Sunday, January 5, 2020

யாரிந்த சாண்டா?

அடுத்த வாரம் இதே நேரம் சாண்டா வந்து போன சுவடு தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் கோலாகலமாக விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள். ப்ரீ-ஸ்கூல் , டே கேர் வரை பனிக்கால விடுமுறையாக அறிமுகமான கிறிஸ்துமஸ், மகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பொழுது தான் சாண்டாவின் திருவிழாவாக தொடங்கியது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த நிவி கண்கள் விரிய, அம்மா கிறிஸ்துமஸ் நாளன்று சாண்டாக்ளாஸ் நிறைய பரிசுகள் கொண்டு வந்து தருவாராம் என்று குண்டு போட்ட நாளில் தெரியவில்லை அது எத்தனை பெரிய வம்பு என்று! அதற்குப் பிறகு ஒரே சாண்டா கனவு தான்.

நம்ம அபார்ட்மெண்ட்ல ஃபயர்பிளேஸ் இல்லையே? எப்படி சாண்டா வருவார்? எங்கே பரிசுகளை வைப்பார்? நான் முதலில் எனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடணும்...அவள் சொல்லிக்கொண்டே போக, எனக்குத்தான் "திக்திக்" கென்று இருந்தது. ஏதேது நம் தலையில் பெரிய மிளகாயை அரைக்கிற திட்டம் போல இருக்கே?

அவளுடைய பட்டியலில் இருந்து அவள் கேட்டதில் சிலவற்றை வாங்கி அவள் வெளியில் விளையாட சென்றிருந்த வேளையில் ஈஷ்வரிடம் வண்ண காகித உறை கொண்டு பூ வைத்து பெயர் எழுதி அதை அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக் காத்திருப்பேன். கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு தூங்காமல் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பாள்.

எங்கம்மா இப்ப சாண்டா இருப்பார்? எப்ப வருவார்? கேள்வி மேல் கேள்விகள் வரும்.

நீ தூங்கினா தான சாண்டா வருவார்.

இல்லை நான் முழிச்சிக்கிட்டு இருப்பேன் என்று கையும் களவுமாக சண்டாவைப் பிடித்து விடும் வெறியோடு காத்திருப்பாள்.

எனக்குத் தான் இவள் எப்பொழுது தூங்கி நான் எப்படி பரிசுகளை முன்னறையில் வைக்க என்று கவலையாக இருக்கும். திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து அம்மா, சாண்டாவுக்கு பாலும் குக்கீஸும் வைக்க மறந்துட்டேன் என்று சமயலறைக்குள் ஓடுவாள். ஓ! அந்த கொடுமை வேற இருக்கா? அதை வேற தின்னு தொலைக்கணுமே?

அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் அடித்தவுடன் ஓடிப்போய் பரிசுகளை ஓரிடத்தில் அழகாக அடுக்கி வைத்து விட்டு மறக்காமல் பாலையும் குடித்து குக்கீஸை பாதி சாப்பிட்டு( என்னவோ போடா மாதவா!)... திரும்ப வந்து படுத்துக் கொள்வேன்.

காலையில் மகள் போடும் ஆனந்த கூச்சலில், அம்மா இங்க வந்து பாரு. சாண்டா நான் கேட்டதெல்லாம் வாங்கியிருக்காரு. (என்ன கொடுமைடா மாதவான்னு இருந்தாலும் ) அப்படியா என்று ஒன்றும் தெரியாது போல நடித்ததெல்லாம் ஞாபகம் வருதே ...ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே. என்ன பண்றது? "பீ எ ரோமன் இன் ரோம்"னு சொல்லி வச்சிருக்காங்களே 🙂

அதற்கு அடுத்த வருடம் பட்டியல் நீண்டது. பல கனவுகளுடன் காத்திருந்தாள். டிவியில் சாண்டா பயணிக்கும் வரைபடத்தை வேறு போட்டுக் காட்ட இன்னும் சுவாரசியமானது அவளின் காத்திருப்பு. அவள் தூங்கிய பிறகு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து பரிசுகளை அழகாக காகித உறையிட்டு மறக்காமல் குப்பைகளை மறைத்து தூங்கிப் போனேன். ... அவளின் ஆர்ப்பாட்ட கூச்சலில் விடிந்தது கிறிஸ்துமஸ் எனக்கு.

எனக்கு என்னென்ன வேணும்னு எப்படிம்மா சாண்டாவுக்குத் தெரியும் ? ஏய்! நீ தானே சாண்டா? கையும் களவுமாக ஒரு வருடம் சாண்டாவும் மாட்டிக் கொண்டதில் உண்மையான சாண்டாவை இன்னும் கொண்டாட ஆரம்பித்தாள்.

சுப்பிரமணிக்கு மூன்று வயதாகும் பொழுது தான் சாண்டா பற்றின கதைகளைச் சொல்லி அவனுக்காக நிவியும் காத்திருந்து தூங்கிப் போவாள். விடியலில் இருவரின் அலறல் சத்தம் தான் கேட்கும். 'தடதட'வென்று மாடிப்படியேறி ஓடி வந்து தூங்கியிருப்பவளை எழுப்பி பரிசுகளைத் திறந்து பார்க்கவா என்று ஆவலுடன் கேட்பார்கள். யார் சாண்டா என்று தெரிந்திருந்தும் தம்பிக்காக ரகசியத்தை காத்து வந்தாள் நிவி.

வீட்டிற்கு வந்தவுடன் கிறிஸ்துமஸ் மரம் வாங்க வேண்டும். அங்கு தான் சாண்டா வந்து பரிசுகள் வைப்பார். ஆரம்பித்து விட்டான் சுப்பிரமணி. கூடவே அக்காவும் சேர்ந்து கொள்ள வேறு வழியின்றி வாங்கி அலங்காரம் செய்து ஃபயர்பிளேஸ் அருகே உள்ளறையில் வைத்து விட்டோம்.

சாண்டா வரும் பொழுது ஃபயர்பிளேஸ் ஆன் செய்திருந்தால் எப்படி இறங்கி வருவார் என்று அறிவார்த்தமாக கேள்விகள் கேட்டு தூங்குடா. இப்படியே கேள்வி கேட்டுட்டு இருந்தா சாண்டா ஓடிப்போயிடுவார் என்று சொல்லி தூங்கிய பிறகு காரிலிருந்து கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து பேக் செய்து நானும் தூங்கிப் போவேன்.

நீ என்னவோ சொன்னே? நான் நினைச்சதெல்லாம் சாண்டா கொண்டு வந்து கொடுப்பார்னு? அவர் ஒன்னும் அதை கொண்டு வரலை. இதுக்கு மேலயுமாடா? ன்னு மலைப்பாக இருந்தாலும் அதுக்குதான் நீ லிஸ்ட் எழுதி வைக்கணும். பாவம் சாண்டா வயசான தாத்தா இல்ல? மறந்துருப்பார்னு சமாளிச்சாலும் போதும் போதுமென்றாகி விடும்.

ஒரு வழியாக அம்மா தான் சாண்டாவென தெரிந்த பிறகு லிஸ்ட் பாம்பு வால் மாதிரி நீள, மீ பாவம்டா பட்ஜெட் இவ்வளவு தான் என்று வந்து நிற்க, டிசம்பர் மாதம் முழுவதும் குறிப்பால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வண்டியை அலசுவார்கள்.

சொல்லும்மா. எங்க வச்சிருக்க?

எதை?

எங்க கிறிஸ்துமஸ் கிஃப்ட்ஸ்?

அதெல்லாம் இன்னும் வாங்கலை.

பொய்.

நீ தான் தேடி பார்த்தியே?

வீடு முழுவதும் தேடுவார்கள். அப்பாவிடம் கெஞ்சுவார்கள். ஆனாலும் அந்த வருட கிறிஸ்துமஸ் பரிசுகள் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்கள் கட்டிலுக்கு அடியில் குப்பைகளுடன் குப்பையாக எளிதில் மறைத்து வைத்து விடுவேன். பாவம். வீடு முழுவதும் தேடிக் கொண்டிருப்பார்கள். சமையலறையை உருட்டுவார்கள். நான் போகுமிடமெல்லாம் பின் தொடர்வார்கள். பைகளைத் துழாவுவார்கள். ம்ஹூம்! எங்கேயுமே காண கிடைக்காது.

இரண்டு வருடங்கள் வரை இருந்த ஆர்வம் தற்பொழுது இல்லை. மகள் எனக்கு ஒன்னும் வேண்டாம். எல்லாமே வாங்கி கொடுத்தது விட்டீர்கள் என்றவுடன் சுப்பிரமணியும் அப்ப அந்த பணத்தையும் எனக்கே செலவு பண்ணும்மா...

வாட்?

வாங்கும் பெருமாளாக சுப்பிரமணி மட்டும் தான் இதுவரையில். ஈஷ்வருக்கும் சேர்த்து 'நமக்கு நாமே' திட்டத்தில் சாண்டா வேஷம் போட்டாச்சு. இனி பரிசுகள் கொடுத்து தானே ஆக வேண்டும்ம்ம்ம்.

இந்த வருடம் தான் அடித்து பிடித்துக் கொண்டு ஆன்லைனில் எதுவும் தேடாமல் பணப்பரிசு உங்களுக்கு வேண்டியதை நீங்களே வாங்கி கொள்ளுங்கள் என்றவுடன் இருவருக்கும் திருப்தி.

முன்னெச்சரிக்கையாக சுப்பிரமணியிடம் உன்னோட கிரெடிட் கார்ட் பில் நான் கட்டி இருக்கேன். ஒழுங்கா வந்து பணத்த செட்டில் பண்ணு என்று சொல்லி விட்டேன். பணத்தைக் கொடுக்கிற மாதிரி கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அவன் என்னை விட பெரிய தில்லாலங்கடி. அதற்கும் மேலே திட்டம் போட்டு வசூலித்துச் சென்று விடுவான்.

சாண்டாவின் உருவில் நம்மிடையே பலர் இருக்கிறார்கள். தேவையான நேரத்தில் பரிசுகளாக வேண்டியவற்றை வாரி வழங்கிட. இனம் கண்டு கூடி மகிழ்ந்து வாழ்வோம் அனைவருமே!

புரிகிறவரையில்
புரியாதவைகளே
புதிர்களாகின்றன
வியப்பாய் விரிந்து
எதிர்பார்ப்புகளாக
எழுந்துநிற்பவையல்லாம்
பின்னொருநாளில்
புரிந்தக்கணத்தில்
அத்தனையும் தொலைகிறது
ம்ம்ம்ம்...



No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...