Wednesday, August 3, 2022

ஆடிப்பெருக்கு

காலையில் ஆறு மணிக்கெல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டால் ஆடிப்பெருக்கு தினக்கூட்டத்தை சமாளித்து விடலாமென அங்கு போனால் உறங்கா நகர மக்கள் நீண்ட வரிசையில் அம்மன் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். பெண்கள் சிலர் புதுப்புடவை சரசரக்க , நகை மினுமினுக்க, சில மஞ்சள் பூசிய இயற்கை முகங்கள், மேக்கப் போட்ட பல செயற்கை முகங்கள், எண்ணெய் திரி விளக்கு, மதுரை தாழம்பூ குங்குமம், பூக்களின் மணத்துடன் கோவில் மண்டபமே ரம்மியமாக இருந்தது. மெல்ல நகர்ந்த வரிசை, தீபாராதனை, அழகு அம்மன் தரிசனம் குங்குமம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனம் முடித்து குளத்து படிக்கட்டில் சிறிது நேரம் ஆசுவாசம். கோவிலின் நுழைவாயிலில் புது மணப்பெண் மணமகன் குடும்பத்தினருடன் வந்து தாலி பிரித்து சேர்க்கும் வைபவம் வெட்கத்துடன் அரங்கேறிக் கொண்டிருந்தது.

வெளியில் ஆட்டோ, கார்கள் என்று மாடர்ன் ரெஸ்டாரண்ட் முன் முண்டியடித்துக் கொண்டு போக்குவரத்து. ஆடிப்பெருக்கு அன்று புது ஹோண்டா காரின் பின்சீட்டில் வைர, தங்க நகைகளுடன் பட்டுச்சேலை உடுத்திய பெண்மணி. இன்ச் இன்ச்சாக நகரும் கூட்டத்தில் வண்டி மீது யாரும் உரசிடாதவாறு ஒட்டிச் செல்லும் டிரைவர். மதுரையில் வண்டி ஓட்டுவதற்கு சாமர்த்தியம் வேண்டும்! புது வண்டி கீறல் படாமல் கடந்து செல்லும் வரை எனக்குத்தான் படபடப்பாக இருந்தது!

அதிகாலை கூட்டத்துடன் ஆடிப்பெருக்கு கூட்டமும் சேர்ந்து அம்மன் வீதிகளில் கலகலப்பாக...

சூடான பஜ்ஜி அங்கே
சுவையான சொஜ்ஜி இங்கே
சந்தோசம் மீறி பொங்க
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

தோசை வடையும் ஜோரு
வெகு பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு..
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

இனி இஷ்டம் போல வெட்டு ...ன்னு மாடர்ன் ரெஸ்டாரண்ட்டில் கொண்டாடியதெல்லாம்ம்ம்ம்ம்...

அந்த நாள் இனிய நாள் 🙂

ஆறு வறண்டால் என்ன?மனது வறண்டு போகா விட்டால் பெருக்கலாம் ஆயிரம் நற்பண்புகளை!

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள் 🙂🙂🙂

No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...