Tuesday, January 11, 2022

திருவரங்கன் உலா


ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய 'திருவரங்கன் உலா' புதினத்தைப் பற்றி எனது கணவர் விஷ்வேஷ் ஒப்லாவின் விமரிசனம் இந்தச் சுட்டியில் உள்ளது. https://thiruvaranganula.blogspot.com/2014/01/venugopalans-thiruvarangan-ula-walk.html

சில வருடங்களுக்கு முன்பு இப்புத்தகத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மை நிகழ்வுகளுடன் மிக அழகாக வரலாற்றுப் புதினமாக அருமையாக எழுதியிருந்தார் ஆசிரியர். இஸ்லாமியர்களின் படையெடுப்பில் சிதைந்தது குலப்பெண்களும், குடும்பங்களும் மட்டுமல்ல கோவில்களும் தான். கோவில் செல்வங்களைச் சூறையாடிய கயவர்கள் பல்லாயிரக்கணக்கான கோவில்களை இடித்து எதிர்த்து நின்றவர்களைக் கொன்று விட்டும் சென்றது மிகக்கொடிய வரலாறு. வடக்கில் மட்டுமில்லாது தெற்கிலும் அவர்கள் கொள்ளையடித்த கோவில் செல்வங்கள் எண்ணிக்கையில் அடங்கா. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் என்று பெரிய கோவில்கள் எதுவும் அவர்களிடமிருந்து தப்பவில்லை.

ஸ்ரீரங்கம் நோக்கி முகமது பின் துக்ளக் படையுடன் வருவதைக் கேள்வியுற்ற திருமால் பக்தர்கள், ஸ்ரீரங்கநாதன் உருவச்சிலையை துலுக்கர்களிடமிருந்து காப்பாற்ற உயிரையும் துச்சமென நினைத்து வெவ்வேறு ஊர்களில் தங்கி அவரைக் காப்பாற்றி மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வருவதைக் காட்சிகளாக மனதில் விரியும் வண்ணம் வாசிப்பவரை ஆட்கொண்டு விடுகிறார் ஆசிரியர்.

கொடிய இஸ்லாமியர்கள் வருகிறார்கள் என்பதை அறிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் குடியிருக்கும் பலரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்வதை விட உயிரை விடுவதே மேல் என்று இறந்த பெண்களும் பலர். ஸ்ரீரங்கத்தில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று கேரளா, ஆந்திரா , கர்நாடகா என்று அலைகிறார் ரெங்கமன்னார். அவரைப் பாதுக்காக்கும் பணியில் இருந்தவர்கள் அனைவரும் அவரை எப்படியாவது மீண்டும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் காடுகளில் அலைகிறார்கள். விஜயநகர பேரரசு உதவ, மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார் ஸ்ரீரங்கநாதர். வழிநெடுக திருமால் பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் இறப்பு வாசிப்போரை நெகிழ வைக்கும். 

இன்றும் ஸ்ரீரங்கத்தில் வெள்ளை கோபுரம் ஒன்று அதற்கு சாட்சியாக இருக்கிறது. ஸ்ரீரங்கநாதரின் உருவச்சிலையைத் தேடி அலைந்த சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்ப, தேவதாசி வெள்ளாயி நடனமாடி கோபுர உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளி விட்டு அவரும் அங்கிருந்து கீழே குதித்து இறந்து விட்டார். அவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக விஜயநகர தளபதி கெம்பெண்ணா, அந்த கோபுரத்திற்கு வெள்ளை நிற வண்ணம் பூசி வெள்ளாயியின் அர்ப்பணிப்பை இன்றும் மக்கள் போற்றும் வண்ணம் நிறுவியது வரலாறு.

14ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு. 47 வருட போராட்டம்! அழகர்கோவில், எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோயில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு பயணித்து சத்தியமங்கலம் காட்டில் தொலைந்து போகிறது பகவான் ரங்கநாதர் சிலை. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பதியில் பத்து வருடங்கள் மறைக்கப்பட்டு கடைசியாக ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார் பெருமாள். விஜயநகர மன்னரும், அமைச்சரும், தளபதியும் சுல்தான்களை வெற்றி கொண்டு ரங்கநாதரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்து கோலாகலத்துடன் மீண்டும் பிரதிஷ்டனம் செய்கிறார்கள்.

இந்நிகழ்வை இத்தனை அழகாக வரலாறும் புனைவுமாக படைத்திட்ட ஆசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்களை எத்தனை மெச்சினாலும் தகும். இதுவரையில் "திருவரங்கன் உலா" புதினத்தை வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வாசிக்கவும். நான்கு பாகங்கள் கொண்ட புதினத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும். https://archive.org/details/ThiruvaranganUlaa/ThiruAranganUlaa_Part1/

அந்த பரந்தாமனுக்காக உயிரை விடவும் துணிந்த புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த பூமி என்னும் பெருமையுடைத்தது நம் பாரதம்.

ஹே ராம்!

No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...