Wednesday, August 3, 2022

கதை கேளு கதை கேளு

ஜெயா தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் "கதை கேளு கதை கேளு" நிகழ்ச்சியில் இரு வாரங்களாக இளையராஜாவின் கதை அருமையாக சென்று கொண்டிருக்கிறது. இசை இயக்குனர் தேவிஸ்ரீபிரசாத்தும் பாடகர் கார்த்திக்கும் இரு வாரங்கள் இளையராஜாவின் கதையை அவருடைய இசைப்பயணத்தைப் பாடல்கள் மூலமாக கேட்டு நமக்குச் சொல்வது போல் நன்றாக அமைந்திருக்கிறது இந்நிகழ்ச்சி.

தேவிஸ்ரீ பிரசாத் இசைஞானியின் தீவிரமான ரசிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தன் ஆஸ்தான கலைஞன் மீது அபரிதமான பாசம் கொண்டுள்ளதை மனிதர் அநியாயத்துக்குச் சிறு குழந்தை போல் இயல்பாக அவருடைய பேச்சிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்திய பாங்கு அருமை. இளையராஜா எனும் ஆளுமை ஸ்ரீதேவிபிரசாத்தை முழுமையாக ஆட்கொண்டிருந்ததை அணுஅணுவாக அனுபவித்துச் சொன்னதை பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தும் போதெல்லாம் அந்தப் பாடல்களும் நமக்குப் பிடித்ததற்கு இது தான் காரணமோ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

சென்ற வாரம் பாடகர் கார்த்திக் இளையராஜாவிடம், "எப்படி ராஜா சார் இப்படியெல்லாம் உங்களால யோசிக்க முடியுது?" என்று வியந்து இசை கற்றவர்கள், தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் தொனியில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். நானோ "பாடறியேன், படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்" கோஷ்டி. என்ன தான் ஈஷ்வர் மொழிபெயர்த்தாலும் இசையென்று வந்து விட்டால் அதன் நுணுக்கங்கள் எல்லாம் "கிலோ என்ன விலை?" என்ற ரேஞ்சில் தான் அறிவு. நல்ல வேளை! பாண்டே என்னைப் போன்ற நேயர்களுக்கும் புரியும் வகையில் கேள்விகளை மாற்றிக் கேட்டுத் தெளிவுபடுத்தினார். சபாஷ் பாண்டே!

பொதுவாகவே இளையராஜாவின் பல பேட்டிகளில் அவர் பேசியது சிலருக்குப் பிடிக்காமல் போனதாக படித்திருக்கிறேன். அடுத்தவரைக் காயப்படுத்திப் பேசியதாக ஆர்எஸ்பி மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்த காலத்தில் எடுத்ததெற்க்கெல்லாம் அரசியல் செய்யும் மனப்பாங்கு ஓங்கி இருக்கும் நேரத்தில் இந்நிகழ்ச்சியில் யாருக்கு அவல் தரப்போகிறாரோ என்ற ஆவலும் பலருக்கு இருந்திருக்கும்.  நல்ல வேளை! அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரையில் இவருடைய இசையில் அமைந்த பாடல்களைத் தான் கண்விழித்த நேரத்திலிருந்து உறங்கும் வரை கேட்டுக் கொண்டிருக்கிறேன்😍

வெள்ளை உடையில் கனிந்து நிற்கிறார் பல மனங்களைத் தன் இசையால் வசப்படுத்திய ஞானி! நடுநடுவே பொது மக்கள் சிலரின் கேள்விகளுக்கும்  இசையுடனான அவருடைய பயணம், அனுபவம், அறிவு, கற்றுக்கொண்ட வித்தைகள் என சிறப்பு விருந்தினர்கள் கேட்ட கேள்விகளுக்கும் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும் விதத்தில் சிரித்துக் கொண்டே பதில் அளித்த விதம் அருமை.

"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" ல் துவங்கிய பயணம்.. தொடரட்டும்💖

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா!





No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...