் வயது முதிர்ந்தவர்களும் தவறாமல் ஹரித்வார், ரிஷிகேஷ், சார்தாம் பயணத்தை மேற்கொள்கிறார்கள். 12 நாட்களில் ஏழு விடுதிகளில் தங்கி பல ஊர்கள், ஆறுகள், கோவில்களுக்குச் சென்று பல மனிதர்களைச் சந்தித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழும் ஒரு இனிய அனுபவமாக அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறி, இன்னும் நான்கு மணிநேரத்தில் காசியில் இருப்போம் என்ற நினைவே இனிக்க, ‘பை, பை உத்தரகாண்ட்’ சொல்லி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க உத்தரப்பிரதேசத்தை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.

Monday, May 22, 2023

A Man Called Otto


வயதானவர்கள் அதுவும் துணையின்றி தனித்து வாழ்பவர்களில் பெரும்பாலோனரிடம் ஒருவித எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும். முகத்தையும் 'உர்ர்ர்ர்'ரென்று வைத்துக் கொண்டு கோபத்துடனே அலைவார்கள். இது இயற்கையானது தான் என்றாலும் ஒரு சிலர் இதற்கு நேர்மாறாக இருப்பார்கள். 'A Man Called Otto' திரைப்படத்தின் கதாநாயகன் மனைவியை இழந்து வயதான காலத்தில் பழைய ஞாபகங்கள் துரத்த, பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து அதுவும் தோல்வியில் முடிய விரக்தியுடன் வாழ்க்கையை ஓட்டுபவர்.

அவருடைய வீட்டிற்கு எதிரே குடிவரும் 'மேரிசோல்' என்ற ஸ்பானிஷ் பேசும் பெண்மணியின் குடும்பம் மெல்ல இவரை மாற்றுகிறது. வாழ்க்கையை இனிமையாகக் கழித்திட முடியும் என்று உணர வைத்து வாழ்வின் பொருளை உணர்த்துகிறது.

டாம் ஹாங்க்ஸ் படம் என்றாலே கதை, நடிப்பு எல்லாம் இருக்கும் என்பதால் தைரியமாகப் பார்க்கலாம். தனிமை எவ்வளவு கொடுமை? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்? அக்கம்பக்கத்து மனிதர்களுடன் முகம் தெரிந்த, தெரியாத நபர்களுடன் பேசி நட்பை வளர்த்திட முடியும். அது தனிமையில் வாடுபவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என்று படம் கூறுகிறது.

காதலித்துத் திருமணம் புரிந்த மனைவி, அவர்களுக்கு நடந்த பேராபத்து, மனைவியை இழக்கும் கொடுமை என்று பல நிகழ்ச்சிகளை மனம் அசைபோட்டு எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி அதிலிருந்து மீளவும் முடியும் என்று தன்னம்பிக்கையையும் கதாநாயகனுக்குத் தருகிறது. நம் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் காரணம் நம்முடைய தேர்வுகளே. சரியான தேர்வுகள் நம்மை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும். தவறான தேர்வுகள் நம் துக்கத்திற்கு காரணமாக இருக்கும். அதிலிருந்தும் மீள முடியும் என்பதே கதை.

தன் மனைவியின் மாணவன் ஒருவனுக்கு உதவ, அவனும் அவருக்கு உதவ அதில் நிறைகிறது மனதும் வயிறும். அதே போல, எதிர் வீட்டில் உள்ள குழந்தைகள், பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்கள் என்று எல்லோரிடமும் மீண்டும் பழையபடி பழக, கதாநாயகனின் தற்கொலை எண்ணம் மறைந்து  வாழவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. அதுவும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் வளமாக்க உதவுகிறது. பூனையும் ஒரு கதாபாத்திரமாக😍

இதைத்தான் 'இகிகை' எனும் ஜப்பானிய வாழ்வியல் முறை அறிவுறுத்துகிறது. நம்முடைய நீண்ட கால வாழ்விற்கும் மனமகிழ்ச்சிக்கும் சமூகமாகச் சேர்ந்து வாழ்தல் முக்கியமான ஒன்று என்று. ஒருவருக்கொருவர் ஆறுதலாக, உதவியாக வாழ்வதால் மனமகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். இதைத்தான் இந்தப் படமும் உணர்த்துகிறது.

டாம் ஹாங்க்ஸ் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேரிசோலாக நடித்திருக்கும் மரியானா ட்ரெவினோவின் நடிப்பு அருமை. நெட்ஃப்ளிக்ஸ்ல் காண கிடைக்கிறது.




Thursday, May 18, 2023

மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே


2011ஆம் ஆண்டில் நார்வே அதிகாரிகள் இந்திய தம்பதிகளின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்ற வாழ்க்கைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் 'Mrs Chatterjee vs Norway'. நார்வேயில் தனது கணவர், இரண்டு சிறு குழந்தைகளுடன் வசிக்கும் திருமதி சாட்டர்ஜி (ராணி முகர்ஜி) என்ற இந்தியப் பெண்ணின் கதையை இப்படம் சொல்கிறது.

குழந்தைகளை அந்நாட்டு முறைப்படி வளர்க்கத் தெரியவில்லை. தாய்க்கு மனநிலை சரியில்லை. வீட்டில் கணவன் மனைவியை வன்முறை செய்கிறார் என்று நார்வே சமூக சேவகர்களால் குற்றம் சுமத்தப்பட்டு குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். தன் குழந்தைகளை மீட்கப் போராடுகிறார் கதாநாயகி. நீதிமன்றத்தில் இவர்களுடைய வழக்கில் பலமுறை தோற்கடிக்கப்படுகிறார்கள். முடிவு என்ன என்பது தான் கதை.

இப்படத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன் குழந்தைகளைக் காப்பகத்திலிருந்து ஸ்வீடனுக்கு அழைத்துச் செல்வதைக் கடத்தல் என்று குற்றஞ்சுமத்துகிறது நார்வே அரசு. உண்மை தான். அது கடத்தல் தான். தான் பெற்ற குழந்தைகளை எடுத்துச் செல்வது எப்படி கடத்தலாகும் என்று கத்தி கூப்பாடு போட்டால் மனநிலை சரியில்லை என்று மீண்டும் வழக்கு.  திருமதி சாட்டர்ஜி நம்பிக்கையைக் கைவிடாமல் தன் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிறார். குழந்தைகள் நல அமைப்புகளில் கலாச்சார சார்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இறுதியில் நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியான செய்தியுடன் படம் முடிகிறது.  

கையால் ஊட்டிவிட்டால் தவறு என்பதை எந்த இந்தியரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டினருக்கு அதுவும் நார்வே அதிகாரிகளுக்கு அது தவறாகத் தெரிகிறது. சிறு குழந்தைகள் பெற்றோருடன் தூங்குவதில் என்ன தவறு? அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது. குழந்தைகளைக் கண்டிக்கப் பெற்றோர்கள் அடிப்பார்கள். அடி வாங்கி வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். பள்ளிகளில் கூட பிரம்படி வாங்கிப் படித்தவர்கள் நாம். இன்று ஏனோ அதை இந்தியாவிலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. குழந்தைகளை அடிப்பது தவறு என்று அமெரிக்காவிலும் சொல்வார்கள். பேசத் தெரிந்த குழந்தைகள் 911ஐ அழைத்து என்னை அடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் போதும் பெற்றோர்களைச் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகத்தில் விட்டு விடுவார்கள். ஏனென்றால் அடிப்பதைக் குழந்தைகள் மீதான வன்முறை என்று இந்த மேலைநாடுகளில் கூறுகிறார்கள். அடிப்பதற்கும் கண்டிப்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இவர்களுடைய கலாச்சாரத்தில் குழந்தைக்கு வளர்ப்புத்தந்தை, தாய் என்று ஏகப்பட்ட குழப்பங்கள். மனநலம் குன்றியவர்களும் அதிகம். ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கிறது தான். அதற்காக இப்படியா?

இந்தியாவில் பக்கத்து வீடு, நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் பொழுது அவர்கள் சமைப்பதை நமக்கும் கொடுப்பார்கள். நாமும் வாங்கி உண்போம். ஆனால் மேலை நாடுகளில் அப்படி எளிதில் செய்துவிட முடியாது. குழந்தைகளின் பெற்றோர்களிடம் முன்அனுமதி கேட்க வேண்டும். இது நல்லதுக்குத் தான். பல குழந்தைகளுக்கும் இங்கு உணவு ஒவ்வாமை இருக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவு தான். நான் பழகிய வரையில் குழந்தைகளும் எதுவும் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் இந்த ஊர் ஜூஸ், ரொட்டி, இனிப்புகளைத் தான் விரும்புவார்கள். ஒரு சில குழந்தைகளே நாம் சாப்பிடும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களின் குடும்பத்துடன் இருக்கும் நம் பழக்கத்தைப் பொறுத்தது. அதனால் நன்கு பரிச்சயமில்லாத மேலைநாட்டுக் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நாம் செய்யக் கூடாது.

அதே போல, குழந்தைகளைத் தொட்டும் பேசக்கூடாது. அதுவும் இங்கு தவறாகவே பார்க்கப்படும். குழந்தைகள் மீதான வன்முறை இங்கு அதிகம் இருப்பதால் இத்தகைய வழக்கங்கள் என்று தெரிந்து கொண்டேன். சில விஷயங்களை நாமும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய வீட்டில் தன் சொந்தக் குழந்தைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெண்ணிற்க்கு அராஜகம் நடக்கிறது. அது தான் கொடுமையாக இருக்கிறது.

நார்வேயில் குழந்தைகளைத் தத்து கொடுக்க புலம்பெயன்றவர்களின் குழந்தைகளைக் கையகப்படுத்தி பெரும் வியாபாரமாகச் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே திரைப்படம், உணர்வுப்பூர்வமாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. கலாச்சார சார்பு, குழந்தைகள் நலன் போன்ற சிக்கல்களை ஆராய்வதில் படம் வெற்றி பெற்றுள்ளது. கலாச்சார வேறுபாடுகள் எவ்வாறு தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், குடும்பங்களைச் சிதைக்கும், சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக குழந்தைகள் நல அமைப்புகள் எவ்வாறு சார்புடையதாக இருக்கும் என்பதையும் படம் காட்டுகிறது.

Wednesday, April 26, 2023

நட்சத்திரவாசிகள்

"இதைப் படிச்சுப் பாருங்க லதா. ரொம்ப நல்லா எழுதியிருக்கார்" என்று கவிஞர் பெருந்தேவி அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய புத்தகம் 'நட்சத்திரவாசிகள்'. கிண்டிலில் வேறு வழியின்றி வாசித்தாலும் கையில் புத்தகத்தை வாசிப்பது போல வேறு சுகமில்லை. தூங்குவதற்கு முன் படிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விடுவானேன் என்று உடனேயே படிக்க ஆரம்பித்து விட்டேன். 

நம்முடைய அப்பாக்கள் வியாபாரம், அரசு அல்லது உள்ளூர் தனியார் அலுவலகத்தில் வேலை என்றே பழக்கப்பட்டுப் பலரும் வளர்ந்தோம். அம்மாக்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்தார்கள். நம்முடைய தலைமுறையில் ஆண்களும் பெண்களும் அதிகளவில் படித்து அதுவும் தொழிநுட்ப புரட்சி ஏற்பட்ட காலத்தில் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்தோம். கணினியில் வேலை பார்ப்பதே கெளரவம் என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் மாறி விட்டது. அப்பாக்கள் ஒரு வருடத்தில் வாங்கிய சம்பளத்தை ஒரு மாதத்தில் வாங்கும் அளவிற்கு சக்தி படைத்த உலகமாக மாறி பலரையும் ஏங்க வைத்து கும்பல் கும்பலாக கணினி வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பிக்க, கல்லூரிகளும் கல்லா கட்டா ஆரம்பித்தது. 

இன்றைய இளைஞர் பட்டாளங்களும் 'பளபளா' கட்டடங்களில் சுத்தமாக உடையணிந்து வேலை செய்வதையும் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாட்டிற்குச் சென்று வருவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உண்மையாகவே இந்த கண்ணாடி அலுவலகங்களுக்குள் என்ன தான் நடக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன். 

ஒவ்வொரு வருடமும் சம்பள ஏற்றம் என்பது முந்தைய வருடத்தின் வேலையைப் பொறுத்தே அமைவதால் சதா 'வேலை வேலை' என்று அதற்கு அடிமையாகி வேலை செய்தாலும் பல நேரங்களில் நிர்வாகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம். பெண்களும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் சிலரது வீட்டில் ஏற்படும் பிணக்குகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். என்ன தான் பெண் என்பவள் நன்கு படித்து நல்ல வேலையில் திறமையுடன் பணியாற்றினாலும் வீட்டில் அவளுக்கிருக்கும் இடம் மனைவி, அம்மா என்று கூடுதல் சுமைகளில் பங்கு கொள்ளும் ஆண்கள் குறைவே. 

பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் தொழிநுட்பத்துறையால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி வருகிறது என்பதைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். நண்பர்கள் பலரும் வீட்டிற்கு வந்த பின்னும் லேப்டாப்பும் கையுமாகவே இருப்பார்கள். மனைவியும் வேலை செய்பவர் என்றால் கேட்கவே வேண்டாம். இது இந்தியாவில் அதிகம். நேரடியாக எனக்கு அந்த அனுபவம் இல்லை. அதுவுமில்லாமல் ஷிஃப்ட் முறையில் வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல், மன அழுத்தங்கள் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்று இத்துறையில் ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டு என்பதை 'ஐடி ஜாப்ஆ? என்ன கவலை?' என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்வது போல் கதையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இத்தொழிலில் இருக்கும் உழைப்புச் சுரண்டலை, மனிதர்களின் எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார். எளிதாக கதையோடு ஒன்றிச் செல்ல முடிவதால் வாசிக்க வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நல்ல படைப்பு.

ஆசிரியருக்கு வாழ்த்துகள்! 


Secrets of the Elephants

சிறுவயதிலிருந்தே யானை, குரங்கு, காகம், குருவி, கிளி, நாய், பூனை என்று மனிதர்களோடு பழகும் மிருகங்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும் எனக்கு. கோவில்களுக்குச் சென்றால் யானையைப் பார்க்காமல் ஆசீர்வாதம் வாங்காமல் வருவதில்லை. அதன் பெரிய கண்களும், தும்பிக்கையும், கால்களும் கம்பீரமாக நிற்கும் அதன் அழகும் பயத்துடன் அதனை நெருங்க வைக்கும். தெருக்களில் யானை வந்தால் குழந்தைப் பட்டாளங்களுக்கு ஒரே குஷி. யானை மீது ஏற ஆசை என்றாலும் அதன் முடி குத்துமே என்ற கவலை. சிறுவயதில் பீதியுடன் ஏறி அழுதுகொண்டே இறங்கியிருக்கிறேன். பாட்டி வீட்டிற்கு அருகில் தெற்கு கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த யானை தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே புல்லைச் சாப்பிடுவதும் அதனைக் குளிப்பாட்டும் நேரத்தில் தரையில் சாய்ந்து கொண்டும் இருக்கும். பல நேரங்களில் மெதுவாக கதவைத் திறந்து பார்த்து வருவதுண்டு. இப்பொழுது அங்கே யானை இல்லை😔 யானைப்பாகன்கள் சொல்வதை சிறுகுழந்தை போல் கேட்டுக் கொள்ளும். பாண்டிச்சேரியில் காலில் கொலுசு போட்டுக் கொண்டிருந்த யானை கொள்ளை அழகு.

இப்பொழுதெல்லாம் விலங்குகளைப் பற்றின அழகான ஆவணத்தொடர்கள் காண கிடைக்கிறது. தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் வண்ணம் கவிதை பேசும் காட்சிகளுடன் விலங்குகளை மிக அழகாக படமெடுத்துக் காட்டுகிறார்கள். அறிந்திராத புதிய தகவல்களும் நமக்கு கிடைக்கிறது. அப்படி ஒரு ஆவணத்தொடர் தான் நான்கு பாகங்களாக வெளிவந்திருக்கும் 'Secrets of the Elephants'. 'பூமி தின'த்தை முன்னிட்டு 'நேஷனல் ஜியாக்ராபி' தயாரித்து டிஸ்னி பிளஸ், டைரக்ட் டிவி, ஹுலுவில் வெளிவந்துள்ளது.

நடிகையும் விலங்கின ஆர்வலரும் ஆன நடாலி போர்ட்மென் பின்னணிக் குரலில் முதலில் ஆப்பிரிக்காவில் சவான்னா ஜிம்பாப்வேயில் புல்வெளிப்பகுதியில் வாழும் யானைகளைப் பற்றி ஆரம்பமாகிறது. எத்தனை பெரிய விலங்கினம்! 4 மாதக் குழந்தை அம்மாவின் காலடியில் நடந்து செல்லும் அழகுடன் தண்ணீரைத் தேடி கூட்டமாகச் செல்லும் 30 யானைகளுடன் காட்சி விரிகிறது. இருப்பதிலேயே வயதான பெண் யானை தான் அந்தக் கூட்டத்தை வழிநடத்திச் செல்கிறது. யானைகள் ஒரு முறை கடந்து வந்த பாதையை மறக்காமல் அதனை தலைமுறை தலைமுறையாக கடத்தி விடும் பண்பு கொண்டதாம். வழிகாட்டும் யானைக்கு எங்கு நீர் கிடைக்கும் என்று தெரிந்து வேகமாக அதனை நோக்கிச் செல்ல மற்ற யானைகள் அதனைப் பின்தொடர்ந்து செல்கிறது. வழியில் பெரிய பள்ளம். மணல்பாறை. இறங்குவது சிரமம் என்று தெரிந்தாலும் கொஞ்சம் யோசித்து வேறு வழியின்றி மிக கவனமாக தும்பிக்கையால் ஒவ்வொரு அடியையும் அளந்து இறங்க, மற்ற யானைகளும் இறங்குகிறது. அந்தக் குட்டி யானை தான் கொஞ்சம் சிரமப்படும். அதை முன்னும் பின்னும் அம்மாவும், அம்மாவின் உடன்பிறப்புகளும் கவனமாக வழிநடத்திச் செல்லும். அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டு தண்ணீரைக் கண்டவுடன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டாடும் சத்தமும் அழகு!

பிறகு தண்ணீர் அரிதான 'நம்பிப்' பாலைவனக்காடுகளில் வசிக்கும் யானைகளைப் பற்றியது. மனிதர்கள் வாழ்வதே கடினம்! பாவம் தண்ணீருக்கும் புல்லுக்கும் பல மைல் தூரம் நடந்து கொண்டே இருக்கிறது. இங்கு பிறக்கும் யானைகள் உயிரோடு தப்பித் பிழைப்பதே அரிது என்பதால் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு குட்டியானை கடுமையான வெயிலையும் தாண்டி உயிர்பிழைத்திருக்கிறது. குட்டியானைக்குப் பால் கொடுக்க தாய் யானை அதிகளவில் உண்ணவும் தண்ணீரையும் குடிக்க வேண்டுமாம். தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணும் இலைகளில் இருந்து கிடைக்கும் நீரை வைத்துக் காலத்தை ஓட்டுகிறது இங்குள்ள யானைகள். தண்ணீர் கிடைக்கும் இடத்தையும் அறிந்து வைத்துள்ள யானைகள் ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரைக் குடிக்கும் உடலமைப்பையும் கொண்டுள்ளது! சுடுமணலில் நடந்து செல்ல அதன் கால்கள் பெரிய பாதங்களைக் கொண்டுள்ளது. சவான்னா யானைகளை விட மெலிதாகவும் இருக்கிறது. பெண் யானைகள் குழுவாக எப்பொழுதும் இருந்தாலும் குழந்தையாக இருந்த ஆண்யானைகள் 14 வயதிற்குப் பிறகு அந்தக் கூட்டத்தை விட்டுத் தனியே சென்று விடுகிறது. அவர்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கடினமானதாக இருக்கிறது. பாவம்!

மூன்றாவது பாகத்தில் மழைக்காட்டு யானைகளைப் பற்றின குறிப்புகள். சிறிய காதுகளுடன் உருவத்திலும் கொஞ்சம் சிறியதாக மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் யானைகள். உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தந்தத்திற்காக வேட்டையாடுபவர்களால் ஆபத்து அதிகம். ஆனா, பெண் யானைகளுக்குத் தந்தங்கள் இருக்கிறது.

நான்காவது பாகத்தில் ஆசிய நாடுகளில் வாழும் யானைகளைப் பற்றி ஆராய்கிறார்கள். உருவத்தில் சற்றே ஆப்பிரிக்கா யானைகளை விட வேறுபடுகிறது. அவர்கள் வாழ்ந்து வந்த காட்டுகளை அழித்து பனைமரங்களை வளர்த்து வருகிறார்கள் மலேசியாவில். அதனால் மனிதர்களோடு மனிதர்களாக வாழ கற்றுக் கொண்டிருக்கும் வித்தையைக் காண்பித்தார்கள். பனைமரங்களை வெட்டிபி போடும் சத்தம் கேட்டவுடன் கூட்டமாக வந்து சாப்பிட்டு விட்டுப் போகிறது. தாய்லாந்தில் லாரியில் கரும்பு எடுத்துச் செல்லும் நேரத்தில் சரியாக சாலையில் ஆஜராக, சில பல கரும்புகளை அதற்குப் போட்டுவிட்டுச் செல்கிறார் வண்டியோட்டுபவர். இந்தியாவிலும் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Dr.Paula Kahumbu, யானைகள் பேசிக்கொள்ளும் மொழியை ஆராய்ச்சி செய்யும்
Cynthia Moss பகிர்ந்து கொள்ளும் பல சுவாரசியமான தகவல்களுடன் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் வெளிவந்துள்ளது ஜேம்ஸ் காமெரூனின் இயக்கத்தில் 'Secrets of the Elephants'. கூட்டுக்குடும்பமாக வாழும் யானைகள் பலவும் மனிதனின் பேராசைக்காக உயிரிழக்கின்றன. அதன் குட்டிகளை வளர்த்துப் பராமரிக்கும் அன்பர்கள் அதனைத் தங்கள் குழந்தையாக பாவித்து வளர்க்கிறார்கள். பின்பு காட்டில் அதனை விட்டு விடுகிறார்கள்.ஆஸ்கார் விருது வாங்கிய "The Elephant Whisperers' குறும்படமும் அழகான படம்.



Monday, April 24, 2023

10. பத்ரிநாத் – ரிஷிகேஷ்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் பத்ரிநாத்-ரிஷிகேஷ்

பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம். சுடச்சுட இட்லி, உப்புமா, நூடுல்ஸ், ஆலு பரோட்டா, ஓட்ஸ், பிரட், பழரசம், காபி, டீ என்று காலை உணவு வகைகள் அனைத்தும் விடுதியில் கிடைத்தது. காசுக்கேற்ற கவனிப்பு. நன்றாக உபசரித்தார்கள். எட்டரை மணியளவில் விடுதியிலிருந்து ‘மனாவிற்குப் புறப்பட்டோம்.

மழையில் சாலைகள் சேதாரமாகி குண்டும் குழியுமான பாதையில் 15 நிமிடங்களுக்குள் கிராமத்தை அடைந்தோம். வழியெங்கும் நுரை ததும்ப பாய்ந்தோடும் சரஸ்வதி ஆறும் பரந்து விரிந்த இமயமலையின் அழகும் பனிச்சிகரங்களும் வசீகரிக்கிறது. பத்ரிநாத் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவரும் செல்லும் இடம் என்பதால் அந்தச் சாலையில் போக்குவரத்திற்கும் குறைவில்லை. அதிகளவில் சீக்கிய யாத்ரீகர்களையும் காண முடிந்தது. இந்தியாவில் சாலைகள் சீரமைப்பு நடந்திருப்பதால் பைக்குகளில் செல்லும் கூட்டமும் ‘சார்தாம்’ யாத்திரையில் அதிகரித்திருப்பது கண்கூடாகத் தெரிந்தது. “இந்த மலைப்பகுதிகளில் பைக்கில் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?” பயணம் முழுவதும் ஏக்கத்துடன் ஈஷ்வர் பெருமூச்சு விட்டுக் கொண்டே வந்தார். யமுனோத்ரி, கங்கோத்ரி பகுதிகளில் கரடு முரடாக அழகின்றி இருந்த இமயமலை திபெத்திய எல்லையை நெருங்குகையில் பசுமையைப் போர்த்தியபடி வலம் வந்தது கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

இந்திய-சீனா ஆக்கிரமிப்பு திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் ‘மனா’, சமோலி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் கடைசி குக்கிராமம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 3,200மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஊரின் உள்ளே நடந்து செல்லும் பாதைகள் மட்டுமே இருப்பதால் பயணிகளுடன் வரும் வண்டிகளை கிராமத்தின் வெளியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான மரபுகளுக்குப் பெயர் பெற்ற ‘போட்டியாஸ்’ (Bhotias) என்ற மலைவாழ் திபெத்திய வம்சாவளியினர் இங்கே வசிக்கிறார்கள். அவர்களுக்கென்ற மொழி, உணவு, உடை, கலாச்சாரம் உள்ளது. நெசவு நெய்தல் பாரம்பரிய தொழிலாக இருப்பதால் தரமான சால்வைகள், தரைவிரிப்புகள், கம்பளி உடைகளைத் தயாரித்து விற்கின்றனர். நாங்களும் சிலவற்றை வாங்கினோம். ஆடு, காட்டெருமைகளை வளர்ப்பதும் அரிசி, கிழங்கு, சோளம், சோயாபீன்ஸ் வகைகளைப் பயிரிடுவதும் தொழிலாக உள்ளது. வீடுகளின் பின்புறம் காய்கறித் தோட்டங்களை அமைத்திருந்தது சிறப்பு. குட்டையான மனிதர்கள். வீடுகளும் உயரம் குறைவாகச் சிறிதாக இருந்தது. சாலைகள் அற்ற கிராமம். குறுகிய தெருக்களில் கோவேறு கழுதைகள் மூலமாக அல்லது தங்கள் பொருட்களைத் தாங்களே சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் வண்டிகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து செங்கல், சிமெண்ட் மூட்டைகள், கட்டைகள் போன்றவற்றை முதுகில் சுமந்து செல்வதைப் பார்த்தோம். கடினமான வாழ்க்கை தான்! சுருக்கங்கள் நிறைந்த முகங்களுடன் பெண்கள் கம்பளி உடைகளை நெய்து கொண்டிருந்தார்கள். வயதான பாட்டிகளும் ‘துறுதுறு’வென்று வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அநேகமாக அந்த சின்னஞ்சிறிய ஊரில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வசதிகள் அதிகம் இல்லாத ஆனால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் ஒரு சமூகமாக ஜப்பானிய ‘இக்கிகை’ வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக வாழ்வது போல தெரிந்தது.

இந்த ‘மனா’ கிராமத்திற்கும் மகாபாரதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்குள்ள ‘வியாஸ் குஃபா’ என்னும் குகையில் தான் வியாச முனிவர் மகாபாரதத்தை இயற்றியதாக ஐதீகம். ‘மகாபாரத கிளைக்கதைகள்’ புத்தகத்தை எழுத நான் மகாபாரதம் வாசித்துக் கொண்டிருந்த நேரம். மானசீகமாக குருவிடம் ஆசியையும் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டேன்😔 அருகிலேயே விநாயகருக்கும் ‘கணேஷ் குஃபா’ கோவில் உள்ளது. அங்கே சென்னையிலிருந்து வந்திருந்த தமிழ் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேற்று மொழி பேசுமிடத்தில் தமிழ் மொழியில் பேசுபவர்களைப் பார்த்தவுடன் ஒரு சினேக புன்னகை. குசலம் விசாரிப்புகள் என்று சின்ன சின்ன சந்தோஷங்கள்! நாங்கள் பேசிய மக்கள் பலரும் “அமெரிக்காவிலிருந்து யாத்திரைக்கு இங்கே வந்திருக்கிறீர்கள் பரவாயில்லையே!” என்று ஆச்சரியப்பட்டதைத் தான் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

‘மனா’ கிராமத்தில் உயரமான செங்குத்தான படிகளில் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. எல்லா இடங்களுக்கும் மூச்சு வாங்க கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்த கூட்டத்தோடு நாங்களும் ஐக்கியமானோம். புராணத்தின் படி, குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களும் திரௌபதியும் தங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி இறுதி நாட்களில் இமயமலை வழியாக இந்த கிராமத்தைக் கடந்து சென்றதாக நம்பப்படுகிறது. திரௌபதி சரஸ்வதி நதியைக் கடக்க பீமனால் உருவாக்கப்பட்ட ‘பீம் புல்’, வேத வியாசரை வழிநடத்திய சரஸ்வதி தேவிக்கு ஒரு கோயிலும் இங்கு உள்ளது. சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக மரணித்த இடம் இந்த மலைப்பகுதியில் அரங்கேறியதாகவும் குறிப்பிட்ட தூரம் வரை மக்கள் அப்பகுதிகளுக்கும் சென்று வர முடிகிறது. சரஸ்வதி தேவி கோவிலில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் பாதை மூடப்பட்டிருந்தது. மக்கள் பக்திப்பரவசத்தோடு இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தேவபூமி’யில் நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் பரவசமாகத் தான் இருந்தது!

ஆரவாரத்துடன் பாய்ந்தோடும் சரஸ்வதி நதி, பசுமையான காடுகள் மற்றும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த கிராமம் மலையேற்றத்திற்குப் புகழ் பெற்றது என அறிந்து கொண்டோம். அதற்கு வசதியாக மலைகளில் கூடாரங்கள் அமைத்திருந்தார்கள். திபெத்திய எல்லை வரை சென்று வர முடிகிறது. சூடான சமோசா, பிரட் பஜ்ஜி, நூடுல்ஸ், மோமோஸ், டம்ப்ளிங்ஸ் விற்றுக் கொண்டிருக்கும் கடையில் மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அருகே இருந்த மற்றொரு கடையில் டீ அருந்தினோம். சில ஹிமாலய பறவைகள் அங்குமிங்கும் பறந்தோடிக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. ஊரின் நடுவே பழமையான ‘கண்டகர்ணா’ கோவில் இருந்தது. நாங்கள் சென்றிருந்த நேரம் மூடியிருந்ததால் அக்கோவிலைப் பற்றின வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உள்ளூர்ப் பெண் ஒருவர் தங்களுடைய ‘இஷ்ட தேவதா’ என்று கூறினார். அந்தக் காலை வேளையில் ஊர் முழுவதும் பயணிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது!

மலைப்பகுதிகளில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உச்சந்தலையில் ‘பொடேர்’ என்று சாத்துகிறது. கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம்! ஒரு பக்க மலைகள் பசுமையாக. மற்றொரு பக்கம் கரடுமுரடாக. நடுவில் ஆறு. ஆற்றின் கரையில் குறுகிய பாதையில் வீடுகளையும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டே வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இப்படி ஒரு பாரம்பரிய மிக்க குட்டி ஊரைப் பார்த்த திருப்தியுடன் ‘பஞ்ச பிரயாகை’ தரிசனத்திற்காக ஆவலுடன் தொடர்ந்தது எங்கள் பயணம். வழியில் ‘Valley of Flowers’ பதாகையைப் பார்த்ததும் கோடையில் மலர்களுடன் மலைகள் சூழ்ந்த பரந்த சமவெளி வண்ணமயமாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் மிகவும் பிரபலமான, அதிக பயணிகள் சென்று வரும் இடம். இப்படி உத்தரகாண்ட் முழுவதும் இயற்கை எழிலுடன் இமயம் விரவிக் கிடக்கிறது. பார்க்கத்தான் நமக்கு நேரமில்லை.

முதன் முதலில் எட்மண்ட் ஹில்லரியின் ‘From the Ocean to the Sky’ புத்தகத்தை வாசிக்கும் பொழுதே ‘பஞ்ச பிரயாகை’யை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. ‘ருத்ர பிரயாகை’க்குப் பிறகு அவர்களால் படகுகளில் மேலேறிச் செல்ல முடியாது. அந்த அளவிற்கு நதியின் வேகம் இருக்கும். அங்கிருந்த கோவில், மக்களைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை அழகாக விவரித்திருப்பார் எட்மண்ட் ஹில்லரி. வாசிக்கையிலே அத்தனை வசீகரமாக இருக்கும்! இரு வேறு வண்ணங்களுடன் நதிகள் கலக்குமிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ‘பஞ்ச பிரயாக்’ம் எங்கள் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டது.

நதிகள் கூடுமிடம் ‘பிரயாகை’ என்று அழைக்கப்படுகிறது. ‘சார்தாம்’ செல்லும் வழியில் தேவ பிரயாகை, விஷ்ணு பிரயாகை, கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை என அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் உள்ளன. இமயத்தில் உற்பத்தியாகும் கங்கையின் இரு கிளைநதிகளில் ஒன்றான ‘அலக்நந்தா’ அலக்புரியிலிருந்து ஓடோடி வந்து சரஸ்வதி நதியுடன் கலக்கும் இடத்தில் ‘கேஷவ் பிரயாக்’ என்றும் பத்ரிநாத்தில் ‘விஷ்ணு கங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. பத்ரிநாத்திற்கும் ஜோஷிமத்திற்கும் இடையில், மழை நீரை அடித்துக் கொண்டு மண்ணின் நிறத்தோடு ‘அலக்நந்தா’வும் வெளிர் நீல வண்ணத்தில் ‘தெளலி கங்கா’ ஆறும் சங்கமிக்கும் இடம் ‘விஷ்ணு பிரயாகை’ ஆகும். இங்கு நாரதர் விஷ்ணுவை வழிபட்டதால் இந்த காரணப்பெயர் என்று தெரிந்து கொண்டோம். நிறைய படிகளில் இறங்கி ஏறும் பொழுது தான் தெரிந்தது எத்தனை செங்குத்தாக இருக்கிறது என்று! முழங்கால் பத்திரம் என்று எனக்குள் நானே எச்சரித்துக் கொண்டேன்😉

அங்கிருந்து ‘அலக்நந்தா’வும் நந்தா மலைச்சிகரத்தில் உற்பத்தி ஆகும் நந்தாகினி ஆறும் சங்கமிக்கும் ‘நந்த பிரயாகை’ யை அடைந்தோம். கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள இடத்தில் யாதவ குல மன்னன் கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தையான நந்தனின் நினைவாக கோவில் ஒன்றும் உள்ளது. இரு வேறு திசைகளில் இருந்து பலத்த ஓசையுடன் துள்ளி ஓடிவரும் ஆற்றின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. நீண்ட தூரம் நடந்து சென்று வந்தோம். ஈஷ்வருக்குப் பசியோ என்னவோ முகம் வாடிப் போயிருந்தது. வழியில் இனிப்புக்கடையில் எனக்குப் பிடித்த இனிப்புகளையும் சமோசாவையும் சாப்பிட்டு ‘சாய்’ குடித்த பிறகு கொஞ்சம் தெம்பாக இருந்தது. சிறிது நேரம் அங்கிருக்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்து விட்டு ‘கர்ண பிரயாகை’க்கு கிளம்பினோம்.

வழியில் வரும் பாலத்தின் ஓரத்திலேயே வண்டியை நிறுத்தி அங்கிருந்து கீழிறங்கிச் சென்று பார்த்து விட்டு வருமாறு டிரைவர்ஜி சொல்ல, அலக்நந்தாவும் பிண்டர் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றோம். இன்னொரு குடும்பமும் அவர்களின் குழந்தைகளும் கரையில் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு வண்ண நதிகள் ஒன்றோடு ஒன்று இனைந்து இரண்டற கலந்து ஓடும் அழகே தனி! மிக அருகில் நின்று பார்க்கும் பொழுது தான் அதன் ஓட்டமும் பாய்ச்சலும் தெரிகிறது. மனதிற்குள் பயமும் எழுகிறது! இங்கு பார்வதி தேவிக்கும் கர்ணனுக்கும் கோவில்கள் உள்ளன. சுவாமி விவேகானந்தர் 18 நாட்கள் தவம் செய்த இடம். கர்ணன் தவம் புரிந்து கவச குண்டலத்தைப் பெற்றதால் ‘கர்ண பிரயாகை’ என்று அழைக்கப்படுகிறது. போக்குவரத்துடன் பரபரப்பாக இருந்த சாலையைக் கடந்து ‘ருத்ர பிரயாகை’யில் நாங்கள் தங்கவிருக்கும் ‘சாம்ராட் ரிசார்ட்’டுக்குச் சென்று கொண்டிருந்தோம்.

மாலை நான்கு மணி. வழியில் சாலையோர உணவகத்தில் மீண்டும் ஒரு ‘சாய்’. ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த உணவகங்களில் பூனைக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் காண அழகாக இருந்தது. குழந்தைகள் என்றாலே அழகு தான்! வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே மிகப்பெரிய குருத்வாராவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க, “எந்நேரம் சென்றாலும் அங்கு செல்பவருக்கு இலவச உணவு கிடைக்கும்” என்றார் டிரைவர்ஜி. அங்கு தங்கும் வசதிகளும் இருக்கிறது. ஒரு வழியாக, ஐந்து மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

பெட்டிகளை இறக்கிக் கொண்டிருக்கும் பொழுது செட்டியார் குடும்பங்களை மீண்டும் சந்தித்தோம். அங்கே தேநீர் அருந்துவதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் ஸ்ரீநகர் என்னுமிடத்தில் இரவு தங்கி மறுநாள் டேராடூன் சென்று சென்னைக்குத் திரும்புவதாகக் கூறினார்கள். எதிர்பாராமல் மீண்டும் அவர்களைச் சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்ததது. இரு வேன்களில் வந்திருந்த அனைவரும் அன்புடன் பேசி “குடும்ப உறுப்பினர்களைக் கண்டது போல் இருக்கிறது” என்று ‘டச்சிங் டச்சிங்’ ஆக பேசி உருக வைத்தார்கள். பெரும்பாலானவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் செட்டிலாகி இவர்களும் அடிக்கடி வந்து செல்கிறார்கள். உலகமே சுருங்கிவிட்டது!

நாங்கள் காசிக்குச் செல்வதை அறிந்து செட்டியார்கள் சத்திரத்தில் இருப்பவரைத் தொடர்பு கொண்டு கோவிலுக்குச் செல்ல தொலைபேசி எண்களைக் கொடுத்து உதவினார்கள். யாரோ? எவரோ? கேதார்நாத்தில் சந்தித்து அறிமுகமாகி அவர்களில் ஒருவராக எங்களைக் கவனித்துக் கொண்டார்கள். பத்ரிநாத்தில் மீண்டும் சந்தித்த பொழுது அத்தனை சந்தோஷம். இப்பொழுது பிரியும் நேரத்தில் “சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்” என்று அவர்களும்”நியூயார்க் வந்தால் கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று நாங்களும் அன்புடன் பேசி வாட்ஸப் பரிமாற்றங்கள் செய்து கொண்டு விடைபெற்றோம். இந்த யாத்திரையில், “குழந்தைகளை விட்டுவிட்டு ஹனிமூன் வந்திருக்கிறீங்களா” என்று சிரித்த முகத்துடன் ஹரித்வாரில் கேட்ட தென்காசி வெள்ளந்தி மனிதர்கள், மலேசியா தமிழ் மக்கள், உத்தரகாசியில் தென்னாப்பிரிக்கா, மலேசியா, அட்லாண்டா, ராஜஸ்தாலிருந்து வந்திருந்தவர்கள், குப்தகாசியில் தெலுங்கு, மும்பைப்பெண், ரஷ்யர்கள் முதல் செட்டியார் குடும்பங்கள் வரை பலரைச் சந்தித்துப் பேசியது உற்சாகமாக இருந்தது. நாடு, இனம், மொழி கடந்து மனிதர்களுக்கிடையில் இருக்கும் வாஞ்சையும் அன்பும் தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த பொழுதில் இந்த யாத்திரையின் பலனை முழுமையாக அனுபவித்தோம்.

பெரிய விடுதியில் கூட்டம் இல்லை. முதன் முதலில் உத்தரகாசியில் சந்தித்த ராஜஸ்தானி குடும்பமும் அங்கே தான் தங்கியிருந்தார்கள். “நீங்களும் இங்கே தானா?” என்று சிறிது நேரம் அவர்களுடன் ‘கலகல’ பேச்சு. கணவரும் மகனும் ஆங்கிலத்தில் உரையாட, அந்தப் பெண்மணி ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தார். நாங்களும் “அச்சா”, “டீகே” என்று எங்களுக்குத் தெரிந்த “தோடா தோடா” ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவிற்கு ‘வெங்காய சாலட்’ கேட்டால் தட்டு நிறைய வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு வைத்தார்களே பார்க்கணும்! ஐயோ! “நான் சாலட் கேட்டேன்” என்று பிறகு பன்னீர் ஐட்டம் வாங்கிச் சாப்பிட்டேன். அங்கு வேலை செய்தவர்களுக்குச் சுட்டுப் போட்டால் கூட ஆங்கிலம் தெரியவில்லை. ‘பேசும் படம்’ கமல் மாதிரி வித்தையெல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டுச் சென்றால் அவர்களுக்குப் புரியுமோ என்னவோ? பல இடங்களில் மொழி மிகப்பிரச்னையாக இருந்தாலும் மனிதர்கள் தன்மையாக இருக்கிறார்கள். ஹிந்தி தெரியாதவர்களை அதிசயமாகப் பார்க்கிறார்கள்! நாங்களும் ஆங்கிலம் தெரியாதவர்களைக் கவலையுடன் பார்த்தோம்😟 விடுதியில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அதுவும் இளைஞர்கள் கணிசமாக இருக்கிறார்கள்! படித்தவர்கள் நகரங்களை நோக்கிச் சென்று விட, படிக்காதவர்கள் உள்ளூரில் தங்கி கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள் போல!

அன்றைய அழகான தினத்தின் அனுபவங்களை எண்ணியபடி தூங்கிப் போனோம். விடியலில் நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து தவழும் கருமேகங்களுடன் மலைகளும் ஓசையின்றி ஆற்று மணலை அள்ளிச் செல்லும் அலக்நந்தா ஆறும் மனதை கொள்ளை கொண்டது. ஃபேஸ்டைமில் வந்த மகனிடம் இடத்தைக் காண்பிக்க, “அழகாக இருக்கிறது. என்ஜாய்” என்றான். அவனிடம் பேசிமுடித்து விட்டு ரிஷிகேஷ் பயணத்திற்குத் தயாரானோம். அதற்குள் காலை உணவு தயாராக, அங்கே சென்றால் பூரி, ஆலு மசாலா, அவலில் செய்த உணவு, பிரட், இனிப்பு, சாய், காஃபி என்று குறைவில்லாமல் இருக்க, சமையற்காரர் சிரித்த முகத்துடன் பரிமாறினார். “அனைத்தும் சுவையாக இருக்கிறது” என்றவுடன் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். எங்கு சென்றாலும் உணவு நன்றாக இருந்தால் சமையற்காரரை அழைத்து “நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி” என்று சொல்வது எங்கள் வழக்கம். மேலாளர்களிடமும் சொல்லத் தவறுவதில்லை. அநேகமாக நாங்கள் தங்கியிருந்த அனைத்து விடுதிகளிலும் உணவு மிக நன்றாக இருந்தது மட்டுமில்லாமல் உபசரிப்பும் திருப்தியாக இருந்தது. அனைவரிடமும் விடைபெற்று அன்றைய பயணம் துவங்கியது.

ஒன்பது மணியளவில் காளியின் அம்சமான ‘தாரி தேவி’ கோவிலை வந்தடைந்தோம். ‘சார்தாம்’ கோவில்களைக் காக்கும் சக்தி வாய்ந்த எல்லை அம்மன். உள்ளூர் மக்களின் ஆஸ்தான கோவில். 2013ல் ‘அலக்நந்தா ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் பிளாண்ட்’ கட்டும் பொழுது இடைஞ்சலாக இருக்கிறது என்று அங்கிருந்த அம்மனை இடம்பெயர்த்திருக்கிறார்கள். அன்று தான் கேதார்நாத்தில் வரலாறு காணாத வெள்ளமும் மலைச்சரிவும் ஆயிரக்கணக்கில் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே இந்த திட்டத்தில் பணிபுரிந்த தலைமைப் பொறியாளர், திட்டத்திற்கு ஒத்துழைத்த அரசியல்வாதியின் இறப்புகளுக்குப் பிறகு காவல் தெய்வத்தை இடம் பெயர்த்ததால் தான் இந்த பேரழிவு நடந்திருக்கிறது என்று உள்ளூர் மக்கள்
தீவிரமாக நம்பி எதிர்ப்புகளைத் தெரிவிக்க, ஏப்ரல், 2022ல் அதே இடத்தில் ‘ஹைடெல் பவர் கம்பெனி’ புதுக்கோவிலைக் கட்டி அம்மனை மீண்டும் இடம்பெயர்த்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலின் முகப்பு இரு நிலைகளுடன் தென்னிந்திய கோபுரமாக இருந்ததைப் பார்த்து ஆச்சரியமானோம்! சாலையோரக் கடைகளில் அம்மனுக்கான பூஜைப்பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அலக்நந்தா ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல ‘கிடுகிடு’ வென்று படிகளில் இறங்கும் போதே, “அடடா! ஏறி வரும் பொழுது நமக்கு இருக்கு” என்று பயம் கலந்த திகைப்புடன் அம்மனைப் பார்க்கும் ஆவலுடன் வழியெங்கும் இருந்த கடைகள், ஜடாமுடி தரித்த துறவிகளைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் எங்கும் சிகப்புத்துணியினை முடிந்து வைத்திருந்தார்கள். நாங்கள் நவராத்திரி சமயத்தில் அங்கே சென்றிருந்ததால் நல்ல கூட்டம். வட இந்தியர்கள் தேவிக்குப் பூஜைகள் செய்ய தாராளமாகச் செலவுகள் செய்கிறார்கள். பலர் கோவிலுக்குள் மந்திரித்த தாயத்துகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் குங்கும அலங்காரத்துடன் தேவி அமர்க்களமாக இருந்தாள். ஆற்றில் வெள்ளம் வந்தால் கோவில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு இருக்கிறது. வெளியில் உணவகங்களில் சாப்பிடும் இடத்தில் குரங்குகளின் அட்டகாசத்தைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அங்கிருந்த தொங்கு பாலத்தில் நடந்து சென்று ஆற்றைப் பார்த்து விட்டு வந்தோம். அது ஏனோ சிலர் குதித்துக் கொண்டே இருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அழகான கோவில் தரிசனம் முடித்து வண்டியிலேறி காலை நேர பரபரப்புடன் இருந்த ஸ்ரீநகர் வழியே ‘ருத்ரபிரயாகை’யை மலையில் இருந்தே பார்த்துக் கொண்டோம். அழகான சங்கமம் அது. உச்சியிலிருந்து பல தெருக்களைக் கடந்து அங்கிருக்கும் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூட்டமாக மக்கள் சங்கமத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது. சங்கிலிகளைக் கட்டியிருந்தார்கள். பழுப்பு நிற அலக்நந்தாவும் கேதார்நாத்திலிருந்து பச்சைநிற மந்தாகினியும் இரண்டற கலந்தோடும் அழகு வசீகரிக்கிறது. இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாகவும் ருத்ர வீணையை மீட்டியதாலும் ‘ருத்ர பிரயாகை’ என்றழைக்கப்படுகிறது. ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் இருக்கிறது. பல தலபுராணங்களும் இக்கோவில்களுக்கு உள்ளது. மலையிலிருந்து வீடுகளும் கோவில்களும் மிக அழகாகத் தெரிய, அந்த வழியாகச் செல்லும் வண்டிகள் அனைத்தும் அங்கே நின்று பயணிகள் கண்டுகளிக்க அனுமதிக்கிறார்கள். யுடியூபர்களுக்கும் இன்ஸ்டா, ஃபேஸ்புக்வாசிகளுக்கும் மிகவும் பிடித்தமான இடம். வளைத்து வளைத்துப் படங்களும் பேசிக்கொண்டே காணொளிகளும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துப் பார்த்து இடத்தைத் தேர்வு செய்து செல்ஃபி எடுப்பவர்கள், முகத்தைக் கோணலாக்கி நாக்கைத் துருத்தி இரு விரல்களைக் காட்டிக் கொண்டு என்று பலவிதமான கோலங்களில் படங்களை எடுத்து அப்லோட் செய்து கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். அங்கிருந்து செல்ல மனமில்லாமல் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஒன்றரை மணிநேரத்தில் ‘தேவ பிரயாகை’ வந்தடைந்தோம். கங்கோத்ரியில் இருந்து பாய்ந்து வரும் பாகீரதியும் ருத்ர பிரயாகையில் இருந்து அலக்நந்தாவும் கலக்கும் இடமே ‘தேவ பிரயாகை’. ஓடோடி வரும் இரு கிளைநதிகளும் சங்கமித்து அமைதியான கங்கையாக உருவெடுப்பதால் ‘ஆதிகங்கை’ எனவும் அழைக்கப்படுகிறது. இங்கும் படிகளில் இறங்கி சங்கமத்தில் குளிக்க முடிகிறது. இந்த தெய்வீக சங்கமத்தில் கங்கை, ஹனுமன் சிலைகள் உள்ளது. ஐந்து பிரயாகைகளைத் தரிசித்த திருப்தியுடன் ரிஷிகேஷ் நோக்கி விரைந்தோம்.

யோகாவிற்கும் இந்து மடங்களுக்கும் பெயர் பெற்ற ரிஷிகேஷ் என் கனவு நகரங்களில் ஒன்று. தூர்தர்ஷன் காலத்தில் இரவு பத்துமணிச் செய்திகளுக்குப் பிறகு இமயமலை, கங்கையில் சாகசப்பயணம் செல்லும் ஆவணப்படங்களைப் பார்த்து ரிஷிகேஷின் அழகில் மயங்கியிருக்கிறேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் அங்கு இருப்போம் என்ற நினைவே அத்தனை ஆனந்தமாக இருந்தது. வழியெங்கும் சாலை விரிவாக்கம், புதிய ரயில் திட்டத்திற்காக ஏகப்பட்ட சுரங்கப்பாதைகள், பாலங்கள் கட்டும் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இத்திட்டம் நிறைவேறினால் ரிஷிகேஷிலிருந்து கர்ணபிரயாக் வரை ரயிலில் பயணிக்கலாம். அங்கிருந்து ‘சார்தாம்’ செல்வது எளிதாக இருக்கும். சாலைவழிப் போக்குவரத்து சிறிது குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் ‘தடதட’ ரயிலின் ஆட்டத்தை இமயம் தாங்குமா? அப்பகுதிகளில் மலைநாட்களில் பயணித்த பத்து நாட்களில் கண்ட மலைச்சரிவுகளும் சாலைப்பிளவுகளும் தான் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஈஷ்வரா! ஆபத்தின்றி எல்லோரையும் காப்பாத்துப்பா! என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டிருக்கும் பொழுதே ‘ஹார்ன்’கள் எழுப்பும் ஒலியும், புழுதி பறக்கும் சாலையில் நடந்து செல்லும் கூட்டமும், வண்டிகளும், மடங்களும், தங்கும் விடுதிகளும், உணவகங்களும், சாலையோர கடைகளும் அதிர்ச்சியைத் தந்தது! சிவானந்த ஆசிரமத்தின் பெயர் பொறித்த சாலை வளைவு வழியே உள்ளே நுழையும் பொழுது என் கனவு நகரத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.

ரிஷிகேஷ் பற்றின முதல் அபிப்பிராயம் ஏமாற்றத்தில் முடிய, நாங்கள் தங்கவிருக்கும் விடுதியைத் தேடினால் வரைபடம் “போய்க்கிட்டே இரு” என்று காட்ட, வழியில் மிகப்பெரிய சந்தை, ஆற்றுப்பாலம், மூக்கைப்பொத்திக் கொண்டு துர்நாற்றப்பாதையைக் கடக்க, “என்னங்க, இந்த ஊர் இப்படி இருக்கு?” என்று ஈஷ்வரைப் பார்த்தால் அவர் எனக்கு மேல் அதிர்ச்சியில் இருந்தார். வழியில் சிலரிடம் முகவரியைக் காட்டி விடுதிக்குச் செல்லும் குறுகிய தெருவில் கஷ்டப்பட்டு வண்டியை நிறுத்தினார் டிரைவர்ஜி. “எத்தனை பெரிய விடுதிகள் நகருக்குள் நுழைந்தவுடன் இருக்க, இங்கே ஏன் தங்குகிறீர்கள்? இதுவரை நான் இந்தப்பக்கம் வந்ததே இல்லை.” என்று கடுவன் பூனை மாதிரி கோபத்துடன் கேட்டார். மனிதர் பசியில் வேறு இருந்திருப்பார் போல! அவர் வண்டி எடுக்கத் திரும்பக்கூட முடியாது. ரிவர்ஸில் தான் செல்ல வேண்டும். அதற்குள் ஒருவர் இந்த தெருவுக்குள் வெளி வண்டியெல்லாம் வரக்கூடாது என்று சொல்ல, விடுதியில் இருந்து இருவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டுச் செல்ல, “எங்கே போய் இந்த மனுஷன் இடத்த பிடிச்சிருக்காரு? வழியில எத்தனை நல்ல விடுதிகள் இருந்தது?” யோசித்துக் கொண்டே நடக்க, தெருவில் தூங்கிக் கொண்டிருந்த பைரவர்களும் கூடவே வர, டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக வந்தவர், “உனக்குப் பிடிக்கலைன்னா வேற இடத்துக்குப் போகலாம். நீ தானே கங்கைக்கரையோரம் தங்கணும்னு சொன்ன. அதான் இங்க போட்டேன். ஆனா இந்த சின்ன சந்துக்குள்ள இருக்கும்னு எனக்கும் தெரியாது. ரெவியூஸ் எல்லாம் நல்லா இருந்ததுன்னு தான் இங்க ரூம் போட்டேன்” என்று ஈஷ்வர் சமாதானம் செய்து கொண்டே வர, பசியின் போது ஏதாவது பேசினால் சண்டையில் முடியும். அதனால் முதலில் அறைக்குச் சென்று பெட்டிகளை வைத்து விட்டு மதிய உணவிற்குச் சொல்லி மாடியில் இருந்த வரவேற்பாளர் அறைக்கு வந்தால் வெளியே சில அடிகளில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் “மா கங்கா”.

“ஆஆஆ ! இங்க பாருங்க” என்றவுடன் தான் ஈஷ்வருக்கும் நிம்மதியாக இருந்தது. “அதான. நல்லா பார்த்து தான் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். இப்ப சந்தோஷமா? அதுக்குள்ள😌…” மேற்கொண்டு பேசுவதற்குள் சுடச்சுட உணவும் வந்து சேர, வெளியில் அமர்ந்து நிம்மதியாக சுவையான உணவை உண்டு முடித்தோம்.

ரிஷிகேஷுக்குள் நுழையும் பொழுது ஏற்பட்டிருந்த ஏமாற்றம் மெல்ல மெல்ல கங்கையின் ஓட்டத்தில் கரைந்து கொண்டிருக்க, இன்னும் இரு நாட்கள் இங்கு தங்கி இருக்கப் போகிறோம் என்ற நினைவே அத்தனை சுகமாக இருந்தது😍

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...