Monday, January 24, 2022

Dev Bhoomi


சில படங்களின் தலைப்பே பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும். அப்படித்தான் இப்படத்தின் தலைப்பும் நினைக்க வைத்தது. அது மட்டுமில்லாமல் இமயமலையின் பின்னணி வேறு இருந்தது! கேட்கவா வேண்டும்? சிறு வயதிலிருந்தே கங்கை, காஷ்மீர், இமயமலை தொடர்பாக வரும் ஆவணப்படங்களைக் காண்பதில் அலாதி இன்பம். இரவு 10.30மணிக்கு மேல் தூர்தர்ஷன் பல அழகான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதைக் கண்டிருக்கிறேன். மதுரையில் வளர்ந்த எனக்கு வானுயர மலைகள் சூழ்ந்த காடுகளிடையே சீறி ஓடி வரும் கங்கையும், பனிபடர்ந்த இமயமலையும் என்றும் ஒருவித இனிமையைத் தரும். நேரில் சென்று தரிசித்து வர வேண்டும் என்ற என் கனவுப்பயணம் அது. இப்படி பல இனிமையான நினைவுகளுடன் தான் இப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

'உத்தரகாண்ட்' இறைவழிபாட்டில் நம்பிக்கை கொண்ட இந்து மக்களின் கனவு மாநிலம். அங்கிருக்கும் சிவனை வழிபட பல லட்சக்கணக்கான மக்கள் செல்லும் யாத்திரைத்தலம். சில வருடங்களுக்கு முன் இயற்கை கோரத்தாண்டவம் ஆடியதில் பல உயிர்கள் மாண்டதோடு வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியது கோவில் மட்டும் தான். பாரதப் பிரதமர் மோதிஜி தலைமையிலான மத்திய அரசு அக்கோவிலையும் சிதையுண்ட நகரத்தையும் மீட்டெடுத்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

'தேவ் பூமி' அதிரடி படம் கிடையாது. படத்தின் நாயகனைப் போலவே அமைதியாக நகரும் கதை. பள்ளத்தாக்குகள் வழியே துவங்கும் ஆரம்ப பயணமே அத்தனை அழகாக இருந்தது. நாற்பது வருடங்களுக்குப் பிறகு தாய்மண்ணிற்குத் திரும்புபவன் எதிர்கொள்ளும் இன்ப, துன்ப நிகழ்வுகள், பால்ய காலத்து நண்பர்கள், உறவுகள், வெள்ளந்தி மனிதர்கள், அவர்களுடைய எளிமையான வாழ்க்கை, திருமண சடங்குகள், படிப்பு வாசம் அறியாத மக்கள், சாதி அரசியல், குருகுலம், கங்கை வெள்ளத்தில் தன் குடும்பத்தை இழந்த சிறுவனின் கோபத்தில் இருக்கும் நியாயம், அவன் கண்களில் மின்னலாடும் ஏக்கம், கதாநாயகனுடன் நெருங்கிப் பழகும் விதம், காஷ்மீரிலிருந்து வந்து இப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை, பால்ய திருமணத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் அவலம் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது இப்படம். இரவிலும் பகலிலும் மின்னும் இமயமலை கம்பீரமாக பரந்து விரிந்து கவருகிறது. 'சலசல'வென ஓடும் மந்தாகினியும், இமயமலையும், நீல மேகமும் "பூமியும் சொர்க்கமும் சந்திக்கும் இடம்" என்ற வசனத்துடன் படம் முடியும் பொழுது உண்மை தான் என தோன்றும். இதை சைபீரியன் டைரக்டர் எடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்!

புலம் பெயர்ந்த மக்கள் பலரும் ஓய்வு பெற்ற பிறகு மீதி காலத்தைத் தங்கள் மக்களுடனும் தாய்மண்ணிலும் செலவிட விரும்புவது, பால்ய கால சிந்தனைகளுடன் காலத்தைக் கழிக்க  நினைப்பது இயல்பு. அந்த ஏக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கரு.

அமேசான் ப்ரைமில் கண்டு களிக்கலாம்.


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...