Monday, August 8, 2022

யாரிந்த ராபர்ட் ஃபிராஸ்ட் ?

"Robert Frost வாழ்ந்த வீடு இவ்வளவு பக்கத்துல இருக்கு. இத்தனை நாள் தெரியாம போச்சே! போகலாமா?" ஈஷ்வர் கேட்க,

"யாரிந்த ராபர்ட் ஃபிராஸ்ட் ? பெயர் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே" என நானும் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.

"இரு நான் அவரோட கவிதைகளை வாசிக்கிறேன். உனக்கு நல்லாவே தெரியும்"னுட்டு
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

"அட! நான் அடிக்கடி அந்த கடைசி இரண்டு வரிகளைப் போட்டு பல படங்களை ஃபேஸ்புக்ல போட்டிருக்கேனே! அதான் இந்த பேரு தெரிஞ்ச பேராட்டம் இருந்துருக்கு. நல்ல வேளை! அந்த மனுஷன் எழுதுனதுல ரெண்டு வரியாவது எனக்குத் தெரிஞ்சிருக்கு. நான் என்ன ஆங்கில இலக்கியம் படிச்சேனா இல்லைன்னா கவிஞர்களைத் தெரிஞ்சுக்கிட்டேனா?" ஜாலியா நான் உண்டு என் கணினி உண்டுன்னு இருந்தவள ஆங்கில இலக்கியவாதியோட முடிச்சு போட்டாரு பாருங்க தட் கடவுள் இருக்காருடா கொமாரு மொமெண்ட் 😎 ஹ்ம்ம்ம்!

"இரு. இன்னொரு பிரபலமான கவிதையை வாசிக்கிறேன்"னு ஈஷ்வர் வாசிக்க, நான் வண்டியை ஒட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன்.

Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

"எப்படி இருக்கு?"

"ம்ம்ம். நல்லா இருக்கு. இந்த ஊரின் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த மாதிரி கவிதைகளை நம்மூர் மாணவர்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொள்வார்கள்?"

"அதெல்லாம் கவிதைகளைத் தேடிப் படிக்க ஆரம்பிச்சாலே எழுதினவங்களோட வாழ்க்கை முறை, வீடு, உலகம்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கும். சில படங்கள் மூலமா கற்பனையில் இதெல்லாம் புரியும் சாத்தியம் இருக்கும்னு" ஈஷ்வர் சொல்லிக் கொண்டே வர,

"என்னுடைய பள்ளியில் இந்த கவிதையை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து விட்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் சொல்லி கவிதையின் சுவையை இழக்க செய்திருப்பார் அந்த ஆங்கில ஆசிரியர்." என்றேன்.

"ஆமாம். கவிதைகள் என்பது பொருள் சொல்லிப் புரிய வைப்பதோ எழுத்துக்களின் தொகுப்போ அல்ல. ஒரு நல்ல கவிதை வாசிப்பவர்கள் மனதில் ஒன்றி கற்பனையை வளர்க்கும். அதோடு வாழ்வியலும் கூடவே வரும்." என்று பேராசிரியராகி பேச ஆரம்பித்து விட்டார் ஈஷ்வர்.

ஆல்பனியே குக்கிராமம் என்று சொல்பவர்கள் உண்டு. அதனைத் தாண்டினால் பழங்காலத்து வீடுகள், உயர்ந்த மரங்கள், பரந்து விரிந்த பச்சைப்பசேல் நிலங்கள் என அழகிய பல குக்குக்கிராமங்கள் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும். இரு வழிப்போக்குவரத்து தான் வழிநெடுக. மலைகளும், நீரோடைகளும், ஆறு, ஏரி, குளங்கள் என கண்களுக்கு விருந்தாக இருந்தது பயணம் முழுவதும். பக்கத்து மாநிலமான வெர்மாண்ட்டில் பென்னிங்டன் நகருக்கு அருகில் உள்ள ஷாப்ட்ஸ்பர்ரி எனும் ஊரில் திரும்பு திரும்பு என்று ஜிபிஎஸ்ஸில் அவள் வேறு ஆணையிட...

"என்ன இது? ஒன்னும் பெரிய இடமா தெரியலையே?"

"அங்க போய் நிப்பாட்டு" என்ற இடத்தில் எந்த வண்டியும் இல்லை.

"இன்னைக்குத் திறந்திருக்காங்களா? கேட்டீங்களா?"

சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தால்...

அமைதி தவழும் இடத்தில் ஒரு வீடு. சுற்றிலும் தோட்டம். வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் செல்லும் பாதையில் ஆற அமர உட்கார்ந்து இளைப்பாற பெரிய மரத்தின் கீழ் நாற்காலிகள். இங்கு தான் ராபர்ட் ஃபிராஸ்ட்-ம் உட்கார்ந்து எழுதியிருப்பாரோ?

நல்ல வெயில். இதமாக தென்றல். உள்ளே சென்றால் இளம்பெண் ஒருவர் வரவேற்பறையில் இருந்தார். அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆளுக்கு பத்து டாலர் கொடுத்து டிக்கெட்டை வாங்கி விட்டு அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பெண் விரிவாக கவிஞரைப் பற்றின தகவல்களைக் கூறி எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டார். மஹிந்திரா கல்வி அறக்கட்டளை வாயிலாக இந்தியாவில் புனேயில் தங்கி ஒரு வருடம் படித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அப்படி ஒன்று இருக்கிறதே இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்!ம்ம்ம்ம்!

அந்த அறை முழுவதும் கவிஞர் எழுதிய புத்தகங்கள், அவரைப்பற்றின புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர் வாழ்ந்த வீட்டையே கண்காட்சியாக்கி இருக்கிறார்கள்.

அவருடைய கவிதைகள் இங்கிலாந்தில் முதலில் பிரசுரமாகி பின்பு தான் அமெரிக்காவில் பிரபலமாகி இருக்கிறது. கலிஃபோர்னியாவில் பிறந்து நியூஇங்கிலாந்து மாநிலங்களில் வாழ்ந்து அதன் கிராமப்புற அழகின்பால் ஈர்க்கப்பட்டு வெர்மாண்ட் மாநிலத்தில் குடியேறியிருக்கிறார். வட அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் நான்கு பருவங்களும் வெவ்வேறு அழகுடன் வலம்வருவதையும் கிராமப்புற அழகையும் வாழ்க்கையையும் அவருடைய கவிதைகள் பலவும் எளிய முறையில் கூறுகிறது. பல உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளதை அங்கே உரிய தகவல்களுடன் வைத்திருந்தார்கள். கவிதைகள் எழுதுவதுடன் விவசாயமும் செய்து அதில் திருப்தியற்று அருகிலிருந்த கல்லூரியில் பணியாற்றியதாக அவருடைய சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரவேற்பறைப் பெண் விவரித்தார்.

அவர் பணிபுரிந்த பென்னிங்டன் கல்லூரி இந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கிறது. ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஆப்பிள் மரங்களுடன் பச்சைப்பசேல் சூழலில் அமைந்துள்ள  250 ஆண்டுகளுக்கும் மேலான இந்த வீட்டின் முன் அறையில் தான் "Stopping by Woods on a Snowy Evening" என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதி உயரிய விருதினையும் பெற்று பிரபலமாகியுள்ளார். அவரைப் பொறுத்தவரை கவிதை என்பது அதிக சிந்தனையுடன் எழுதப்பட்டதோ அல்லது அறிவு சார்ந்ததாக இல்லாமல் எளிமையாக தெளிவாக இருந்தாலே போதுமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய தமிழ்க்கவிஞர்கள் பலரும் தங்கள் அறிவைப் புலப்படுத்த குறியீடுகள், தொன்மங்கள், படிமங்கள்  அது இது என்று நம்மைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டிருப்பது தான் நினைவிற்கு வந்தது. அப்படி எழுதுவது தான் கவிதை. தங்களுடைய கவிதையைப் படித்துப் பொருளுணர அறிவு வேண்டும் என்று நினைக்கும் அதிமேதாவிகள் தான் இன்றைய தமிழக கவிக்கள். அவர்கள் எல்லோரும் ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகளைப் படித்தால் நலம் என்று நினைக்கத் தோன்றியது.

அறைகளில் அந்த வீட்டின் அழகுப் படங்கள் பலவும் கருப்பு வெள்ளையில் வெவ்வேறு பருவங்களில் எடுக்கப்பட்டிருந்ததையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வரைந்து பார்க்கணும் என்று மனதில் ஒரு ஆசை. அவருடைய கவிதைகள், மனைவி, குழந்தைகள், அமெரிக்கா அதிபர் கென்னடியுடன் எடுத்த படங்களும் அவருடைய வாழ்க்கையை விவரிக்கும் வகையில் இருந்தது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அழகான பல படைப்புகளை வழங்கியிருக்கிறார். அமெரிக்க அரசாங்கம் அவர் உருவம் பதித்த முத்திரையை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இரண்டு அறைகள் மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க முடியும். மாடிக்குச் செல்ல அனுமதியில்லை. ஜன்னல்கள், கதவுகள், சாளரமும் பழமைமாறாமல் அழகைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது சிறப்பு.

வெளியே பசுமை நடை வழித்தடத்தில் அவருடைய கவிதை வரிகளை எழுதி வைத்திருந்தார்கள். மரங்களும் செடிகளும்,  தேனீ, வண்டுக்களின் ரீங்காரமும் பறவைகளின் குரல்களும் அச்சூழலை ரம்மியமாக்கின. ஒரு நல்ல கவிஞரை அறிந்து கொண்ட திருப்தியில் மரநிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேன். 
கொண்டு வந்திருந்த குளிர்ந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு அருகிலிருக்கும் அம்மாநிலத்தின் போர் நினைவுச்சின்னத்தையும் பார்த்து விட்டு வீடு போய்ச் சேரலாம் என்று நடையைக் கட்டினோம்😇😇😇

வீடியோ சுட்டி 👇


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...