Wednesday, June 20, 2018

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !!!!

பழசு தான்ன்ன்ன்ன்... இதெல்லாம் கடந்த காலமாகி விட்டது. குழந்தைகளும் வளர்ந்து விட்டிருக்கிறார்கள்....

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !!!!

இந்த மாதம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் . பெற்றவர்களுக்கு செலவுகள் அதிகமான திண்டாட்டம். ஆம், பள்ளிகள் திறந்ததினால் நண்பர்களையும், புது வகுப்பு ஆசிரியர்களையும் பார்க்க போகும் ஆவல் குழந்தைகளுக்கு. வகுப்பு கட்டணம் , புத்தகம், நோட்டுக்கள் இத்யாதி செலவுகள் என்று பெற்றோரின் பர்சை பதம் பார்ப்பதால பெற்றவர்களுக்கு கவலை அளிக்கும் மாதம்.

அந்த வகுப்புக்குரிய புத்தகங்கள், தேவையான நோட்டுக்கள், பேனா, பென்சில், காம்பஸ் பாக்ஸ், அழி ரப்பர் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக்கொண்டு, அரசமரம் முக்கிலிருக்கும் மணீஸ் ஸ்டோருக்கு அம்மாவுடன் நான், அக்கா, தங்கை மற்றும் தம்பிகள் போய் விடுவோம். அதற்குப் பக்கத்திலிருக்கும் சாந்தி ஸ்டோர்சில் அவ்வளவாக கூட்டம் இருக்காது 😞

முதலில் , புத்தகங்கள் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் புது புத்தகத்தை முகர்ந்து பார்ப்பது பிடிக்கும். அந்த ப்ரெஷ் இங்க் வாசனை நன்றாக இருக்கும். பிறகு, நோட்டுக்கள், வண்ண வண்ண அட்டைகளுடன். பிரவுன்ஷீட் பேப்பர் ரோல், எல்லா நோட்டுக்களுக்கும் அட்டை போடுவதற்கு. மறக்காமல், லேபல் (பறவைகள், மலர்கள் மற்றும் பல வடிவங்களில்) , பேனா (இங்க் அல்லது பால்பாயிண்ட் ), இங்க் பாட்டில், ஸ்கெட்ச் பேனாக்கள், கேமல் காம்பஸ் பாக்ஸ் , வாசனையுள்ள அழிரப்பர் , பென்சில்கள் என்று எங்கள் எல்லோருக்கும் வாங்கிக்கொண்டு, ஜெம்ஸ்/ true nice பிஸ்கட் என்று கொறிக்க ஏதாவது ஒன்றையும் வாங்கிக்கொண்டு பெரிய தொகையை கட்டி விட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்வோம். சில சமயங்களில், கடைப் பையனே வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்.

அப்பா வந்தவுடன், நோட்டுக்களுக்கு அட்டை போட பிரவுன் ஷீட் , லேபல் , பேனா, கோந்து/ சாதம் சகிதம் உட்கார்ந்து விடுவோம். இதெல்லாம் , குடும்பமாக செய்வதால் ஒரு குதூகலம் எப்போதும் இருக்கும். என் நோட்டுக்கு தான் முதலில் அட்டை போட வேண்டும் , இல்லை என்னுடையது தான் என்று எல்லோரும் சண்டை போட்டுகொண்டிருக்கும் பொழுது, போடவா வேண்டாமா என்ற அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து , அமைதியாக அவரவர் நோட்டுக்கள் வரும் வரை காத்திருப்போம். நோட்டை பிரவுன் ஷீட் மேல் வைத்து, அழகாக மடித்து, முனைகளை வெட்டி உள்ளே செருகி விட, சில நிமிடத்தில் பளிச்சென்று, நோட்டுக்கள் அழகாகிவிடும். பிறகு, எங்களுக்கு பிடித்த லேபல்களுடன், காத்திருப்போம். ஒவ்வொருவருடைய நோட்டிலும் லேபல்கள் ஒட்டி, சிறிது காய்ந்த பிறகு , பெயர், வகுப்பு, பாடம் எல்லாம் எழுதி முடித்த பிறகு , அந்த வருடம் வாங்கிய புதிய புத்தகப் பையில் எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கி, ஒரு முறை தோளில் போட்டு அழகு பார்த்த திருப்தியுடன் அதை ஓரத்தில் வைத்து விடுவோம்.

புத்தகங்களை, அம்மா பைண்டிங் பண்ண கொடுத்து விடுவார். அந்த பைண்டிங் பிரஸ் போக எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் என்றால், அங்கு இருக்கும் வினோதமான மெசினும், இங்க் வாசனையும் தான். ஒவ்வொரு பக்கமாக அவர்கள் அந்த மெசினில் வைத்து லாவகமாக வெளியே எடுத்து போடுவதும், ஒரு பக்கம் பைண்டிங் வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு பணம் கட்டிவிட்டு, வீடு வரும் வரை புத்தகத்தின் மேலிருக்கும் optical illusion அட்டையை பர்ர்த்துக் கொண்டே வீடு வரும் வரை சுற்ற விட்டு வழியில் தெரிந்த நண்பர்களிடமும் காண்பித்து ஒரு வழியாக புத்தகப் பையில் வைத்து விட்டு , அடுத்த நாள் பள்ளிக்கு சென்று எல்லோரிடமும் காண்பிக்க வேண்டும் என்ற சுகமான நினைவுடன் அந்த நாள் இனிதே முடியும்.

இன்றும் கூட, என் குழந்தைகளுக்கு பள்ளி திறப்பதற்கு முன் தேவையானவைகளை வாங்க கடைகளுக்குச் செல்லும் பொழுது அதே குதூகலத்துடன் நானும் என் மகளும் செல்கிறோம்!!!!

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...