Wednesday, January 19, 2022

Geronimo


இன்றைய அமெரிக்க தேசத்தை ஆள்பவர்கள் வேண்டுமானால் வெள்ளையர்களாக இருக்கலாம். ஆனால் இந்நாட்டின் உண்மையான மைந்தர்கள் செவ்விந்தியர்கள் தான் என்பது உலகம் அறிந்ததே. பல குழுவினராக இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்தவர்களின் வாழ்க்கையைச் சிதைத்தது ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்று. அதை தலைமை தாங்கி வழிநடத்தியவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். அவர் என்று இந்தியாவிற்குச் செல்கிறேன் என்று வட அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தாரோ அன்றே செவ்விந்தியர்களின் நிலம் அவர்கள் கையை விட்டுச் செல்ல காரணமாகியது. நாம் தப்பித்தோம்.

கல்வி அறிவில்லாத, வேட்டையாடி தத்தம் குழுவினருடன் வாழ்ந்து கொண்டிருந்த இனத்தின் மேல் கிறித்துவத்தைத் திணித்து மதம் மாற்றினார்கள். அதனால் ஏற்பட்ட வடுக்கள், அவலங்கள் இன்று வரையில் தொடருவதை சமீபத்தில் கனடாவில் கண்டறிந்தார்கள்.

அமெரிக்க இந்தியர்களின் நிலத்தை இங்கிலாந்து, பிரெஞ்சு, டட்ச், ஸ்பானியர்கள் என்று பலரும் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட செவ்விந்தியர்களைக் கொண்டே போரிட்டார்கள். இந்தியர்களின் குழுக்களிடையே ஒற்றுமை இல்லாதது இந்நாடுகளுக்கு வசதியாக போய்விட்டது. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியில் வகையாய் மாட்டிக்கொண்டவர்கள் கடைசியில் தங்கள் நிலங்களை விட்டே துரத்தி விடப்பட்டு இன்று அந்நியர்களாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

அதைத்தான் சொல்கிறது இப்படமும். அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆள தொடங்கிய பிறகு செவ்விந்தியர்களை அவர்களிடத்தில் இருந்து விரட்டியடித்து சோளம் பயிரிடும் விவாசாயிகளாக மாற நிர்பந்திக்கிறது அரசாங்கம். அவர்களை எதிர்த்த மக்களைக் கொன்றும் இடம் பெயரவைத்தும்  பூர்வகுடிகளைத் தண்டிக்கிறது. அரிசோனா பகுதியில் வாழ்ந்து வந்த 'அப்பாச்சி' இன மக்களை நிர்பந்திக்கும் பொழுது வெள்ளையர்களை எதிர்ப்பவர்களில் ஒருவரான 'ஜெரோனிமோ' எனும் செவ்விந்தியரையும் அவரது குழுவினரையும் பிடிக்க அரசு உத்தரவிடுகிறது.

5000 படை வீரர்களுடன் அவர்களைப் பிடிக்க படையின் தலைவரான சார்ல்ஸ் குரூக் அரிசோனாவிற்கு வருகிறார். அவருடைய குழுவில் அப்பாச்சி மக்களின் மொழியைப் பேசுபவரும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டவருமான சார்ல்ஸ் கேட்வுட் என்பவர் எவ்வாறு ஜெரோனிமோவை சம்மதிக்க வைத்து அரசிடம் ஒப்படைக்கிறார் என்பதே கதை. அவருக்கு உதவி செய்த சில அப்பாச்சி மக்களையும் சேர்த்தே தண்டிக்கிறது நன்றி மறந்த வெள்ளையர் அரசாங்கம்.

மிக அழகாக கதையை கொண்டு செல்கிறார்கள். வேகமாக ஓடி வரும் குதிரைகளும்,  மலைகளும், பாலைவன காட்சிகளும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் ஸ்டைலில் அருமையாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. அப்பாவிகளான செவ்வியிந்தியர்களும் நயவஞ்சக அரசும் என்று அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். நெட்ஃபிளிக்ஸ்ல் காணலாம்.

மென்மையான உள்ளம் கொண்டவராக, செவ்வியிந்தியர்கள் மேல் அக்கறையுள்ள 'கேட்வுட் ' கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு தனி மனிதனால் அரசு எந்திரத்தை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? அவரால் முடிந்தவரை செவ்விந்தியர்களுக்கு நல்லது செய்யவே நினைப்பார். நிச்சயமாக அப்படிப்பட்ட மனிதர்களும் இருந்திருப்பார்கள். செவ்விந்தியர்களைப் பற்றிப் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் இதுவும் ஒரு நல்ல படம். Dances with Wolves படமும் நன்றாக இருக்கும்.  

அமெரிக்காவில் நியூயார்க், அரிசோனா , யூட்டா, நெவேடா, கலிஃபோர்னியா, நியூமெக்ஸிகோ, வட மற்றும் தென் டகோட்டா போன்ற பல மாநிலங்களில் இன்றும் செவ்விந்தியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் வசித்து வருகிறார்கள். இத்தனை பெரிய நாட்டில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தவர்கள் இன்று சிறுமைப்படுத்தப்பட்டு அடிமை வாழ்க்கை வாழ்வதைப் பார்க்க பாவமாக தான் இருக்கிறது😔



No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...