Monday, January 10, 2022

நீயா நானா? நவீன ஆரோக்கிய உணவுகள்

நேற்றைய "நீயா நானா" விவாதத்தில், இன்றைய புது வகை ஆரோக்கிய உணவுகள் எவ்வாறு உடல்நலத்தை மேம்படுத்துகிறது என்று ஒரு குழுவினரும் அதெல்லாம் தேவையில்லை. நம் ஊரில் கிடைக்கும் உணவுகளே ஆரோக்கியமானது தான். அதுவே போதும் என்று ஒரு குழுவினரும் விவாதம் செய்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே ஆரம்பித்தவர் 'கொம்புச்சா' என்ற புளித்த பானத்தைப் பற்றிப் பேசினார். ஆம். தற்போது பலருக்கும் அறிமுகமாகியுள்ள பானம் இது. அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கிறது. அதன் நன்மைகள் என்று பார்த்தால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க, உடல் எடையைக் குறைக்க, ஜீரணத்தை, எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்குகிறது என்று கூறினாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. நம் ஊரில் பழைய சாதம், தயிர் சாதம் சாப்பிடும் பழக்கம் குறைந்து விட்டதால் நமக்குத் தெரியாத வாயில் நுழையாத பெயரில் இருக்கும் கிறக்கத்தில் இதை நம்புகிறோமோ?

இதே போல் ஓட்ஸ், கார்ன்ஃபிளேக்ஸ், இதர சீரியல்கள் எல்லாம் ஆரோக்கியமானது என்று அழகாக மூளைச்சலவைச் செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தும் அறியாமலும் பெரு நிறுவனங்களின் விளம்பர உத்திகளில் வகையாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். காலையில் வேக வைத்த இட்லி, தோசை, இடியாப்பம், சட்னி, சாம்பார்களில் இல்லாததையா இந்த விளம்பரம் செய்யப்பட்ட பொருட்களில் இருக்கிறது என்று யோசிக்கும் திறனை என்றோ இழந்து விட்டோம் என்று தான் தோன்றுகிறது. பழைய சாதத்தை அழகாக போத்தல்களில் அடைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் வெளிநாட்டினர். இனி அதையும் 'ஸ்டைலாக' குடிப்போம்.

'க்ரீன் டீ'யும் அப்படி மிகைப்படுத்தப்பட்ட பானம் தான்.என்னைப் பொறுத்தவரையில் சுடுநீர் குடிப்பது போல தான். அதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடெண்ட் இருப்பது என்பதெல்லாம் விளம்பர யுத்தி.

அவகாடோ பழமும் அந்த வரிசையில் தான் சேருகிறது. சமீபமாக அமெரிக்காவில் திரைப்பட்டாளங்கள் பலரும் அதில் முதலீடு செய்து பெரிதாக விளம்பரங்கள் செய்து வருகிறார்கள்.

நம்மூரில் கிடைக்கும் கொய்யா, நெல்லி, அன்னாசி, ஆப்பிள், வாழைப்பழம், இலந்தைப்பழம்... என்று பல வித பழங்களும் வெண்டைக்காய், அவரை, பாவக்காய், முருங்கைக்காய், வாழைதண்டு... என்று வகைவகையான காய்களும் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாட்டு மோகத்தினால் பெரு நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யும் இந்தப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உள்நாட்டு வியாபாரிகளை ஆதரித்த மாதிரியும் இருக்கும், ஆரோக்கியமாக உண்பதும் நடக்கும். ஆனால், நாம் அமெரிக்காவில் இருப்பது போல் ஒரு பிரமையில் பீட்ஸா, பர்கர், டோனட் , வறுத்த கோழி என்று இன்றைய தலைமுறையை கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முருங்கைக்கீரை கிடைக்காததால் மொரிங்கே பவுடர் அமேசானில் மாற்று பிற விற்பனைத்தளங்களில் கிடைக்கிறது. அதை ஏன் நம்நாட்டில் இருப்பவர்கள் வாங்க வேண்டும் என்பதும் நியாயமான கேள்வியாகத் தான் எனக்குத் தோன்றியது. அழகாக கீரைக்கொத்து கிடைக்கிறது. சுடச்சுட சமையல் செய்தால் ஆயிற்று. ஆனால் மொரிங்கே பவுடர் பயன்படுத்துகிறேன் என்று சொல்வது ஃபேஷன் ஆயிற்றோ?

இந்தியாவில் வெளிநாட்டு உணவுகளை உண்பதால் தங்களை மேட்டுக்குடியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அவலமும் நடந்து வருகிறது. ஆசைக்காகச் சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டால் தான் நல்லது. தன்னுடைய பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, சாப்பிடாதவர்களை அலட்சியமாக பார்க்கும் பார்வை தான் தேவையில்லாதது  என்பது எதிர் தரப்பினரின் வாதம்.  உண்மை தானே? நம் கையில் வைத்திருக்கும் அலைபேசி முதல் பயணம் செய்யும் வண்டி, வீடு, வேலை என்று சகலத்திலும் நம்முடைய சமூக அந்தஸ்தை தானே பறைசாற்றுகிறோம்?

மொத்தத்தில் விளம்பரங்கள் மூலம் நம் மேல் திணிக்கப்படும் உணவு யுத்தம் இது என புரிந்து கொண்டவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். புரியாதவர்கள் கைக்காசை செலவு செய்து வீண் ஆடம்பர வலையில் சிக்கிக் கொள்ளலாம். வெளிநாட்டுச் சந்தையில் பிரபல புதிய பெயர்களுடன் வலம்வரும் பொருட்கள் 'காக்கா முட்டை' படத்தில் வருவது போல் ஏழைகளை ஏக்கமாகவும்,  பணம், வசதி படைத்தவர்களை அனாவசியமாக செலவு செய்ய  வைக்கும் யுத்தியாகவும் தெரிகிறது. அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன பெரு நிறுவனங்கள். இந்தியாவில் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த அவர்களுக்குள்ளும் போட்டிகள்!  இது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...